அத்தியாயம் – 25

“அப்படி என்ன உனக்கு கவனக் குறைவு? நல்லவேளை ரொம்ப டீப்பா கட் ஆகல. இதுக்கே இத்தனை ரத்தம்…” என்று அச்சுதன் மெல்லத்தான் கடிந்துகொண்டு இருந்தான் அர்ச்சனாவை.

இருவரும் மருத்துவமனையில் இருக்க, அர்ச்சனாவிற்கு வைத்தியம் முடித்து, மருத்துவர் ஒரு ஒருமணி நேரம் கழித்துத்தான் கிளம்பும் படி சொல்லியிருந்தார்.

“ப்ளாட் கொஞ்சம் நிறையதான் வந்திருக்கு. கொஞ்ச நேரம் வெய்ட் பண்ணுங்க. மயக்கம் வர்றதுபோல இப்படி எதுவும் இருந்தா ட்ரிப்ஸ் போடணும்…” என்றிட, அச்சுதன் ஒரு அறையை கேட்டுவாங்கி அவளை “கண்ண மூடி படு…” என்று சொல்ல,

“எனக்கு தூக்கம் வரலையே…” என்றாள்.

“தூங்க சொல்லலை. ஆனா ரெஸ்ட் எடு..” என்றவன் அவனது அலைபேசியை எடுக்க,

“அப்பாக்கு கால் பண்றதுன்னா வேண்டாம்…” என்றாள் வேகமாய்.

“ஏன் அர்ச்சனா?” என,

“இல்ல வேண்டாம். நாளைக்கு அக்கா வளைகாப்பு. அவர் சந்தோசமா இருக்கார். ஏற்கனவே என்னை நினைச்சு அவருக்கு கொஞ்சம் கவலை. இப்போ சொன்னா அடிச்சு பிடிச்சு கார் ஓட்டிட்டு வருவார். வேணாம். நான் வீட்ல போய் சொல்லிக்கிறேன்…” என்றாள் பாவமாய்.

“சரி உங்க அம்மா…” என்று அச்சுதன் சொல்லும்போதே,

“ஐயோ சாமி வேண்டவே வேண்டாம்…” என்றாள் முன்னைவிட வேகமாய்.

அவனோ முறைக்க “அங்க வீட்ல கொஞ்சம் கெஸ்ட் எல்லாம் வந்திருக்காங்க. இந்நேரம் இப்படின்னு சொன்னா ஆளாளுக்கு எதாவது பேசுவாங்க. நான் தான் வீட்ல போய் சொல்லிக்கிறேன்னு சொல்றேன் தானே…” என்று முகம் சுறுக்கி பேச,

“ம்ம் இத்தனை யோசிக்கிற தானே. கொஞ்சம் பார்த்து இருக்கக் கூடாதா?” என்றவனும் அங்கேயே அமர, அவளுக்கு படுக்க முடியவில்லை.

“நான் சாஞ்சு வேணும்னா உக்காந்துக்கிறேன்…” என்றவளுக்கு, சாய்ந்து அமர உதவியவன்,

“எத்தனை சொன்னாலும் உனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லை அர்ச்சனா. பிடிவாதம் தான் ஜாஸ்தியா இருக்கு..” என,

“இப்போ நான் என்ன பண்ணிட்டேன். இப்படி திட்டிட்டே இருப்பீங்க அப்படின்னா கிளம்புங்க. நானே எப்படியோ வீட்டுக்கு போயிக்கிறேன்…” என,

“இதைதான் சொன்னேன் பிடிவாதம்னு…“ என்று அச்சுதன் பேச,

“உங்களை விடவா?!” என்றாள் அமர்த்தலாய்.

அவளை ஒரு பார்வை பார்த்தவன் “ஆமா இன்னிக்கே வேலை இல்லை தானே. எதுக்கு நீ அங்க பில்டிங் வந்த?” என்று கேட்க,

“ம்ம்ச்..” என்றவள் அமைதியாய் இருக்க,

“சொல்லு அர்ச்சனா? எதுக்கு வந்த நீ..” என்று சொல்ல,

“தனியா இருக்கணும் போல இருந்தது…” என்றவளுக்கு தொண்டை அடைத்தது.

“என்னது? தனியா இருக்கணும் போல இருந்ததா?” என்று அச்சுதன் நம்ப முடியாமல் கேட்க,

“ம்ம்…” என்று தலையை ஆட்டியவள் “மனசு ரொம்ப ஒருமாதிரி இருந்தது..” என்றவளின் குரலில் அப்படியொரு வேதனை.

“என்ன நீ இப்படி சொல்ற?” என, 

“என்ன சொல்ல? எனக்குத் தெரியலை..” என்றவள் கடகடவென்று அவள் சித்தி பேசியது எல்லாம் சொல்லி, அவளது மனது பயத்தையும் சொல்லி, தான் ஏன் அங்கே வந்தோம் என்றதையும் சொல்ல, அச்சுதன் அவளையே தான் பார்த்துக்கொண்டு இருந்தான்.

பேச, பேச அர்ச்சனாவிற்கு கண்களில் நீர் வழிந்தது.

“நா.. நான் இங்க வந்தே இருக்கக் கூடாது போல அச்சத்தான். உங்களை கஷ்டப்படுத்தி.. வீட்ல இருக்கவங்களையும் கஷ்டப்படுத்தி. ஆ.. ஆனா நான் என்ன செய்யட்டும்? என்னோட மனசு எல்லாத்துக்குமே உங்களை நினைக்குது. நான் என்ன செயட்டும்..” என்று அவனிடமே கேள்வி கேட்டு நிறுத்த, இதற்கு அச்சுதன் என்ன பதில் சொல்வான்?!     

அவளது இந்த பேச்சில் திகைத்துத் தான் பார்த்தான்.

“அந்த பில்டிங் வேலை முடிஞ்சதுன்னா, அவ்வளோதான் இல்ல. அடுத்து நமக்கு இப்படி தனியா பேசிக்கக் கூட சான்ஸ் கிடைக்காது தானே அச்சத்தான்…” என்று அவள் கேட்க, அவளது கண்களில் கண்ணீரோடு அப்பட்டமாய் அவளது மனதின் ஏக்கமும் தெரிய, அச்சுதனுக்கு புரியாமல் இல்லை.

அவளது பேச்சு என்னவோ அவனை போட்டு படுத்தத் தொடங்கியது.

“நீ இதெல்லாம் யோசிக்காத அர்ச்சனா. இப்போ உனக்கு ரெஸ்ட் வேணும்…” என,

“இப்போ பேசலைன்னா நீங்க இப்படி அமைதியா கேட்க மாட்டீங்க தானே. நானுமே இன்னொரு சந்தர்ப்பத்துல இதெல்லாம் பேசுவேனான்னும் தெரியலை. நீங்க சொல்றமாதிரி ரொம்ப பிடிவாதம் தான் இல்ல எனக்கு? ம்ம்..” என்று லேசாய் உதட்டை சுளித்து, அவனையே பார்த்து கேட்க,

“அர்ச்சனா…” என்றான் கண்களை இறுக மூடித் திறந்த,

“உங்களோட எண்ணங்களுக்கு, உணர்வுகளுக்கு நான் எப்பவுமே மதிப்பு கொடுப்பேன். ஆனா அதெல்லாம் தாண்டி எப்பவாது ஒரே ஒரு தடவை கூடவா உங்களுக்கு என்னைப் பத்தி ஒரு சின்னதா ஒரு எண்ணம் கூட தோணல அச்சத்தான்…” என்றவளுக்கு, அழுகை நெஞ்சை அடைத்துக்கொண்டு வர, அவள் மனதளவில் மிகவும் பயந்து இருக்கிறாள் என்பது அவனுக்கு புரிந்தது.

“இங்க பாரு, உனக்கு இப்போ உடம்பு மனசு ரெண்டுமே ரொம்ப சோர்வா இருக்கு. அதுதான் இப்படி அழுதுட்டு இருக்க. நீ நல்லா நார்மலா இருக்கும்போது யோசி. உன்னோட சித்தி உனக்கு நல்லதுதானே சொல்லிருக்காங்க. தப்பா எதுவும் சொல்லலை தானே..” என,

“ம்ம்ச் நீங்க என்னை சமாளிக்கப் பார்க்காதீங்க அச்சத்தான்…” என்று அவனின் கைகளை தட்டிவிட்டவள் “ஒரு தடவ.. ஒரே ஒரு தடவ கூட உங்களுக்கு என்னை பார்க்கனும்னு தோணினது இல்லையா. நான் எத்தனை தடவைன்னாலும் உங்களை பாக்குறேன் தானே?” என்று அவள் தலையை ஆட்டி கேட்ட விதத்தில், அச்சுதன் முகத்தில் ஒரு சிறு புன்னகை எட்டிப் பார்க்க,

“யார் சொன்னது பார்க்கலைன்னு. நீ அழகான பொண்ணு தான் அர்ச்சனா.. நிறைய தடவ நினைச்சிருக்கேன்.. அழகான அர்ச்சனா.. அன்பான அர்ச்சனா.. அறிவாளி அர்ச்சனான்னு எல்லாம்…”

“ம்ம் அறிவுகெட்ட அர்ச்சனா அப்படின்னு கூட சொல்லிருக்கீங்க…”   என்று அவள் எடுத்துக் கொடுக்க,

“அது நீ நடந்துக்கிறது பொறுத்து..”  என,

“இப்படி உக்காருங்களேன்…” என்று அவள் பக்கத்தில் கை கட்ட, அச்சுதன் அவளை கண்டிப்பான பார்வை பார்க்க,

“ப்ளீஸ்.. சும்மா ஒரே ஒரு தடவ.. இப்படி உக்காருங்க அச்சத்தான். நான் வேறே எதுவுமேல்லாம் உங்கக்கிட்ட கேட்கவே மாட்டேன்..” என்று கண்களை சுறுக்கி, ஒரு கையால் கன்னத்தில் வழிந்த கண்ணீர் துடைத்துக் கேட்க,

“நீ ரொம்ப பண்ணிட்டு இருக்க அர்ச்சனா. உன் பேச்சை கேட்டே இருக்கக் கூடாது. உன் அம்மாக்கு கால் செஞ்சிருக்கணும்…” என்று சலிப்புடன் சொன்னாலும், அவள் சொன்னதுபோல அவளின் அருகே அமர,

“ம்ம் தேங்க்ஸ்…” என்றவள் பின்னே சாய்ந்து கண்களை மூடி அமர்ந்துகொண்டாள்.

அழுது, கண்ணீர் தடயங்களுடன், வலி சுமந்து, களைந்தா கூந்தலுடன், இந்த நொடியை இப்படியே நிறுத்திக்கொள்ள போராடும் ஆசையில், என்ன சொல்வது என்ன செய்வது என்று தெரியாமல், அவள் கண்கள் மூடி, கால் நீடி அவன் அருகே அமர்ந்திருக்க, அவளது அந்த கோலம் அச்சுதனை அசைத்துப் பார்த்தது.

முதன் முதலில் அவளைப் பார்க்கும் போது எப்படி இருந்தாள்.

ஆனால் இன்று அவளது தோற்றம் அவனுக்கு ஒருமாதிரி மனதை பிசைவதாய் இருக்க, அவள் கண்கள் மூடி அமர்ந்திருக்கும் விதம் கண்டு “என்ன பண்ணுது அர்ச்சனா…” என்று மெதுவாய் அவள் கரம் தொட்டு கேட்க,

“ஒண்ணுமில்லை…” என்று தலையை ஆட்டியவள் “இந்த செக்கன்ட் அப்படியே நின்னு போயிடணும்னு நினைச்சேன்…” என்றாள் ஒரு கசந்த புன்னகையோடு.

“நீ உன்னை நீயே ரொம்ப கஷ்டப் படுத்திக்கிற அர்ச்சனா..”  என்றவன், லேசாய் அவள் கரம் பிடித்து,

“நீ எத்தனை நல்ல பொண்ணு.. கொஞ்சம் எல்லாரும் சொல்றதை கேளேன்…” என்று பேச,

“ம்ம்…” என்று இன்னும் இதழ் விரித்து சிரித்தவள் “நீங்களும் நல்ல மனுஷன் தானே எல்லாரும் சொல்றதை நீங்களும் கேட்கலாம் தானே…” என,

“இதைத்தான் வீண் பேச்சுன்னு சொல்றேன்.. என்னோட விஷயம் மொத்தமா வேற..” என்று சொல்ல, அவனை ஆழ்ந்து ஒரு பார்வை பார்த்தவள் “உங்க கை ஒரு நிமிஷம் குடுங்களேன்…” என,

“எதுக்கு?” என்று பார்த்தான்.

“குடுங்க…” என, அவனும் நீட்ட, அவனது கைகளை தன் நடுங்கும் கரத்தால் பற்றியவள், லேசாய் அவள் கன்னத்தில் வைத்து அழுத்திக்கொண்டு ஒரு நொடி கண் மூடி நிற்க, அவ்வளவு தான் அச்சுதனின் பிடிவாதம் அந்த நொடி மொத்தமாய் வீழ தயாராகியது.

“என்ன பண்ற அர்ச்சனா?” என்று கேட்டவனுக்கு குரல் நடுங்க.

“எனக்குத் தெரியலை.. நீங்க என் கிட்ட இருக்கீங்க. நான் ரொம்ப வீக்கா பீல் பண்றேன். உங்களை டைட்டா ஹக் பண்ணிட்டு அழனும் போல இருக்கு. ஆனா அது சரியா தப்பான்னும் தெரியலை…” என்றவள்,

“கிளம்பலாம்.. இதுக்கு மேல இருந்தா நான் பைத்தியம் ஆகிடுவேன்…” என்று சொல்லி அவனது கரத்தை விடுவிக்க, அவனது பார்வையோ அவளை விட்டு மீள்வேனா என்று இருந்தது.

“கிளம்பலாம் அச்சத்தான்…” என,

“கடவுளே..!” என்று முணுமுணுத்து, தலையை இட வலமாய் ஆட்டியவன் “நீ முதல்ல வீட்ல போய் நல்லா பிடிச்சதை சாப்பிட்டு நல்லா தூங்கு…” என்று சொல்லியபடி, அவளுடன் இணைந்து நடக்க, பதிலே சொல்லாமல் தான் வந்தாள் அர்ச்சனா.

காரிலும் கூட அர்ச்சனா பேசவில்லை. கண்மூடி சாய்ந்திருந்தவள் உறங்கிபோனாள் போல.

ஆனால் அச்சுதன் மனது தான் இப்போது, கல்லெறியப்பட்ட குளமாய் இருந்தது. நொடிக்கொரு முறை அவளை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே காரினை ஓட்டிக்கொண்டு இருந்தவன், அர்ச்சனாவின் இல்லம் நெருங்கும் முன்னமே ரோஜாவிற்கு அழைத்து இப்படி என்று சொல்லிவிட்டான்.

திடீரென்று இப்படி அழைத்துக்கொண்டு போய் நின்றால் நன்றாய் இருக்காது இல்லையா.

கார் நின்றும் கூட அவள் இறங்காமல், உறங்க ரோஜாவும் முல்லையும் கார் சத்தம் கேட்டு வெளியேவே வந்துவிட “கார் ஏறவும் தான் தூங்குறா அத்தை..” என்றவன்,

மெதுவாய் “அர்ச்சு…” என்று அவளை தொட்டு எழுப்ப,

“ம்ம்ம்…” என்று முகத்தை சுறுக்கி கண்களை திறந்தவள், அதற்குள் வீடு வந்துவிட்டதா என்று நினைத்துப் பார்க்க,

“ஏய் என்னடி ஆச்சு உனக்கு? பார்லர் போறேன்னு தானே சொல்லிட்டு கிளம்பின…” என்று ரோஜா பதற,

அச்சுதன் அவளை பார்த்து முறைத்தவன்  “ரொம்ப ஸ்ட்ரெஸ்ல இருக்கா.. அது இதுன்னு எதுவும் பேசாதீங்க.. நல்லா தூங்கட்டும்…” என்றவன் “இது அவளுக்கான மாத்திரைகள்…” என்றுசொல்லி கொடுக்க, முல்லைக்கு கோபம் கோபமாய் வந்தது.

அவள் இத்தனை வாடிப்போனதே உன்னால் தானே என்று கேட்கலாம் போல இருக்க, அச்சுதனோ கிளம்புகையில் “திரும்பவும் சொல்றேன் அத்தை. அது இதுன்னு எதுவும் அவக்கிட்ட பேசாதீங்க…” என்றுவிட்டு போக,

ரோஜாவோ “இதென்ன புதுசா…” என்றார் அர்ச்சனாவிடம்.

“ம்ம்ச் ம்மா…” என்று சலித்தவள், முன்னே நடக்க “அர்ச்சனா என்ன நடக்குது இங்க?” என்று ரோஜா கேட்டபடி உள்ளே போக,

முல்லையோ “அக்கா மெதுவா.. வீட்ல ஆளுங்க இருக்காங்க பாரு…” என்று அக்காவை அடக்க, அர்ச்சனா வந்திருந்தவர்களை பார்த்து லேசாய் புன்னகை செய்தவள், அவளின் அறைக்குள் புகுந்துகொண்டாள்.

“அர்ச்சு.. பார்லர் தானே டி போறேன்னு போன…” என்று மீண்டும் ரோஜா உள்ளே வந்து ஆரம்பிக்க,

“ம்மா.. பார்லர் போறதுக்கு முன்ன, சைட்டுக்கு போயிட்டு போலாம்னு போனே.. ஆணி இருந்ததை கவனிக்கல. நல்லவேளை சரியா அச்சத்தான் வந்தாரு..” என,

“அர்ச்சனா…” என்று கண்டித்துப் பார்த்தார் முல்லை.

“என்ன சித்தி…” என்று அவள் அயர்ந்து போய் கேட்க,

“நடக்கிறது எதுவுமே உன்னோட வாழ்க்கைக்கு நல்லது இல்ல அர்ச்சு…” என்றவர்

“அக்கா அனிதா வளைகாப்பு முடியவும், அர்ச்சனாவை என்னோட கூட்டிட்டு போறே. அடுத்து டெலிவெரி டைம்ல வேணும்னா வரட்டும்…” என்று முல்லை சொல்ல,

“ஷ்..! முதல்ல நாளைக்கு விசேசம் நல்லபடியா முடிப்போம்..” என்ற அர்ச்சனா “சித்தி நானே கொஞ்ச நாள் திரும்ப வந்து யூஎஸ்ல இருக்க ஐடியால தான் இருக்கேன்…” என்றுவிட்டு “ம்மா பசிக்குது…” என்று சொல்ல, ரோஜாவிற்கோ தலையே வெடித்துவிடும் போல இருந்தது.

அனைத்தும் கார்மேகம் செவிகளுக்கு செல்ல, மகளை வந்து பார்த்தவர் “என்னடா அர்ச்சு இப்படி?” என்றார் மகளிடம்.

“டாடி.. இது எதார்ச்சையா நடந்தது…” என்றவள், நடந்ததை மேலோட்டமாய் சொல்ல,

“சரி ஹாஸ்பிட்டல் போகும் போதாவது எனக்கு சொல்லியிருக்கலாம் தானே…“ என,

“அதான் சொன்னேன் தானே டாடி.. நாளைக்கு அக்கா விசேசம்.. நீங்க எல்லாம் ஹேப்பியா இருக்கீங்க. சொன்னதுமே ஓடி வருவீங்க.. அதனால தான் சொல்லலை…” என்றவள் “டாடி எதுவா இருந்தாலும் நாளைக்கு பங்சன் முடியட்டும் பேசிக்கலாமே…” என,

“சரி நீ தூங்கி ரெஸ்ட் எடு…” என்றுவிட்டு போனார்.

அங்கே அச்சுதனுக்கோ வேலையே ஓடவில்லை. கடையில் இருந்து வீடு வந்தவனுக்கு அவன் மீதே அவளது வாசம் ஒட்டிக்கொண்டது போலிருக்க,

‘என்னவோ பண்ணிட்டா…’ என்று அவனால் எண்ணாமல் இருக்க முடியவில்லை.

‘டேய் அச்சுதா.. என்னடா இது…’ என்று தனக்கு தானே கேட்டுக்கொண்டவனுக்கு, வேறெந்த சிந்தனைகளுமே வரவில்லை.

அர்ச்சனா வலியில் நின்றது.. கண்ணீர் வடித்தது.. மனம் விட்டு பேசியது.. அவன் கை பிடித்தது என்று எல்லாம் ஒன்று மாற்றி ஒன்றாய் நினைவில் வந்துகொண்டு இருக்க, குளிக்கலாம் என்று சென்று அவனது டி ஷர்ட் கழட்டப் போக, அதில் அவளது ஒற்றை முடி ஒட்டிக்கொண்டு இருந்தது.

‘ஹேர் பேன்ட் போடுன்னா அதுவும் கேட்கிறது இல்லை. அவளை போலவே அவளோட முடியும் அடங்காமுடி தான்…’ என்று எண்ணியவனுக்கு, பட்டென்று அந்த முடியை தூக்கி போடவும் முடியவில்லை.

விரலில் பிடித்து, கண்ணாடி முன்னே நின்று பார்த்தவனுக்கு, அர்ச்சனாவிற்கு அழைத்து உன் முடியை என்ன செய்வது என்று கேட்கவேண்டும் போல தோன்றிய ஆவலை, கடினப்பட்டு அடக்கியவன்

‘அச்சுதா.. என்னடா ஒரு முடிக்கு இத்தனை யோசிக்கிற…’ என்று அவனது மனசாட்சி எட்டிப் பார்க்க,

‘நிஜமா இந்த அர்ச்சனா என்னை என்னவோ பண்ணிட்டு போயிட்டா…’ என்று அவனே பேசிக்கொள்ள,

“அச்சுதா…“ என்று அழைத்தபடி நீலவேணி உள்ளே வர,

“என்ன அர்ச்சனா…” என்று கேட்டுவிட்டான் அவளது நினைப்பிலேயே நின்று இருந்தவன்.