அத்தியாயம் 11
மின்னல் வேகத்தில் நடந்து விட்ட நிகழ்வுகள் அதிர்வைக் கொடுத்தாலும் நிமிர்வுடனே “என்ன பண்ணிட்டு இருக்கீங்க விக்னேஷ் என் பெட்ரூம்குள்ள?”
“உன் பெட்ரூம்?”
கொஞ்சம் நக்கலான தொனியில் அவன் சொல்ல அவன் குரலில் ஏதோ அச்சம் விழிகளில் படர அதன் எதிரொலியாக மிடறு விழுங்கியவள் ‘ஆம்’ என்பது போல் தலையசைத்தாள்.
அவள் தொண்டைக் குழியில் வினாடி நேரம் அவன் பார்வை பதிந்து விலக அவஸ்தையாய் உணர்ந்தாள்.
அவனோ அவர்கள் நெருக்கத்தை ரசித்து அனுபவிப்பவனாக தன் வலது கையால் அவள் பிறை நெற்றியில் புரண்டு கொண்டிருந்த கேசக் கற்றைகளை காதோரம் ஒதுக்கிக் கொண்டே,
“இதை நம்ம பெட்ரூம்னு மாத்திக்கலாம்னு சொன்னாக் கேக்க மாட்டேங்கிறே நீ”
கிசுகிசுப்பான குரலில் கூறியவனின் வார்த்தைகளில் மிதமிஞ்சிய கேலியும் கிண்டலுமே இருந்தது.
“ப்ச்சு…விடுங்க என்னை”
“ஏன் அவன் கட்டிப் பிடிச்சப்போ இப்படிச் சொல்ல வேண்டியதுதானே?
“விக்னேஷ்! மைண்ட் யுவர் வர்ட்ஸ்…வின்னி என் ஃப்ரெண்ட்… அது மட்டுமில்லாம என்னைக் கல்யாணம் பண்ணிக்கக் கேட்டவனும் கூட… நான்…”
“ஓ…அப்பக் கல்யாணம் பண்ணிக்கக் கேட்டாக் கட்டிப் பிடிக்கலாமா?”
“சீ…வாயைக் கழுவுங்க…நீங்களும் உங்க புத்தியும்…”
மேலே அவளைப் பேச விடவில்லை அவன்.
“அவன் கல்யாணம் பண்ணிக்கக் கேட்டான்…அதுனால கட்டிப் பிடிச்சான்…நான் கல்யாணமே பண்ணிக்கப் போறேன் அதுனால…” என்றவன் குனிந்து அவன் என்ன செய்யப் போகிறான் என உணரும் முன்னம் அவள் இதழ்களை வன்மையாய்க் கவ்வியிருந்தான்.
அவன் மொத்தக் கோபமும் அந்த முத்தத்தில் தெரிந்தது.
வல்லினம் பேசிய அவன் வன்னிதழ்கள் மெல்லினத்தாளின் மென்னிதழ்களை மென்றிட முற்பட முதலில் திமிறியவள் அவன் இதழ்களின் அழுத்தத்திலும் இடையில் அவன் கரம் கொடுத்த அழுத்தத்திலும் இயலாதவளாகித்தான் போனாள்.
அவள் இயலாமையை உணர்ந்தவன் போல் அவன் பேசிய வல்லின மொழி மெல்லினமாக மாற அந்த இளக்கத்தையும் தாள மாட்டாமல் என்ன இருந்தாலும் ஆணவனின் உடல் பலத்தின் முன் பெண் மண்டியிடத்தான் வேண்டியிருக்கிறதோ என்ற எண்ணம் மனதில் துளிர்க்க அதன் எதிரொலியாய் அவள் விழிகளில் நீர் நிறைந்து இமை தாண்டி வழிந்தது.
இனிப்பை உணர்ந்து கொண்டிருந்த இதழ்களில் திடீரென உவர்ப்பு உணரப்பட அதை உவப்பாக உணராதவன் மெல்லத் தன் முகத்தை அவளை விட்டு நிமிர்த்தினான்.
மனதுள் பொங்கிய உணர்வுகளின் தாக்கம் தாளாமல் விழிநீராய் வெளிப்படுத்தியவளின் இமைகள் திறக்காமலிருக்கக் கண்டவன் மெல்ல இரு பெருவிரல் கொண்டு அவள் இமைகளின் மேல் வருடினான்.
அதில் விழிகளைத் திறந்தவள் கண்ணீரால் பளபளத்த விழிகளுடன் அவனைக் கூர்மையாய்ப் பார்த்த வண்ணம் “மறுபடி மறுபடி உங்க உடல்பலத்தை நிரூபிக்கிறீங்கள்ல”
“ஷிட்! நீலா! எல்லாத்தையும் தப்பாவே புரிஞ்சுக்குவியா?”
“தப்பு இல்லைன்னா இப்ப நீங்க செய்ததுக்குப் பேர் என்ன?”
“அப்போ நீ செய்தது மட்டும் சரியா? அன்னிக்கு உன்னை விழ விடாமக் காப்பாத்த ட்ரை பண்ணினா ஏதோ தேர்ட் ரேட் பொறுக்கி மாதிரி என்னை நினைச்சுக் கைநீட்டின… இன்னிக்கு என் கண் முன்னாலயே அவனைக் கட்டிப்பிடிச்சுட்டு நிக்கிறே”
“விக்னேஷ்… நான் செய்ற செயல்களுக்கெல்லாம் உங்களுக்கு விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் எனக்கில்ல”
“உன்னை விளக்கம் கொடுக்கச் சொல்லல நீலா…எனக்கு வாழ்க்கை கொடுக்கச் சொல்றேன்”
அவனை ஆச்சர்யமாகப் பார்த்தவள் “வாட் டூ யூ மீன்?” என்றாள்.
“ஆமா என்னைக் கல்யாணம் செய்து எனக்கு வாழ்க்கை கொடு… அதுக்கப்புறம் எந்த வின்னியும் பன்னியும் உன்னை அனாவசியமா நெருங்காம நான் பார்த்துக்கிறேன்”
அவன் சொன்னதைக் கேட்டவளுக்கு அந்த நிலையிலும் சிரிப்பு வந்தாலும் அதை அடக்கிக் கொண்டு அவனையே சில வினாடிகள் கூர்மையாய்ப் பார்த்தாள். பின்
“நான் சொல்ற சில நிபந்தனைகளுக்கு ஒத்துகிட்டா உங்களை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்றாள்.
இத்தனை நேரம் இரும்பென இறுகியிருந்த அவன் முகம் அவள் மொழி கேட்டுப் பூவாய் மலர்ந்தது.
“எனிதிங்…எனிதிங்க் ஃபார் மை பேபி”
முகத்தில் ஒருவித இளக்காரத்துடன் “ஓ…எனிதிங்…பார்க்கலாம்” என்றவள் கட்டிலில் அமர்ந்து அவனையும் நாற்காலியில் அமரச் சொன்னாள்.
“நீங்க என்னை லவ் பண்றீங்க இல்லையா?”
இது என்ன அபத்தமான கேள்வி என்பது போல் பார்த்தவன் “அஃப்கோர்ஸ்” என்றான்.
“நீங்க லவ் பண்றது என் உடம்பையா இல்ல என் மனதையா?”
“நீலா” என உறுமியவன் சட்டென எழுந்து விட்டான்.
“சும்மா உக்காருங்க விக்னேஷ்…இதுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்” எனவும் ஒரு கையை முஷ்டியாக்கி மறு கையில் குத்திக் கொண்டவன் நாற்காலியில் மீண்டும் அமர்ந்தான்.
“சொல்லுங்க விக்னேஷ்…நீங்க விரும்புறது என் உடலையா மனதையா?”
“திஸ் இஸ் கொயட் அப்சர்ட் நீலா (இது அபத்தமானது) …மனதை விரும்பினாதான் அது லவ்… இல்லையா? உடம்பை விரும்பினா அது லஸ்ட்…ஆனா…”
“நான் கேட்ட கேள்விக்கு நேரான தெளிவான பதில் வேணும் எனக்கு”
“சில கேள்விகளுக்கு அப்படி நேரான பதில் சொல்ல முடியாது நீலா…நான் உன்னை விரும்புறேன் அப்பிடின்னு சொன்னா உன் மனம், உடல் என எல்லாமும் சேர்த்து விரும்புறேன்னுதான் அர்த்தம்…இதில் எதுன்னு கேட்டா என்ன சொல்ல முடியும்?”
“இல்ல ஏதாவது ஒன்னுதான் நீங்க சொல்லணும்”
அவளை முறைத்தவன் “சரி உன் மனசைத்தான் விரும்புறேன்”
“அப்போ இந்த உடல் உங்களுக்குக் கிடைக்காது பரவாயில்லையா?”
“வாட் புல்ஷிட் ஆர் யூ டாக்…”
கையுயர்த்தி அவன் பேச்சைப் பாதியிலேயே தடுத்தவள் “என்னோட கண்டிஷன் இதுதான்… நீங்க என் மனதை விரும்பி இருந்தா இந்த உடம்பு உங்களுக்குக் கிடைக்காது…ஊரறியத் திருமணம் செய்துக்கலாம்… என்னுடன் நீங்க இருக்கலாம்… பாதுகாவலனாக… என் பிள்ளைகளின் தகப்பனாக… ஆனால் என்னைத் தொடும் உரிமை உள்ள கணவனாக நீங்க ஆக முடியாது. ஒருவேளை நீங்க என் உடம்பை மட்டுமே விரும்பி இருந்தா கல்யாணம் இல்லாமல் உங்களுடன் ஒரு ரிலேஷன்ஷிப்பை ஏற்படுத்திக்கத் தயார். வேண்டாம்னு தோன்ற சமயம் பிரிந்தும் போய்டலாம்… இப்போ அதெல்லாம் ஒரு பெரிய தப்பில்லை…எல்லா பக்கமும் நடக்கத்தானே செய்யுது”
அவள் பேசப் பேச உள்ளுக்குள் பெருகிய ஆத்திரத்தை அடக்க முடியாதவனாய் எழுந்தவன் அருகிலிருந்த ட்ரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடியின் மீது தன் முஷ்டியால் ஓங்கிக் குத்தியிருந்தான்.
அவனிடம் ஆத்திரத்தை எதிர்பார்த்திருந்தாலும் இப்படித் தன்னைக் காயப்படுத்திக் கொள்வான் என்று எதிர்பாராத அதிர்ச்சி அவள் முகத்தில் அப்பட்டமாய்த் தோன்றினாலும் அவனுக்கான அக்கறையை அவள் வெளிப்படையாகக் காட்டிக் கொள்வது அவனை இன்னும் பலமாகவும் அவளை இன்னும் பலவீனமாகவும் காட்டும் என்பதால் கஷ்டப்பட்டு முகத்தை உணர்ச்சி துடைத்தவாறு வைத்துக் கொண்டு எழுந்தவள் படுக்கையின் அருகிலிருந்த மேஜை இழுப்பறையில் இருந்து முதலுதவிப் பெட்டியை எடுத்துக் கொண்டு அவனருகில் வந்தாள்.
அவன் கையைப் பிடித்து இழுக்க, கையைக் கொடுக்க மாட்டாமல் முரண்டு பிடித்தவன் கையை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றவள் கட்டிலில் அமர்ந்து அவனையும் அருகில் அமர வைத்துக் கையைத் துடைத்து சுத்தமிட்டு மருந்திட ஆரம்பித்தாள்.
பின் மென்மையான குரலில் “இந்த உடல்சுகத்துக்காக என்னச் சுத்தி வர்ற ஆண்களைக் கண்டு அலுத்துப் போச்சு கா…விக்னேஷ்…என் முடிவில மாற்றமில்ல…உங்க முடிவை யோசித்துச் சொல்லுங்க” என்றவள் அவன் கையை விடவும் எதுவும் சொல்லாமல் அறையை விட்டு வெளியேறினான்.
உடல் கொஞ்சம் தேறி இருந்தாலும் அன்று முழுவதும் மனம் சோர்வாகவே இருந்தது அவளுக்கு. இரண்டு, மூன்று முறை அலைபேசியை எடுத்து விக்னேஷை அழைக்கலாமாவென யோசித்து விட்டுப் பின் அவன் அவளின் குறுக்கீடு இல்லாமல் யோசிக்கட்டும்… என அந்த முயற்சியைக் கைவிட்டாள்.
மாலை வின்சென்ட் மறுபடி வந்தான் குழந்தைகளைப் பார்க்கவென…அவள் ஏதோ யோசனையில் இருப்பதைக் கவனித்து விட்டு குழந்தைகள் சென்ற பின் அவளிடம் வந்தான்.
“என்னாச்சு நீலு டியர்?”
வின்சென்ட் அவளின் உயிர்த்தோழன்…அவனுடன் சேர்ந்து கண்களில் நீர் வழியச் சிரித்திருக்கிறாள்…அவன் தோளில் சாய்ந்து கதறி அழுதிருக்கிறாள்… ஆனால் இன்று அவனிடம் நெருங்கத் தோன்றவில்லை… அது விக்னேஷிற்குப் பிடிக்காது என்பது போல் ஒரு உணர்வு…
பல வருடங்களாகவே யாரைப் பற்றியும் கவலைப்படாமல் தான் மனதில் சரியென நினைத்ததைச் செயல்படுத்திப் பழகி இருந்தவளுக்கு இந்தப் புதுவித உணர்வு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது.
அவளும் திருமணம் முடிந்ததும் எல்லா பெண்களையும் போல கணவன் முகம் பார்த்து அவனுக்குப் பிடித்தம் பிடித்தமின்மை அறிந்து அவனிஷ்டம் போல் நடந்து கொள்ளும் சராரசரிப் பெண்ணாகத்தான் ஒரு காலத்தில் இருந்தாள்…அல்லது இருந்ததாக நினைத்தாள். ஆனால் பல துன்பியல் சம்பவங்களுக்குப் பின் தன் முடிவுகளைத் தானே எடுக்கும் துணிவும் துடிப்பும் தன்னம்பிக்கையும் நிறைந்த பெண்ணாகக் காலம் அவளை மாற்றியது.
இப்போது மீண்டும் அந்தப் பழைய உணர்வு தலைதூக்க சரியா தவறா எனப் புரியாத நிலையில் வின்சென்ட்டிடம் விஷயத்தைப் பகிர்ந்து கொண்டு அவன் யோசனையைக் கேட்பதில் தவறென்ன இருக்கிறது என நினைத்து
“விக்னேஷ் என்னைக் கல்யாணம் பண்ணிக்க விரும்புறார்”
“ஓ!” அவளை ஆழ்ந்து பார்த்தவன்… “நீ…உனக்கு அதில விருப்பமா?”
“தெரியல…ஆனா எனக்கு அவரைப் பிடிச்சிருக்கு”
அழுத்தமான நடையில் அவள் அருகில் வந்தவன் வலது கையால் அவள் ஒரு பக்கக் கன்னத்தை மொத்தமாகத் தாங்கி அவள் கண்களுக்குள் பார்த்தான்.
“என்னை ஏன் டியர் உனக்குப் பிடிக்காமப் போச்சு?”
அவள் விழிகளில் திகைப்பு…
“வின்னி…நான்…நீ…” எனத் தடுமாறியவள் ஒரு பெருமூச்சுடன் அவன் கையை விலக்கி விட்டு “கேத்தி இருக்கும்போது நீ என்னை இப்படி நினைப்பது கூடத் தப்பு வின்னி”
“நான் இப்போ உன்னை விரும்புறேன்னு சொல்லல நீலு டியர்…ஆனா நான் எங்க உன்னை மிஸ் பண்ணினேன்னு எனக்குத் தெரிஞ்சுக்கத் தோனுச்சு… என்னை விட விக்னேஷ் எதுல அதிக ஸ்கோர் பண்றார்ன்னு…”
“இனஃப் வின்னி”
“சாரி நீலு…சரி போனது போனதாகவே இருக்கட்டும்… உனக்கு ரெண்டு குழந்தைகள் இருக்காங்க…வர்றவர் உனக்குக் கணவனா மட்டுமில்லாமல் அவங்களுக்கு நல்ல தகப்பனாகவும் இருக்கணும்.நல்லா யோசிச்சு முடிவெடு”
அவள் வாழ்க்கைப் புத்தகத்தில் அவனறியாத பக்கங்கள் இல்லை. அதனால் நடந்ததைச் சொல்லி விடும் வேகத்தில் வாயைத் திறந்தவள் ஏனோ மனம் வராமல் அமைதியானாள்.
“ம்ம்ம்” என்றவளின் கன்னத்தைத் தட்டி விட்டு “சரி நான் கிளம்புறேன்… இன்னும் ரெண்டு மணி நேரத்துல எனக்கு ஃப்ளைட்” என்றவன் கிளம்பப் போக “வின்னி! கல்யாணம்னு உறுதியா முடிவாகுற வரை யாருக்கும் சொல்ல வேணாம்…கேத்திக்குக் கூட”
“ம்ம்ம்…ஓகே” என்றவன் கிளம்பி விட்டான்.
குழப்பங்களுக்கு நடுவில் உறங்கி எழுந்தவள் மறுநாள் காலை அலுவலகத்துக்குக் கிளம்பி விட்டாள்.
அலுவலகத்தை அடைந்து வேலைகளில் மூழ்கி நேரம் கடந்து கொண்டிருக்க மனதின் மூலையில் மெல்லிய குறுகுறுப்பு இருந்து கொண்டுதான் இருந்தது…விக்னேஷின் அரவத்தையே காணோமே என்று…
அவன் வழமையாக வரக் கூடிய நேரம் கடந்து விட்டிருக்க பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவள் அவனறை இன்டெர்காமிற்கு அழைக்க “எஸ் மேம்” என ப்ரதீபாவின் பதில் குரல் கேட்டது.
‘விக்னேஷ் ஹியர்’ என்ற கம்பீரமான அவன் குரல் கேட்க ஆவலாய் இருந்தவள் ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு “விக்னேஷ் இல்லையா?” எனக் கேட்டாள்.
“பாஸ் இன்னிக்கு ஆஃபிஸ் வரலை மேம்…உடம்பு சரியில்லை போல…பத்து மணி வரை வரலைன்னதும் நான் இப்பத்தான் ஃபோன் செய்து கேட்டேன்… ‘வரமாட்டேன் பார்த்துக்கோ’ன்னு மட்டும் சொல்லி வச்சுட்டார்…குரலை வைத்துத்தான் உடம்பு சரியில்லையோன்னு நினைச்சேன்”
“ஓ…ஓகே” என்று வைத்தவள் அடுத்த அரை மணியில் அலுவலகத்தில் இருந்து கிளம்பி இருந்தாள்.
ப்ரதீபாவிடம் ஏற்கனவே பேச்சு வாக்கில் அவன் முகவரியைத் தெரிந்து கொண்டிருந்ததில் அவன் வீடு இருக்கும் குடியிருப்பைத் தேடி அடைந்து மின்தூக்கி வழியாக அவன் வீட்டுக்குச் சென்று வாசலில் நின்று அழைப்பு மணியை அழுத்தினாள்.
பல முறைகள் அழுத்தியும் கதவு திறக்காமல் போகவே அலைபேசியை எடுத்து அவன் எண்ணை அழைத்தாள். அழைப்பும் எடுக்கப்படாமல் போய்க் கொண்டே இருக்க அவளுள் பதற்றம் அதிகமாகியது.
பலமாகக் கதவைத் தட்ட முற்பட்டாள். சத்தம் கேட்டுப் பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் எட்டிப் பார்க்க “இந்த அபார்ட்மென்ட் மேனேஜர், இல்ல மெயின்டனன்ஸ் நம்பர் தெரியுமா?” என்று கேட்க அந்தப் பெண்மணி தன் அலைபேசியை எடுத்து வந்து எண் பார்த்துச் சொன்னார்.
கூடவே “நீங்க யாரு?” எனக் கேட்க “நான் ஆஃபிஸ்ல இவர் கூட வேலை பார்க்குறேன்…ஃபோன் செய்தப்போ குரல் ரொம்ப டல்லாப் பேசினார்… வீட்டுக்குப் போற வழில சும்மாப் பார்த்துட்டுப் போலாம்னு வந்தேன்… காலிங் பெல் அடிச்சாலும் வரல…ஃபோன் செய்தும் பார்த்துட்டேன்” என்று அவரிடம் பதில் சொல்லிக் கொண்டே மேனேஜரின் எண்ணை அழைத்து அவரிடம் பேசி ப்ரச்சனையை விளக்கி மாஸ்டர் கீயைக் கொண்டு வரச் சொன்னாள்.
“இதுக்கு முன்னால வேற ஒரு பொண்ணு வருவாங்க”
ப்ரதீபாவைச் சொல்கிறார்கள் என்று புரிய “அவங்களுக்கு ஆஃபிஸ்ல கொஞ்சம் வேலை… எனக்கு இந்தப் பக்கம் வேலை இருந்தனால நான் வந்தேன்”
அதற்குள் மேனேஜர் மாஸ்டர் கீயுடன் வந்திருக்க அதைக் கொண்டு கதவு திறந்து உள்ளே செல்ல, எந்த அரவமுமில்லை. படுக்கையறையைத் திறந்து பார்க்க மேல் சட்டையில்லாமல் முதல் நாள் உடுத்தியிருந்த அதே பேன்டுடன் படுக்கையில் குப்புறக் கிடந்தான் விக்னேஷ்.
துணை இன்றி தனியாய் சென்றேன்..
என் நிழலாய் வந்தாய்…
விடை தேடும் மாணவன் ஆனேன்..
என் விடையும் நீயென…
வந்தாயே.. என் வழியில்..
காதல் தந்தாயே… உன் மொழியில்…
என் நெஞ்சில் காதல் வந்து .. நான் சொன்னேன்..
உன் காதல் வேறோர் மனதில்.. எனை நொந்தேன்…
கண்கள் உள்ளவரை… காதல் அழிவதில்லை…
பெண்கள் உள்ளவரை… ஆண்கள் ஜெயிப்பதில்லை…
காதல் செய்தால் பாவம்…
பெண்மை எல்லாம் மாயம்..
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே…
பெண்கள் கண்ணில் சிக்கும்…
ஆண்கள் எல்லாம் பாவம்…
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே…
உன் காதல் வேறோர் மனதில்.. எனை நொந்தேன்…
பெண்கள் உள்ளவரை… ஆண்கள் ஜெயிப்பதில்லை…
பெண்மை எல்லாம் மாயம்..
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே…
பெண்கள் கண்ணில் சிக்கும்…
ஆண்கள் எல்லாம் பாவம்…
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே…