“kiss me… close your eyes… kiss me…” என்ற பாடல் வரிகள் அந்த அறையின் நிசப்தத்தை நிறைத்துக் கொண்டிருந்தது.
பாடல் காதில் விழுந்தாலும் எதுவுமே கேட்காத பாவனையில் கட்டிலின் மறுபுறம் புரண்டு படுத்தான் பிரகதீஸ்வரன். உண்மையில் அவனுக்கு இந்த பாடல் சிரிப்பைத்தான் வரவழைத்தது. அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருக்கச் சுவரை பார்த்துத் திரும்பிப் படுத்துக் கொண்டான்.
பின்னே, யாரேனும் குழந்தையை உறங்க வைக்க இந்த பாடலை பாடுவார்களா? ஆனால், ஸ்ரீமதி இப்படி ஏதேதோ பாடி தான் செழியனை உறங்க வைக்கப் பழக்கப் படுத்தியிருக்கிறாள்.
இனிய கீதம், சுஸ்வரம் என்றெல்லாம் அவளது குரலை வரையறுத்தல் சற்று அதிகப்படி தான். ஆனால், ஓரளவு கேட்கும் படியான குரல் தான் ஸ்ரீமதிக்கு.
அந்த வீட்டின் இளைய வாண்டு செழியன் அவளது கழுத்தைக் கட்டிக் கொண்டு படுத்திருக்க, அவனை உறங்க வைக்கும் மிகப்பெரிய வேலையைத் தான் ஸ்ரீ செய்து கொண்டிருந்தாள்.
ஒரு பெரிய போராட்டத்தின் பின் பிள்ளை சற்று உறங்கத் தொடங்கினான். ஒருபுறமே படுக்க முடியாமல் மறுபுறம் திரும்பிப் படுத்தவனின் பார்வையில், செழியனை அணைத்து உறங்கிக் கொண்டிருந்த ஸ்ரீமதி விழுந்தாள். கள்ளங்கபடமில்லாத பிள்ளை முகம். அவனையுமறியாமல் அவளை முதன்முதலில் பார்த்ததினம் அவனுக்கு நினைவில் வந்தது.
தர்மராஜன், மணிவண்ணன் இருவரும் சேர்ந்து தொடங்கியது தான், “விநாயகம் ஏஜென்சீஸ்” என்ற ஸ்டீல் கம்பெனி. அவர்கள் இருவருக்கும் அடுத்து அவரவர் பிள்ளைகள் வேதாச்சலம், சக்திவேல் பொறுப்பெடுக்க, இப்பொழுது பொறுப்பில் பிரகதீஸ்வரனும் இணைந்திருக்கிறான்.
மூன்று தலைமுறைகளாக நட்போடு வலம்வரும் குடும்பம். எல்லா வீட்டு விசேஷங்களுக்கும் இரு வீட்டினரும் இணைந்திருப்பர். அப்படி வேதாச்சலம் வீட்டில் நடந்த ஒரு பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ளச் சென்றபோது தான் முதன்முதலில் ஸ்ரீமதியை பார்த்தான்.
இவன் பதினொன்றாம் வகுப்பு விடுமுறையில் இருந்த காலம். அந்த விழாவில் எல்லாரும் ஆடம்பரமாக உடுத்தி, அலங்காரமாக ஜொலித்துக் கொண்டிருக்க, இதையெல்லாம் இதற்கு முன்பு பார்த்ததேயில்லை என்ற பாவனையில் மலங்க மலங்க விழித்தபடி, ஒரு ஓரத்தில் கொலு பொம்மை போல அமர்ந்திருந்தாள் இவள்.
கொழுக் மொழுக் கண்ணமும், அந்த விழாவிற்கு பொருத்தமில்லாத உடையும், அலங்காரமும்… ஏதோ வேலை செய்பவர்களின் குழந்தை போல என்றுதான் அவனுக்கு நினைக்கத் தோன்றியது. அதன்பிறகு அவனுக்கு விழாவில் கவனம் சென்று விட அவளை மறந்தே போனான்.
ஸ்ரீமதி ஹாஸ்டலில் சேர்ந்திருந்தாலும் விடுமுறை நாட்களை அவள் தந்தை வீட்டில் தான் கழிக்க வேண்டியிருந்தது.
அதற்கே வேதாச்சலம், மாலதி இடையே கடும் வாக்குவாதம். “அந்த பொண்ணை நான் பார்த்துக்க மாட்டேன்னு சொல்லி தானே உங்களை கல்யாணம் செஞ்சேன்” என் மாலதி சண்டையிட்டார்.
“இப்ப நீயா அவ வந்தா பார்த்துக்க போற… இல்லை இந்த வீட்டுல அவ தங்க இடம்தான் இல்லையா? ஹாஸ்டல் லீவ் விட்டா இங்கே வந்து இருக்க போறா. ஸ்கூல் தொடங்கியதும் மறுபடியும் போயிட போறா… என்ன அவளுக்குன்னு தனியா நீ எதுவும் சமைக்க போறியா? இல்லை தூங்க தான் வைக்க போறியா? இங்க பாரு மாலதி அவ என் மக தான். இந்த வீட்டோட வாரிசு தான். அதுக்காக நீ அவளை பார்த்துக்க தேவையில்லை. ஆனா, நான் அவளை பார்த்துக்க வேண்டியது என்னோட கடமை. உனக்கு அது புரியும்ன்னு நினைக்கிறேன்.
அதோட எனக்கு ஆபிஸ், வேலைன்னு முடிஞ்சு வீட்டுக்கு வந்தா… வீடு சண்டை, சச்சரவுன்னு இல்லாம நிம்மதியா இருக்கணும். என்னோட எதிர்பார்ப்பு அது மட்டும் தான்! இந்த மாதிரி சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் ஆர்கியூ பண்ணி என்னை மூட் ஆஃப் பண்ணாத…” வேதாச்சலம் கட் அண்ட் ரைட்டாக சொல்லிவிட, மாலதி மனதே இல்லாவிட்டாலும் சரி என்று சொல்ல வேண்டியதாகி விட்டது.
இவர் சொல்வதும் சரிதானே! அந்த பெண் வந்தால் நம்மையா தொல்லை செய்யப் போகிறாள் என மாலதி சுயசமாதானமும் செய்து கொண்டார்.
முதல்முறை இப்பொழுது தான் முழு ஆண்டு விடுமுறைக்கு ஸ்ரீமதி இங்கு வந்திருக்கிறாள். இவர்களின் ஆடம்பரம், வாழ்க்கைமுறை எல்லாமே அவளுக்குப் புதிது.
அவளுக்கென ஒரு அறையை அந்த வீட்டில் ஒதுக்கித் தந்ததோடு அந்த வீட்டினருக்கான கடமை முடிந்திருந்தது. கிட்டத்தட்ட ஹாஸ்டல் போலத்தான் நேர நேரத்திற்கு டைனிங் ஹாலுக்கு போய் வேலைக்காரர்கள் பரிமாறும் உணவை வாங்கி சாப்பிட்டுக்கொள்ள வேண்டும்.
என்ன ஹாஸ்டல் என்றால் தோழிகள் இருப்பார்கள். இங்கு மூச்சு முட்டும் தனிமை. பேச்சு துணைக்குக் கூட ஆள் இல்லாத சித்திரவதை. சித்தி வந்த முதல் நாளே சொல்லி விட்டார், “வேலைக்காரங்க கிட்ட எல்லாம் அளவா பேச்சு வெச்சுக்கணும்” என, உடனே தலையை உருட்டி விட்டாள். அவளுக்கு புது இடத்தில் பேசி பழக்கமும் இல்லை. அவளுடைய வட்டமும் சிரியதாயிற்றே!
அந்த வீட்டில் யாரும் அவளோடு உறவாடத் தயாராய் இருந்ததில்லை. பெற்ற தகப்பன் உட்பட. அதெல்லாம் அடி மனதை ஆழமாக பாதித்தாலும், ஏற்கனவே தெரிந்த விஷயம் தானே எனத் தேற்றிக் கொண்டாள். நல்ல பக்குவப்பட்ட பெண்!
உள்ளுக்குள் வருத்தம் இருந்தாலும் அவளின் முகம் ஒருநாளும் புன்னகைக்க மறந்ததில்லை. அவளுக்குள் நிறைய வலிகள் இருந்தாலும் தைரியம் போல காட்டிக்கொள்வதில் அவள் மிகவும் கெட்டிக்காரி.
இங்கு ஸ்ரீமதி விடுமுறைக்கு வந்திருந்த நேரத்தில் தான், இந்த வீட்டில் ஏதோ விழா ஏற்பாடு செய்திருந்தார்கள். என்ன விழா என்று கூட அவளுக்குத் தெரியவில்லை. வீடே பரபரப்பாக, “உன்கிட்ட இடுக்கிறதுல நல்ல துணியை போட்டுக்க…” என்றாள் சித்தி.
ஏன், எதற்கு என்றா கேட்க முடியும்? அப்பா அனுப்பும் பணத்தில் பெரியம்மாவோடு சென்று ஹாஸ்டலில் போட்டுக்கொள்ள என்று சில உடைகள் வாங்குவாள். ஒருசில நல்ல உடைகளும் இருக்கும். ஹாஸ்டலில் இருந்து மாமா, பெரியம்மா வீடு போகும்போது, அப்பா வீட்டிற்கு வரும்போது என உடுத்திக் கொள்வதற்கு என அதை எடுத்து வைத்திருப்பாள்.
அதில் நல்லதாக ஒன்றை உடுத்தி விழா நடக்கும் தோட்டத்திற்குச் சென்று அமர்ந்து கொண்டாள். லைட் செட்டிங்ஸ், பலூன்கள், அலங்காரமான மேடை, அதில் அழகழகான பூ அலங்காரங்கள், ஆங்காங்கே அழகான மேஜை அதைச் சுற்றிலும் வெள்ளை சாட்டின் உறை போர்த்திய நாற்காலிகள் என அவ்விடமே அழகாக ஜொலித்தது.
கண்கள் மின்ன ஒவ்வொன்றையும் ஆசையாகப் பார்வையால் வருடிப் பார்த்துக் கொண்டிருந்தாள். என்னவோ பார்க்கப் பார்க்க ஆசையாக இருந்தது. அந்த அலங்காரங்கள் எல்லாம் அவளுக்கு ரொம்ப ரொம்ப பிடித்திருந்தது.
அவளை விட்டால் பிறந்தநாள் கொண்டாடுவது எப்படி என்ற தலைப்பில் அங்கே பார்த்ததை வைத்து பக்கம் பக்கமாக எழுதித் தள்ளிவிடுவாள். அந்தளவு சுற்றத்தைக் கவனித்து உள்வாங்கி கொண்டிருந்தாள்.
கொஞ்ச நேரத்தில் ஆட்கள் வர தொடங்கியிருந்தார்கள். அவர்களும் முழு அலங்காரத்தில், ஜொலி ஜொலிக்கும் ஆடைகளோடு பவனி வர, கொஞ்ச நேரம் அதையும் ஆசை ஆசையாக ரசித்தவளுக்கு அப்பொழுதே தன் உடை உரைக்க, அச்சச்சோ ஜொலிக்கிற மாதிரி டிரஸ் தான் பார்ட்டிக்கு போடுவாங்க போலவே… என தன் தலையில் தானே தட்டிக் கொண்டாள்.
ஆறாம் வகுப்பு படிக்கும் சிறு பெண்ணான அவளுக்கு, எந்த விழாவிற்கு என்ன மாதிரியான உடை உடுத்த வேண்டும் எனத் தெரிந்திருக்கவில்லை.
அம்மா இல்லாத பெண். அப்பாவின் அரவணைப்பு என்ன நிழல் கூட அவளை சீண்டுவதில்லை. சொல்லிக்கொள்ளும்படி அவள்மீது அக்கறை எடுத்துக்கொள்ளவும், அவளுக்குச் சொல்லித்தரவும் ஒருவருமே இல்லை. ஆக, தனக்கு தானே தான் எல்லாம் கவனித்துக் கொள்வாள். அது அவளுக்குப் பழகிப் போனது தான்! இப்பொழுதும் சுற்றம் பார்த்து புதிதாய் ஒரு கற்றல்!
மெல்ல எழுந்து யார் பார்வையிலும் விழாமல் ஓரமாகவே நழுவி, வீட்டிற்குள் செல்ல, “ஏய் பாப்பா… நில்லு… நில்லு…” என்றொரு குரல்.
நம்மளை இருக்காது… ஏதோ ஒரு பாப்பாவை… என எண்ணியபடி அடுத்த அடி எடுத்து வைக்குமுன், “ஏய்… கத்திரிக்காய்… கூப்பிடறது காதில் விழலை?” அவளை வழிமறித்து நின்றான் பிரகதீஸ்வரன்.
சட்டென்று மூக்கு விடைத்துவிட்டது. காதில் புகை வேறு! நான் கத்திரிக்காயா? சரியான வளர்ந்து கெட்டவன் என உள்ளுக்குள் அர்ச்சித்தவளின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. தன் கோபத்தை அவனிடமிருந்து மறைக்கத் தலையைக் கவிழ்த்துக் கொண்டாள். மூச்சுக்காற்று பலமாக வந்து கொண்டிருந்தது.
அவள் கோபம் புரியாமல், “இங்கே என்ன பண்ணற?” என்று விசாரித்தான்.
அவள் பதில் சொல்ல முயலுமுன், “போ உங்க அம்மா சொன்ன இடத்திலேயே உட்காரு. அங்க இங்கேன்னு ஓடக்கூடாது. அம்மா காணோம்ன்னு தேடுவாங்க தானே?” என்றான் சின்ன குழந்தைக்குச் சொல்வது போலான குரலில்.
அவன் குழப்பியதில், கோபம் போய்விட, அம்மாவா என்று புருவம் சுருக்கி யோசித்தபடியே, “அம்மா இல்லையே…” என்றாள்.
“ஓ… உங்க அம்மா உன் கூட வரலையா? அப்ப வேற யாரு கூட வந்த? பங்ஷன் தோட்டத்துல தான் நடக்குது. இங்க வீட்டுக்கு எல்லாம் வர கூடாது சரியா?” என்றான் இப்பொழுதும் பொறுமையாக. அவனுக்கு இந்தளவு பொறுமை, பொறுப்பு எல்லாம் இருந்ததே இல்லை. இன்று என்னவோ ஸ்ரீமதியிடம் இப்படிப் பேசி திரிந்தான்.
“இங்கேயே இருக்கியா? நான் உன்னை இங்கே பார்த்ததே இல்லையே”
“நான் ஹாஸ்டல்ல இருந்து ஸ்கூல் லீவுக்கு தான் இவங்க வீட்டுக்கு வந்திருக்கேன்” என்றாள்.
“யாரு வீட்டுக்கு…”
“அது… எங்க அப்பா வீடு தான் இது…” இன்னைக்கு மழை பெய்யப்போகுது என்கிற ரீதியில் அவள் சாதாரணமாகத்தான் சொன்னாள். கேட்டவன் தான் சற்று அதிர்ந்து போனான்.
“நீ… நீ…”
“ஸ்ரீமதி… எங்க அப்பா பேரு வேதாச்சலம். இது அவங்க வீடு தான். நான் அந்த ரூம்ல தான் தங்கி இருக்கேன்” என அவள் சுட்டிக்காட்ட, பேசாமல் வழியை விட்டு நகர்ந்து விட்டான்.
அவள் வார்த்தைக்கு வார்த்தை ‘அவங்க வீடு’ என சொல்வதன் அர்த்தம் தெரிந்து தான் சொல்கிறாளா? அவர்களுக்கு மட்டும் வீடென்றால் இவளுக்கு இது வீடில்லையாமா?
என்னவோ அவளின் நிலை நெருஞ்சியாய் உள்ளுக்குள் குத்தியது. இந்த பெண்ணுக்கு இத்தனை துயரம் இருந்திருக்க வேண்டாம் என உள்ளம் வாடியது.
ஆனால், எந்த கவலையும் முகத்தில் காட்டாது பூரிப்பாய் பூத்திருக்கும் அவளின் திடம் அவனுக்கு ரொம்பவே பிடித்திருந்தது.
காலடி ஓசை கேட்கத் திரும்பிப் பார்த்தான். அடர்நீல நிற பட்டாடை, அதே வண்ணத்தில் மேல் சட்டை, ரெட்டை ஜடை, அதில் ஒருபுறம் நீளமாகத் தொங்கிய மல்லிகைப்பூ, முகத்தில் பவுடர் பொட்டு தவிர எதுவும் காணோம். வேறு மேக்கப் தெரியாது போல… ஜடை கொஞ்சம் கோணலாக இருந்து அவளது கைவண்ணம் என காட்டிக் கொடுத்தது.
ஏதோ திருமணத்திற்குக் கிளம்பி நிற்பவள் போல இருந்தாள். ஆனால், அழகாக இருந்தது.
“ஏம்மா அந்த ரூமுக்குள்ள ஸ்ரீமதின்னு ஒரு பொண்ணு வந்ததே நீ பார்த்தியா?” பிரகதீஸ் வேண்டுமென்றே சீண்ட, அது புரிய வேண்டுமே அவளுக்கு…
“ஹையோ சார் அது நான் தான்… பங்க்ஷனுக்கு ஜொலிக்கிற மாதிரி தான் துணி போடணும் போல… எல்லாரும் அப்படி தான் இருக்காங்க. அதுதான் நானும் அப்படியே மாத்திட்டு வந்தேன்” என கள்ளம் கபடமின்றி சொன்ன சின்னவளின் பேச்சில், அவளை அவளே தான் கவனித்துக் கொள்கிறாள் என புரிந்து யோசனையானான்.
மாலதி ஆன்ட்டி சொல்லித் தந்திருக்கலாமே… பாவம் சின்ன பெண்… மிஞ்சி மிஞ்சி போனால் ஒரு ஒரு மாசம் இவங்க கூட இருப்பாளா? அப்ப கூட ஒதுக்கி வைக்கணுமா?