மலர் சூடும் பெண்மை 14 2 11838 தன்விக்கு அதிர்ச்சி. “உண்மையா தான் சொல்றீங்களா?” “உண்மை தான். நீங்க பாருங்க மாமா” என்று அவரை அனுப்பிவிட்டவன், “நீ MBA படிச்சிருக்கிறதால என்கிட்ட அதிகம் எதிர்பார்த்துட்ட போல” என்றான் வருத்தமாக. “என்கிட்ட நீங்க இதை சொல்லியிருக்கணும்” தன்வி சொல்ல, “ஏன் என்னை வேணாம் சொல்லவா?” “இப்போ என்ன எல்லாம் தெரிஞ்சுக்கிட்டா உங்களுக்கு சரி சொன்னேன்“ “சரி. உனக்கு தெரிஞ்சிருக்கும் நினைச்சேன். இட்ஸ் ஓகே. எனக்கு அப்போ சூழ்நிலை சரியில்லை. படிப்பை பாதியில நிறுத்திட்டேன்” “ஏன் என்னாச்சு?” தன்வி தெரிந்துகொள்ள கேட்டாள். “அது ஒரு பெரிய கதை. லவ் மேட்டர்“ “வாட்?” “ஏன் நாங்க எல்லாம் காதலிக்க கூடாதா?” தன்விக்கு இதற்கு என்ன பதில் சொல்ல என்று கூட தெரியவில்லை. “என்ன மேடம். காதல் எல்லாம் உங்களை மாதிரி ஆளுங்களுக்கு மட்டும் தான் எழுதி வைச்சிருக்கா?” “நீங்க முதல்ல விஷயத்தை சொல்லுங்க“ “பப்பி லவ். அவங்க வீட்ல தெரிஞ்சு, ஸ்கூல்ல கம்பளைண்ட் பண்ணி, எங்க அம்மாக்கு சொல்லி, அவங்க என்னை அடிச்சு, நிறைய நடந்திடுச்சு. எனக்கு வாழ்க்கையே வெறுத்து போனதால, படிப்பென்ன பெரிய படிப்புன்னு விட்டுட்டேன்“ “இதுக்காக எல்லாம் யாராவது படிப்பை விடுவாங்களா?” “நான் விடுவேன். காதல்ன்னா சும்மா நினைச்சியா?” என்று பொங்கி பேசினான் அவளின் கணவன். “அப்போ அந்த காதலியே தேடி கட்டிக்க வேண்டியது தானே?” தன்வி எரிச்சல் கொண்டாள். “அதுக்குள்ள தான் நீ இடையில வந்துட்டியே” என்றான் தேசிகன் துயரம் நிறைந்த முகத்துடன். “நான் தான் உங்களை வேணாம் சொல்லிட்டேன் தானே. அப்புறமென்ன?” “காதலியையவே விடாதவன், கட்டின பொண்டாட்டியை விட்டுடுவேனா?” என்று நெஞ்சை நிமிர்த்தினான் நல்லவன். “காட். இது ஒரு பிளாஷ் பேக்‘கா. ரொம்ப கொடுமையா இருக்கு” தன்வி நெற்றி நீவிவிட்டு கொள்ள, “காபி குடி. சரியா போயிடும். நான் அப்படித்தான் என் கஷ்டத்தை ஆத்திப்பேன்” என்ற கணவனின் கையில் சுடசுட காபி ஆவி பறந்தது. வாங்கி அப்படியே அவன் முகத்தில் ஊற்றிவிட்டால் என்ன என்ற திடீர் சிந்தனை பெண்ணுக்குள் தீவிரமாக ஓடியது. தேசிகன் புரிந்து சட்டென காபி கப்பை பின்னால் மறைத்து கொண்டவன், “இங்க பாருங்க பொண்டாட்டி மேடம். உங்களுக்கு நான் உண்மையா இருக்கணும்ன்னு தான் எல்லாம் சொன்னேன். நீங்க என்னை காயப்படுத்த இல்லை“ “இவ்வளவு கேவலமான கதை சொன்ன நீங்க இதை டிசர்வ் பண்றீங்க” தன்வி பல்லை கடித்தாள். “என் சோகம், உனக்கு கதையா இருக்கா? இந்த பொம்பிளைங்களே இப்படி தான்” என்று சலித்து கொண்டவன், இரண்டு காபியையும் தானே குடித்தான். “நாம வீட்டுக்கு போலாம்” “இரு. இன்னும் பார்க்கணும்“ “பார்க்கிறதை விட உங்க கதையை கேட்க எனக்கு இஷ்டமில்லை” என்று தன்வி நடையை கட்டிவிட்டாள். வீட்டினர் யாரிடமும் அவள் அதுபற்றி விசாரிக்கவும் இல்லை. தேசிகனுக்கு அதில் மலர்ந்த புன்னகையே. இரவு அறைக்கு வந்த மனைவியிடம் “இன்னைக்கு நமக்கு செகண்ட் நைட்” என்றான் வம்பிழுத்து. “அதுக்கு?” தன்வி கடுப்பாக கேட்க, “நேத்து கட்டி பிடிச்சுட்டு தூங்கிட்டோம். இன்னைக்கு அடுத்த படி ஒரு முத்தம்“ “ஓஹ் காட். பேசாம படுத்து தூங்குங்க. நாளை சென்னை போகணும்“ “தன்வி. எனக்கு நீ நேத்து தேங்க்ஸ் சொல்லவே இல்லை. மறந்திடாத“ “சொல்ல வரத்துக்குள்ளே கட்டி பிடிச்சது யாரு?” “சரி இப்போ சொல்லிடு. அப்புறம் கட்டி பிடிச்சிக்கிறேன்“ “வாய்ப்பே இல்லை. குட் நைட்” என்று கட்டிலின் மறுபுறம் படுத்துவிட்டாள். தேசிகன், “ரொம்ப பண்ணாதடி” என்றபடி தானும் படுத்தான். அடுத்த நாள் அவர்கள் திட்டப்படி கிளம்பி சென்னை வந்தனர். தன்வி வீட்டில் புது மணமக்களுக்கு நல்ல வரவேற்பு. பின் மாலை போலவே அவர்கள் வந்திருக்க, இரவு உணவை முடித்து கொண்டு ஓய்வெடுக்க அறைக்கு வந்துவிட்டனர். “உன் அப்பா எப்போவும் இப்படி தானா? இல்லை நான் வந்திருக்கிறதால இப்படி இருக்காரா?” என்று கேட்டான் தேசிகன். “ஏன்? அவர் உங்ககிட்ட நல்லாத்தானே பேசினார்?” “உன் அப்பாவை விட்டு கொடுப்பியா நீ? சரி உங்க வீட்டுக்கு வந்திருக்கேன். ஸ்பெஷல் கவனிப்பு ஏதும்?” “படத்துக்கு போலாமா?” “க்கும். இது நமக்கு மூணாவது நைட்” என்றபடி மனைவியை நெருங்க, “நோ. நோ. அங்கேயே நில்லுங்க” என்று அவன் நெஞ்சில் கை வைத்து நிறுத்தினாள் தன்வி. “ஏன் நான் உன்கிட்ட வரக்கூடாதா என்ன? இல்லை எனக்கு அந்த உரிமை தான் இல்லையா?” “உடனே ஷோல்டரை தூக்க கூடாது. உரிமை எல்லாம் அப்புறம் பார்த்துப்போம். வேறெதுவும் கேளுங்க“ “ம்ம். சரி,நீ தான் கட்டிபிடிக்க மாட்டேங்கிற. உன் அப்பாவையாவது என்னை கட்டிபிடிக்க சொல்லு. நான் கிட்ட போனாலே மனுஷன் தெறிச்சு ஓடுறார்“ “காட். அதுக்கு நானே உங்களை கட்டி பிடிச்சிடுவேன்“ “அதை செய்டி முதல்ல” என்று வெகு ஆர்வமாக மனைவியை ஒட்டி நின்றான் கணவன். “ஜென்டிலா கட்டிபிடிக்கணும்” அவள் கட்டளையாக சொன்னபடி அவனை கட்டிக்கொள்ள, எப்போதும் போல முழு அணைப்பே தான் அவளுக்கு கிடைத்தது. இதில் கூடுதலாக அவளின் இடைக்குள் கை நுழைத்தவனை, “என்ன பண்றீங்க நீங்க?” என்று பெண் விலக முயன்றாள். “நேத்தே இந்த இடுப்பு மேல ஒரு கண்ணு வைச்சிட்டேன். நல்ல வளைவா, என்னை வழுக்கிட்டு போ வான்னு கூப்பிட்டுச்சா, அதான் நானே சுத்தி போட்டுடலாம்ன்னு“ “காட். போதும் விடுங்க” தன்வி சிவந்துவிட்ட முகத்துடன் அவனை தள்ளிவிட, தேசிகன் திரும்ப அவளை இழுத்து அழுத்தமாக கன்னத்தில் முத்தமிட்டான். “ஏங்க?” “சொல்லுங்க” என்றவன் பார்வை தன்வியின் அவன் முன் நிற்க விடவில்லை. “குட் நைட்” என்று போர்த்தி கொண்டு படுத்துவிட்டாள். தேசிகன் மேலும் சில நிமிடங்கள் அறைக்குள்ளே நடந்தவன், அதன் பின் தான் உறங்க ஆரம்பித்தான். மறுநாள் அதிகாலையிலே எல்லாம் கிளம்பி ராஜேந்திரன் வீட்டார் கோவிலுக்கு சென்றார்கள். மனோகர், ராஜேந்திரனின் மகன்கள் எல்லாம் தேசிகனிடம் தோழமையாகவே பேச, அவனுக்கும் நேரம் நன்றாகவே சென்றது. பூஜை முடிந்து, வீட்டுக்கு வந்த பின்னர், வரவேற்புக்கான ஏற்பாடுகளை தீவிரமாக பார்த்தனர். தன்வி கணவனை அழைத்து கொண்டு அவளின் அலுவலகம் சென்றாள். “நான் இதுக்கு முன்னாடி வந்திருக்கேன்” என்று தேசிகன் சொல்ல, “என்னோட வரதுல என்ன கஷ்டம்?” என்றவள், அலுவலகத்தில் உள்ளவர்களுக்கு கணவனோடு சேர்ந்து ரிஷப்ஷனிற்கு அழைப்பு விடுத்தாள். பின்மாலை போல் வீட்டின் இளையவர்கள் எல்லாம் சேர்ந்து படத்திற்கு சென்று, வெளியவே உணவை முடித்து கொண்டு வந்தனர். அன்றிரவு நன்றாக தூங்கிவிட்டு, அடுத்த நாள் வரவேற்பிற்கு எல்லாம் தயாரானார்கள். தேசிகன் வீட்டினரும் வந்துவிட, அவர்களை கவனிக்கும் பொறுப்பை சுதா எடுத்து கொண்டார். தன்வி அவர்கள் வீட்டு மருமகளாக அடிக்கடி சென்று பார்த்து கொள்ள, “இதுவும் நம்ம வீடு தான். நீ எங்களை விட்டு போய் ரெடியாகு. ஆளுங்க வந்துட்டாங்க பாரு” என்றார் அத்தை. தன்வி ஏதும் பேசாத மாமியாரின் முகம் பார்த்து நின்றாள். “அவங்க அமைதியாகி ரொம்ப வருஷம் ஆச்சு. யார்கிட்டேயும் அம்மா ஒட்டுறதில்லை” என்று தேசிகன் மனைவியின் பார்வையை கவனித்து அவளை தனியே அழைத்து வந்து சொன்னான். “உங்ககிட்ட கூடவா?” “என்கிட்ட இப்போ அப்படி இருக்காங்க” என்றான் இருள் மறைத்த முகத்துடன். “ஏன் என்னாச்சு?” தன்வி கேட்க, “அப்புறம் பேசுவோம். நீ போய் ரெடியாகி வா” என்று அவளை அனுப்பி வைத்தவன், அங்கேயே நின்று அம்மாவை பார்த்தான். “எல்லாம் சரியாகிடும் மருமகனே” என்று தேசிகனின் மாமா அவனின் தோள் தட்ட, “சரியாகிடணும் மாமா. என்னோட தப்பை நான் சரிபண்ண அதிகமே முயற்சி எடுக்கிறேன், அம்மா என்னை மன்னிச்சு முன்ன மாதிரி என்கிட்ட இருக்கணும்” என்றான். “அதெல்லாம் இருப்பா, அவளுக்கும் உங்களை விட்டா யார் இருக்கா? ஒரு கட்டத்துல அவ வாழணும்ன்னு நினைச்சதே உங்களுக்காக தானே?” “அதுதான் என்னை கொன்னுட்டு இருக்கு மாமா. நான் அவங்களை கஷ்டப்படுத்துற மாதிரி பண்ணியிருக்க கூடாது இல்லை. அந்தாள் ரத்தம் தான் நான்‘னு சொல்லிட்டாங்களே” இப்போதும் கோவம் பாதி வேதனை பாதியாக சொன்னான். “அவளோட ரத்தம் தான் நீ‘ன்னு அவளே ஒருநாள் கண்டிப்பா சொல்லுவா“ “சொல்லணும் மாமா. சொல்றவரைக்கும் நான் விட மாட்டேன்“ “நீ தன்வியோட நல்லா வாழ்ந்தாலே போதும் மருமகனே. உன்கிட்ட அவளோட எதிர்பார்ப்பும் அது தான்“ “எனக்கும் தெரியும் மாமா. தன்வி விஷயத்துல தானே அம்மா என்கிட்ட கோவப்படங்க. தன்வியே திரும்ப என்னை அவங்ககிட்ட சேர்ப்பா. அதுக்காக நான் என்னவேணா செய்வேன்“ “சரி நீ வந்து கிளம்பு. நேரம் ஆகுது பாரு” என்று அவர் தேசிகனை அழைத்து செல்ல, அவர்களுக்கு பின் நின்றிருந்த சதாசிவத்திற்கு நெஞ்சம் கொதித்து போனது. அவனோட அம்மாகாக என்ன வேணா செய்வானா? அப்போ என் பொண்ணை விடாம திரும்ப கல்யாணம் பண்ணதும் அவங்களுக்காக தானா? இவனையும், இவன் அம்மாவையும் சேர்த்து வைக்க தான் என் பொண்ணு இருக்காளா என்ன? அவளோட வாழ்க்கையில விளையாட இவனுக்கென்ன உரிமை இருக்கு? என் பொண்ணை என்ன நினைச்சான் இவன்? அவளோட மதிப்பு தெரியுமா இவனுக்கு? நெஞ்சம் ஏறி இறங்க கொதித்த மனிதர், தேசிகனுக்கு பாடம் கற்று கொடுத்தே ஆக வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டார். அதற்கேற்றது போல அன்று வரவேற்பில் அவருக்கு வாய்ப்பும் அமைந்தது.