பூத்தது ஆனந்த முல்லை -18

அத்தியாயம் -18

மகனுக்காக அசைவம் வாங்கி வந்திருந்த வேதாச்சலம், மருமகளை அழைத்து கொடுத்தார். 

“வீடுன்னு இருந்தா எப்பவும் பிரச்சனை இருக்கத்தான் செய்யும்,  அவன் வயித்த கவனிம்மா” என்றார். 

எந்த வேலையும் செய்யும் மன நிலையில் இல்லை தேன். இருப்பினும் வாங்கி வந்த பிறகு என்ன செய்வது, பெருமூச்சு விட்டபடி சமையலறை சென்று விட்டாள். 

ஆனந்த் அறைக்குள் இருந்த படியே மகனோடு நேரத்தை செலவிட்டுக் கொண்டிருந்தான். 

சின்ன மகனின் திருமணத்துக்கு உண்டான பணத்தை எப்படி ஏற்பாடு செய்வது, நீங்களாவது ஆனந்திடம் பேசுங்களேன் என கணவரிடம் சொன்னார் சுந்தரி. 

இதுவரை மனைவி மகனிடம் என்ன பேச்சு வார்த்தை செய்தாள் என்பதையெல்லாம் தெளிவாக கேட்டுக் கொண்ட வேதாச்சலம், ஏதோ முடிவெடுத்தவராக இரண்டு மகன்களையுமே ஹாலுக்கு அழைத்தார். 

“அகிலனோட கல்யாண செலவுக்கு நான் வழி சொல்றேன், அதுக்கு நான் சொல்ற நிபந்தனைக்கு  ஒத்துக்கணும் நீங்கல்லாம்” என புதிர் போட்டார். 

என்ன பெரிதாக சொல்லி விடப் போகிறார் என்ற அலட்சியத்தில், “நீங்க என்ன சொன்னாலும் ஒத்துக்கிறோம், என்ன வழின்னு முதல்ல சொல்லுங்க” என்றார் சுந்தரி. 

அம்மாவின் கூற்றை ஆமோதிப்பது போல் நின்றான் அகிலன், ஆனந்தோ அமைதியாக அப்பாவை பார்த்திருந்தான். 

பங்காளி தகராறில் கோர்ட் கேசில் இருக்கும் நிலத்தை சமரசம் பேசி, அவர்களுக்கே விட்டுத் தந்து, குறிப்பிட்ட தொகையை பெற்றுக் கொள்ளலாம் என்றார் வேதாச்சலம். 

பெரிய மகனுக்கு தேவை என்ற போது யோசித்த சுந்தரி, “அடடா அதை மறந்தே போனேன் பாருங்க, ரொம்ப நல்ல ஐடியா, அவங்கதான் எப்ப எப்பன்னு இருக்காங்களே, அந்த கேசும் எப்ப முடியும்னு ஒரு மண்ணும் புரிய மாட்டேங்குது. எனக்கு சம்மதம்தாங்க” என்றார். 

அகிலனும் அந்த யோசனை தனக்கு சரியென படுவதாக சொன்னான்.

“என்னமோ செய்யுங்க ப்பா” என சொல்லி மீண்டும் அறைக்கு செல்ல பார்த்தான் ஆனந்த். 

“இருடா, நான் என்ன கண்டிஷன் போட போறேன்னு தெரிஞ்சுக்காம எங்க போற?” என்ற வேதாச்சலம், இப்ப மாட்டுவ பாரு என்பது போல மனைவியை பார்த்தார். 

சமையல் வேலையை விட்டு விட்டு தேனும் ஹாலுக்கு வந்து விட்டாள். 

“அந்த இடத்துக்கு வர்ற பணத்த உன் கைல ஒப்படைச்சிடுறேன், என்ன செய்யணுமோ செஞ்சுக்க, அதுக்கு முன்ன ஊர்ல இருக்க வீட்ட ஆனந்த் பேர்ல மட்டும் இருக்கிற மாதிரி பத்திரத்தை மாத்தி எழுதணும். அதுக்கு ஒத்துக்கிட்டா நிலத்தை விட்டுக் கொடுத்து பணம் வாங்கி தர்றேன்” என்றார் வேதாச்சலம். 

சுந்தரி கோவமாக பார்க்க, “அதெல்லாம் வேணாம் ப்பா, என்னை ஆள விடுங்க” என சொல்லி மீண்டும் அறைப் பக்கமாக திரும்பினான். 

அவனை போக விடாமல் பிடித்துக்கொண்ட அவனது தந்தை, “எனக்கும் மனசாட்சி இருக்குடா, நான் செய்ய வேண்டியதை எல்லாம் என் இடத்திலேருந்து நீ செஞ்ச. உனக்காக ஏதோ ஒரு நல்லது செய்ய எனக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு. என் நிம்மதிக்காக இது” என்றார். 

விட்டுக் கொடுப்பது என முடிவாகி விட்ட பிறகு, அடுத்த யோசிக்க எதுவும் இல்லை என நினைத்துக் கொண்ட ஆனந்த், சிறு சிரிப்பை உதிர்த்து அப்பாவின் கைப்பிடியை  விடுவித்துக் கொண்டு அறைக்கு சென்று விட்டான். 

அப்பாடா என நெஞ்சில் கை வைத்து நிம்மதி அடைந்த மனைவியை விடுவதாக இல்லை வேதாச்சலம்.

“உனக்கே நல்லா தெரியும் அந்த வீடு முழுக்க முழுக்க அவன் உழைப்பு. நம்ம கடைசி மூச்சு வரை நாம அங்கதான் இருக்க போறோம், ஆனா அத அவனுக்கு கொடுக்காம வேற மாதிரி பண்ணினா சத்தியமா சொல்றேன் சுந்தரி நமக்கு மோட்சம் கிடைக்கவே கிடைக்காது” என்றார். 

குழப்பமாக விழித்தார் சுந்தரி. 

“இதுக்கு ஒத்துக்கிட்டா இடத்தை விட்டு கொடுத்து பணம் வாங்கி தர்றேன், இல்லைனா உன் இஷ்டம். என்னமோ பண்ணு” என சொல்லி தோள்களை குலுக்கினார் வேதாச்சலம். 

இப்போது சுந்தரிக்கு வீட்டை மகனின் பெயருக்கு மட்டுமே என மாற்றுவதை காட்டிலும் தன்னிடம் இருக்கும் ஒன்றை பறிக்க போகிறார்களா என்ற பயம் ஏற்பட்டது. 

அம்மாவுக்கு பின் தனக்கு அந்த வீட்டில் பங்கு கிடைக்கும் என்ற நப்பாசை அகிலனுக்கு இருந்தது. ஆனால் தற்போது பணத்தேவை மிக அத்தியாவசியமாக இருக்கவும் என்ன செய்வது என நகத்தை கடிக்க ஆரம்பித்தான்.

“என்னவோ நீ உழைச்சு சாம்பாதிச்ச மாதிரி எதுக்குடா இவ்ளோ யோசிக்கிற? சொந்தம் கொண்டாட அந்த வீடு உன் அப்பன் வீட்டு சொத்தும் இல்லை. சொல்ல போனா இடத்தை வித்தா அதுல ஆனந்துக்கும் பங்கு இருக்கு, அத அவன் விட்டு கொடுத்திடுவான், நான் சொல்றதுக்கு உன் அம்மாவை பேசி சம்மதிக்க வை. இல்லைன்னாலும் அந்த வீட்ட அவனுக்கு மட்டும்தான் உரிமைன்னு ஆக்கி காமிப்பேன்டா நான்” என சத்தமாக பேசினார் வேதாச்சலம். 

“அப்படி என்ன பண்ணுவீங்களாம்?” கோவமாக கேட்டார் சுந்தரி. 

ஒரு வேகத்தில் சொல்லி விட்டாரே தவிர வேதாச்சலத்திடம் எந்த திட்டங்களும் இல்லை.

“நாளைக்கு என்ன வேணா நடக்கும்  சுந்தரி, உனக்கும் எனக்கும் முடியாம போனா இந்தா நிக்கிறானே உலக்கை மாதிரி… இவன் வந்து நம்மள பார்ப்பான்னு நினைக்கிறியா? அந்த வீட்ட  நீ வித்து தின்னா கூட பெருசு பண்ணாம ஆனந்த்தான் நம்மள கவனிக்க வருவான். மேல மேல பாவத்தை சேர்க்க கூடாது சுந்தரி” நயமாக சொன்னவர், “உனக்கு உடனே பணம் வேணும்னா வீடு ஆன்ந்துக்குன்னு மாறணும். அம்மாவும் புள்ளையும் ஆலோசிச்சு நல்ல முடிவா சொல்லுங்க. இல்லைனா நைட்டே ஊருக்கு கிளம்புங்க, எப்படியாவது பணத்த புரட்டுங்க. கடன் வாங்கலாம்னு கனவுல கூட நினைக்காதீங்க, உன் அப்புணுவோட வருங்கால மாமனார்கிட்ட போயி இவ்ளோ வட்டில இவ்ளோ கடன் இருக்குனு ஆதாராத்தோட சொல்லி கொடுத்திடுவேன். பிறகு இவன் கல்யாண கனவுக்கு அதிர் வேட்டுதான்” என மிரட்டலாக சொன்னார். 

“புள்ளயோட கல்யாணத்த நீங்களே கெடுப்பீங்களா? நல்லா இருக்கு உங்க பேச்சு!” சீறினார் சுந்தரி. 

“ஹ்ஹ! பார்த்து பார்த்து செய்ற மூத்த புள்ளைக்கு நீதான் துரோகம் பண்ண நினைக்கற, இந்த கல்யாணம் நின்னா ஒன்னுத்துக்கும் உதவாத தண்டத்துகிட்ட மாட்டிக்காம ஒரு பொண்ணு நல்லாவாவது இருக்கும். போடி!” என மனைவியிடம் சொன்னவர், மாமனாரை வியப்பாக பார்த்து நின்ற தேனிடம், “நல்ல காரசாரமா சமைச்சு வைம்மா. திருப்தியா சாப்பிட்டு ஊருக்கு கிளம்பட்டும் ரெண்டு பேரும்” என சொல்லி வெளியே சென்று விட்டார். 

சுந்தரியும் அகிலனும் மாய்ந்து  மாய்ந்து பேசிக் கொண்டனர். பணத்துக்கு எந்த தீர்வும் கிடைக்கவில்லை. அப்பா சொன்னதை தவிர வேறு வழியில்லை என்பதை திண்ணமாக உணர்ந்து கொண்டான் அகிலன்.

சுந்தரியோ வீட்டை விட்டுக் கொடுக்க மாட்டாட்டேன் என அடமாக சொன்னார். 

“வருஷம் கழிச்சு வர்ற பலாக்காய் விட இப்போ கைக்கு கிடைக்கிற கலாக்காய்தான் முக்கியம்மா” என்றான் அகிலன். 

“அடச்சீ! என் பேர்ல உள்ள சொத்த புடுங்க பார்க்கிறார் டா உங்கப்பா” எரிச்சலில் ஆரம்பித்து அழுகையில் முடித்தார் சுந்தரி. 

“என் மாமனார் வீட்ல எல்லா அதிகாரமும் என் கைக்கு வரட்டும், பெரிய பங்களா வாங்கி உன் பேர்ல எழுதி வைக்கிறேன் மா. இப்ப அண்ணா பேருக்கே அந்த வீட்ட மாத்திடலாம் மா” என்றான் அகிலன். 

அப்போதும் சுந்தரியால் எளிதாக சம்மதிக்க முடியவில்லை. தொண்டை தண்ணீர் வற்ற பேசி பேசியே அம்மாவை கரைத்து ஒத்துக் கொள்ள செய்தான் அகிலன். 

அந்த முடிவை பெரிய மகனிடம் சொல்லி, விரைவில் பத்திர மாற்றம் நடைபெறும், நான் சொல்லும் போது ஒரு நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு ஊருக்கு வந்து சேர் என உறுதியாக சொல்லி அன்றைய இரவே மனைவி மற்றும் சின்ன மகனை கிளப்பிக் கொண்டு சென்றார் வேதாச்சலம். 

மாப்பிள்ளையின் வரவை அறிந்த தங்கப்பன் அவர்களுக்கு தனிமை கொடுக்க எண்ணி இன்னும் ஒரு நாள் தனது சென்னைப் பயணத்தை தள்ளி வைத்தார். 

மகனோடு விளையாடினாலும் உள்ளுக்குள் எவ்வளவு வருத்தத்தை சுமந்து கொண்டிருக்கிறான் தன் கணவன் என்பதை புரிந்தே இருந்தாள் தேன். இரவு சாப்பாடு பரிமாறிக் கொண்டே, “உங்கப்பா உங்களுக்காக பேசுறார், கண்டிப்பா வீடு உங்களுக்கு மட்டுமேன்னு ஆகிடும். இன்னும் ஏன் இப்படி இருக்கீங்க?” எனக் கேட்டாள். 

“வீடு எனக்கு வர்றதும் வராததும் இல்லை தேனு பிரச்சனை” என்றவன் பெரிதாக மூச்சிழுத்து  விட்டு, “அத பத்தி பேச வேணாம் தேனு” என சொல்லி ஒரு வாய் சாப்பிட்டான். 

சில நாள் பிரிவுக்கு பின் மனைவி மகனை காண வந்திருக்கிறேன், வேண்டாததை விடுத்து தற்காலிக பொழுதை இனிமையாக கழிப்போம் என மனதிற்குள் நினைத்துக்கொண்டே சாப்பிட்டான். 

மதியமே வற்புறுத்தி சாப்பிட வைத்திருந்தாள்தான் தேன், ஆனால் சுவையை உணராமல் அவளுக்காக சாப்பிட்டிருந்தான். இப்போதுதான் சுவையை உணர்ந்து அனுபவித்து சாப்பிட்டான். 

“சூடா இட்லியும் நீ வச்ச கறிக் குழம்பும் செம காம்பினேஷன். நாக்குக்கு உசுர் வந்திடுச்சு தேனு” என சிலாகிப்பாக சொன்னான். 

“பிடிச்சிருக்கா, நாளைக்கு என்ன சமைக்கட்டும்னு சொல்லுங்க செஞ்சு தர்றேன்” என ஆர்வமாக கேட்டாள்.

“உன் கையால பழைய சாதம் கொடுத்தா கூட ஓகேதான் எனக்கு”

“நிஜமாவே பழையது போடுவேன் பார்த்துக்கோங்க” என மிரட்டினாள். 

“நிஜமாதான் தேனு. அங்க சாப்பாடு சுத்தமா செட் ஆகல எனக்கு. உன் கை சாப்பாட்டு அருமை புரியணும்னு நல்லா வச்சு செய்றார் கடவுள்” 

“வயித்த காய போடாம ஒழுங்கா சாப்பிடுங்க. நாளைக்கு மீன் குழம்பும் நண்டு வறுவலும் செய்றேன். உங்க பையனும் நண்டு விரும்பி சாப்பிடுறான்” என்றவள் மேலும் மகனை பற்றி கூறினாள். 

மகனின் வளர்ச்சியை அருகிலிருந்து பார்க்க முடியவில்லையே என்ற ஆதங்கம் அவனிடம் வெளிப்பட்டது. 

“ஏன் இவ்ளோ ஃபீல் பண்றீங்க, அடுத்த மாசமே நாங்க அங்க வந்திடுறோம், நான் வேலைய விட்டிடுறேன்” என்றாள் தேன். 

“வேணாம் தேனு, உனக்கேத்த மாதிரி நல்ல வேலைக்கு ஏற்பாடு பண்றேன். வீட்லேருந்தே செய்ற மாதிரி இருந்தா தருணை யார் பார்ப்பாங்கிற கவலை உனக்கு வேணாம். இங்க துணைக்கு இருக்க மாமா அங்க வந்து இருக்க மாட்டாரா?” என அவன் கேட்க, அவள் தலையாட்டிக் கொண்டாள். 

நேரம் பத்தாகியும் உறங்காமல் விளையாடிக் கொண்டே இருந்தான் தருண். 

“இன்னிக்கு மதியமும் தூங்கி சாயந்தரமும் தூங்கிட்டான்ல, அதான் இப்படி பண்றான்” என காரணம் சொன்னாள் தேன். 

“ரொம்ப துறுதுறுன்னு இருக்கான், மாமா எப்படி சமாளிக்கிறாங்க?” எனக் கேட்டான். 

“ஷ்ஷ்ஷ் புள்ளய கண்ணு வைக்காதீங்க, இந்த வயசுல எல்லா பசங்களும் இப்படித்தான் இருப்பாங்க” என்றாள். 

கணவனும் மனைவியும் பேசிக் கொண்டே இருந்தனர். அமர்ந்து பேசிக் கொண்டிருந்தவர்கள் அப்படியே வெறும் தரையில் படுத்துக் கொண்டே பேசினார்கள். தருண் இன்னும் சுறு சுறுப்பாகவே காணப் பட்டான். 

ஆனந்த் கொட்டாவி விட, தேனும் உறக்கம் வழிந்த கண்களை கசக்கினாள். 

“இவன் இப்படியே பண்ணினா நமக்கு அடுத்த குழந்தை பொறந்த மாதிரிதான்” என சிரித்துக் கொண்டே சொன்னான் ஆனந்த். 

“இன்னிக்குத்தான் இப்படி பண்றான், இல்லைனா நேரத்துக்கு தூங்கிடுவான்” என்றாள் தேன். 

“அப்படிங்குற?” சீண்டலாக கேட்டான். 

“ச்சீ நீங்க நினைக்கிற மாதிரி இல்லை. சாதாரணமா சொன்னேன்” என வெட்கப்பட்டாள். 

“அவன் கண்ண கசக்குறான் பாரு, சீக்கிரம் தூங்கிடுவான் போல” என ரகசியக் குரலில் சொன்னான். 

“பன்னெண்டு மணியாக போகுது, கப்சிப்னு தூங்குங்க” என அவள் சொல்ல, மீண்டும் அவன் கொட்டாவி விட்டான். 

“ஆள பாரு, பேச்சுதான் பெத்த பேச்சு!” என அவள் கிண்டல் செய்தாள். 

“நீ ‘ம்’னு சொல்லு, அப்புறம் ஆள பத்தி தெரிஞ்சுக்கலாம். எங்க நீதான் சொக்கி வழியிறியே” என்றான். 

இப்படியாக இருவரும் ஒருவரையொருவர் கலாய்த்துக் கொண்டே ஏதோ ஒரு நொடியில் உறங்கி விட்டனர். சற்று நேரத்தில் தருண் அவனது அம்மாவின் மேல் படுத்துக் கொண்டான். 

ஆங்காங்கே கலைந்து கிடந்த விளையாட்டுப் பொருட்களும் ஒழுங்கற்று உறங்கிக் கிடந்த அந்த மூவரும் அந்த வீட்டின் கூடத்தை அத்தனை உயிர்ப்பானதாகவும் அழகானதாகவும் மாற்றியிருந்தனர்.