Malar Soodum Penmai 15 1 10955 மலர் சூடும் பெண்மை 15 தன்வி வரவேற்பிற்கு தயாராக ஆரம்பிக்க, தேசிகனுக்கான உடையும், ஆட்களும் வந்தனர். “இல்லை, நானே ரெடியாகிப்பேன்” என்று தேசிகன் ஆட்களை மறுத்தவன், உடையை மட்டும் வாங்கி கொண்டான். “மாப்பிள்ளை. உங்களுக்கு உதவியா கூட வைச்சுக்கோங்க” என்று ராஜேந்திரனின் பெரிய மகன் சொல்ல, “இல்லைங்க. என் தம்பிங்க இருக்காங்க. அவங்க உதவி எனக்கு போதும்” என்றான் தேசிகன். “நீங்க சொல்றதை மட்டும் தான் செய்வாங்க. ஒரு வாய்ப்பு கொடுத்து பாருங்க” என்று ராஜேந்திரனின் இளைய மகனும் சொல்ல, “அவர் கிராமத்தான். அவருக்கு இதெல்லாம் பழக்கம் இருக்காது” என்று வந்தார் சதாசிவம். “சித்தப்பா” “என்னடா. உண்மையை தானே சொன்னேன். அவர் ஊர்க்காரர் தானே?” அவர் விடாமல் பேச, “ஊர்க்காரன் தான். கொள்ளைக்காரன் இல்லையே?” தேசிகன் புன்னகையுடன் கேட்டுவிட்டான். “கொள்ளைக்காரனை கூட நம்பிடலாம். ஆனா ஊர்க்காரனை தான் நம்ப கூடாதுன்னு சொல்வாங்க“ “யார் சொன்னது? மிஸ்டர் சதாசிவமா? ஆனா நீங்க பிறந்தது கூட ஒரு கிராமம் தான் இல்லை. அச்சோ. இது தெரியாம நான் வேற இவரை நம்பிட்டேனே?” என்று தேசிகன் உடனே திருப்பி கொடுக்க மனிதருக்கு தாங்கவில்லை. “மாப்பிள்ளை. நீங்க போய் கிளம்புங்க, நேரம் ஆகுது” என்று ராஜேந்திரனின் மகன்கள் அவனை அங்கிருந்து கிளப்பிவிட, சதாசிவம் மருமகன் முதுகை முறைத்து நின்றிருந்தார். “சித்தப்பா. அவர் நம்ம வீட்டு மாப்பிள்ளை. அவர்கிட்ட போய் என்ன பேசுறீங்க நீங்க?” என்று ராஜேந்திரனின் பெரிய மகன் அதிருப்தியுடன் கேட்டான். “அவனை பத்தி உங்களுக்கு தெரியாது” என்று சதாசிவம் செல்ல, “அப்பாகிட்ட பேசணும்ண்ணா. இவர் போக்கே சரியில்லை” என்று தம்பி அண்ணனிடம் சொல்லிக்கொண்டான். “என்னங்க‘ண்ணா. உங்க மாமனார் பயங்கரமா விறைச்சுக்கிட்டு போறார். திரும்பவும் முட்டிக்கிட்டிங்களா என்ன?” என்று கேட்டனர் அவனின் தம்பிகள். “அவர் என்னைக்கு முட்டாம இருந்தார். நீங்க விடுங்கடா” என்று தேசிகன் தன்னை சமன்படுத்தி கொண்டு தயாராக ஆரம்பித்தான். கோர்ட், சூட்டிற்கு ஏற்ற வகையில் தேசிகன் தயாராக, பார்த்து கொண்ட ராஜேந்திரனின் மகன்களுக்கு வெகுவான திருப்தி. “கலக்கல் மாப்பிள்ளை“ “ஹாண்ட்ஸம்மா இருக்கீங்க?” என்று இருவரும் பாராட்டி அவனை அணைத்து கொண்டனர். தன்வியும் ரெடியாக இருக்க, தேசிகனை தான் முதலில் அவளை பார்க்க அனுப்பினார்கள். பார்ட்டி வேர் புடவையில், அதற்கேற்ற அணிகலன்களுடன் புதுப்பெண் ஜொலித்தாள். அறைக்குள் சென்ற தேசிகன் மனைவியை பார்த்து விசிலடிக்கவே செய்தான். “ஷ்ஷ். என்ன இது?” தன்வி சிறு புன்னகையுடன் அவனை அடக்க, “நல்லா இருக்க, அழகா இருக்க, தேவதை மாதிரி இருக்க. ரசிக்கிறேன், விசிலடிக்கிறேன்” என்றான் தேசிகன் ரசனையை சிறிதும் மறைக்காமல். “போதும். நீங்களும் செம” என்று தன்வி சொல்ல, “நிஜமா சொல்றியா?” தேசிகன் மலர்ந்த புன்னகையுடன் மனைவியை தோளோடு அணைத்து கொண்டதுடன், அவளின் நெற்றியில் அழுத்தமாக முத்தமும் வைத்தான். “இதே மாதிரி எப்போவும் கட்டிபிடிக்கலாம் இல்லை” என்று தன்வி கேட்க, “நீ கலைஞ்சிட கூடாதுன்னு தான் இப்படி. உன்னை கலைக்க எப்படி கட்டிபிடிக்கணும்ன்னு அப்புறம் காட்டுறேன்” என்று தேசிகன் உல்லாசமாக சொல்ல, “உங்களை” என்ற பெண்ணவள், அவனின் கோர்ட்டில் இருந்த சிறு மடிப்பை மருதாணி விரல்களால் சரிசெய்தாள். “முடிஞ்சுதா நாங்க வரலாமா?” என்ற வீட்டினர் உள்ளே வந்து பார்த்தவர்கள், மணமக்களுக்கு சுற்றி போட்டனர். சாவித்திரி மகன், மருமகளை தன்னோடு அணைத்து கொள்ள, தேசிகனுக்கு அந்த நொடி அவ்வளவு மகிழ்வாக இருந்தது. அம்மாக்காக என்னென்ன டிராமா பண்றான்? சதாசிவம் அவனின் மகிழ்ச்சியை விரும்பாதவராக, மகளை தன் தோள் வளைவில் வைத்து கொண்டார். ராஜேந்திரன் தான் தம்பியை கண்ணால் கண்டித்து, மகளை பிரித்து தேசிகனிடம் ஒப்படைத்தார். தம்பதிகள் ஜோடியாக மண்டபத்திற்குள் நுழைய, அவ்வளவு கரகோஷம், வெடி சத்தம், பூ மழை, ஆட்டம், பாட்டம் களைகட்டியது. இருவரும் மேடையில் போய் செட்டில் ஆகவே சில, பல நிமிடங்கள் ஆகிவிட்டது. அதன் பின் விருந்தினர்கள் வருகை குறையவே இல்லை. ராஜேந்திரன் பதவியால், மிக பெரிய அளவிலான அதிகார வர்க்கத்தினர் வருகை தந்தனர். அதில் மாநிலத்தின் முதலமைச்சரும், மத்திய அமைச்சர்களும், மாநிலத்தின் அமைச்சர்களும் அடக்கம் என்பதால், எந்நேரமும் மேடை பரபரப்பாகவே இருந்தது. ராஜேந்திரனால் மணமக்களை விட்டு நகர முடியவில்லை. சதாசிவம் அவர்களை வரவேற்று, வழியனுப்பி வைக்கவே நேரம் சரியாக இருந்தது. இரு குடும்பமும் தொழில் செய்வதால், அந்த பக்கம் இருந்தும் ஆட்கள் அதிகளவில் வந்திருக்க, மணமக்களுக்கு ஓய்வெடுக்க வழியே இல்லாமல் போனது. தன்வியின் நண்பர்கள் சில நிமிடங்களை ஆக்கிரமித்து கொண்டதுடன், கேக் வெட்டி, பாட்டு பாடி, தம்பதிகளை நடனமாட வைத்தே இறங்கி சென்றனர். ஆனால் அதன் பின்னான தேசிகனின் புன்னகை செயற்கையாக தான் மாறிப்போனது. “என்னாச்சுண்ணா?” என்று அவனின் தம்பி உடனே கண்டுகொண்டு அண்ணனிடம் விசாரிக்க, அருகில் நின்றிருந்த தன்விக்கு தன் கணவனை உணர முடியவில்லை. விருந்தினர்கள் வருகை குறையவும், எல்லா இளையவர்களும் ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டனர். அதற்கென தனி மேடை, இசை ஏற்பாடாகியிருக்க கேட்கவும் வேண்டுமா? அன்றைய இரவு அவர்களுக்கு நீண்டு கொண்டே சென்ற போதும், யாரும் அதற்காக கவலைப்பட்டது போல் இல்லை. ராஜேந்திரனுக்கு முக்கியமான வேலை வந்துவிட்டதால் அவர் உடனே கிளம்ப வேண்டிய கட்டாயம். “நீங்க எல்லாம் என்ஜாய் பண்ணிட்டு வாங்க. நான் கிளம்புறேன்” என்று எல்லோருக்கும் சொல்லி கொண்டவர், சதாசிவத்தை தனியே அழைத்து, “சம்மந்திங்க தங்கிறதுக்கு ஏற்பாடு பண்ணிட்டியா? அவங்களை நல்லா கவனிச்சுக்கோ. அவங்களும் டையர்டாகிட்டாங்க பாரு” என்று சொல்லி சென்றார். உண்மையில் சதாசிவம் அதை மறந்துவிட்டார். தேசிகன் மீதான கோவம் அவர் கவனத்தை சிதறிடித்திருந்தது. அவர்கள் வீடும் மண்டபத்தில் இருந்து தொலைவு என்பதால் அருகிலே எல்லாம் தங்குவதற்கு ராஜேந்திரன் ஏற்பாடு செய்ய சொல்லியிருந்தார். எத்தனை ரூம் வேண்டும் என்று கேட்பதற்காக தான் சதாசிவம், தேசிகனிடம் சென்றது. அந்நேரம் அவன் பேச்சை கேட்ட கோவத்தில் இதை மறந்திருந்தார் மாமனார். ஆனால் இப்போது வேறு வழி இல்லையே. ‘வீட்டுக்கு போக சொல்ல வேண்டியது தான்‘ என்ற நினைத்தபடி வர, அவர்கள் எல்லாம் ஹோட்டலுக்கு செல்ல தயாராக இருந்தார்கள். தேசிகனுடைய ஏற்பாடு தான் அது. வயதானவர்கள் என்பதால் தேசிகன் எப்போதும் அவர்கள் சவுகரியத்தில் கவனமாகவே இருப்பான். இப்போதும் யாரையும் எதிர்பார்க்காமல் தானே அவர்களை, தங்களின் காரில் ஹோட்டலுக்கு பத்திரமாக அனுப்பிவைத்தவன், தன்வி சாப்பிட தனக்காக காத்திருப்பாள் என்பதால் வேகமாக வந்தான். “சாரி தம்பி. நாங்க தான் அரேஞ் பண்ணியிருக்கணும்” என்று மனோகர் வருத்தம் கொள்ள, “இருக்கட்டும்ண்ணா. உங்களுக்கும் நிறைய வேலை தானே” என்று முடித்து கொண்டான் தேசிகன். தேசிகன் உணவுண்ண வந்த நேரம், தன்வி சாப்பிட்டே முடித்திருந்தாள். அந்த நொடி ஏமாற்றம் மனதை கவ்வியது. ‘அவளுக்கு பசிச்சிருக்கும். விடுடா‘ தன்னை தானே கடிந்து கொண்டு உணவுண்ண அமர்ந்தான் தேசிகன். மனோகர் அவனுக்கு நின்று பரிமாற, தன்வி ஸ்ருதியுடன் ஏதோ பேசி கொண்டிருந்தாள். “அதுக்குள்ள சாப்பிட்டீங்களா?” தன்வி வேகமாக எழுந்துவிட்ட கணவனிடம் கேட்க, “இல்லை போதும்” என்று முன் நடக்க, “அவர் வரவரைக்கும் காத்திருக்க மாட்டியா நீ? என்ன பண்ற தன்வி” என்று மனோகர் அவளை கடிந்து கொண்டான். தன்விக்கும் அவள் தவறு புரியத்தான் செய்தது. ஆனால் என்ன செய்ய சதாசிவம், “அவர் வர லேட் ஆகும். நீ சாப்பிடு” என்று மகள் சாப்பிடும் வரை அங்கேயே நின்றதை சொல்லவில்லை. புதுமண தம்பதிகள் உணவு முடித்து வரவும், சதாசிவம் விருந்தினர்களுடன் அவர்களை எதிர்கொண்டார். “ஹாய் ஹலோ நீங்க தான் மாப்பிள்ளையா?” என்று அவர் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார். தன்விக்கு ஓய்வறை செல்ல வேண்டி இருக்க, “எக்ஸ்கியூஸ் மீ” என்று கேட்டு கொண்டு ஸ்ருதியுடன் செல்ல, மனோகரும் மண்டபத்தின் ஆட்கள் ஏதோ கேட்க, அவர்களிடம் சென்றான். நெடு நேரம் ஆகிவிட்டதால் விருந்தினர்களும் கிளம்பியிருக்க, வீட்டு ஆட்கள் மட்டுமே அங்கிருந்தனர். “உங்க மாப்பிள்ளைன்னு எனக்கு முதல்லே தெரியாம போச்சு மிஸ்டர் சதாசிவம்” என்றார் தாமதமாக வந்த விருந்தினர்.