தெரிந்தோ தெரியாமலோ, அச்சுதனே ஒரு கண்ணாமூச்சி ஆட்டத்தை தொடங்கி வைத்துவிட்டான். ஆட்டத்தின் முடிவு எப்படி இருக்கும் என்று யாருக்குத் தெரியும். ஆனால் அச்சுதனுக்கோ ‘என் எண்ணத்தை யாரும் மாற்றவே முடியாது…’ என்றவொரு அதீத நம்பிக்கை இருக்க,
அர்ச்சனாவோ ‘நடப்பது நடக்கட்டும். காலம் முடிவு செய்யும்…’ என்று அவளது நம்பிக்கையை அவளின் காதல் மீதும், காலத்தின் மீது வைத்தாள்.
இருவரும் நேருக்கு நேரே பேசிக்கொள்ளவில்லை. மேலும் ஒருமாதம் கடந்து விட்டது. அச்சுதனும் அர்ச்சனாவும் தினமும் சந்தித்துக்கொள்கிறார்கள். ஆனால் பேசுவது இல்லை. பேசினால் தானே பிரச்சனை என்று அச்சுதன் நினைக்க,
நீலவேணியோ “என்னையும் ஒருநாள் சைட்டுக்கு கூட்டிட்டு போயேன்…” என்றார் மகனிடம்.
“போலாம் ம்மா…” என்றவன், சொன்னது போலவே அம்மாவினை ஒருமுறை அழைத்துக்கொண்டும் செல்ல, கார் ஏறியதுமே நீலவேணி அர்ச்சனாவிற்கு அழைத்தார்.
“அதுக்கென்ன அத்தை வாங்க..” என்றவள் எதையும் வெளிக்காட்டவில்லை.
அத்தனை ஏன் நேரில் நிற்கையில் கூட அவள் எதுவும் வெளிக்காட்டவில்லை. ஆனால் நீலவேணியோ ஒரே பார்வையில் கண்டுவிட்டார் இருவரும் பேசுவதில்லை போல என்பதனை.
“உள்ள போய் சுத்தி பார்க்கலாம் தானே?” என்று அவர் கேட்க,
“பார்த்து வாங்க அத்தை..” என்றவள் அவருடன் நடக்க, அச்சுதனோ வேறு பக்கம் பார்த்துகொண்டு இருக்க,
“என்னாச்சு அர்ச்சனா?” என்றார் நீலவேணி.
“என்னது?!” என்றவள் பார்வையை சுற்றிலும் வீச,
“நான் இங்க கேட்கல.. உனக்கும் அவனுக்கும் எதுவும் சண்டையா?” என்றிட,
“இல்லையே…” என்றாள் தோள்களை குலுக்கி.
“பின்ன ரெண்டு பேரும் பேசுறது இல்லை போலவே…” என,
“பேச என்ன இருக்கு?” என்றாள் அவளும்.
“எ.. என்ன சொல்ற அர்ச்சனா?” என்று நீலவேணி திகைத்துப் போய் கேட்க,
“என்ன சொல்றதுன்னு எனக்கும் தெரியலை அத்தை. காதல் எல்லாம் தானா தானே வரணும். அது அவருக்கு வருமான்னு எல்லாம் தெரியலை. அதையும் மீறி நான் அவர எந்த வகையில டிஸ்டர்ப் பண்றேன்னு தெரியலை, பேசுறதை நிறுத்திட்டார். எனக்கு வழிய போய் எல்லாம் பேச வரலை…” என்று சொன்னவளின் குரலில் அப்படியொரு வலி தெரிய,
“இந்த கஷ்டம் உனக்கு தேவையா அர்ச்சனா?” என்றார் அவரும் மனது கேளாமல்.
“அதுவும் தெரியலை…” என்று கடினப்பட்டே புன்னகைத்தவள்,
“விடுங்க அத்தை…” என்றுசொல்லி கட்டிடத்தை சுற்றி காட்ட, நீலவேணிக்கு மனது மிகவும் சங்கடமாய் போனது.
மகனிடம் இதனை பேசியே ஆகிடவேண்டும் என்று எண்ணியவர், அச்சுதனோடு கிளம்புகையில் “அச்சுதா வீட்டுக்கே கார் விடு…” என,
“ம்மா எனக்கு பட்டறை போகணும்..” என்றான்.
“நீ வீட்டுக்கு வந்துட்டு எங்கயும் போ…” என்று அவர் சொன்ன விதமே, அவனுக்கு நெற்றியை சுருங்க வைக்க,
“என்ன விஷயம்?” என்றான்.
“வீட்டுக்கு போய் பேசிக்கலாம்…” என்றவர் வீடு வந்தபிறகு தான் வாய் திறந்தார்.
“நான் உனக்கு பொண்ணு பார்க்கலாம்னு இருக்கேன்…” என்று திட்டவட்டமாய் சொல்ல,
“ம்மா…” என்றான் அதிர்ந்து.
“ஆமா.. இனியும் பொறுத்துட்டு இருக்க முடியாது. அர்ச்சனா வேணாம்னா விடு. வேற பார்க்கலாம்…” என்று சொல்ல,
“ம்மா தேவையே இல்லாத பேச்செல்லாம் பேசுறீங்க..” என்றான் கண்களை சுறுக்கி.
“எது தேவையில்லாத பேச்சு. சொல்லுடா எது தேவையில்லாத பேச்சு? என் மகன் வாழ்க்கைக்கு முடிவு எடுக்க எனக்கு உரிமை இல்லையா?” என்று பேச,
“ம்மா உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு… ஆனா என்னோட கல்யாணம் எல்லாம் நடக்குற காரியம் இல்லை…” என்று சொல்ல,
“எதுக்கு? ஏன் நடக்காது? நான் நடத்திக் காட்டுறேன்டா.. உனக்குன்னு பிறந்தவ இருப்பா தானே.. கட்டி வைக்கிறேன்…” என்று பிடிவாதம் பிடிக்க,
“ம்மா…” என்று பல்லைக் கடித்தவன் “என்ன அர்ச்சனா எதுவும் சொல்லிவிட்டாளா?” என்றான்.
“அவ ஏன்டா சொல்லப் போறா? எதுக்கு சொல்லணும்? இல்லை அவ என்ன சொல்லனும்னு எதிர்பார்க்குற.. நானும் கூட சொன்னேன், அவன் மனசு மாறுற மாதிரி தெரியலைம்மா.. நீ ஏன் உன் வாழ்கையை வேஸ்ட் பண்ற அப்படின்னு. அதுக்கு அவ என்ன சொன்னா தெரியுமா, அச்சத்தான் என்னை கல்யாணம் பண்ணிக்கலைன்னாலும் பரவாயில்லை. அட்லீஸ்ட் அவர் லைப்ல அவர் மூவ் ஆன் ஆகட்டும்னு சொன்னா.
அப்படி ஆனாலாவது அந்த நிதர்சனத்தை ஏத்துக்கிட்டு, என்னோட மனசும் கொஞ்சம் மாற வாய்ப்பு இருக்கும்னு சொன்னா.. அவ மனசுல உன்மேல எத்தனை அன்பு வச்சிருந்தா, அவக்கிட்ட இருந்து இப்படி வார்த்தைகள் வரும்..” என்று பேச, அச்சுதன் இதை கேட்டு சில நொடிகள் வார்த்தைகள் இன்றி தான் நின்று இருந்தான்.
ஆனால் அதெல்லாம் சில நொடிகள் தான்.
என்னுடைய முடிவு இதுதான் என்பது போல் பேசும் அம்மாவை பார்த்தவன் “ஓஹோ! அப்போ.. நான் வேற பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்ட, அர்ச்சனா என்னை மறந்துடுவாளாம்மா?” என்று நக்கலாய் கேட்க,
“வேற வழி? அதுக்காக அந்த பொண்ணு சந்நியாசமா வாங்கணும்..” என்று அவரும் குத்தலாகவே கேட்க,
“ஓ! அப்போ அவ என்னை மறக்கணும்னு நினைச்சு, நீங்க எனக்கு கல்யாண ஏற்பாடு செய்யப் போறீங்க?” என்று கேட்க, அவனது கேள்வியே அவரை குழம்பச் செய்தது.
“ம்ம்.. சரி பொண்ணு பாருங்க. யார் வந்து என்னை கல்யாணம் பண்றாங்கன்னு நானும் பாக்குறேன். ஏற்கனவே பைத்தியக்காரன்னு பேச்சு. அடுத்து அசிங்கமும் பட்டு நிக்கணும்…” என,
“டேய் அச்சுதா.. உனக்கென்னடா குறை..” என்று வேகமாய் நீலவேணி அவனின் கரம் பற்ற,
“நீங்க நினைப்பீங்க. ஆனா பொண்ணு குடுக்கிறவன் ஆயிரம் கேள்வி கேட்பான். ஏன் போன வருஷம் யார்கிட்டயோ நீங்க பொண்ணு விச்சரிச்சீங்களே, என்ன சொன்னான், நான் அம்பளையா, என்னால ஒரு குழந்தைக்கு அப்பாவாக முடியுமான்னு எல்லாம் மெடிகல் டெஸ்ட் பண்ணி சர்டிபிகேட் கேட்டான். தெரியாதுன்னு நினைச்சீங்களா?” என்று சீர, நீலவேணி ஆடிப்போய் விட்டார்.
நிஜம் இதுதான். ஆனால் மகனுக்குத் தெரியாமல் வைத்திருக்க, இந்த விசயம் எப்படி அச்சுதனுக்குத் தெரியும் என்று யோசிக்க
“என்ன யோசிக்கிறீங்கம்மா? அந்த ஆளே ஒருநாள் நேரடியா கடைக்கு வந்து, நான் எப்படி வியாபாரம் செய்றேன். ஆளுங்களோட எப்படி பேசுறேன் என்ன ஏதுன்னு எல்லாம் பார்த்தான். கஸ்டமர் போலன்னு நினைச்சா, கடைசில போறப்போ தான் இதை சொன்னான். சரி தேவையில்லாம பேசி உங்களை கஷ்டப் படுத்தக் கூடாதுன்னு தான் நானும் இத்தனை நாளா வாய் மூடி இருந்தேன்…” என்று பேச,
“அ.. அச்சுதா.. அப்.. அப்படியெல்லாம் எதுவுமில்லை டா…” என்று நீலவேணி திணற,
“இங்க பாருங்க, என்னை யாருக்கும் ப்ரூப் பண்ணனும்னு அவசியம் இல்ல..” என்றவன் “இதுக்கு மேலயும் கல்யாண பேச்சு அவசியமான்னு யோசிங்க…” என,
“அட போடா.. அவன் ஒரு கிறுக்கன்.. உனக்கென்ன இப்போ, பொண்ணு கிடைச்சா, நம்மளோடது எல்லாம் தெரிஞ்சே உன்னை கல்யாணம் பண்ணிக்க சரின்னு சொன்னா உனக்கு ஒகே வா…” என்று கேட்க,
அவர் அர்ச்சனாவை மனதில் வைத்து பேசுகிறாரோ என்று எண்ணியவன் “இருங்க வர்றேன்…” என்று கிளம்ப,
‘எங்க போறான்?!’ என்று திகைத்துப் பார்த்து நீலவேணி நிற்க, அச்சுதனோ காரை கிளப்பி இருந்தான.
மனதை எத்தனை அமைதி படுத்த முயன்றாலும், அது அடங்குவேனா என்று இருக்க “எப்படி பேசி அம்மாவை திசை திருப்பி விட்டிருக்கா…” என்று கோபத்தில் அவளை கடிந்தவன், அர்ச்சனாவிற்கு அழைத்து “சைட் விட்டு வெளிய வா…” என்று சொல்ல,
“ஹா.. என்ன? என்ன சொல்றீங்க?“ என்றாள் அவள் புரியாமல்.
“உன்னத்தான்… சைட்ல இருந்து வெளிய வா.. உன்னோட பேசனும்…” என்றிட,
“என்ன பேசணும்?!” என்றாள் அர்ச்சனா தன்மையாகவே.
“பேசணும்.. வெளிய வா…” என்று கத்த.
“என்னவோ இருக்கிறது…” என்று நினைத்தவள் “ஓகே ஓகே.. டென்சன் வேணாம்…” என்றவள், அங்கிருந்தவர்களிடம் சொல்லிக்கொண்டு கிளம்பி வந்து நிற்க, அச்சுதனும் வந்தவன் “கார்ல ஏறு…“ என்று சொல்ல, எதுவும் சொல்லாமல் ஏறி அமர, அடுத்த சில நொடிகளில் கார் வேகமெடுத்து பறக்க,
“ஏன் இத்தனை வேகம்..? கொஞ்சம் ஸ்லோவா போலாம் தானே…” என்றவளை கொன்றுவிடுவது போல் முறைத்தான்.
“இங்க பாருங்க அச்சத்தான் என்மேல ஆயிரம் கோபம் இருக்கட்டும். ஆனா இத்தனை டென்சன் உங்களுக்கு நல்லது இல்லை…” என்றவளின் பேச்செல்லாம் அவனுக்கு காதில் விழவே இல்லை.
“ஆள் நடமாட்டமே இல்லாத ஒரு ஒதுக்குப்புற சாலையில் காரை நிறுத்தியவன்…”
“நீ தான் டி எனக்கு நல்லது இல்லாம எல்லாம் செய்ற…” என்று எரிந்து விழ, அவனது வார்த்தைகளில் அவள் திடுக்கிட்டு பார்க்க,
“என்ன பாக்குற? எங்கம்மாகிட்ட என்ன சொல்லி அனுப்புன?” என்றான் அடுத்து.
“எ.. என்ன?” என்று அவள் புரியாமல் பார்க்க,
“பிச்சிடுவேன் ராஸ்கல். நானும் சரி போனா போகுது, போனா போகுனுன்னு விட்டா, ரொம்ப பண்ணிட்டு இருக்க நீ. சொல்லு உன்னை நான் ஏதாவது பேசுறேனா? உன் வழிக்கு வர்றேன்னா? பின் ஏன் அர்ச்சனா நீ மட்டும் என்னை இப்படி போட்டு டார்ச்சர் பண்ற…” என்று பேச,
“அச்சத்தான்…!” என்றாள் மெதுவாய் உதடுகள் அசைத்து.
“எங்கம்மா வந்து எனக்கு பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணி வைப்பேன்னு சொல்றாங்க.. அப்போதான் நீ உன்னோட வாழ்க்கை பத்தி யோசிப்பியாம்…” என,
“ஊப்..” என்று மூச்சினை வெளிவிட்டவள் “இவ்வளோதானா?!” என்பதுபோல் பார்க்க,
“உனக்கு நக்கலா தெரியுதா?!” என்றவன்
“இங்க பாரு அர்ச்சனா, அவங்க என்ன ப்ளான் பண்றாங்கன்னு எனக்குத் தெரியாது.. ஆனா உன்மேல எனக்கு அப்படியெல்லாம் எந்தவொரு எண்ணமும் இல்லை. அரேஞ்சுடு மேரேஜா இருந்தா கூட அது நடக்காது…” என்று பேச,
உதடு கடித்து அவள் வேதனை மறைத்தவள் “நான் ஒன்னு கேட்கட்டுமா?” என்று மெதுவாகவே பேசினாள்.
எங்கே தான் சத்தமாய் பேசினால், அவனுக்கு அது மேலும் டென்சன் கூட்டும் என்று அவளோ முடிந்த அளவு தன்னை கட்டுப்பாட்டில் வைத்து பேச, அச்சுதனோ “கேட்டுத் தொலை…” என்று சொல்ல,
“உங்கம்மா உங்களுக்கு பொண்ணு பாக்குறேன்னு சொன்னா, அது நானா தான் இருக்கும்னு நினைச்சு வந்து ஏன் என்கிட்டே இப்படி சத்தம் போடுறீங்க?” என்று அவள் நிறுத்தி நிதானமாகவே கேட்க,
“ஏய்! என்ன வார்த்தையில விளையாடுறியா?“ என்றான்.
“நான் எதுலயும் விளையாடல சாமி. நான் உண்டு என் வேலையுண்டுன்னு இருக்கேன். ஆமா உங்களை லவ் பண்றேன். என்ன இப்போ? எனக்கு உங்களை பிடிச்சிருக்கு. அதுக்கு ரீசன் எல்லாம் தெரியாது அச்சத்தான். லவ் அட் பர்ஸ்ட் டைம்னு கூட சொல்லாம். மனசுக்குள்ள உங்களோட ஆயிரம் இல்லை லட்சம் இல்ல கோடிக்கும் மேல காதல் பேசிட்டு இருக்கேன்..
இதோ இப்போ உங்க முன்னாடி உக்காந்து பேசுறேன் தானே. ஆனா மனசுக்குள்ள என்னோட அச்சுதன் கூட என்னோட உலகமே வேற. சரியா. அதெல்லாம் கூடாதுன்னு யாரும் சொல்லவே முடியாது. உங்களுக்கு என்னை கல்யாணம் பண்ண பிடிக்கலைன்னா, வேற பொண்ணு பாருங்க போங்க..” என்று அசால்டாய் பேசி, கை வீச,
“என்ன டி சொன்ன?!” என்று அவளது கையை பிடித்து முறுக்கிவிட்டான்.
எங்கிருந்து தான் அவனுக்கு அப்படியொரு கோபமும், வேகமும் வந்ததோ தெரியவில்லை. மற்ற பெண்களிடம் இப்படி நடப்பவனும் இல்லையே.
“ஷ்..! என்ன பண்றீங்க?” என்று அவள் வலியில் முகம் சுறுக்க,
“என்ன சொன்ன நீ? மனசுக்குள்ள என்னோட வாழ்றியா?” என்று கேட்க,
“இந்த வார்த்தை எல்லாம் நன் சொல்லலை…” என்றாள் வேகமாய்.
அந்த நிலையிலும் கூட, அர்ச்சனாவின் சாதுர்யம் அவனை லேசாய் மெச்ச வைக்க “ச்சே…” என்று அவளின் கையை உதறியவன்
“திமிர் பிடிச்சிருக்கு. கேட்க ஆளில்லாம ஆடிட்டு இருக்க நீ. உங்க வீட்ல எப்படி தான் உன்னை வச்சு சமாளிக்கிறாங்களோ?” என்று பேச,
“ஷ்..! யப்பா..!” என்று கையை நீவியவள் “என்கிட்டே இப்படியெல்லாம் யாரும் பீகேவ் பண்ணது இல்லை. யார் குடுத்தா உங்களுக்கு இந்த ரைட்ஸ் எல்லாம்…” என்று சிவந்து போயிருந்த கரத்தினை அவன் முன்னே நீட்ட, அவனுக்கே ஒரு நொடி அவளது வெண்ணிற கரம், சிவந்து போயிருப்பதைப் பார்த்து ஒருமாதிரி இருக்க,
‘பேச்சில் சிக்காதே அச்சுதா…’ என்று தன்னை திடப் படுத்தியவன்,
“இங்க பாரு நான் யாரையும் கல்யாணம் பண்றேன்.. பண்ணல.. ஆனா நீ உன்னோட வாழ்கையை பாரு.. நான் உன்னோட லைப்ல இல்லை…” என்று சொல்லும் போதே, அச்சுதனின் அலைபேசி அலறியது.
பார்வையை அதன் மீத வீச, அழைப்பது தனுஜாவின் அப்பா என்றதுமே அச்சுதன் முகம் மாறிப்போனது.
விசயமில்லாமல் அவர் அழைப்பதே இல்லை தானே.
வேகமாய் எடுத்தவன் “சொல்லுங்க அங்கிள்…” என,
அவர் சொன்ன செய்தியில் “எ.. என்ன? எப்போ?” என்றான் திடுக்கிட்டு.
அவனது உடல் மொழியே முற்றிலும் மாறிட, அர்ச்சனாவோ என்னவோ ஏதோவென்று தான் அவனைப் பார்த்துக்கொண்டு இருந்தாள்.