அனிதாவின் வளைகாப்பு, அமைதியாய் அழகாய் நடந்தேரிக்கொண்டு இருந்தது. பிரம்மாண்டமாய் இல்லாமல் ரசனைக்குறிய வகையில், மெல்லிய பின்னணி இசையுடன் நம்பெருமாள் குடும்ப தோட்டத்திலேயே நிகழ்ந்துகொண்டு இருக்க, அனிதாவின் முகத்தினில் அப்படியொரு பூரிப்பு.
அனிதாவிற்கு முதலில் ரோஜாவும், பாமினியும் வளையல் போட்டுவிட, அடுத்து ஒவ்வொருவராய் ஆரம்பிக்க, முகத்தில் இருக்கும் புன்னகை மாறாமல் அர்ச்சனாவும், அவளது அக்காவுடன் தான் மேடையில் இருந்தாள்.
அழகிய மாம்பழ நிற பட்டச் சேலையில், அதிசயத்திலும் அதிசயமாய் தலையை வாரி பின்னலிட்டு, பூச்சூடி, முல்லை போட்டே ஆகவேண்டும் என்று கொடுத்த அந்த புதிய இடுப்புச் சங்கிலி வேறு அணிந்து, பார்க்க கொஞ்சமில்லை நிறையவே அழகாய் இருக்க, அர்ச்சனா இங்கே வந்ததில் இருந்தே அச்சுதனின் கண்களை அவளைத்தான் பார்த்துக்கொண்டு இருந்தது.
வந்தவர்களை கவனிக்கும் வேலைகள் இருந்தாலும் கூட, என்னவோ அவனது பார்வை அவன் சம்மதமின்றி அவள் பக்கமே போக, முதல் நாள் வேறு அம்மா அழைத்தமைக்கு ‘என்ன அர்ச்சனா?’ என்று அவள் பெயரை சொல்லி பேசியிருக்க,
‘அடங்கு டா…’ என்று தன்னை தானே கடிந்துகொண்டு இருந்தான்.
நல்ல வேலை, நீலவேணி அலைபேசிக்கொண்டே மகனை அழைத்தபடி வந்தாதால் அவன் அர்ச்சனாவின் பெயரைச் சொன்னதை கேட்கவில்லை. கவனித்திருந்தாள் தெரிந்திருக்கும்.
முதல்நாள் இரவும் கூட அச்சுதனுக்கு அப்படியொன்றும் உறக்கம் வரவில்லை. இதற்கும் நள்ளிரவு வரைக்கும் வேலைகள் இருந்தது. ஆட்கள் தோட்டத்தை, விசேசத்திற்கு ஏற்றவாறு தயார் செய்துகொண்டு இருக்க, இவர்கள் எல்லாம் ஆளுக்கொரு வேலைகள் செய்துகொண்டு இருக்க, அர்ச்சனாவிற்கு இப்படி ஆனது என்று அச்சுதன் யாரிடமும் சொல்லவில்லை.
அதையே நினைத்துக்கொண்டு எதையாவது மனதை போட்டு உழப்பிக்கொல்வாள் என்று அச்சுதனும் அமைதியாய் விட்டுவிட, இன்று அர்ச்சனா வந்ததுமே, அனைவரின் கண்ணிலும் பட்டது அவளது தோளில் இருந்த காயத்தின் மீதான கட்டு தான்.
அணிந்திருக்கும் ரவிக்கையின் கை வேறு சின்னதாய் இருக்க, அவளது காயம் அப்பட்டமாகவே தெரிந்தது.
‘மத்த நாள் எல்லாம் அங்கியாட்டம் போட்டுட்டு சுத்துவா.. இன்னிக்கு என்னை பார் என்னை காயத்தை பாருன்னு வந்து நிக்கிறா…’ என்று எண்ணியவன்,
“இந்த காயத்தை எல்லார்கிட்டயும் காட்டணுமா?” என்று நேரம் கிடைக்கும்போது அவளிடம் கேட்க,
“ஒரு அட்டன்சன் சீக்கிங் தான்…” என்றுவிட்டு போக,
‘இவக்கிட்ட போய் கேட்டேன் பாரு…’ என்று தலையை உலுக்கிக்கொண்டவன், அவனது வேலையை கவனிக்க, அவனது மனதும் கண்களும் அவன் சொல்பேச்சை கேட்கவே இல்லை.
அதிலும் இவர்கள் வீட்டினில் அண்ணன் தம்பி அனைவரும் ஒன்றுபோல் உடை அணிந்திருக்க, பவஸ்ரீ அர்ச்சனாவிற்கு அருகில் மேடையில் நின்றவள் “பார்த்தீங்களா அண்ணி.. எப்பவுமே இவங்க மட்டும் மேட்சிங்கா போட்டுப்பாங்க..” என்று சொல்ல,
“அது கூட்டத்துல யாரும் காணாம போயிடக் கூடாது பாரு. அதுதான் அப்படி..” என்று அர்ச்சனா அசராமல் சொல்ல, அது அங்கே பக்கத்தில் வளையல் போட நின்றிருந்த உறவு பெண்களின் செவியிலும் விழ, அனைவருமே பக்கென்று சிரித்தனர்.
பிரகாஷையும் அனிதாவோடு சேர்ந்து அமர வைத்திருக்க, பிரசாந்த் அவனிடம் என்னவோ கேட்கவென்று மேடையேற, அவன் செவியிலும் அர்ச்சனாவின் இந்த கேலி விழ, அவளை ஒரு பார்வை பார்த்தவன், கீழே போகையில் நேராய் சென்று அர்ஜூனிடம் “நம்மள இப்படி டேமேஜ் பண்ணிட்டாங்கடா. அத்தனை பேரும் பக்குன்னு சிரிக்கிறாங்க…” என்றிட, அச்சுதனும் அங்கே வந்து சேர, அவனிடம் அர்ஜூன் சொல்ல,
“அப்படியா சொன்னா?” என்றவன் மேடையைப் பார்க்க,
அப்போதும் அர்ச்சனாவும், பவஸ்ரீயும் எதையோ பேசி சிரித்துக்கொண்டு இருக்க ‘அடிபட்டாலும் அடங்கமாட்டேங்கிறா…’ என்று எண்ணியவன்
“அர்ஜூன்.. போய் அர்ச்சனாவை கூட்டிட்டு வா…” என்றான் அச்சுதன்.
“அவங்களையா? நானா? அண்ணா ஏன் அண்ணா.. போனதுமே ஏதாவது கவுன்ட்டர் குடுப்பாங்க…”
“ம்ம்ச் டேய்.. நம்ம குடுக்காத கவுன்ட்டரா.. கூட்டிட்டு வா.. அது இதுன்னு ஏதாவது சொன்னா, நான் கூப்பிடுறேன்னு சொல்லு..” என்று சொல்ல, பிரசாந்தும் அர்ஜூனும் அவனை திடுக்கென்று பார்க்க,
“என்னடா கூட்டிட்டு வா…” என்று தம்பியை அனுப்பினான்.
பிரசாந்தோ காலையில் அர்ச்சனா வந்ததுமே, அச்சுதனிடம் ஏன் அர்ச்சனாவிற்கு இப்படி ஆனது என்று சொல்லவில்லை என்று கேட்க எண்ணினான்.
அதை இப்போது கேட்க “அனிதா டென்சன் ஆகுவான்னு சொல்லவேண்டாம்னு அர்ச்சனா சொன்னா…” என,
“நீ எப்போ இருந்து அண்ணா, லேடி…” என்று ஆரம்பித்தவன் பின் நிறுத்தி “அர்ச்சனா சொல்றதை எல்லாம் கேட்க ஆரம்பிச்ச…” என்று கேட்க,
“ம்ம்ச்.. ஏன் டா..” என்று கடுப்படித்தவன் மேடையைப் பார்க்க, அங்கே அர்ஜூன் அர்ச்சனாவிடம் என்ன சொன்னானோ தெரியாது, அவளது பார்வை சற்று தொலைவினில் நிற்கும் இவனிடம் சரியாய் வந்து சேர,
“இங்க வா…” என்பதுபோல் தலையசைக்க
“என்ன அர்ஜூன்.. அதிசயமா உங்கண்ணன் அழைப்பு எல்லாம் கொடுக்குறார் என்ன விஷயம்?” என்றாள் அர்ச்சனா.
“தெரியலை அண்ணி.. வாங்க…” என்று அவன் நிற்க,
பவஸ்ரீயோ “அப்போ நானும் வருவேன்…” என்று அர்ச்சனாவுடனே வர,
என்னவோ அண்ணன் அவளை பதிலுக்கு கேலி செய்வானோ என்று தம்பிகள் பார்த்து நிற்க “அறிவிருக்கா அர்ச்சனா உனக்கு? நேத்து அத்தனை முடியாம படுத்து இருந்த தானே.. வந்து இப்படி ஈன்னு நின்னுட்டே இருக்க. கொஞ்சம் வந்து உக்கார வேண்டியது தானே…” என்றவன், அங்கே நிழற்குடையின் கீழிருக்கும் இருக்கை ஒன்றை இழுத்துவிட்டவன்
“உக்காரு…” என்று சொல்ல, கண்களை அகல விரித்தவள்
“என்னடா அர்ஜூன்?” என்று அவனை கேட்டபடி அமர,
“பவஸ்ரீ.. நீ அர்ச்சனாவுக்கு காவல்.. எங்கயும் விடாத…” என்றவன் “பிரசாந்த் அந்த ஜூஸ் எடுத்து கொண்டு வந்து குடு…” என்றவன், தானும் அங்கேயே அமர்ந்துவிட, அர்ச்சனாவையும் சேர்த்து அவர்கள் அனைவருக்குமே
‘அச்சுதனா இவன்?’ என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை.
அதிலும் இத்தனை பேர் இருக்கையில், அச்சுதன் அர்ச்சனாவின் பக்கமே இருக்கையில் அமர, அர்ஜூனும் பிரசாந்தும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள
“என்னடா.. நேத்து இவளோட எத்தனை அலைச்சல் தெரியுமா? ரொம்ப டயர்டா இருக்கு.. எனக்கும் ஒரு ஜூஸ்…” என்று அச்சுதன் அசராமல் பேச,
“டேய்..!” என்று பிரசாந்த் கையை உதறியவன், அச்சுதனை நம்பமுடியவில்லை என்று பார்த்தபடி நகர, அர்ஜூனோ “கூட்டிட்டு வந்து விட்ட எனக்கும் ஒரு ஜூஸ்…” என்று சொல்லியபடி அங்கேயே அவனும் அமர்ந்துவிட, அர்ச்சனாவிற்கு இந்த கலகல பேச்சுக்கள் எல்லாம் இன்னமும் சிரிப்பை கொடுத்திருந்தது.
தங்களை யார் கவனிக்கப் போகிறார்கள் என்று இவர்கள் பாட்டிற்கு ஜூஸ் வரவும் குடித்துக்கொண்டே கேலியும் கிண்டலுமாய் அமர்ந்திருக்க, பாமினியின் சித்தி ஒருவர் வந்திருந்தவர், வந்ததுமே அர்ச்சனாவை தான் கவனித்தார்.
பவஸ்ரீ விசேசத்திற்கு வரவில்லை என்பதால், இப்போது தான் அர்ச்சனாவை முதல் முறையாய் காண, கண்டதுமே பாமினியிடம் “அடுத்த மருமகளுக்கு தேடணும்னு அவசியம் இல்லை போல பாமி…” என்று பேச,
“இல்ல சித்தி ஒரே வீட்ல ரெண்டு சம்பந்தம் வேண்டாம்னு முடிவு பண்ணிருக்கோம்…“ என்றுவிட்டு நகர்ந்துவிட்டார் பாமினி.
அந்த பாட்டியோ இப்போதும் அர்ச்சனாவைத் தான் கவனிக்க, அவளோ அச்சுதன் அருகில் பாந்தமாய் அமர்ந்து, அவனிடம் என்னவோ பேசி சிரித்துக்கொண்டு இருக்க, மெல்ல எழுந்து அங்கே வந்தவர் “என்ன அச்சுதா நல்லா இருக்கியா?” என்றார் வாஞ்சையாய்.
“சௌக்கியம் பாட்டி..” என்றவன் மரியாதை நிமித்தமாய் எழுந்து நிற்க, பாட்டியின் பார்வை அர்ச்சனா மீது இருக்கவும்
“அர்ச்சனா பாட்டி.. அனிதாவோட தங்கை..” என்று அச்சுதன் அறிமுகம் செய்ய, அவளும் எழுந்து நிற்க முயல, சேலை மீதே கால் வைத்திருப்பாள் போல, அது லேசாய் இழுக்க, வேறு வழியில்லாமல் அச்சுதன் கை பற்றியே எழுந்து நிற்க, அச்சுதனுக்கு சட்டென்று ஒரு உணர்வு வந்துபோனாலும்,
“பார்த்து அர்ச்சனா…” என்றவன் அப்படியே தான் நிற்க
“சாரி.. சேலை மேல கால் வச்சிட்டேன்…” என்றவள் அசடு வலிந்து நிற்க,
“ம்ம்.. நான் கூட பாமினி கிட்ட வேற சொன்னேன். ஆனா இதுவும் நல்லாத்தான் இருக்கு….” என்றவர் “நல்லா இரும்மா…” என்றுவிட்டு நகர,
‘போச்சுடா இந்த பாட்டி சும்மா இல்லாம பேசிட்டு போகுது. அண்ணன் டென்சன் ஆகப் போறான்..’ என்று பார்த்த பிரசாந்த், அச்சுதன் அப்போதும் சிரித்தபடியே இருப்பதைக் கண்டு
“இப்போ பாட்டி என்ன சொல்லிட்டு போனாங்க அண்ணா..” என்று கேட்டான் ஒன்றும் புரியாதவன் போல..
“அதானே.. என்ன சொன்னாங்க?” என்று அர்ச்சனா நிஜமாகவே புரியாமல் கேட்க,
அச்சுதனோ “அதுவா…” என்று இழுத்தவன் “எனக்கும் புரியலை…” என்றுவிட்டு முகத்தை இயல்பாய் வைத்துகொள்ள
“இது உலக நடிப்புண்ணா…” என்றான் பிரசாந்த்.
அர்ச்சனாவிற்கு அச்சுதனின் மனதில் ஏற்பட்டு இருக்கும் மாற்றம் தெரியவில்லை. வீட்டினில் விசேசம் என்பதால் அவன் சற்று ஜாலியாய் பேசிக்கொண்டு இருக்கிறான் என்று எண்ணியவள் “நான் ஸ்டேஜ் போறேன்…” என்று மீண்டும் கிளம்ப,
“எதுக்கு?” என்றான்.
“அட நடக்கிறது எங்க அக்காவோட விசேசம். நான் நிக்கலைன்னா எப்படி?” என்று கேட்க,
“நீ அங்க நிக்கலைன்னாலும், விசேசம் நடந்துட்டு தான் இருக்கு. முதல்ல உன்னோட ஹெல்த் பாரு. ஆமா காலைல போடவேண்டிய மாத்திரை போட்டியா இல்லையா?” என்று கேட்க,
“எல்லாம் போட்டேன்…” என்றாள் உம்மென்று.
அதேநேரம் சுமிதா அங்கே வந்தவர் “என்னடா எல்லாம் இங்க வந்து அரட்டை போடுறீங்க.. லஞ்ச் எல்லாம் வந்துடுச்சு.. வந்து பாருங்க…” என்று சொல்ல,
“இதோ வர்றேன் சித்தி…” என்று பிரசாந்த் எழுந்து செல்ல, அர்ஜூனும் அவன் பின்னேயே செல்ல
“நீ ஏன் டி வந்து உக்காந்திருக்க.. வா வந்து வேலை செய்…” என்று மகளை அளித்த சுமிதா, அர்ச்சனாவை பார்த்து ஒரு புன்னகை பூத்து “எதுவும் சாப்பிட வேணுமா?” என்று கேட்க,
“சித்தி, லஞ்ச் எல்லாம் எடுத்து செட் பண்ணி வைக்கவும், ஒரு ப்ளேட்ல வச்சு அங்க தோட்டது ரூம்கு குடுத்து விடுங்க…” என்று அச்சுதன் சொல்ல,
“சரி அச்சுதா…” என்றுவிட்டு போனார் சுமிதா.
இப்போது அர்ச்சனாவும், அச்சுதனும் மட்டும் தனியே அமர்ந்திருக்க, முல்லை ஆரம்பத்தில் அர்ச்சனா எங்கே என்று பார்க்கவில்லை தான். ஆனால் இப்போது விசேசம் ஓரளவு முடியும் தருவாயில் இருக்க ‘உடம்பு முடியாம இவ எங்க போனா?’ என்று பார்த்தவருக்கு, இவருவரும் ஜோடியாய் அமர்ந்திருப்பது திக்கென்று இருந்தது.
அவனுக்கு இது சாதாரணமாய் இருக்கலாம். ஆனால் அர்ச்சனாவின் மனது ஏற்கனவே காயம்பட்டு இருக்கிறதே. ரோஜாவிடம் மெல்ல “அக்கா அங்க பாரு…” என்று சொல்ல,
ரோஜாவும் பார்த்தவர் “நானும் பார்த்தேன் முல்லை. எல்லாம் ஒண்ணா தான் உக்கார்ந்து இருந்தாங்க. இப்போதான் எழுந்து போனாங்க போல..” என்றுவிட்டு நகர, முல்லைக்கு என்னவோ மனது உறுத்தலாய் இருந்தது.
இரண்டு நாட்களுக்கு முன்னே, நகைக்கடையில் அர்ச்சனாவின் பக்கம் ஒரு பார்வையை கூட செலுத்தாதவன், இன்று என்னவோ அவளோடு சேர்ந்து அமர்ந்திருக்க, அவருக்கு இந்த திடீர் மாற்றம் எப்படி என்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அவரைப்போலவே தான் நீலவேணியும். யாருடனோ பேசிக்கொண்டே வந்தவர், அச்சுதனும் அர்ச்சனாவும் ஒன்றாய் அமர்ந்து பேசிக்கொண்டு இருப்பதை பார்த்து ஒருநொடி நின்றுவிட்டார்.
ஆனால் இதெல்லாம் எதையும் கண்டுகொள்ளாதவனோ “என்ன அதிசயம்.. தலை சீவி.. பின்னி.. பூவெல்லாம் வச்சு வந்திருக்க…” என்று கிண்டலாய் கேட்க,
“இன்னிக்கு என்ன ஆச்சு அச்சத்தான் உங்களுக்கு…” என்றாள் அர்ச்சனா அவனை பக்கவாட்டில் திரும்பிப் பார்த்து.
“என்னாச்சு எனக்கு? நல்லாத்தான் இருக்கேன்….” என,
“இல்ல.. கேர் பண்றீங்க.. நான் எப்படி வந்திருக்கேன்னு கவனிச்சு, அதுக்கு ஒரு கேள்வி வேற கேட்கிறீங்க? புதுசா இருக்கே…” என்று கண்கள் சுறுக்கி அர்ச்சனா கேட்க,
“அம்மாவும் சித்தியும் பண்ண வேலை..” என்று அவள் சொல்ல,
“இப்போதான் லட்சணமா இருக்கு…” என்று ஒருவேகத்தில் அச்சுதன் சொல்லிவிட, அர்ச்சனாவின் பார்வை அத்தனை நேரம் விட்டு இப்போது மாறி, அவனை கொஞ்சம் கேள்வியாகவும் ஆவலாகவும் நோக்க,
“பின்ன நேத்து என்னோட டிஷர்ட்ல உன்னோட முடி ஒட்டிட்டு இருந்தது. எங்கம்மா பார்த்திருந்தா என்னாகியிருக்கும்..” என்றுவேறு சொல்ல,
“என்னாகியிருக்கும்? நீங்க இப்படி இப்படின்னு என்ன நடந்ததுன்னு சொல்லி இருக்கலாம்..” என்றாள் அவன் வாயை கிளரும் நோக்கில்.
“அதுதான் சொல்லக் கூடாதுன்னு சொல்லிட்டியே…” என்றவன் “இதென்ன இத்தனை சின்ன கை? காயத்தை மறைச்சு வந்திருக்கலாம்…” என்றும் சொல்ல,
“ப்ளவுஸ் காயத்து மேல பட்டா ரொம்ப வலிக்கும்…” என்றவளுக்கு அப்போதுதான் புரிந்தது. அவன் தன்னை மட்டும் தான் பார்த்துக்கொண்டு இருக்கிறான் என்று.
அதே நேரம் சுமிதா திரும்ப வந்தவர் “அச்சுதா அங்க லஞ்ச் எடுத்து வச்சிருக்கேன்…” என்று சொல்ல,
“சரி சித்தி…” என்றவன் “வா அர்ச்சனா சாப்பிடு…” என்று அவளை அழைத்தான்.
“நானா?!” என்று அவள் திகைக்க,
“உனக்கு தான் எடுத்து வைக்கச் சொன்னேன்.. வா…” என்றவன் எழுந்துவிட,
“அ.. அச்சத்தான்?!” என்றாள் படபடக்கும் நெஞ்சோடு, அவனை ஏறெடுத்து நிமிர்ந்து பார்த்து.
“நீங்க எப்பவும் போல என்கிட்டே கடுகடுன்னே பேசுங்க.. இது.. இதெல்லாம் என்னால தாங்க முடியாது.. பின்ன நினைச்சு நினைச்சு அதுவே எனக்கு ஒருமாதிரி இருக்கும்…” என்று அமர்த்தலாய் சொல்ல,
“ஆமா.. எனக்கு இதுதான் வேலை பாரு.. நேத்து கை கிழிச்சு, ஹாஸ்பிட்டல் போய், பக்கத்துல உக்காரு.. உன்னோட பேசனும்னு சொல்லி.. இதோ என் கை பிடிச்சு.. இப்படி கன்னத்துல வச்சு.. கண்ணீரும் விட்டு.. என் டிஷர்ட்ல உன்னோட முடியை ஒட்டவச்சு எல்லாம் பண்ணிட்டு என்னை குழப்பிட்டு நீ போயிடுவ..
இப்போ வீட்ல நடக்குற விசேசத்துல கூட போய் நிக்காம, உன் கிட்ட வந்து உக்கார்ந்து பேசிட்டு, உன்னை கவனிச்சா நீ இதெல்லாம் வேணாம்னு சொல்ற.. இல்ல என்னைப் பார்த்தா உனக்கு எப்படி தெரியுதுன்னு கேக்குறேன்…” என்று அவனும் அடிக்குரலில் பேச,
என்ன பேசுகிறாய் நீ என்றுதான் அவள் பார்த்து வைத்தாள்.