அத்தியாயம் 1  

போர்கண்ட வீரனையும் சற்றே கலங்கச் செய்யும் அளவிற்கு இருந்த காரிருள் படர்ந்த நடுஜாமம். நிலவும் நட்சத்திரங்களும் இருளோடு போராட முடியாது சூல் கொண்ட மேகங்களிடையே ஒளிந்துகொண்டிருந்தது. சுற்றி சுழன்றடிக்கும் காற்று அமானுஷ்ய சத்தத்துடன்  ஓலமிட, ஓங்கி உயர்ந்திருந்த கூம்புகளில் கட்டியிருந்த பாய்களை நிறைமாத கர்பிணியின் மணிவயிற்றைப்போல  நிறைத்து, நடுக்கடலில் மதிந்து கொண்டிருக்கும் நாவாயின் வேகத்தைக் கூட்டி மிதக்கிறோமா, பறக்கிறோமா என்ற ஐயத்தை ஏற்படுத்தியிருந்தது. 

உயிரைக் கையில் கூட பிடிக்காது, அந்த சடைமுடியானின் பாதங்களில் போட்டுவிட்டு, சிவபதத்தை முணுமுணுத்தவாறே ஒரு கரிய உருவம் சிறிய மூட்டையுடன் தள்ளாடித் தள்ளாடி கப்பலின் பின்னோக்கி எதிர் காற்றில் சென்றது.  

“பேய்க்கு கூட இந்த இருளில் கண் தெரியாது. இந்த மனிதருக்கு என்ன தெரிகிறதென்று இப்படி வெறித்துப் பார்க்கிறார்? சரியான மாமிச மலை. இத்தனை காற்றுக்கும் அசராது நிற்கின்றாரே அகமுடை நம்பி!”, என்று பலவாறாக மனதுள் வியந்து புலம்பியபடி வர, 

“யாரது?”, என்ற சிம்மக் குரல் காற்றையும் மீறி ஒலித்தது. 

“நான் வல்லபன் ஐயனே. உணவும், பருக பானமும் எடுத்து வந்தேன்”, என்று அருகில் வந்து கத்தியும் அவன் குரல் மெலிதாகவே கேட்டது. 

சுக்கானை அருகில் இருந்த சிறு திண்டில் கட்டியவர், “என்ன வல்லபா எந்த போட்டியில் தோற்றாய், இந்த வேலையை உன் தலையில் கட்டியுள்ளார்கள்?”, சிறு நகைப்புடன், குடுவையிலிருந்த பனை வெல்லப் பானக நீரை அருந்தினார் அந்த நாவாயின் தண்டையல் (captain) அகமுடை நம்பி. 

“உறங்கப்போனவனை அதையும் இதையும் பேசி, வேண்டுமென்றே பந்தயத்திற்கு அழைத்துத் தோற்க வைத்து சதி செய்துவிட்டார்கள் ஐயனே. இந்த சதிக்கு என் உற்ற தோழன் என்று நினைத்திருந்தவனும் உடந்தை”, காற்றில் விழுந்து விடாமல் இருக்க இரு கைகளாலும் கிடைத்த திண்டைப் பிடித்தபடி வருத்தமும் கோபமுமாகக் கூறினான் வல்லபன். 

“இன்னும் மழை ஆரம்பிக்க வில்லையே என்று எண்ணி மகிழ் வல்லபா. இன்னும் இரண்டு நாழிகைக்குப் பின் இரண்டடி நடக்க முடியாது உன்னால்”, சோளத்தட்டையை ஒரு விள்ளல் வாயிலிட்டபடியே பேசினார் நம்பி. 

“வடதிசை பார்த்திருக்கும் மீப்பாயை திசை மாற்ற வேண்டும். ஓடுகையின் உயரத்தையும் குறைக்க வேண்டும். ஒரு  நாழிகையில் பத்து மாலுமிகளை இள மாறனை அழைத்து வரச் சொல் வல்லபா. மழை வலுப்பதற்குள் செய்து முடிக்க வேண்டும். நீ அப்போது கீழேயே இருக்கலாம். உன் நண்பன் உனக்கு நல்லதைத்தான் செய்திருக்கிறான்”, என்று விளக்கவும்  

“ஓஹ்… என் நண்பனை தவறாக நினைத்துவிட்டேனே. ஐயனே அவனிடம் எதுவும் கூறிவிடாதீர்கள். வருத்தப்படுவான்”, என்ற கோரிக்கையோடு அவரிடம் விடை பெற்று காற்று பிடறியில் கைவைத்து தள்ளாத குறையாக அவனை விரட்டிச் செல்ல, ஒட்டமும் நடையுமாக வந்தவன், கப்பல்லின் கீழ் தளத்தை அடையும் பொறிக்கதவை திறந்து பொருத்தியிருந்த படிகளின் வழியே இறங்கினான். 

சற்று குறுகலான பாதையைத் தாண்டி இடப்புறம் விரிந்தது ஓய்வறை. படுத்துக் கொண்டும், ஒரு புறம் சாய்ந்தமர்ந்தும் பேசிக்கொண்டிருந்தார்கள் அந்தக் கடலாடிகள். வல்லபனும், இளமாறனும்தான் முதல் முறையாக இந்த நீண்ட தூர பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்கள்.  இதற்கு முன்னர் அவர்கள் பார்த்த புயலைப் பற்றி ஒருவர் மாற்றி ஒருவர் சற்று உப்பு காரம் சேர்த்து சுவையூட்டி சொல்லிக்கொண்டிருந்தார்கள். 

நம்பி அனுப்பிய செய்தியை அறிவித்தவுடன் சில பல மறுப்புகள் எழுந்தன. நீ செல் , அவன் செல்லட்டும் என்று மேலே நிலைமை எப்படி இருக்கும் என்று அறிந்தவர்கள் தப்பிக்க உடனடி தலைவர்களானர்கள். 

“அமைதி! தலைவர் என்னை அழைத்து வர சொல்லியிருக்கிறார்.  நான் சொல்பவர்கள் என்னுடன் வர சித்தமாயிருங்கள்”, என்று உரத்த குரலில் கூறிய இளமாறன் கடகடவென்று பெயர்களை அறிவித்தான். 

குறை சொல்லமுடியாத தேர்வுகள். அனைவரும் திடகாத்திரமானவர்கள், அனேகர் அனுபவமிக்கவர்கள். நம்பி சொல்லியிருக்கும் வேலைக்கு தகுதியானவர்கள். இதை பார்த்துக்கொண்டிருந்த வல்லபனுக்கு தன் தோழனைக் கண்டு பெருமை தாளவில்லை. மூன்று திங்களுக்கு முன், இந்த பயணத்தை தொடங்கும் முன்னர் எத்தனை தடங்கல், பாசத் தளைகள்? 

குடும்பத்தினரின் கவலை, கண்ணீர், கோபம் எத்தனை திடமாக இருப்பவனையும் அவன் முடிவினை சந்தேகிக்க வைக்கும். தடுமாற வைக்கும் என்பதை கண்கூடாகக் கண்டான் வல்லபன். 

வல்லபன் வீட்டில் அவனை தண்ணீர் தெளித்து விட்டார்கள். அவன் இல்லாவிடினும் இன்னும் நான்கு அண்ணன் தம்பியர் இருக்க, அவன் அன்னையைத் தாண்டி வேறு யாரும் பெரிதாகக் கவலைப்படவில்லை. இளமாறனின் கதையே வேறு. 

தந்தையையும் அண்ணனையும் போரில் வாரிக் கொடுத்த குடும்பம், இளமாறனைத்தான் நம்பியிருந்தது. மணமுடித்த இரு அக்காள்கள், திருமண வயதிற்குக் காத்திருக்கும் இரு தமக்கையர் என்று அவனையே சுற்றியிருந்தது. 

இருக்கும் சொற்ப நிலத்தின் வருமானம் கைக்கும் வாய்க்கும் வரிக்கும் சரியாக இருக்க, வாழ்க்கை உழவோடே முடிந்துவிடுமோ என்று அச்சம் இளமாறனை ஆட்கொண்டது. தந்தையும் அண்ணனும் இருந்த போது, சுதந்திரப் பறவையாக சுற்றிய காலம் நினைவிலாடியது. கடல் பயண மோகம் கொண்டு, இரு முறை இலங்கைக்கும் ஒரு முறை ஸ்ரீவிஜயம் வரையிலும் சென்று வந்தான். ஒவ்வொரு முறையும் சிறிய அளவில் வாங்கி வந்த பொருள்களை வாணிபம் செய்ய அது தரும் மிகையைப் பார்த்தவனுக்கு, விவசாயம் தரும் சொற்ப வருமானம் ஆயாசத்தைக் கொடுத்தது. 

பூம்புகார் அருகே இருக்கும் யவனச்சேரியில்தான் கடலில் வரும் வணிகர்கள் தங்குவார்கள். அங்கேதான் வல்லபன் இளமாறனைப் பார்த்தது. இருவருக்குமே கடலின் மீது கொள்ளை பிரியம். வணிகர்களின் செல்வம் கண்டு அதைவிட பிரியம். சில காலமாக சீனர்களின் வரவும், அவர்கள் எடுத்துவரும் வெங்களிப் பொருட்களும் (Porcelain), அது இங்கே பெறும் வரவேற்பும் பெரிதாகக் கருத்தைக் கவர்ந்தது. 

வல்லபனுக்கு இருக்கும் ஒரே சொல்லிக்கொள்ளும் திறமை, மொழித்திறன். சில மணி நேரங்களில் அவனால் அன்னியச் சொற்களை கிரகித்துக்கொள்ள முடியும். சில வாரங்களிலேயே சீன மொழியின் அறிச்சுவடியைக் கற்றிருந்தான். அப்படித்தான் கள் குடிக்கும் ஒரு இடத்தில், சீனர்களுடன் தட்டுத் தடுமாறி பேசிக்கொண்டிருந்த இளமாறனை அவர்களிடம் ஏமாறாமல் காப்பாற்றினான். 

“நண்பா உன்னிடம் காசை வாங்கிக்கொண்டு உடைந்த பொருட்களை தலையில் கட்ட திட்டமிட்டிருக்கிறார்கள். கவனம்”, என்று கள் பானையில் தலையை விடாத குறையாக குப்புறப்படுத்துக்கொண்டு சொல்பவனை  சட்டை செய்யாது அவர்களோடு சிரித்துப் பேசி செல்பவனை முட்டாள் என்று திட்டிக்கொண்டான் வல்லபன்.  

இரண்டொரு நாழிகை கழித்து, அதே இடத்தில் அதே வேலையை தொடர்ந்துகொண்டிருந்த வல்லபனிடம் இன்னொரு பானைக் கள்ளொடு வந்து அமர்ந்தான் இளமாறன். “உன் உதவிக்கு மிக்க நன்றி நண்பா. நீ சொல்லிய குறிப்பினால்தான் நான் ஏமாறாமல் இருந்தேன். அந்தச் சீனர்கள் சரியான கயவர்கள்”, என்றவனை ஏற இறங்கப் பார்த்தான் வல்லபன். 

“நான் கூறியதை நீ கேட்டுக்கொண்டதைப்போலவே தெரியவில்லையே? ஏமாறப்போகிறாய் என்றுதான் நினைத்திருந்தேன்”, சினேக பாவத்துடனேயே கேட்டான் வல்லபன். அந்த நொடியில் தொடங்கியதுதான் அவர்களின் நட்பு. 

கள்ளின் மீது ஆணையிட்டு அன்று இரவு உற்ற உயிர் நண்பர்களான இருவருக்கும் போதை தெளிந்த மறுனாள் அவர்களின் கடல் மீதும் கடல் வாணிபம் மீதும் கொண்ட மோகம் மேலும் நட்பை இறுகச் செய்தது. 

இளமாறனின் அறிவும், வீரமும், வல்லபனின் மொழித் திறனும், எங்கேயும் எவருடனும் நட்பு கொண்டு செய்திகளை சேகரிக்கும் லாவகமும் ஒன்றிணைய திக்கற்ற இருவருக்குமே ஒரு பிடிப்பு கிடைத்தது போல இருந்தது. 

இளமாறனின் வெங்களி பொருட்களின் மீதான அபரிதமான ஆசையும் அதன் வணிகத்தில் புரளும் செல்வமும் சொல்லக் கேட்டு வல்லபனும் கவரப்பட்டான். நேர்த்தியான நீலம் மற்றும் சிகப்பு வண்ணங்களில் நுட்பமாக வரையப்பட்டிருந்த பூ, பறவைகள், மலைகள் என்று இயற்கைக் காட்சிகள் கொண்ட தட்டுகள், பூஜாடிகள், பாத்திரங்கள் என்று பல்வேறு பொருட்கள். எளிதாக உடைந்துவிடக்கூடிய தன்மை ஒன்று மட்டும்தான் சற்றே குறை. ஆனாலும்  உயர்குடிக்களுக்கு அது ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. காசை அள்ளிக்கொடுக்க சித்தமாயிருந்தனர். 

திட்டங்கள் பேச்சில் இருக்கும் வரை நன்றாகவே இருந்தது. ஆனால் பயணத்திற்கான செலவுகள், வணிகம் செய்ய இங்கிருந்து கொள்முதல் செய்யவேண்டும், அங்கிருந்து வெங்களி வாங்க ஆகும் பொருட் செலவு என்று கணக்கிட தலை சுற்றியது. 

கப்பல் பயணத்தில் வேலை செய்ய ஆட்கள் தேவை என்பதை மோப்பம் பிடித்து வந்தான் வல்லபன். இருவரும் செல்ல, அந்த பயணம் மேற்கே அரபிய கண்டத்தை நோக்கிச் செல்வதாக இருக்கவும் வெறுத்துத் திரும்பினார்கள். 

“ஆனாலும் வல்லபா, நாம் விரும்பும் திசையில் செல்லும் நாவாய்களைக் குறிவைத்து, அவர்களுக்கு தேவைப்படும் வேலைக்கு நாம் செல்ல வேண்டும். அது ஒன்றுதான் வழி”, என்று இளமாறன் கூற, 

“அது சரி மாறா, ஆனால் நாம் கொள்முதல் எதுவும் கொண்டு செல்ல முடியாதே”, என்று சந்தேகத்தை வெளியிட்டான் வல்லபன். 

“நான் யோசித்துவிட்டேனடா. முசிறிக்கு சென்று சிறப்பான முத்துக்கள் வாங்குவோம். பாதுகாப்பாக எடுத்துச் செல்ல வேண்டும் ஆனால் பொருட்களை ஏற்றிச் செல்லவேண்டி தனியாக எந்தப் பயணப்படியும் தரவேண்டியிருக்காது.” 

நண்பனின் விளக்கத்தில் உற்சாகமானான் வல்லபன்.”நன்று. நான் இதை கவனித்துக்கொள்கிறேன். நீ முத்துக்களை வாங்க ஏற்பாடு செய்”, என்று பொறுப்பை பிரித்துக்கொண்டார்கள். 

முத்துக்கள் வாங்கவும் பொற்காசுகளை தேற்ற வேண்டுமே. இல்லம் திரும்பி அன்னையிடம் கூறவும் மரகதவல்லியிடமிருந்து சிறிதும் ஒப்புதல் இல்லை.  

“மூத்தவனிடம் வேண்டாம் என்று மன்றாடினேன். என் மன்னன் மன்னன் என்று சென்றானே அவன் உயிர் நீத்ததுதான் மிச்சம். அவன் விட்டுச்சென்ற குடும்பத்திற்கு அந்த மன்னன் என்ன பொன்னும் பொருளும் தந்துவிட்டான் ? அடுத்து நீ கடலோடு செல்ல வேண்டுகிறாய். குடும்பத்து ஆண் மகனாய் பொறுப்பை சுமக்க அச்சப்பட்டு பெண்களை தனியே விட்டுச் செல்கிறாயா? போர் களத்தில் நிற்பவன் மட்டுமா வீரன்? குடும்பமும் போர் களம்தான். அதில் வெற்றி பெறுபவனும் வீரன்தான். இந்த பொறுப்பை விட்டுச் செல்வதும் புறமுதுகிட்டு ஓடுவதும் நிகர்தான் மாறா!”, நெற்றிக்கண்ணை திறக்காத குறையாக சினத்தில் பேசுபவரை என்ன சொல்லி சமாதானப்படுத்த என்று விளங்கவில்லை இளமாறனுக்கு. 

மரகதவல்லியின் பெரிய தமையன் சடையனிடம் தஞ்சமடைந்தான் இளமாறன். சிறுபிராயம் முதலே சடைமாமனிடம் தனி பிரியம். அவன் கூறிய திட்டங்களை பொறுமையாகக் கேட்டவர் பெருமூச்சுவிட்டார்.  

“உன் பாட்டனைப் போல பெரிய பெரிய கனவுகள் கொண்டிருக்கிறாய் மாறா. அவர் கனவுகள் ஊர் எல்லையை தாண்டவில்லை. என் தங்கை சொல்வதிலும் நியாயம் இருக்கிறது. உன் அத்தை மகளை மணந்து, அவள் சீரோடு உன் காணியும் சேர்த்து உழவு செய்தால், உன் அடுத்த இரு தமக்கைகளை கறையேற்றிவிடலாம் என்று உன் அன்னை விரும்புகிறாள்”, சடையன் சொல்லச் சொல்ல, குடும்பம் என்னும் சுழல் அவனை உள்ளே இழுப்பது போல இருந்தது. 

“என் பொறுப்புகளை துறக்க நினைக்கவில்லை மாமா. இரண்டு ஆண்டுகள், சீனா சென்று திரும்பிவிடுவேன். அதுவரை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள். உறுதியாக என் தமக்கைகளின் திருமணத்திற்கு வேண்டிய பொருளோடு வருவேன்”, என்று நம்பிக்கையாகக் கூறும் இளமாறனிடம் மறுக்க முடியவில்லை சடையனால்.  

“நீ வராவிட்டால் என்ன செய்ய மாறா? இப்போது உனக்குத் தேவைப்படும் பொருளுக்கு என்ன செய்யப் போகிறாய்? “, என்ற கேள்விகளுக்கு பதில் இல்லை அவனிடம். 

பத்து நாள்கள் கழித்து நண்பனைத் தேடி வந்த வல்லபன் கண்டது களையிழந்த முகத்தோடு, நிலத்தை உழுபவனைத்தான். 

“மாறா! வரும் முழு நிலவில் பயணப் பட எல்லா ஏற்பாடும் செய்துவிட்டேன்!”, என்று மலர்ந்து சொல்லும் நண்பனை நிராசையுடன் பார்த்தான் மாறன். 

கள் குவளையுடன் குடும்பக் கவலையை பகிர்ந்துகொண்டான். மறு நாள் வல்லபனுக்கும் சேர்த்து உணவை அளித்த மாறனின் அன்னை, ஒன்றும் பேசாமல் உண்ணும் மகனை கவலையாகப் பார்த்தார். சடையனுமே அவரிடம் பேசியிருந்தார். 

ஒரு பெருமூச்சுடன், “வல்லபா, அவனை அழைத்துச் செல். இந்த சில நாட்களிலேயே அவன் நடை பிணமாகத்தான் இருக்கிறான். என் தந்தையைப் பார்ப்பதைப் போன்று இருக்கிறது.  நிலவொளியில் பல  நாட்கள் இருட்டை வெறித்திருப்பார். கடமையை செய்து தன் சுயத்தை தொலைத்துவிட்டதாக என் பாட்டி கூறுவார். அந்த நிலையில் என் மகனைக் காண எனக்கு விருப்பமில்லை. சிவகடாட்சம் இருந்து நீங்கள் இருவரும் பிழைத்து வர தினந்தோறும் வேண்டிக்கொள்வதைத் தவிர வேறு என்ன செய்துவிடமுடியும் என்னால்?  பெண்ணாய் பிறப்பெடுத்துவிட்டால் சுயம் இழந்து குடும்பத்தைப் பேண வேண்டும். புண்ணியம் செய்தவர்கள் ஆண்கள். நீங்கள் செல்லுங்கள்”, என்று பேசவும் இளமாறன் விலுக்கென்று நிமிர்ந்தான். 

“இல்லை தாயே. நான் எங்கும் செல்லவில்லை”, என்றான். 

இடுப்பிலிருந்து வெள்ளியால் ஆன ஒரு மாலையை அவனிடம் நீட்டினார். “சடையன் உன் பொருள் தேவையைப் பற்றியும் சொன்னான். என் தாய் வீட்டு சீர், உன் தங்கைகளுக்காக வைத்திருந்தேன். மகன் தேவையை மறுக்க முடியுமா? எடுத்துக்கொள்”, என்ற மரகதவல்லியை மலைத்துப்போய் பார்த்திருந்தான் வல்லபன். 

கடமைக்கும் கனவுக்கும் இடையில் அல்லாடும் நண்பனை தேற்றவே சிறுபொழுதானது வல்லபனுக்கு.  சடையனும் வந்து தன் தமக்கையின் குடும்பத்தை பாதுகாப்பது தன் பொறுப்பு என்று உறுதியளிக்கவும் சங்கடத்தோடும், சற்று குற்றவுணர்ச்சியுடனும் மறு நாள் விடைபெற்றார்கள் இருவரும். 

படுத்திருந்த வல்லபனை  சட்டென உருட்டி நிகழ்வுக்குக் அழைத்து வந்தது புயல். மழையும் இப்போது காற்றோடு சேர்ந்து அவர்களின் நாவாயை தள்ளாடவிட்டிருந்தது. 

சற்று நேரத்திற்கெல்லாம்  நாலைந்து பேர் மேலிருந்து முற்றிலுமாய் நினைத்து வந்தார்கள். 

“ஆரம்பமே பேய் மழையாகப் பொழிகிறது. கடலின் சீற்றமும் அதிகமாகவிட்டது. நம்மை பாதுகாப்பாக இருக்கச் சொல்லியிருக்கிறார் நம்பி ஐயன்”, என்ற அறிவிப்போடு வந்தவன் மீண்டும் சென்றுவிட்டான்.  

மேலும் இரண்டு நாழிகையில் நிலைமை இன்னும் மோசமானது. கடல் பயணத்தில் கரை கண்ட சிலரே தம்முள் கூடிக் கூடி பேசுவதைக் கண்ட வல்லபனுக்கு பயம் தொற்றியது. மேலே சென்ற இளமாறனும் திரும்பவில்லை. 

கனவுகள் கடலுக்குள்ளேயே புதைந்துவிடுமோ?