சுந்தரி மற்றும் அகிலனின் திடீர் வருகையை எதிர்பார்த்திருக்கவில்லை தேன். வந்தவர்களை வரவேற்று உபசரித்து விட்டு, “என்ன அத்தை எதுவும் விஷயமா?” எனக் கேட்டாள்.
“ஏன் ஏதும் விஷயம் இருந்தாதான் நாங்க இங்க வரணுமோ? எம்பையன் வீடு, அவன் வேலையில்லாம நின்னப்ப விட்டுட்டு ஓடிப் போகாம கூட நின்னவங்க நாங்க, எப்ப வேணா வர உரிமை இருக்கு எங்களுக்கு” என்றார் சுந்தரி.
அம்மா பேசுவதை காதில் வாங்கிக் கொண்டே அலைபேசியில் கண்ணை வைத்திருந்த அகிலன், குரலை செருமி எதுவோ சிக்னல் கொடுத்தான்.
மாமியார் பேசியதில் பாதிப்படையாமல் அலட்சியமாக பார்த்து நின்றாள் தேன். அதில் எரிச்சல் கொண்ட சுந்தரி மகனின் எச்சரிக்கையையும் மீறி, “என்னடி பார்வை இது? உண்மையைதானே சொன்னேன் நான்?” என்றார்.
“அப்படி அவருக்கு வேலையில்லாம போக காரணமானவங்க யாருன்னு தெரியுமா உங்களுக்கு?” என அகிலனை பார்த்துக் கொண்டே சாதாரண குரலில் கேட்டாள்.
“எல்லாம் அவனோட நேரம்தான் காரணம்” என வெடுக் என சொன்னார்.
“ஓ… எப்பதான் அவருக்கு நல்ல நேரம் வருமோ” என சொல்லி சமையலறை சென்று விட்டாள் தேன்.
“என்னம்மா இது, உன்கிட்ட என்ன சொல்லி கூட்டிட்டு வந்தா என்ன பண்ணிட்டு இருக்க? இப்படி பேசினா நீ சொல்றதுக்கு எப்படி ஒத்துப்பாங்க, அடிச்சி தொறத்தி விட்ர மாட்டாங்களா?” அம்மாவை கடிந்து கொண்டான் அகிலன்.
“ம்ம்… தொறத்துவா தொறத்துவா. என் பையன் வீடு இது”
“போதும்மா, வந்த வேலை ஒழுங்கா முடியுணும்னா நல்லா பாசமா பேசணும் புரியுதா?” என அகிலன் கேட்கவும், நன்றாக தலையாட்டிக் கொண்டார்.
ஆனந்துக்கு புதிய வேலை, புதிய இடம் என்பதால் இன்னும் அங்கு பொருந்தாமல் சற்றே சிரமப் படுகிறான். ஆகவே அவனுக்கு பதற்றம் தர மனமின்றி மாமியாரின் வருகை பற்றியெல்லாம் எதுவும் தகவல் சொல்லவில்லை தேன்.
சுந்தரிக்கும் மருமகளிடம்தான் காரியம் ஆக வேண்டும், ஆகவே பெரிய மகனுக்கு அழைக்கவே இல்லை.
வழக்கம் போல காலையிலேயே மதிய சமையலையும் முடித்து, மகனை தயார் செய்து விட்டு தானும் தயாரானாள் தேன். பாட்டி அழைத்தும் அவரிடம் செல்லாத பேரனை வலுக்கட்டாயமாக இழுத்து வைத்து கொஞ்சினார் சுந்தரி. ஒட்டிக் கொள்ளாமல் அவரிடமிருந்து விடு படுவதிலேயே குறியாக இருந்தான் தருண்.
வகை வகையாக சாக்லேட்கள் எடுத்து நீட்டினான் அகிலன். குழந்தையும் வாங்கிக் கொள்ள, தடை சொல்லவில்லை தேன்.
அண்ணன் மகனுக்கு ஆசையாக ஐந்து பைசாவுக்கு கூட செய்திராதவன் இப்போது நூறு ரூபாய்க்கும் மேல் செலவு செய்திருப்பதில் என்னவோ இருக்கிறது என மட்டும் புரிந்து கொண்டாள் தேன்.
இன்று வேலைக்கு செல்ல வேண்டாம், வீட்டிலேயே இரு என்றார் சுந்தரி.
என்ன திட்டத்துடன் மாமியார் வந்திருக்கிறார் என அவளுக்கு தெரியவில்லை, தெரிந்து கொள்ளும் குறு குறுப்பு இருந்ததுதான். ஆனாலும் விடுப்பு எடுத்து பகல் முழுக்க இவரை சமாளிப்பதை காட்டிலும் மாலையாகி விட்டால் இவருடன் இருக்கும் நேரம் குறையுமே என நினைத்தவள், “இன்னிக்கு வேறொரு பொண்ணும் லீவ் அத்தை, நான் போயே ஆகணும்”என்றாள்.
“ஆமாம் பொல்லாத கலெக்டர் உத்தியோகம்!”என்றவர் உடனே குழைந்து சிரித்து, “நீ போறதுன்னா போ, தருணை என்கிட்ட விடு” என்றார்.
தேனுக்கு நன்றாக தெரியும், குழந்தைகளை சமாளிக்க இவருக்கு வரவே வராது. கையில் அலைபேசியை கொடுத்து விட்டு அக்கடா என அமர்ந்து கொள்வார். அகிலனை பற்றி கருத்து சொல்வதற்கு ஒன்றுமே இல்லை. இவர்களை நம்பி தருணை விட விருப்பமில்லை என்றாலும் வெளிப்படையாக எதுவும் சொல்ல முடியாது, அதை வைத்து அடுத்த புகார் சொல்ல ஆரம்பித்து விடுவார்.
தன் மகன் மீதுள்ள நம்பிக்கையில், “இன்னைக்கு பாட்டியோட இருக்கியாடா செல்லம்?”எனக் கேட்டாள்.
அதெல்லாம் மாட்டேன், உன்னோடுதான் வருவேன் என அடமாக குழந்தை சொல்லி விட, “நீங்க டயர்டா இருக்கீங்க அத்தை, இவன் ரொம்ப படுத்துவான், நானே அழைச்சிட்டு போறேன்” என நல்ல விதமாகவே சொல்லி விட்டு புறப்பட்டு விட்டாள்.
மாலையில் வீட்டுக்கு வந்த தேன் ஏதோ ஒரு கலவரத்தை எதிர் நோக்கியே வந்தாள். அவளை ஏமாற்றாமல், வந்தவர்களுக்கு அசைவம் சமைக்காமல் இலையும் தழையுமா சமைத்து வைத்திருக்கிறாய் என கோவப்பட்டார் சுந்தரி. அகிலன் சரியாகவே சாப்பிடவில்லை என அத்தனை ஆதங்கமாக சொன்னார்.
சாப்பாடு அனைத்தும் தீர்ந்து போயிருக்க, அலைபேசியில் ரீல்ஸ் பார்த்து பார்த்து அதன் சார்ஜ் முடியவும் உறங்க ஆரம்பித்திருந்த அகிலனின் கனவில் என்ன கண்டானோ, யாரை கண்டானோ, உதடுகள் வளைய சிரித்துக் கொண்டே புரண்டு படுத்தான்.
நேரத்துக்கு வேலைக்கு செல்ல வேண்டும், யாரின் உதவியும் இன்றி இரண்டு காய், குழம்பு, ரசம், காலை உணவு எல்லாம் செய்து குழந்தையையும் பார்க்க வேண்டும். சைவம் என்றாலும் இத்தனை வகை அவள் செய்ததே பெரிய விஷயம்.
மாமியாருக்கு பதில் விளக்கம் என என்ன சொன்னாலும் பயன் பூஜ்யம் என்பதால் மகனை கவனித்து அவனை ஹாலில் விளையாட விட்டு, மாமியாருக்கு தேநீர் போட்டு வந்து தந்தாள்.
அடடா கட்டுப்பாட்டோடு இல்லாமல் இப்படி கோவப்பட்டு விட்டோமே, எப்படி இவளை சமாதானம் செய்வது என யோசித்திருந்த சுந்தரி, அவளிடம் ஏதோ பேச வேண்டும் என சொல்லி தன்னருகிலேயே அமர வைத்துக் கொண்டார்.
வினயாவின் மாமனார் இறப்பை பற்றி விசாரித்து, பொறுப்பாக அவளின் பெற்றோரின் உடல் நலம் பற்றியெல்லாம் விசாரித்தார். பின் மெல்ல மெல்ல தான் வந்த காரியம் பற்றி ஆரம்பித்தார்.
அகிலன் ஒரு பெண்ணை விரும்புகிறானாம். நல்ல வசதியான குடும்பமாம், வீட்டோடு மாப்பிள்ளையாகத்தான் வேண்டும் என எதிர்பார்த்து இருந்தார்களாம். ஆகவே வேலையில்லாத அகிலனை, அவர்களின் மகளுக்கு மணம் செய்து வைக்க அவர்களுக்கு எந்த தடையும் இல்லையாம்.
மாமியார் சொல்லும் இந்த கதையில் எத்தனை சதவீ தம் உண்மை இருக்கும் என்ற யோசனையோடே மேலே சொல்லுங்கள் என்பது போல பார்த்திருந்தாள்.
“ஆனந்த் நல்ல விவரமானவன், அவனை பத்தி எனக்கு கவலையே இல்லை, இந்த அப்புணு…சரியான அப்பாவி, அதான் அந்த கடவுள் முகம் பார்த்து இப்படி ஒரு இடத்தை இவனுக்கு கை காட்டியிருக்கார். ஹ்ம்ம்… அதுக்குன்னு நீயே கல்யாணம் பண்ணிக்கன்னு அப்படியே இவனை விட்ர முடியுமா? நம்ம வீட்டு பையனுக்கு எல்லாத்தையும் நல்ல படியா செய்றது நம்ம கடமை இல்லையா? அப்படி செய்யலைனா நமக்கு அது கவுரவமா சொல்லு” என மருமகளை வீழ்த்த வலை விரிக்க ஆரம்பித்தார்.
அப்போதே சுதாரித்து நிமிர்ந்து அமர்ந்து விட்டாள் தேன்.
அகிலனின் திருமணத்தை பையன் வீட்டு சார்பில்தான் செய்ய வேண்டுமாம், அப்போதுதான் பெண் வீட்டில் அகிலனுக்கு மதிப்பும் மரியாதையும் தருவார்களாம். பெண்ணுக்கு நிச்சயத்தின் போது அட்டிகை போட வேண்டுமாம், தாலி செயின் செய்ய வேண்டுமாம்.
“இந்த பயலுக்கு நிரக்க கல்யாணம் செஞ்சு கொடுத்திட்டேனா நிம்மதியா கண்ண மூடிடுவேன் தேனு” என சொல்லி, கண்ணீர் வராத கண்களை முந்தானையால் துடைத்துக் கொண்டார்.
இந்த நாடகத்தை பெரிய மகனிடம்தானே போட வேண்டும், ஏன் என்னிடம் இப்படி பொய் கண்ணீர் வடிக்கிறார் இவர் என குழம்பினாள் தேன்.
திருமண செலவை ஆனந்த் எப்படியும் ஏற்றுக் கொண்டு விடுவானாம். நகை விற்கும் விலைக்கு எதுவும் புதிதாக வாங்க இயலாதாம், அதற்கு மருமகள்தான் கை கொடுக்க வேண்டுமாம். அதாவது அடகில் இருக்கும் அவளின் நகைகளில் இருந்து பத்து சவரன் மட்டும் மீட்டு அகிலனுக்கு கொடுத்தால் போதுமாம்.
எப்படி இவரால் வாய் கூசாமல் துணிந்து இப்படி கேட்க முடிகிறது எனும் அதிர்வோடு பார்த்தாள் தேன்.
“என்னடா இப்படி கேட்கிறேனேன்னு நீ நினைக்க வேணாம். ஆனந்த் வேலையில்லாம இருந்தப்போ ஏதோ கஷ்டம்னு சொல்லி எனக்கு சேர வேண்டிய என் மாமியாரோட வைர தோட வித்து அவனுக்கு கொடுத்திருக்கேன். வைரம் விக்கற விலைக்கு அத பத்தி யோசிக்காம உடனே தூக்கி கொடுத்தேன். அதுக்குண்டான பணம் சல்லி பைசா எனக்கு வேணாம். ஊர்ல இருக்க வீட்ல கூட எனக்குன்னு ஒரு பங்கு இருக்கும்தானே, அத கூட உங்களுக்கு விட்டு தந்திடுறேன்” என பெருந்தன்மையாக சொன்னார் சுந்தரி.
இதற்கு மேல் பொறுமை காக்க அவளால் முடியவில்லை.
“யார் கட்டின வீட்ல யாருக்கு பங்கு தர்றீங்க நீங்க?” என கோவமாக கேட்டாள் தேன்.
ஆனந்தை அரும்பாடு பட்டு அவர்தான் படிக்க வைத்தாராம். அந்த படிப்பைக் கொண்டுதான் அவன் முன்னேறினானாம். திருமணம் செய்து கொள்வதற்கு முன் அவன் சம்பாத்தியத்தில் என்ன செய்திருந்தாலும் அது பொதுதானாம். ஆனந்துக்கு மட்டுமில்லாமல் அவனுடைய இரண்டு உடன்பிறப்புகள் மற்றும் பெற்றோருக்கும் சேர்த்து நான்கு பங்குகள் இருக்கிறதாம் அந்த வீட்டுக்கு. தடுமாற்றமே இல்லாமல் சினிமாவில் ஆரோஷமாக பேசும் வில்லன் வக்கீல் போல பேசினார் சுந்தரி.
மலைத்து விடவில்லை தேன்.
“இத்தனை நாள் அவர் ஏமாளியா இருந்திட்டதால எப்பவுமே அப்படியே இருப்பாருன்னு நினைச்சிடாதீங்க. அந்த வீடு அவரோட சுய சம்பாத்தியம், கை விட்டு போக வேண்டியதை திரும்பவும் காப்பாத்த அவர் என்னென்ன இழந்தார்னு உங்களுக்கும் நல்லாவே தெரியும்” என்றவள், “நாலு பங்காம்… நாலு பங்கு! விட்டா இவருக்கு எதுவுமே இல்லைனு கூட சொல்வாங்க போல” என வேறு பக்கம் பார்த்துக் கொண்டு சொன்னாள்.
அந்த வீடு கட்டுவதற்கு முன் நிலத்தை அம்மாவின் பெயரில் வாங்குவதாகத்தான் இருந்தான் ஆனந்த். அப்படி வாங்கினால் வங்கிக் கடன் பெறுவதில் சிக்கல் ஏற்படும் எனும் காரணத்தினால் அவனுடைய பெயர், அம்மாவின் பெயர் என இருவரின் பெயரில் சேர்த்து அந்த இடத்தை வாங்கியிருந்தான்.
அதை சுட்டிக் காட்டிய சுந்தரி, “என் பேர்லேயும் இடம் இருக்கு. என் கையெழுத்து இல்லாம அந்த வீட்ட உன் புருஷனால என்ன செஞ்சிட முடியும்? எனக்கப்புறம் எனக்கு வாரிசுன்னு அப்புணு மயிலு ரெண்டு பேருமே வருவாங்கதான். எல்லாம் தெரிஞ்சிக்கிட்டுதான் நான் பேசுறேன்” என்றார்.
“எப்ப பார்த்தாலும் மயிலு அப்புணு… ஏன் அத்தை உங்க பெரிய பையனை பத்தி யோசிக்கவே மாட்டீங்களா?” என்ன கட்டுப் படுத்தியும் தேனின் குரல் உடைந்து போனது.
“பெத்த அம்மாவுக்கு எல்லா பிள்ளையும் ஒன்னுதான். நல்லா நடக்கிற புள்ளைய பார்த்து ரசிக்கத்தான் முடியும், கீழ விழுந்து கெடக்கிறததான் கை பிடிச்சு தூக்கி விடுவா அம்மாக்காரி” என்றார்.
“அப்படி பார்த்தா கூட அந்த வீட்ட மீட்க பணம் தேவைப்பட்டப்போ, பிரச்சனைல இருந்த பூர்வீக இடத்தை நான் விக்க கேட்டேனே, ஒத்துக்கவே இல்லையேம்மா நீ. அந்த சமயம் நானும் குழியில விழுந்துதான் கிடந்தேன், எனக்கு கை கொடுத்து உதவ முன் வரலையேம்மா நீ” எனக் கேட்டான் ஆனந்த்.
அவனது குரலில் அதிர்ந்து இரு பெண்களும் திரும்பி பார்த்தனர். ஹாலில் விளையாடிக் கொண்டிருந்த தருண்தான் தேனின் அலைபேசிக்கு வந்த காணொளி அழைப்பை ஏற்று விட்டான்.
மகனிடம் காணொளி அழைப்பில் பேசிய ஆனந்த், அம்மா எங்கே என மகனிடம் கேட்க, குழந்தை இந்த அறைக்கு வந்து விட்டான். ஹாலில் கிடந்த விளையாட்டுப் பொருட்களில் எதுவோ குழந்தையை அதிகமாக ஈர்க்க, அலைபேசியை அறையிலிருந்த ஸெல்ஃபில் வைத்து விட்டு மீண்டும் ஹாலுக்கே சென்று விட்டான்.
சென்னை வீட்டில் அம்மாவை கண்ட ஆனந்த் குழம்ப, அதற்குள் அவர்களின் பேச்சு துவங்கி விட்டது. அனைத்தையும் அமைதியாக அவன் பார்த்தும் கேட்டும் இருக்க, இந்த விஷயம் அவனது அம்மாவுக்கும் மனைவிக்கும் தெரியவே இல்லை.
சுந்தரியின் அதிர்ச்சியெல்லாம் சில நொடிகள் தான். உடனே சுதாரித்து விட்டவர், அந்த வீடு எனக்குதானே கட்டித் தந்தாய், அதைத்தான் நான் சொன்னேன், உன்னை படிக்க வைக்க எத்தனை சிரம பட்டோம், சாப்பாட்டை கூட தியாகம் செய்து உன்னை படிக்க வைத்தோம், குடும்ப பொறுப்பை நீ ஏற்றுக் கொள்வாய் என எத்தனை நம்பிக்கை கொண்டிருந்தேன், நீ ஏமாற்றினால் கடவுளுக்கே பொறுக்காது, பெற்ற வயிறை குளிரச் செய் என உணர்வு ரீதியாக அவனை கார்னர் செய்தார்.
சற்று முன் அம்மா பேசிய விதத்தில் மனம் விட்டுப் போயிருந்தான் ஆனந்த். கடந்த சில மாதங்களில் பெரும் விலையையும் மன நிம்மதியையும் கொடுத்து அவன் கற்றுக் கொண்ட அனுபவ பாடம் நன்றாகவே வேலை செய்தது. ஆகவே அம்மாவின் அந்த அழுகையில் வழக்கத்திற்கு மாறாக கரைந்து போகாமல் இருந்தான்.
கணவன் என்ன சொல்ல போகிறான் என அலைபேசியின் திரையை அழுத்தமாக பார்த்திருந்தாள் தேன்.
“நாளைக்கு காலைல நான் அங்க வந்திடுவேன், அதுவரை யாரும் எதை பத்தியும் டிஸ்கஸ் பண்ணாம அமைதியா இருங்க” என்றான் ஆனந்த்.
சின்ன மகனின் திருமணத்துக்காக பெரிய மகனிடம் எப்படியும் பணத்தை பெற்று விடலாம், மருமகளிடம் நகை பெறுவதுதான் கடினம் என எண்ணியிருந்தார் சுந்தரி. ஆகவேதான் மகனும் சம்பந்தியும் இங்கு இல்லாத நேரத்தில், கணவருக்கு தெரிந்தால் கூட ஏதேனும் தடை சொல்லக் கூடும் என்பதால் அவருக்கும் தெரியாமல் சமயம் பார்த்து வந்திருந்தார்.
வீட்டின் பங்கை விட்டுத் தருகிறேன் என சொல்வதாலும் வைர தோடுகள் வேண்டாம் என்பதாலும் மருமகள் நகை தர சம்மதம் சொல்லி விடுவாள் எனவும் எண்ணியிருந்தார்.
இப்போது மகனுக்கு விஷயம் தெரிந்து போனாலும், அதனால் பாதகம் ஏதுமில்லை மருமகள் நகை தரா விட்டால் அதற்குண்டான பணத்தையும் மகனிடம் இருந்தே பெற்றுக் கொள்ள வேண்டியதுதான் என எளிதாகவே நினைத்தார் சுந்தரி.
அம்மாவின் மீதும் உடன் பிறப்புகளின் மீதும் மனக் கசப்பில் இருந்தாலும் ஆனந்தின் மிகப்பெரிய பலவீனம் யாரிடமும் எதற்கும் அடித்து பேசத் தெரியாமல் அமைதியை கடைபிடிப்பதுதான். ஆதலால் அவன் அவனது அம்மாவின் கண்ணீர் வலையில் சிக்கி விடாமல் நீந்தி தப்பிப்பானா என்பது பெரிய கேள்விக் குறிதான். அப்படி ஏதேனும் அதிசயம் நிகழ்ந்தால் ஆச்சர்யக் குறியே.
அடுத்த நாள் என்னாகும் என்ற புதிரோடே அன்றைய இரவு நகரத் தொடங்கியது.