Aayiraththil Aval Oruththi 2 2 10047 “யசோ கஷ்ட பட்டா நீயும் உன் அப்பாவும்தான் காரணம். அவர் கட்டாய படுத்தினா அப்பவே முடியாதுன்னு உன் தம்பி மாதிரியே ஓடிப் போயிருக்கணும் நீ. அதை விட்டுட்டு எதுக்குடா தாலி கட்டின? இனியும் காலம் கடத்தாம உன் முடிவை அங்க போய் சொல்லு. அந்த பொண்ணோட வாழ்க்கைல இனியாவது நல்லது நடக்கட்டும், எவனாவது நல்லவன் வரட்டும்” கோவமாகவே சொன்னான் தியாகு. நண்பன் சொன்ன விதத்தில் கௌதமுக்கு கோவம் என்றாலும் அவன் கூற்று சரியென்றே பட்டது. ஒரு வாரத்தில் அலுவலகத்தில் பணிக்கு திரும்ப வேண்டும். அதற்குள் தன் திருமண விஷயத்தை முடிவுக்கு கொண்டு வர நினைத்து ஊருக்கு புறப்பட்டான். முன்னறிவிப்பு இல்லாமல் விடியற்காலையில் ஊருக்கு வந்து விட்டான் கெளதம். வழக்கம் போல மளிகை கடையை அந்த நேரமே திறந்து வைத்திருந்தார் சண்முகம். நடு மகனை கண்ட திகைப்பில் அவருக்கு எதுவுமே புரியவில்லை. அப்பாவை இறுகிய முகத்தோடு பார்த்த கெளதம் அவரை தவிர்த்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டான். உடனே மகனிடம் சென்று அவனது கோவத்தை கிளறி விட விருப்பமில்லாமல் கடையிலேயே இருந்து கொண்டவருக்கு மகன் திரும்பி வந்து விட்டதில் உற்சாகமாக இருந்தது. திறந்திருந்த வீட்டுக்குள் சென்றவனை வரவேற்க என யாரும் ஹாலில் இல்லை. சமையலறையில் அம்மாவின் சிரிப்பு சத்தம் கேட்டது. பேச்சுக் குரல்களும் கேட்க, தம்பியின் மனைவி ஹேமா போலும் என்றெண்ணிக் கொண்டவன் பயணப் பொதியை ஓரமாக வைத்து விட்டு சோஃபாவில் அமர்ந்தான். ஆறு மாதங்களுக்கு பின்னர் வந்திருக்கிறான், அம்மாவை நேரில் காணவும் பேசவும் ஆவலாக இருக்கிறது, மனதின் ஒரு ஓரத்தில் யசோ நெருடுகிறாள். சுமூகமான முறையில் அவளை எப்படி தன்னிடமிருந்து விலக்கி வைப்பது, அறியாமல் ஏற்பட்டு விட்ட உறவை எப்படி முறித்துக் கொள்வது என அவளை பற்றிய யோசனையே. தலை குனிந்த வண்ணம் தரையைப் பார்த்திருந்தான் கெளதம். மண வாழ்க்கை பற்றி எத்தனை ஆசைகள், கனவுகள்? எனக்கு ஏன் இப்படியொரு நிலைமை? கொலுசொலியில் கவனம் ஈரக்கப் பட்டு பார்வையை தரையின் முன் பக்கமாக கொண்டு சென்றான். தன்னை நோக்கி வந்த கொலுசும் மெட்டியும் அணிந்திருந்த அந்த பாதங்கள் திடீரென நின்று விட்டதை கண்டு முகத்தை நிமிர்த்தினான். திடுக்கிட்டு போய் தன்னை பார்த்திருந்த யசோவை கண்டு இவனும் அதிர்ந்து போய் எழுந்து நின்றான். முதல் முறை பார்த்த யசோவின் உருவம் சரியாக மனதில் பதிந்திருக்கவில்லைதான். ஆனாலும் இவள் யசோதான் என உறுதியாக தெரிந்தது. இப்போது பார்க்கையில் மிகவும் சின்ன பெண்ணாக தெரிந்தாள். சிறு வெட்கத்தோடு பதட்ட பட்ட அவளின் முக பாவனைகளை கண்டு அதிர்ந்தான். இன் முகத்தோடு “வாங்க…” என வரவேற்றவள் அவனை கலவர படுத்தினாள். “அம்மா என்ன பண்ற, வா இங்க” என சத்தமிட்டான். கௌதமின் குரல் கேட்கவும் ஒன்றும் புரியாமல் ஓடி வந்தார் அருணா. மகனை கண்டதும் அத்தனை ஆனந்தம் கொண்டவர் அவன் கைகளை பிடித்துக்கொண்டு, “எப்போடா வந்த? என்கிட்ட சொல்லவே இல்லியே?” என்றார். “சரி இப்போ போயிட்டு முறையா சொல்லிட்டு இன்னொரு முறை வர்றேன்” என்றான். “என்னடா வந்ததும் வராததுமா கோவம்?” என மகனை கடிந்தவர், “யசோ என்ன நிக்கிற? போ காபி போட்டு எடுத்திட்டு வா” என மருமகளை ஏவினார். தலையை ஆட்டிக் கொண்டே சமையலறை ஓடிச் சென்ற யசோவை பார்த்தவன் மீண்டும் சோர்வாக அமர்ந்து விட்டான். மகனிடம் ஏதேதோ பேசினார். சின்ன குரலில் கடமையாக பதில் தந்தான் கெளதம். “என்னடா எப்படி வந்த ஊருக்கு? டயர்டா இருக்கியா?” என அக்கறையாக கேட்டார் அருணா. “இவ எதுக்குமா இங்க இருக்கா? நீ கூட என்னை புரிஞ்சுக்க மாட்டியா ம்மா?” வேதனையாக கேட்டான் கெளதம். “ஷ் மெல்ல பேசு. உன் எண்ணமெல்லாம் அவளுக்கு தெரியாது. பாவம்டா அவ” என்றார் அருணா. “அப்ப நான் பாவம் இல்லையா ம்மா?” “வந்த உடனே இந்த பேச்சு வேணாம், மேல போயி ரெஸ்ட் எடு. காபி எடுத்திட்டு வர்றேன்” என்றார். அவனுக்கும் அங்கிருந்து கொண்டு யசோவை காண விருப்பமில்லை. சரியாக உறங்காதது வேறு பாடாய் படுத்த, பயணப் பொதிகளை எடுத்துக் கொண்டு தன் அறைக்கு சென்று விட்டான். அறைக்குள் நுழைந்ததுமே அங்கே வேறு ஒருவர் வசிக்கிறார் என்பது அவனுக்கு விளங்கி விட்டது. கப்போர்டில் அடுக்கப் பட்டிருந்த பெண்ணின் ஆடைகளை கண்டவனுக்கு ஏதோ புரிய நொந்து போய் விட்டான். சுவரில் பெரிய புகைப்படத்தில் இவனும் யசோவும் சேர்ந்து நின்றிருந்தார்கள். யார் செய்த வேலை இது என கோவம் கொண்டவன் அந்த புகைப்படத்தை கழட்டினான். எங்கே வைப்பது என தெரியவில்லை. இப்போதைக்கு பார்வையில் படாமல் இருக்கட்டும் என மேசை டிராயரில் போட்டு மூடினான். அம்மா வரட்டும் என நினைத்துக் கொண்டே பல் துலக்க குளியலறை சென்று விட்டான். அவன் வெளி வருகையில் காஃபியோடு அவனுக்காக காத்திருந்தாள் யசோ. அவனை கண்டதுமே வெட்கமும் பட படப்பும் மீண்டும் அவளை ஆக்ரமித்துக் கொண்டன. ‘அம்மா!’ என மானசீகமாக அலறியவன் அவளிடம் என்ன சொல்லவென தெரியாமல் நின்றான். தயங்கிக் கொண்டே காஃபி டம்ளரை அவனிடம் நீட்டினாள். அவளிடம் ஆத்திரப் பட அவனுக்கு மனம் வரவில்லை. அவனும் தயக்கத்தோடே காஃபியை வாங்கிக் கொண்டான். “நவீனுக்கு ஸ்கூல் பஸ் வந்திடும், அவனை அனுப்பனும், நான் போகட்டா?” என அவனது முகத்தை பார்க்காமலே கேட்டாள் யசோ. “உன்னை இங்க நான் கூப்பிடவே இல்லை, இருக்கவும் சொல்லலை” என்றான். என்ன எதிர் வினையாற்ற என தெரியாமல் தவித்துப் போனாள். “ஆமாம்… யார் நவீன்?” என புரியாமல் கேட்டான். அவனை நிமிர்ந்து பார்த்தவள், “என் தம்பி” என்றாள். ஓ என கேட்டுக் கொண்டான். தன் தம்பியின் பெயர் கூட கணவனுக்கு தெரியவில்லையே என அவளது முகம் ஏமாற்றத்தை பிரதிபலித்தது. “நான் போகட்டுமா ங்க?” அவனது அனுமதி வேண்டி நின்றாள். “ஹ்ஹா… போ. வந்து… நீ இங்கயா… ம்க்கும்… இந்த ரூம்லயா இருக்க?” எனக் கேட்டான். ஆம் என தலையாட்டியவளின் முகத்தில் இப்போது குழப்பம் படர்ந்தது. “சும்மா கண்ண கண்ண உருட்டி முழிக்காத” என அவன் சொன்னது அதட்டுவது போலிருக்கவும் மிரண்டாள் யசோ. என்னடா இது என நினைத்தவன், “எனக்கு தூங்கணும், கதவை சாத்திக்க போறேன், உனக்கு இங்கேருந்து ஏதும் வேணும்னா எடுத்திட்டு போ…” என சொல்லிக் கொண்டிருந்தான். தன்னை தவிர்க்கறான் என்பது அவளுக்கு புரிந்து விட்டது. கலங்கிய கண்களை அவனுக்கு காட்டாமல் அவள் திரும்பி நிற்க, அவனது பேச்சும் பாதியிலேயே நின்று விட்டது. “நீ போ” என்றவன் காலி டம்ளரை மேசையில் வைத்து விட்டு படுக்கையில் அமர்ந்து கொண்டான். அங்கேயே நின்றிருந்தவளிடம் அடுத்து என்ன பேச என ஏதும் புரியாமல் கையை மடக்கி தன் தாடையில் லேசாக குத்திக் கொண்டிருந்தான். திருமணம் முடிந்த ஒரு மாதத்தில் யசோவையும் நவீனையும் தங்கள் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டனர் சண்முகம் தம்பதியினர். இது தெரிந்தால் கெளதம் கோவப்படுவான் என்றே அருணா அவனிடம் சொல்லியிருக்கவில்லை. யசோ பொதுவாகவே நல்ல அமைதி. அருணாவுக்கு கௌதமை பற்றி அவளிடம் சொல்ல நிறைய கதைகள் இருந்தன. அவனை பற்றி கேட்டு கேட்டு கடந்த சில மாதங்களை அவன் நினைவுகளோடே கடந்திருந்தாள். “திடீர்னு நடந்த கல்யாணம், உன்னை பத்தி எதுவும் தெரியாதே அவனுக்கு. அங்கேயும் நிறைய வேலை இருக்கும்தானே? என்கிட்ட பேசும் போது உன்னை பத்தியும் கேட்டுப்பான். போன்ல பேச தயங்குறான் போல, நேர்ல வந்ததும் உன்கிட்ட எப்படி பேசுவான் பாரு” என மருமகளிடம் சொல்லி வைத்திருந்தார் அருணா. அதை அப்படியே நம்பினாள் யசோ. கணவன் வரப் போகும் நாளை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்திருந்தாள். திடீரென வந்து நிற்பவன் உடனே கல கலப்பாக பேசுவான் என இல்லையென்றாலும் அக்கறையாக விசாரிப்பான் என எண்ணியிருந்தாள். அவனது வெளிப்படையான ஒதுக்கம் அவளை வேதனை கொள்ளச் செய்தது. சுவரில் மாட்டியிருந்த புகைப்படம் இல்லாமல் போனதை கண்டு கொண்டவளின் இதயம் நொறுங்க ஆரம்பித்தது. கன்னங்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டவள் கப்போர்டில் இருந்து தனக்கான மாற்று ஆடை எடுத்து ஒரு பையில் திணித்துக் கொண்டாள். நிற்காத அழுகையை அவ்வப்போது துடைத்துக் கொண்டாள். பார்த்திருந்தவனுக்கு மனது பிசைந்தது. “ப்ச் எதுக்கு இப்போ அழற?” என அதட்டினான். வேகமாக கண்களை துடைத்துக் கொண்டவள், “ஒன்னுமில்ல, நான் அழலை” என்றாள். “போ மூஞ்ச கழுவிட்டு வா” என்றான். அவனை பார்த்துக் கொண்டே குளியலறை செல்ல நடந்தாள். “கைல உள்ள பையை வச்சிட்டு போ” என்றான். அவள் குளியலறை நுழையவும் அறையை விட்டு வெளியே வந்தான். பள்ளி சீருடையுடன் நவீன் வந்தான். முக மலர்ச்சியோடு வந்த நவீன் சட்டென பேச முடியாமல் தயக்கமாக கௌதமை பார்த்தான். “வாங்க மாமா, நல்லாருக்கீங்களா?” எனக் கேட்டான். கௌதமுக்கு இவனை இங்கு அனுப்பி வைத்த அம்மா மீது இன்னும் கோவமானது. “நல்லாருக்கேன்…” என்ற கெளதம் வேறு வழியின்றி அவனிடமும் நலம் விசாரித்து, என்ன படிக்கிறான் எந்த பள்ளி என்றெல்லாம் கேட்டுக் கொண்டான். ஒன்பதாவது என அவன் சொல்லவும் அவனது வயதை கணித்தவன் அப்ப அவ வயசு என்னவாக இருக்கும் என இப்போதுதான் யோசித்தான். சரியாக யோசிக்க முடியாமல் ஏதேதோ கணக்கிட்டு திகைத்து விட்டான். பள்ளிப் பேருந்து வந்து விடும் என சொல்லி நவீன் கீழே சென்று விட, பையோடு வந்தாள் யசோ. அவளின் முகத்தின் ஈரம் அப்படியே இருந்தது. கணவனை பார்த்தவள் ஏதோ சொல்ல வந்து பின் தயங்கி சொல்லாமலே அவனை கடந்து சென்றாள். “உன் வயசென்ன?” என அவன் கேட்ட கேள்வியில் நின்றாள். “சொல்லு, உனக்கு என்ன வயசாகுது?” என மீண்டும் கேட்டான். “இருபத்தியொன்னு” என்றாள். ‘இத்தனை சின்ன பெண்ணா!’ என மிரண்டு விட்டான். “நான் கீழ இருக்கேன், கொஞ்சம் வெயிட் பண்ணுனீங்கன்னா டிஃபன் சாப்பிட்டுட்டு அப்புறம் தூங்கலாம்” என சற்று முன் சொல்லத் தயங்கியதை சொன்னாள். “நீ அம்மாவை உடனே இங்க வர சொல்லு” என கடுமையான தொனியில் சொன்னவன் நிற்காமல் அறைக்கு சென்று விட்டான். அவனது நடத்தையின் காரணம் புரியாமல் கவலையாக கீழே சென்றாள் யசோ.