“டேய் நானும் என் நகையை உனக்கு கொடுத்தேன், அப்புறமும் என் மாமியாரோட வைர தோடு கொடுத்தேன்” அழுது கொண்டே சொன்னார் சுந்தரி.
“உன் நகையை தருண் காது குத்து அப்பவே மீட்டு கொடுத்ததா நினைவு எனக்கு. வைர தோடு…ம்ம்… என்னம்மா அம்பது லட்சம் பொறுமானம் இருக்குமா அது, இல்லை கோடியிலா?” சற்றே கோவமாக கேட்டவன், “அதுக்குண்டான பணத்தை கொடுத்திடுறேன் மா நான்” என்றான்.
“அத கேட்கவாடா வந்தேன் நான்?” என வேறு ஏதோ சொல்லப் போனார்.
“வேற என்ன கேட்க வந்தம்மா? என்ன கேட்டாலும் இவனுக்காக செய்றதுக்கோ தர்றத்துக்கோ என்கிட்ட எதுவும் இல்லை” முடிவாக சொன்னான் ஆனந்த்.
“வீட்ல…” எனஆரம்பித்தவரை பேச விடவில்லை ஆனந்த்.
“என்னம்மா என்ன? வீட்ல எனக்கு உன் பங்கு விட்டுத் தர்ரியமா? நல்லா வாழ்ந்த குடும்பம் வறுமைல வாடி நின்னப்போ திரும்பவும் ஊருக்குள்ள என் அப்பாக்கும் அம்மாக்கும் அந்தஸ்து வேணும்னு நினைச்சு என் செலவையெல்லாம் சுருக்கி முழுக்க முழுக்க என் உழைப்புல கட்டின வீடு அது. உங்களுக்குன்னு கடைசி வரை ஒரு இடம் வேணும்ன்னுதான் அவ்ளோ போராடி அந்த வீட்டை மீட்டேன். எவ்ளோ சூப்பரா லா பாயிண்ட் பேசுற, உன் சைன் இல்லாம ஒண்ணும் செய்ய முடியாதாம்மா என்னால? என் சைன் இல்லாம உன்னால மட்டும் எதுவும் செய்ய முடியுமா?” எனக் கேட்டான்.
நேற்று மருமகளிடம் அப்புணு சொல்லிக் கொடுத்ததை அப்படியே பேசியிருந்தவர் இப்போது என்ன சொல்வதென விழித்தார்.
“வச்சுக்கம்மா, அந்த வீட்டை நீயே வச்சுக்க, என்ன பண்ணணுமோ பண்ணு, எனக்கு எந்த பங்கும் வேணாம், எனக்கு அந்த வீடே வேணாம்” என்றவனுக்கு குரல் கமறி விட, உள்ளே சென்று விட்டான்.
அறையிலேயே வைத்துதான் மகனுக்கு சாப்பாடு கொடுத்துக் கொண்டிருந்தாள் தேன். அவர்கள் பக்கம் திரும்பாமல் குளியலறை சென்று விட்டான் ஆனந்த்.
சுந்தரிக்கு அடிவயிறு சில்லிட்டது போலிருந்தது. பெரியவன் நன்றாக சம்பாதிக்கிறான், உடன் பிறந்தவர்களுக்கு செய்தால் குறைந்தா போவான், ஏன் இப்படியெல்லாம் பேசுகிறான் எனதான் இருந்தது அவரது எண்ணம். சிலர் இப்படித்தான், தவறை புரிந்து கொள்ளவே மாட்டார்கள்.
“ம்மா, என்னம்மா மலைச்சு போய் உட்கார்ந்திருக்க, அண்ணன் பேசுறத பார்த்தா வீட்டை உன் பேருக்கே மாத்தி தந்திடும்னு நினைக்கிறேன். அதுக்குண்டான ஏற்பாடு செய்யவா நான்?”எனக் கேட்டான் அகிலன்.
வீட்டின் பங்கு பற்றி சொல்லி மகனிடம் பணம் பெறத்தான் நினைத்தார் சுந்தரி. சின்ன மகனை நம்பினால் அந்த வீட்டை இழக்கத்தான் வேண்டும் என்பது அவருக்கு நன்றாக தெரியுமே. விஷேஷங்களில் மகன் வந்து போக இருக்கிறான், மகளுக்கும் பிறந்த வீடென இருக்கிறது. அதையும் இல்லாமல் செய்வதா என்ற ஆதங்கத்தோடு சின்ன மகனை முறைத்தார்.
“என்னம்மா முறைச்சா என்ன அர்த்தம்?” என்றான் அகிலன்.
“போதும்டா, ஒரு தடவ உன்னை நம்பி வீட்டு பத்திரத்தை கொடுத்ததுக்கு நீ என்ன பண்ணி வச்சேன்னு மறக்கலை நான்” என சிடு சிடுத்தார்.
“அப்ப எனக்குன்னு எதுவும் செய்ய மாட்ட நீ?” என அவனும் கோவப்பட்டான்.
“ஒண்ணுமே செய்யலடா உனக்கு! என்ன… இவன் எங்களுக்கு சோறு போட மாட்டேன், செலவுக்கு தர மாட்டேன்னு சொல்றானா? எங்களுக்கு வேண்டியது செஞ்சுதான் தர்றான், உனக்காக கேட்க போயிதான் இவன் கோச்சுக்கிட்டான். எல்லாம் உன்னாலதான், போ இங்கேருந்து” என அவரும் கோவப்பட, இன்னொரு அறைக்குள் புகுந்து கொண்டான் அகிலன்.
தருணை தவிர யாரும் காலை உணவு சாப்பிட்டிருக்கவில்லை. ஆனந்த் படுக்கையில் அமைதியாக கண்கள் மூடி கிடந்தான்.
தங்கப்பனுக்கு ஊரில் ஏதோ முக்கிய வேலை என்பதால் நாளைதான் வருவேன் என நேற்று இரவே மகளிடம் சொல்லியிருந்தார். ஊருக்கு சென்ற வேதாச்சலம் மனைவியும் மகனும் சென்னைக்கு வந்த செய்தியறிந்து அவரும் இங்கு வந்து விட்டார்.
பெரிய மகனின் வரவை கண்டு வியந்தவர், மருமகளின் துணைக்காக மகன்தான் இவர்களை நேற்று இங்கு வரவழைத்திருப்பான் போல என அவராகவே நினைத்துக்கொண்டார்.
அவருக்கு நல்ல பசி, மருமகளிடம் என்ன சாப்பாடு என அவர் கேட்க, உடனே அவருக்கு உணவு பரிமாறினாள் தேன்.
ஆளாளுக்கு முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருப்பதை பார்த்தவர், “என்னடி நீ சாப்பிட்டியா?” என மனைவியிடம் கேட்டார். அதுதான் சாக்கென சுந்தரியும் அவருடன் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தார்.
தட்டில் சாப்பாடு எடுத்து சென்று ஆனந்தை சாப்பிட சொன்னாள் தேன். அவளும் பட்டினியாக இருப்பதால் அவளுக்கும் சாப்பாடு எடுத்து வரச்சொல்லி இருவரும் சேர்ந்தே சாப்பிட்டனர்.
பொறுப்பாக சின்ன மகனுக்கு தட்டு நிறைய எல்லாம் வைத்து எடுத்து சென்று தந்தார் சுந்தரி.
என்ன நடந்தது என வேதாச்சலம் விசாரிக்கவும், எல்லாம் சொன்னார் சுந்தரி.
“உனக்கு அறிவே இல்லையா? பொம்பள புள்ளைக்கு கல்யாணம் பண்ணி வைக்க பணம் வேணும்னு அவன்கிட்ட கேட்டா கொடுப்பான். தடிமாட்டு பயலுக்குன்னு கேட்டா எப்படி தருவான், அதுவும் அவன் இருக்க நிலைமைல?” என்றார் வேதாச்சலம்.
“சும்மா இருங்க, அப்புணுவே கோவத்துல இருக்கான், நீங்க பேசினது கேட்டு பாதி சாப்பாட்டுல வச்சிட போறான்” என்றார் சுந்தரி.
“இந்நேரம் எல்லாத்தையும் முழுங்கிட்டு ஏப்பம் விட்ருப்பான் அவன்” என சொல்லிக் கொண்டே எழுந்து சென்று விட்டார் அவர்.
பணத்துக்கு வேறு எப்படி ஏற்பாடு செய்வது என தீவிரமாக சிந்திக்க ஆரம்பித்தார் சுந்தரி.
சாப்பிட்டு முடித்ததும், “ஊர்ல இருக்க வீட்டை எனக்கு வேணாம்னு சொல்லிட்டேன்னு கோவமா தேனு?” என மனைவியிடம் கேட்டான் ஆனந்த்.
அவளுக்கு கோவம் இல்லாமல் எப்படி இருக்கும்? ஆனால் பதில் சொல்லவில்லை.
“என் பக்கத்திலிருந்து நான் கடைசியா விட்டுத் தர்றதா இருக்கட்டும் தேனு, அவங்களுக்காக கட்டி தந்ததுதான் அது, பங்கு அது இதுன்னு சொல்லி… ப்ச்… மனம் விட்டு போச்சு தேனு” எனும் போது அவனது கண்கள் கலங்கின. ஆனால் கண்ணீர் இறங்கி விடாமல் சமாளித்துக் கொண்டான்.
அவன் மனம் விட்டு பேசியிருக்கா விட்டாலும் தேனுக்கு தெரியும், அம்மா என்றால் அத்தனை பிரியம் அவனுக்கு, அவருக்கு வேண்டிய அனைத்தையும் செய்து தர வேண்டும் என முனைப்பாக இருப்பவன். இப்போதும் இவனது இடத்தில் வேறொருவன் என்றால் குத்தி கிழித்து கேள்விகள் கேட்டு ஆட்டம் போட்டிருக்க கூடும். இவனால் அப்படி முடியவே முடியாது.
தன் அம்மாவின் மனதில் தனக்கு எந்த முக்கியத்துவமும் இல்லையே, தன்னை பற்றி சிந்திக்கவே மாட்டேன் என்கிறாரே என்ற வேதனையும் அதிருப்தியும் அவனை அலைக்கழித்துக் கொண்டிருப்பதை உணர்ந்தாள்.
திருமணத்துக்கு முன் அவன் சம்பாதித்து கட்டிய வீட்டின் மீதுள்ள உரிமையை அவனே விட்டுக் கொடுத்து விட முடிவெடுத்த பிறகு தான் என்ன சொல்வது என அவளுக்கும் தோன்றி விட்டது.
தங்கள் தரப்பிலிருந்து இன்னொமொரு இழப்பு, இதுவே இறுதியாக இருக்கட்டும் என நினைத்தவள், “விடுங்க, அந்த வீட்ட உங்கம்மாவுக்கே கொடுங்க. ஆனா என்ன வேணா அவங்க செஞ்சிட்டு போகட்டும்னுலாம் விட அனுமதிக்க முடியாது. அத சொல்லி கொடுங்க” என்றாள்.
“போடி, என்னவோ செஞ்சிட்டு போகட்டும், எம்மேலதான் தப்பு, அப்பவே வீட்டு பத்திரம் போகட்டும்னு விட்ருக்கணும் நான். என்னென்ன நடந்திடுச்சு நமக்கு…” என சொல்லி பெருமூச்சு விட்டவன், “பெத்த கடனா இருக்கட்டும், வீட்டு விஷயத்துல நான் தலையிட்டுக்க மாட்டேன் தேனு”என்றான்.
பெற்ற கடன் எனும் வார்த்தையை அவன் உபயோகித்ததே எத்தனை மன துயரத்தில் இருக்கிறான் என்பதை அவளுக்கு புரிய வைத்தது. ஆனந்தின் இயல்புக்கு இன்று அம்மாவிடம் இவ்வளவு இவன் பேசியதே அதிகம்தான். வீட்டு விஷயத்தில் இனி தானும் தலையிட்டுக் கொள்ளப் போவதில்லை என முடிவு செய்து கொண்டாள் அவள்.
அவளது கையை இறுகப் பிடித்துக் கொண்டான்.
“எல்லாரும் என்னை ஏமாளி ஏமாளி ஏமாளின்னு சொல்லிட்டே இருக்கீங்கல்ல? ஏமாறலை தேனு நான். எல்லாமே தெரிஞ்சேதான் செஞ்சேன், அம்மா கேட்டு எதையும் மறுக்க முடியலை என்னால, பெத்தவங்க கேட்டு செய்யாம போனா பாவம்னு எனக்குள்ள பதிஞ்சி போயிருக்கு போல. எல்லாத்துக்கும் ஆரம்பம் இருக்கிறது போல முடிவுன்னு இருக்கும், இந்த வீட்டோட முடிச்சிக்கிறேன் தேனு நான்” என்றான்.
கணவனின் மனம் கலங்கிய இந்த பேச்சு அவளையும் கலங்க வைத்தது.
சில நிமிடங்களுக்கு பின், “உனக்கும் தருணுக்கும் நல்ல ஃப்யூச்சர் அமைச்சு தருவேன் தேனு, நம்புறியா என்னை?” எனக் கேட்டான்.
“நீங்க எதுவும் அமைச்சு தர வேணாம், நான் உங்க கூடவே இருக்கேனே, நாம சேர்ந்து நல்லா வாழ்வோம். நமக்கு நல்ல எதிர்காலம் கண்டிப்பா அமையும். நீங்க தைரியமா இருங்க” என சொல்லி அவனது தோளில் சாய்ந்து கொண்டாள் தேன்.