விடியற்காலையில் ஆனந்த் சென்னை வந்தடைந்த போது தேனை தவிர மற்றவர்கள் நல்ல உறக்கத்தில் இருந்தனர். சில நாள் பிரிவுக்கு பின் இருவரும் பார்த்துக் கொண்டாலும் அந்த நேர இனிமையை தாண்டிய வருத்தமும் சங்கடமும் இருவரின் முகங்களிலுமே தெரிந்தன.
உன் அம்மாவிடம் என்ன சொல்ல போகிறாய் என்ற கேள்வி, என்ன சொல்ல வேண்டும் என்ற செய்தி, எதுவுமே இல்லை தேனின் பேச்சில். அவனும் அது பற்றி அவளிடம் எதுவும் வாய் திறக்கவில்லை.
மெல்ல மெல்ல சுந்தரிக்கும் அகிலனுக்கும் கூட அந்த நாள் விடிந்தது. ஆனந்த் என்ன சொல்வானோ என்ற பதற்றம் அவர்களிடம் துளியும் இல்லை, மாறாக அவர்களிடம் கொட்டிக் கிடந்த அலட்சியமும் திமிரும் அவர்களை குரூபமாக ஆனந்துக்கு காட்டியது.
பெரிய மகனிடம் இயல்பாக நலம் விசாரித்து, வேலை பற்றி விசாரணை செய்து விட்டு மருமகளிடம் காலை உணவாக பூரி, பொங்கல், வடை என வகை வகையாக என்ன செய்ய வேண்டும் என உத்தரவு கொடுக்க ஆரம்பித்தார் சுந்தரி.
“நேத்து நைட் ஒரு பக்கமாக படுத்திட்டேன் போல, கழுத்து வலிக்குது. இட்லியும் பொங்கலும் செய்றேன்” என்பதை அதுதான் முடிவு என்பது போல அழுத்தமாக சொல்லி நகர்ந்து விட்டாள் தேன்.
“பார்த்தியாடா இவளை, நேத்து கூட வெறும் சாம்பாரும் ரசமுமா போட்டா. இப்ப கூட எனக்கா இத்தனை வகை கேட்குறேன், இத்தனை நாள் வீட்டு சாப்பாடு இல்லாம வந்த உனக்காதத்தானே சொன்னேன்” என பெரிய மகனிடம் சொன்னார்.
“சாப்பாடு இருக்கட்டும்மா, அகிலனுக்கு கல்யாணம் முடிவு பண்ணியிருக்கியா? பையன் வீட்டு பக்கம்தான் கல்யாணம்ங்கிற வரைக்கும் முடிவு எடுத்தாச்சு போல” எனக் கேட்டான் ஆனந்த்.
“அதெல்லாம் உங்கிட்ட ஆலோசனை பண்ணாம முடிவு பண்ணுவேனா? இங்க வந்திட்டு அப்படியே உன்னை பார்க்க வரலாம்னுதான் இருந்தேன்” என இன்ஸ்டண்ட் பொய் ஒன்றை சொன்னவர், சின்ன மகனை பார்த்து, “டிக்கெட் கூட போட்டு வச்சிருக்கேன்னு சொன்னியே, சொல்லேண்டா” என இரைந்தார்.
“ஆமாம் ண்ணா, இன்னிக்கு நைட் பெங்களூரு வர்றதா இருந்தோம்” என்றான் அகிலன்.
“அப்படியா, எங்க டிக்கெட் காட்டு” என அமைதியாக கேட்டான் ஆனந்த்.
“அது… டிக்கெட் கிடைக்கல ண்ணா, என் ஃபிரெண்ட்தான் நிறைய பஸ் இருக்கும், புக் பண்ணலாம் வேணாம்னு சொன்னான்” என்றான் அகிலன்.
நம்பிவிட்டேன் என்பது போல தம்பியை கிண்டல் பார்வை பார்த்த ஆனந்த், “உன் விஷயம் என்னன்னு நீயே சொல்லு” என்றான்.
அகிலனின் நண்பனின் காதலியின் தோழியாம் ரம்யா. நண்பன் காதலியை சந்திக்க செல்லும் போது இவன் அவனுக்கு துணைக்கு செல்ல, ரம்யாவும் அவளது தோழியுடன் வருவாளாம், அப்படியே இவர்கள் இருவருக்கும் பழக்கமாகி விட்டதாம்.
“யார் வீட்டு பொண்ணு?” என ஆனந்த் கேட்க, விவரம் சொன்னான். ஆனந்துக்கு கேட்க அதிர்ச்சியாகத்தான் இருந்தது. அவனுக்கு தெரிந்தவர்தான் ரம்யாவின் அப்பா. பக்கத்து ஊரில் டிப்பார்ட்மென்ட் ஸ்டோர் வைத்திருக்கிறார், அவருக்கு பூர்வீகம் திருநெல்வேலி, ஆனால் ஆனந்தின் சிறு வயதிலேயே இந்த ஊர் பக்கம் வந்து விட்டார்.
ஆனந்தின் கூட படித்த பையனும் பக்கத்து ஊர்தான் என்பதால் அவனிடம் கேட்டால் இன்னும் கூட அவரை பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ளலாம்.
எப்படி வேலையற்ற ஒருவனுக்கு பெண்ணை கொடுக்க முன் வருகிறார் என தாடையை தடவிக் கொண்டு யோசித்தான் ஆனந்த்.
ரம்யாவுக்கு உடன் பிறப்பென ஒரே ஒரு தம்பிதானாம், இருவருக்கும் நல்ல வயது வித்தியாசம், அந்த பையன் இப்போதுதான் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறான். பெண்ணை வெளியில் கட்டி கொடுக்க விரும்பாமல் வீட்டோடு மாப்பிள்ளையாக தேடிக் கொண்டிருந்தனராம்.
ரம்யா விரும்புவனும் வீட்டோட மாப்பிள்ளையாக வர தயாராக இருப்பதால் உடனே சம்மதித்து விட்டனராம்.
திருமணத்துக்கு பிறகு டிப்பார்ட்மென்ட் ஸ்டோர் இவனது பொறுப்புக்கு வந்து விடுமாம், ரம்யாவின் பெற்றோர் எவ்வளவு காலம் உயிரோடு இருக்க போகிறார்கள், பின் அங்கு எல்லாம் அகிலனின் வசம் என்றாகி விடுமாம், இத்தனை நாட்கள் வேலை அமையாமல் போனது கூட இப்படியொரு ராஜயோகம் கிடைக்கத்தானாம். இதெல்லாம் சுந்தரியின் டாம்பீக பேச்சு.
“உனக்குன்னு வேலையில்லாம மாமனார் வீட்ல போய்… சேச்ச, அசிங்க பட போறடா நீ! என்ன ஏதுன்னு விசாரிக்கனும். முதல்ல நல்ல வேலைக்கு ஏற்பாடு பண்ணிக்க, கல்யாணம் அடுத்த வருஷம் போல…”
“பொறாமைல பேசுறியா ண்ணா நீ?” ஆனந்தை பேச விடாமல் குறுக்கிட்டான் அகிலன்.
“எனக்கென்னடா பொறாமை இதுல, உன் நல்லதுக்காக சொன்னா இப்படி பேசுற? எத நம்பி உனக்கு பொண்ணு கொடுக்கிறார் அவர், என்னவோ இருக்குடா, பொறுமையா இரு” என்றான் ஆனந்த்.
சுந்தரியும் பெரிய மகனின் பேச்சுக்கு கண்டனம் சொன்னார், அகிலன் இந்த திருமணம் நடந்தே தீரும் என அடமாக சொன்னான். பேச்சுக்களை கேட்டுக் கொண்டிருந்தாலும் தலையிடவே இல்லை தேன்.
உறுதியாக பேச வேண்டிய நேரத்திலேயே பேசியிராத ஆனந்த்தின் பேச்சு இப்போது தம்பியின் திருமண விஷயத்திலா எடுபட போகிறது. உங்கள் இஷ்டம் என விட்டு விட்டான்.
“சேர்ந்தா போல பத்து நாள் உனக்கு எப்ப லீவ் எடுக்க முடியும்னு சொல்லு, அத ஒட்டியே நாள் வச்சுக்கலாம்” என்றார் சுந்தரி.
“ஆறு மாசத்துக்கு அவ்ளோ லீவ் எடுக்கவே முடியாது. அதுக்கப்புறம் கூட மெடிக்கல் எமர்ஜென்சி தவிர வேற எதுக்கும் லீவ் கிடைக்காது. பத்திரிகை வைக்க அலைய கொள்ள சனி ஞாயிறு வர்றேன், கல்யாணம் கூட வீக் எண்ட்ல வைக்க பாரும்மா, அப்போதான் மூணு நாள் போலயாவது ஊர்ல இருக்க முடியும் என்னால” என்றான் ஆனந்த்.
இந்தளவு அவன் பேசியதே மகன் தன் பேச்சுக்கு சம்மதிப்பான் என்ற தைரியத்தை அவருக்கு கொடுத்தது.
“அதுக்கென்னடா ஞாயித்துகிழமையா பார்த்தே தேதி குறிக்கிறேன். பத்திரிகை வைக்க கூட நீ ஏன் அலையனும், நான் பார்த்துக்கிறேன். பணத்த மட்டும் ஒரு வாரத்துல கொடுத்திடு” என்றார் சுந்தரி.
“என்ன பணம்மா, மாச செலவுக்கா? இந்த மாச சம்பளம் வாங்கினதும் பத்தாயிரம் அப்பாவோட கணக்குக்கு அனுப்பி வச்சிடுறேன்” என்றான் ஆனந்த்.
“விளையாடுறியாடா, உன் தம்பி கல்யாண செலவுக்கு வேணும்” என்றார் சுந்தரி.
“என் கல்யாண செலவு முழுக்க முழுக்க என்னோடது மட்டும்தான் மா” என்றான் ஆனந்த்.
“என்னண்ணா… என் கல்யாணம் என் செலவுல செய்யலைன்னு என்னை குத்தி காட்டுறியா? நான் வேலை தேடிட்டுதான் இருந்தேன் எதுவும் சரியா அமையலை. நான் என்ன செய்யட்டும்? பிஸ்னஸ்னா லாஸ் இல்லாம இருக்காது,ஏதோ ஒன்னு ரெண்டு தொழில் சரியா வரலைன்னு இனிமே எனக்கு பணமே தர மாட்டேன்னு சொல்லிட்ட நீ, இப்ப கூட இந்த கல்யாணத்துக்கு ஏன் அவசர படுறேன்னா அத வச்சு செட்டில் ஆகத்தான். நீ செய்வேங்கிற நம்பிக்கைல கேட்கிறேன் ண்ணா, எனக்கு கல்யாணம் மட்டும் பண்ணி வை, அப்புறம் எதுக்காகவும் உன்கிட்ட வந்து நிக்க மாட்டேன்” என்றான் அகிலன்.
எப்படி இவனால் இப்படி வெட்கமே இல்லாமல் பேச முடிகிறது என உள்ளுக்குள் எரிச்சல் பட்டுக் கொண்டாள் தேன்.
சுந்தரியும் நீதான் செய்து வைக்க வேண்டும் என பல விதமாக அவனுக்கு அழுத்தம் கொடுத்தார்.
இருவரின் பேச்சுக்களையும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த கணவன் மீது தேனுக்கு வண்டி வண்டியாக கோவம் வந்தது. தருண் எழுந்து கொள்ள, கணவன் பக்கமே திரும்பாமல் அவனை கடந்து அறைக்கு சென்றவள் மகனை கவனிக்க ஆரம்பித்தாள்.
தன்னால் எந்த செலவும் செய்ய முடியாது, என்னை நம்பி கடனாக வாங்கினாலும் நான் பொறுப்பேற்க முடியாது என அமைதியாகவே சொன்னவன், அண்ணன் எனும் பொறுப்பிலிருந்து நழுவாமல் இரண்டு மாதங்களுக்குள் அகிலனுக்கு நல்ல வேலை வாங்கித் தருவதாக சொன்னான்.
தான் முதலாளியாவது பொறுக்க முடியாமல்தான், வேலை வாங்கி தருவதாக சொல்வதாக குற்றம் சொன்னான் அகிலன்.
வேலை பற்றிய பேச்சே வேண்டாம் என தீர்மானமாக சொன்ன சுந்தரி, பணத்துக்கு வழி கேட்டார். முந்தைய நாள் இரவு மருமகளிடம் சொன்னது போலவே வைரத் தோடெல்லாம் கொடுத்து உதவினேன், வீட்டின் பங்கை விட்டுத் தருகிறேன் என பேரம் பேசினார்.
ஹாலின் மூலையில் இருந்தது ஆனந்த் பெங்களூருலிருந்து எடுத்து வந்த பை. எழுந்து சென்று பையிலிருந்து காகிதம் ஒன்றை எடுத்தான். அம்மாவின் கையில் கொடுத்து படிக்கும் படி சொன்னான்.
ஆனந்த் வேலைக்கு சென்ற பிறகு, பெற்றோர் வாங்கிய கடனை அடைத்தது, இடம் வாங்கியது, வீடு கட்டியது, தம்பியின் படிப்புக்கு, அக்காவின் புகுந்த வீட்டு விஷேஷங்களுக்கு என அவன் செய்த பெரிய செலவுகள் அனைத்தையும் பட்டியல் போட்டிருந்தான். இறுதியாக அடமானம் வைத்த வீட்டுப் பத்திரத்தை மீட்டதற்காக ஆகியிருந்த செலவுத் தொகை பார்த்து சுந்தரியே அனிச்சையாக நெஞ்சில் கை வைத்துக்கொண்டார்.
எல்லாமே பெரிய செலவுகள் மட்டும்தான், மற்ற சின்ன சின்ன செலவுகளை எழுதினால் அது கூட மிகப்பெரிய தொகையாக உருவெடுத்திருக்கும்.
“இது நேத்து நைட் எழுதி வச்சேன், எழுதும் போதே இதெல்லாம் எழுதி வச்சு சொல்லி காட்டணுமான்னு அவ்ளோ அசிங்கமா இருந்துச்சும்மா. இத வெளில எடுக்கிற நிலைமை வராமலேயே உங்களுக்கு என் நிலைமையை புரிய வச்சிடலாம்னு நினைச்சேன். நீ கேட்டு எதம்மா செய்யாம இருந்திருக்கேன்? எத்தனை செஞ்சும் இன்னும் நான் பணம் காய்க்கிற மரமா மட்டும்தான் இருக்கேன்ல உன் பார்வைல?” ஆனந்தின் விழிகளில் அத்தனை வேதனை.
“நான் இல்லாத நேரம் பார்த்து தேனுகிட்ட நகை கேட்குற. அது நான் பண்ணி போட்டது கூட இல்லம்மா, அவ பொறந்த வீட்ல செஞ்சு போட்டது. அவளை கட்டின புருஷனா இருந்தும் அந்த நகைல கை வச்சிட்டோமேன்னு அத நினைச்சாலே நெஞ்சு பதறுது எனக்கு. எந்த உரிமைலம்மா அவ நகையை கேட்ட நீ?” எனக் கேட்டவனின் குரலில் அத்தனை வெறுப்பு.