இருளில் மூழ்கியிருக்கும் தர்ஷனின் வீட்டிற்குள் நுழைந்தாள் ஷிவன்யா. ஒரு யூகமாக அவன் அறை நோக்கிச் சென்றவள் அறைக்குள் நுழைய, திடீரென ஒரு வலிய கரம் கதவின் பின் இருந்து நீண்டு அவளின் கழுத்தை வளைத்து இறுக்கிப் பிடித்து நெரித்தது.
சற்றும் எதிர்பாராத ஷிவி திடுக்கிட்டுப் பயந்தே போனாள். தனக்கு பழக்கமான வாசனையை நாசி நுகர்ந்த போதும் மூளையில் பதியவில்லை. திடீர் செயலில் பயந்தவள், “விடு விடு” என்றபடியே வலுவுடன் விடுபடப் போராடினாள்.
இவள் குரல் வந்தவுடனே சட்டென அந்த கரத்தின் பிடி விடுபட்டு விட, மறுநொடி அறையின் மின் விளக்கு ஒளிர்ந்தது.
அதிர்வும் கோபமுமாக ஷிவி திரும்பிப் பார்க்க, சுவரோரமாக மனோகர் நின்றிருந்தான். கற்பனையில் கூட இவனை இங்கே ஷிவி எதிர்பார்க்கவில்லை.
‘இவன் இங்கிருக்க தர்ஷன் ஏன் தன்னிடம் உதவி கேட்டான்?’ என்றே யோசனையோட வெறிக்கப் பார்த்தவள், “நீ நீ என்ன இங்க?” என்றாள் அதட்டலாக.
“அதை நான் கேட்கணும். இது எங்க வீடு. திருடன் மாதிரி இருட்டுல படி பதுங்கி பதுங்கி வந்தா நான் என்ன நினைக்கட்டும்? திருட்டுப் பூனை” என மனோகரும் திமிருடன் அதிகாரமாக உரைத்தான்.
கடுகடுத்துப் போன ஷிவி விறுவிறுவென அறையில் இருந்து வெளியேறினாள். வரவேற்பு பகுதியை அடைந்தவள், தர்ஷனுக்கு அழைத்தபடி பின் விளைக்கை ஒளிர செய்தாள்.
அவன் அழைப்பை அட்டென செய்ததுமே, “ஏய் தர்ஷன் என்ன விளையாடுறீயா? இவன் இங்க இருக்கும் போது என்னை ஏன் வர வைச்ச? எதுவும் மட்டமான பிளான் போடுறீயா? தொலைச்சிடுவேன் உன்னை” அதட்டியவள் சத்தமிட்டாள்.
மனோகர் இவளை கண்ட போதும் கண்டுகொள்ளவே இல்லை. இங்கு ஷிவி குதியோ குதியென குதிக்க அங்கெ மறுமுனையில் தர்ஷன் வேடிக்கொண்டிருந்தான்.
“ஹேய் ஷிவா ப்ளீஸ் ப்ளீஸ், நான் கேட்ட ஹெல்ப்பே இதான். மனோகர் கல்யாணத்திற்கு வரமாட்டேன்னு சொல்லிட்டு அங்க இருக்கான், இங்க அவன் பாசமலர் இல்லாம கல்யாணமே நடக்காது, அவன் வந்தாதான் கல்யாணம் பண்ணிப்பேன்னு ஆர்பாட்டம் செய்றாள். எனக்கே என்னாகுமோன்னு பயமா தான் இருக்கு..இந்த பாசமலருக்கு நடுவுல மாட்டிட்டி முழிக்கிறதே எனக்கு வேலையாப் போச்சு. ப்ளீஸ் ஷிவா எப்படியாவது பேசி மனோகர் மனசை மாத்தி கூப்பிட்டு வாயேன்” வேண்ட, கடுகடுத்துப் போனவள், “ஏன்டா உங்க குடும்ப பிரச்சனைகுள்ள என்னை இழுத்து விடுற? என்னால எல்லாம் முடியாது,. நான் இப்போவே என் வீட்டுக்குக் கிளம்புறேன்” எரிச்சலோடு மொழிந்தாள்.
தர்ஷனோ விடாது, “ஷிவா இந்த உதவியை மட்டும் எனக்காகச் செய், என் கல்யாணம் நடக்குறதே உன் கையில தான் இருக்குது ஷிவா” மூச்சுவிடாது இடையில் இவளை பேசவும் விடாது கொட்டிப் புலம்பி தீர்த்தான் தர்ஷன்.
இப்படியொரு உதவியை சற்றும் எதிர்பாராத ஷிவி சோர்ந்து போய் சோஃபாவிலே விழுந்தாள்.
தனுவிற்கு அழைத்தவள் தர்ஷன் ஊட்டிய எரிச்சலை எல்லாம் அவளிடம் கொட்டினாள்.
மனோகரின் மாமா ஒருவர் உடல்நலம் முடியாமல் இருக்க, தர்ஷன் மலரின் திருமணத்தில் வைத்து மனோகருக்கு அவர் பெண்ணை நிச்சியம் செய்துவிடும் முடிவில் இருந்தனர் அவர்கள் குடும்பத்தினர். விஷயம் எப்படியோ இளசுகள் மூலம் மனோவின் காதுகளுக்கு வந்துவிட்டது. அது மட்டுமின்றி ஷிவியும் வேறு திருமணத்திற்குச் செல்வதாக இருக்க, தன்னால் அவள் வருகை தடைபடக் கூடாது என்றும் நினைத்தவன் திருமணத்திற்குச் செல்லவில்லை.
புகைப்படம் எடுக்க காடு மலை எனச் சுற்றி விட்டு நேற்றைய இரவு தான் சென்னை வந்திருந்தான். நீங்கள் முன்னே செல்லுங்கள் தான் சரியான நேரத்திற்கு வந்துவிடுவேன் என அவர்களை அனுப்பி வைத்தவன் அத்தை வீட்டிலே தங்கி விட்டான்.
ஆனால் உடன்பிறப்பு மலர்க்கு இதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. இத்தனை ஆண்டுகள் காத்திருப்பிற்குப் பின் குடும்பங்கள் கூடி நடக்கும் தன் திருமணத்தில் தம்பி மனோகர் இல்லாமல் இருப்பதா? மனம் விம்மினாள்.
எப்படியும் தன்னை விட்டுவிட மாட்டார்கள் என அறிந்த மனோகர் குடும்பத்தார் யார் அழைப்பையும் ஏற்கவில்லை.
அங்கே மலரோ மனோகர் இல்லாது திருமணமே வேண்டாமென அழுது ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தாள். இதைக் காண தர்ஷனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
அப்போது தான் ஷிவி இன்னும் கிளம்பாமல் இருப்பது நினைவிற்கு வர, அவளிடம் வேண்டினான்.
தலை கோதியபடி எழுந்த ஷிவி அறைக்கதவை தட்டிவிட்டு உள்ளே செல்ல, மனோகர் மெத்தையில் படுத்து கால் ஆட்டியபடியே அலைபேசியில் பார்வை பதித்திருந்தான்.
நீண்ட தலை முடிகளும் தாடியும் அவன் உயரத்திற்கு மேலும் முறுக்கேறி கம்பீரமாகத் தோன்றும் உடலும் அவனை மேலும் புதியவனாகக் காட்டியது. சில நொடி அவனைப் பார்த்திருந்தவள் மனோகர் நிமிர்ந்து பார்க்க, பார்வையை மாற்றினாள்.
“தர்ஷன் கல்யாணத்துக்கு போ மனோ” எப்போதும் போலே இவள் உரைக்க, “நான் ஒன்னும் உங்க ஸ்டுடியோல வேலைப்பார்க்குற பழைய மனோகர் இல்லை, என்னை நீங்க அதிகாரம் பண்ண முடியாது” சுருக்கென மிளகாயாகக் காய்ந்தான்.
எத்தனை நாட்களுக்குப் பின் மீண்டும் பார்க்கிறாள்? ஒரு வார்த்தை நலம் விசாரிப்பு இல்லை, ஒரு சிநேகப் புன்னகை இல்லை. என் காதல் சிறிது கூடவா இவளைப் பாதிக்கவில்லை? என் இருப்பும் இல்லாமையும் இவளிடம் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லையா? மனம் அங்கலாய்க விழியோ கூரா இவளை அளவிட்டது.
முகத்தில் அடித்தது போன்ற இவனின் பதலில் வெளித்தோற்றம் மட்டுமல்ல ஆளே மாறியுள்ளான் என ஷிவிக்கு நன்கு புரிந்தது.
இதெல்லாம் உனக்குத் தேவையா? புத்தி அடித்துக் கேட்க, ஏனோ மனோவை விட்டுச் செல்ல மனமின்றி நின்றாள்.
தர்ஷனுக்காக அவனின் திருமணத்திற்காக என தன்னையே சமாதானம் செய்து கொண்டாள்.
“சரி தான் நடக்குறது உன் அக்காவோட திருமணம் மனோ, நீ இல்லாமல் கல்யாணம் நடக்காது, நீ கிளம்பு” பொறுமையை இழுத்துப் பிடித்துக் கூறினாள்.
“அப்போ நீயும் வா என் கூட” மனோ அசராது அவளுக்கு வலைவிரித்தான்.
ஒரு நொடி யோசனையில் நின்றவள், “கல்யாணத்துக்கு நான் வந்துடுவேன்” ஷிவி நம்பிக்கை கொடுக்கும்படி உரைக்க, “அதான் தான் நானும் சொல்றேன், நீ எப்போ போறீயே அப்போவே நானும் உன் கூட கிளம்புறேன்” முடிவாக சொல்லிவிட்டான்.
சட்டென ஷிவியின் காதல் மனம் அவனோடு ஒரு நீண்ட பயணத்திற்கு ஆசை கொண்டுவிட, விடியலில் கிளம்பலாம் என்றுவிட்டு விடைபெற்றுக் கிளம்பினாள்.
சொன்னது போலே அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் ஷிவி அவளது காரை எடுத்துக் கொண்டு கிளம்ப, மனோரும் உடன் வந்து சேர்ந்து கொண்டான்.
சென்னையில் இருந்து திருநெல்வேலி வரை நீண்ட நெடும் பயணம் வம்பு வளர்கவோ வாதிட்டுக்கொள்ளவோ எதுவுமில்லை. தேவைக்கு சில வார்த்தைகள் பேசிக்கொண்டதை தவிர வேறு பேச்சுகளும் இல்லை. காதல் பாடல்களோடு பயணம் ரசனையாகக் கழிந்தது. இருவருக்கும் நினைவில் நிறைத்து வைத்துக்கொள்ளக் கூடிய இனிமையான பயணம் அது. ஆனா போதும் இருவரும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.
மனோகரின் சொந்த ஊரில் வந்து இறங்கிய போது அவனின் நண்பர்கள் பட்டாளம் தாண்டி, அவனின் உறவுகள் அனைவரும் கூடி தான் வரவேற்றனர்.
ஷிவிக்கு தர்ஷன் குடும்பத்தைத் தாண்டி யாரையும் தெரியாது என்பதால் தனுவோடு ஒட்டுக்கொண்டாள். ஆனா போதும் அவள் குடும்பத்தில் அனைவரும் அவளையும் இன்முகமாக வரவேற்றனர்.
ஒரு இளம்பெண்ணுடன் வந்து இறங்கவுமே சிலர் மட்டுமே அவன் காதில் ரகசியமாக யார் இவள்? இவனுக்கு என்ன உறவு? என விசாரித்துக் கொண்டனர்.
மனோகரின் குடும்பமே அவனை கொண்டாடினர். ஆச்சி, அன்னை, அத்தை, சித்தி என அனைவரும் அவனுக்குப் பிடித்ததை சமைத்து வைத்து தாங்கித் தாங்கி கவனித்தனர்.
மலராக தன்னை வந்து அறிமுகப்படுத்திக் கொள்ள, உடன் தர்ஷனும் வந்து நின்றான்.
பிரம்மாண்ட வீடும் கல்யாணத்திற்காகக் கூடியிருக்கும் சொந்த பந்தமும் மனோகரின் அந்தஸ்தைக் காட்டியது. மனோகர் இத்தனை செல்வ செழிப்பான குடும்பத்தைச் சேர்ந்தவனாக இருப்பானேன ஷிவி எதிர்பார்க்கவில்லை. அத்தனை எளிமையாக எளியவர்களோடும் சமமாகப் பழகினானே? இப்போது எண்ணி வியந்தான்.
மதிய உணவிற்குப் பின்னர் வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் இளசுகள் எல்லாம் கூடி அமர்ந்து பாட்டும் ஆட்டமுமாக கொண்டாடி மகிழ்ந்தனர். வாய்க்கால் நீரில் கால் நனைய, கரை மீது அமர்ந்திருந்த ஷிவி அந்த இயற்கை சூழ்ந்த இடமும் குளுமையும் மிகவும் பிடித்திருந்தது.
நிமிடத்திற்கு நிமிடம் சிவகாமியும் தெய்வானையும் உண்பதற்கு ஏதாவது செய்து வந்து பிள்ளைகளிடம் கொடுத்துக் கொண்டே இருந்தனர். ஷிவன்யாவையும் கவனிக்கத் தவறவில்லை அவர்கள்.
மனோகர் அங்கில்லை. அக்காவின் திருமணத்திற்கு முன் நின்று வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தான்.
“பாருங்க அத்தை என் மகன் எவ்வளவு பொறுப்பா வேலைப்பார்க்குறான்னு ரொம்பவே மாறிட்டான்” மனோகரின் அன்னை அவனைக் குறித்துப் பெருமைபட்டுக்கொண்டான்.
“என்னவோம்மா இந்த பொறுப்பு பருப்பை பார்க்கும் போது எனக்கு தான் கொஞ்சம் சந்தேகமா இருக்கு. ஒரு வேலை அவன் கல்யாணத்துக்கான அவசரமோ என்னவோ?” மலர் கண்களை சுருக்கிக் கொண்டு குறும்பாக எப்போதும் போலே கேலி செய்தாள்.
மகனை கேலி செய்ததுற்கு மகளை செல்லமாக அடிக்க வர, குறுக்கே வந்து ஆச்சி தடுக்க, மணமகளாகிய மகளை கொஞ்சிவிட்டுப் போனார் தெய்வானை.
எத்தனை அன்பான மனிதர்கள்! இப்படியொரு குடும்பம் தனக்கு ஏன் வாய்க்காமல் போனது? நெஞ்சோரம் ஏங்கினாள் ஷிவி.
இரவு உணவின் போது குடும்பம் மொத்தமும் பெரிய பந்தியில் கூடி அமர்ந்திருந்தனர். அப்போது மனோகரின் மாமா அவரின் பெண்ணை இவர்கள் வீட்டில் மணமுடித்துக் கொண்டுக்க விருப்பம் தெரிவிக்க, கதிரேசனோ அனைத்தும் இளையமகனின் விருப்பம், அவன் முடிவு என்றுவிட்டார்.
இப்போது அனைவரின் பார்வையும் ஒரு சேர மனோவின் மீது பாய, கடைவிழியால் ஷிவியை பார்த்துவிட்டு திரும்பினான்.
“என்னால உடனே சொல்ல முடியாது மாமா, யோசிக்கணும் கொஞ்சம் டைம் கொடுங்க. நாளைக்கு காலையில சொல்றேன்” என யாராலும் மறுவார்த்தை பேச முடியாதபடி முடிவாக உரைத்தான்.
விடிந்தால் திருமணம் அனைவரும் உறங்கியிருக்க, ஷிவிக்கு உறக்கம் என்பதே துளியும் வரவில்லை.
நிலவு மட்டும் தனியாக உலவும் வானை பார்த்தபடி குளுமை காற்றை தாங்க முடியாது கைகளை இறுக மார்புக்கு குறுக்காகக் கட்டியபடி நடந்து கொண்டிருந்தாள் ஷிவன்யா.
“தூங்கலையா?” என்ற குரலில் திடுக்கிட்டுத் திரும்ப, மனோகர் நின்றிருந்தான். வார்த்தையின்றி மறுப்பாக தலையசைத்தவள் நடையை நிறுத்தி அப்படியே மாடிச் சுவற்றில் சாய்ந்தபடி நின்றாள்.
அருகிலே வந்து நின்ற மனோகர், “எங்க மாமா கேட்டதுக்கு நான் என்ன பதில் சொல்லட்டும்?” இவளிடம் வினவினான்.
எங்கோ இருளில் தூரத்தெரியும் மலை முகடுகளை வெறித்த ஷிவி, “உன் முடிவு என்னவோ அதைச் சொல்லு” என்றாள் வெறுமையான குரலில். தொண்டை அடைக்கும்படி இருந்தது.
இதுநாள் வரையிலும் தன் உடமை என்ற மிதப்பில் இருக்க, கை நழுவிப் போவதை தாங்கிக்கொள்ள முடியாது கண்ணோரம் சில துளிகள் கசிந்தது ஷிவன்யாவிற்கு.
சட்டென அவளை மேலும் நெருங்கி நின்று அணைத்த மனோகர் அவள் பட்டு முகம் தொட்டு நிமிர்த்தி, “தோன்றம் மாறினாலும் நான் மாறலைங்க, நான் இன்னும் அதே மனோ தான். இப்பவுமே உங்களை நேசிக்கிற அதே உங்க மனோ தான்ங்க” என்றபடியே அவள் முன் மண்டியிட்டவன் அவள் பதில் வேண்டினான்.
இப்போதும் அவள் அழுகை பெருகியது, தன் மீது அவளுக்கும் இவ்வளவு நேசம் இருக்கும் போது ஏன் இந்த நிலை இருவருக்கும்.
“ஏங்க இன்னும் என்னை ஏத்துக்க முடியலை? ஏன் மேல நம்பிக்கை இல்லையா?”
“அப்படியில்ல மனோ, நம்ம வயசு தான் பிரச்சனை”
மீண்டும் முதலில் இருந்தா அலுத்துப் போன மனோகர், “என் ஷிவி உங்கப்பாம்மா வாழ்க்கை வைச்சு நம்ம வாழக்கையை முடிவு பண்ணாதீங்க ப்ளீஸ்” வேண்டினான்.
“ஒருவேளை உங்கம்மா நல்லவங்களா கூட இருந்திருக்கலாம், அவங்களுக்குள்ள என்ன பிரச்சனைன்னு அவங்களுக்குத் தான் தெரியும். ஊரும் உறவும் சொல்லுதுன்னு உங்க அம்மாவை நீங்களும் தப்பா நினைக்காதீங்க. கொஞ்சம் யோசிங்க, தப்பு உங்கப்பா மேல கூட இருந்திருக்கலாம் இல்லை இரண்டு பேர் மேல இல்லாம இருந்தும் அந்த பிரிவு அவங்களுக்கு தேவையான ஒன்னா இருந்திருக்கலாம் நாம தான் புரிஞ்சிக்கணும். அவங்க மேல இருக்கிற மதிப்போடு அவங்க முடிவையும் ஏத்துங்கணும்ங்க” என்றான் ஆறுதலாக.
கண்ணீரோடு தலையாட்டியவள் அவன் தோள்சாய்ந்து கண் மூட, அவள் நுதலில் இதழ் பதித்தான் அழுந்தமாக. ஒற்றை முத்தம் வழியாக தூய அன்பை உணர்ந்தவள், “தேங்க்ஸ் மனோ, என் வாழ்க்கை மொத்தத்துக்கும் இந்த ஒரு நினைவு போதும்” என்றாள் கரகரத்த குரலில்.
இத்தனை பிறகும் தன்னை அவள் ஏற்காததில் மனோகருக்கு சொல்ல முடியாத வேதனை. அதற்கு சற்றும் குறைவில்லாத வேதனை தான் ஷிவன்யாவிற்கும்.
சட்டென அவனிடமிருந்து விலகியவள் விறுவிறுவென கீழே சென்று மறைந்தாள்.