“சும்மா சொல்லாத, உன்னோட வசதியில கம்மியா இருக்க பையனுக்கு நீ ஓகே சொல்வியா என்ன?” என்றான் சரத் சந்தேகமாக. 

“ஏன் சொல்ல மாட்டேன்? எல்லாம் ஏற்கனவே ரெடிமேடா இருந்தா போர் அடிக்கும்… நானும் தான வேலைக்கு போறேன். அதனால அந்த பையன் கம்மியா சம்பாதிச்சாலும் பரவாயில்லை.”  

இப்படி கூட பொண்ணுங்க இருக்காங்களா என்பது போல சரத் இன்னுமே அவளை நம்பாமல் பார்க்க…. “சாப்பிட போகலாமா?” என அருண் கேட்டதும், மூவரும் சாப்பிட சென்றனர். 

உண்டு முடித்து அருண் கிளம்பியதும், “நான் தீபாவளிக்கு ஊருக்கு போறேன். என்னை கொஞ்சம் பஸ்ஸ்டான்ட்ல கொண்டு விடுறியா.” என ஆர்த்தி கேட்டதும், சரத் சரி என்றான். 

ஆர்த்தி அவளது வீட்டிற்கு சென்று உடமைகளை எடுத்துக் கொண்டு கிளம்பினாள். இரண்டு நாட்கள் தான். ஸ்வீட்டியை ஷ்யமளா பார்த்துக்கொள்வதாக சொல்லி இருந்தார். அதனால் பிரச்சனை இல்லை. 

அவளிடம் இருந்து பையை வாங்கி பைக்கின் முன்புறம் சரத் வைத்ததும், ஆர்த்தி பின் இருக்கையில் இரண்டு பக்கமும் கால் போட்டு உட்கார்ந்து கொண்டாள்.

“நீ இன்னைக்கு தான் ஊருக்கு போகனுமா? நாளைக்கு தீபாவளி இன்னைக்கு எவ்வளவு கூட்டம் இருக்கும்.”

“நான் ஏற்கனவே டிக்கெட் போட்டுட்டேன். அதோட பதினோரு மணிக்கு மேலதான… அதனால ரொம்ப கூட்டம் இருக்காது.”

பைக்கில் வந்ததால் இருவரும் சீக்கிரமே பேருந்து நிலையம் வந்துவிட்டனர். 

வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு, பையையும் அதன் மீது வைத்துவிட்டு இருவரும் நின்று பேசிக் கொண்டு இருந்தனர்.

“நீ அருணை பத்தி என்ன நினைக்கிற? அவனுக்கு இந்த ஜென்மத்துல கல்யாணம் ஆகுமுன்னு நினைக்கிறியா?”

“அவன் புத்திசாலி டா… அவனுக்கு தெரியுது தனக்கு எந்த மாதிரி பொண்ணு வேணுமுன்னு… கல்யாண விஷயத்துல மட்டும் இல்லை… அவன் எல்லாத்திலேயும் தெளிவு தான்.” 

“ஆமாம் கொஞ்சம் மண்டை தான் இல்ல…. நீ எதோ சொன்னியே…. அந்த லிஸ்ட்ல நான் வரமாட்டேன்.” என சரத் குறும்பாக பார்க்க…

“வருவ வருவ…” என சிரித்துக் கொண்டே சொன்னவள், “இதுக்கு முன்னாடி எனக்கு ஒரு பையனை பிடிச்சிருந்தது. வீட்ல உடனே  லூசு மாதிரி சொல்லிட்டேன். ஆனா எங்க ரெண்டு பேருக்கும் செட் ஆகலை. அவன் வேற வேலை தேடிட்டு போயிட்டான்.” 

“இப்போ வீட்ல கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்டுட்டே இருக்காங்க. லவ் கூட ஒழுங்கா பண்ண துப்பு இல்லைன்னு எப்படி சொல்றது.”

“எனக்கும் அப்படித்தான் காலேஜ் படிக்கும் போது, சின்சியரா ஒரு லவ் இருந்தது. ஆனா நான் இந்த ஜென்மத்துல செட்டிலாக  மாட்டேன்னு அந்த பொண்ணுக்கு தெரிஞ்சிடுச்சு. எனக்காக அந்த பெண்ணை எதுக்கு வெயிட் பண்ண வைக்கனுமுன்னு, நீ வீட்ல பார்க்கிற பையனையே கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்லிட்டேன். அவளும் சந்தோஷமா போயிட்டா…”

“நம்ம காதல் கதையெல்லாம் துப்புறது போல இல்லை. இதுக்கு அருண் எவ்வளவோ பரவாயில்லை. எனக்கு இந்த லவ் எல்லாம் ஒத்து வராதுன்னு புரிஞ்சு வச்சிருக்கானே…”

“அவன் எல்லாத்திலேயும் விவரம் தான் போல…” 

“சரி கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீ எதோ கேட்டியே உண்மையா தான் கேட்டியா?” ஆர்த்தி சரத்தின் முகம் பார்க்க…

“ஹே… நான் இருக்கிற நிலைமை தெரியாம… நீ வேற.” என்றான்.

“என்னடா நிலைமை? உனக்கு என்ன குறைச்சல்? என்னை பிடிக்கலைனா நீ நேரடியா சொல்லு. அதுக்காக பொய்யா ஒரு காரணம் சொல்லாத.”

“உன்னை மாதிரி ஒரு பொண்ணு கிடைச்சா… என்னைவிட ஒரு அதிர்ஷ்ட்டசாலி இருக்க முடியாது. ஆனா அப்படியும் வேண்டாமுன்னு சொல்றேனா… நீயும் புரிஞ்சிக்கோ.”

“முதல்ல இப்ப இருக்கிற நிலைமையில எப்பவும் இருப்பேன்னு நீ ஏன் நினைக்கிற?”

“எல்லாத்துக்கும் ஒரு அதிர்ஷ்டம் வேணும். என்னோட கம்மியா மார்க் எடுத்தவன் எல்லாம் பெரிய கம்பெனியில வேலை கிடைச்சு செட்டில் ஆகிட்டாங்க. ஆனா நான் ஒரு சின்ன ஸ்டார்ட் அப் கம்பெனியில தான் ஒன்டிட்டு இருக்கேன். ஏன் உன் ப்ரண்ட் சொன்ன வேலை கூட எனக்கு கிடைக்கலை.”

“ஸ்டார்ட் அப் கம்பெனியில தான் நல்லா வேலை கத்துக்க முடியும். அங்க இருந்து நல்ல பெரிய கம்பெனிக்கு மாறின எத்தனையோ பேர் இருக்காங்க. யாருக்கு எப்போ அதிர்ஷ்டம் வருமுன்னு எல்லாம் சொல்ல முடியாது. அது உனக்கும் ஒருநாள் வரும்.”

“எனக்கு நம்பிக்கை இல்லை. என்னோட சேர்ந்து நீ உன்னோட வாழ்க்கையும் கெடுத்துக்காத.”

“எனக்கு ஒன்னும் அவ்வளவு அறிவு இல்லாம இல்லை. பணம் மட்டுமே சந்தோஷத்தை முடிவு பண்ணாது. உன்கூட நான் இருக்க நேரம் சந்தோஷமா இருக்கேன். என் ப்ரண்ட்ஸ் கூட கேட்டாங்க. எதுக்கு வீட்டுக்கு போக இவ்வளவு ஆர்வமா இருக்கேன்னு. உன்கிட்ட பேசுற அந்த பத்து நிமிஷமே அவ்வளவு சந்தோஷமா. நிறைவா இருக்கும். அதை மிஸ் பண்ணிட கூடாதுன்னு நினைப்பேன்.”

“என்னோட எல்லாம் பத்து நிமிஷம் தான் இருக்க முடியும். நீ என்னோட முழு நாளும் இருந்தா என்னை வெறுத்திடுவ.”

“உன் மேல லவ்வான்னு கேட்டா எனக்கு தெரியாது. ஆனா உன்னை பிடிச்சிருக்கு. நீ நல்லா யோசி. இப்போ தானே இந்த மாதிரி நினைக்கவே ஆரம்பிச்சு இருக்கோம். கொஞ்ச நாள் போகட்டும் பார்க்கலாம்.” என்ற ஆர்த்தி விடைபெற்றுக் கொண்டாள். 

சரத் ஒருமாதிரி யோசனையிலேயே  வீட்டுக்கு வந்து சேர்ந்தான். 

“அவளுக்கு நீ என்ன வேலைக்காரனா? பஸ்ஸ்டான்ட்ல கொண்டுவிட… ஏன் அவளுக்கு ஒரு டாக்ஸி புக் பண்ணி போக தெரியாதா?” என கோமதி ஆரம்பிக்க, 

“அவ விட்டா உலகத்தையே தனியா சுத்தி வருவா… அதுக்காக இல்லை. கொஞ்சம் பேச வேண்டியது இருந்தது அதுதான்.”

“என்னவாம் அவளுக்கு.”

“ஒன்னும் இல்லை வேலை விஷயம் தான்.” என சொல்லிவிட்டு அறைக்குள் சென்றுவிட்டான்.

ஆர்த்தி மனதில் இருந்ததை சரத்திடம் பேசி விட்டாதால் தெளிவாக இருந்தாள். இரண்டு நாட்கள் அவள் தந்தையுடன் இருந்துவிட்டு சென்னை திரும்பிவிட்டாள்.

இங்கு சென்னை வந்த பிறகு அவளால் சரத்தை பார்க்க முடியவில்லை. அவள் இரவு ஒன்பது மணிப் போல ஸ்வீட்டியை அழைத்துக் கொண்டு வாக்கிங் செல்வாள். அந்த நேரம் தான் சரத்தும் இரவு உணவு உண்டுவிட்டு சிறிது நேரம் உலாவ கீழே வருவான். அப்போது தான் இருவரும் பேசிக்கொள்வார்கள். சில நேரம் பார்க்க முடியாமல் போனால்…. கைபேசியில் அழைத்து பேசிக்கொள்வதும் உண்டு. 

தன்னை தவிர்க்கிறானோ என ஆர்த்திக்கு வருத்தம் தான். ஆனால் அவளாக அவனை அழைக்கவும் இல்லை. 

அன்று அவள் நடக்கும் போது அருண் எதிரே வந்தான். அவனை பார்த்தும் ஒரு வாரமாகி இருந்தது. 

“என்ன நீங்களும் வாக்கிங்கா?” ஆர்த்தி கேட்க…

“ஆமாம் இங்க வந்து வெயிட் போட்டுட்டேன்.” என்றவன், “சரத்தை கூட அன்னைக்கு பார்த்தது தான். எப்படி இருக்கார்?” என்றான்.

“தெரியலை… வேணா கூப்பிடுங்க வருவான்.” என ஆர்த்தி சொன்னதே… கொஞ்சம் வற்புறுத்தலாக தெரிய… அவளை யோசனையாக பார்த்தபடி அருண் சரத்தை கைபேசியில் அழைத்தான்.

“சரத் எப்படி இருக்கீங்க? கீழதான் இருக்கேன் வரீங்களா.” என்றதும்,

சரத்தும் உடனே இறங்கி வந்தான்.

ஆர்த்தியை அவன் எதிர்பார்க்கவில்லை என்பதை அவன் முகமே காட்டிக்கொடுக்க….

அருணும் சரத்தும் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்த பின், “நீ எப்படி இருக்க?” என சரத் ஆர்த்தியிடம் கேட்க….

“நல்லா தான் இருக்கேன்.” என முகத்தை கடுப்பாக வைத்துக் கொண்டு சொன்னவள், “உன்னை தான் பார்க்க முடியலை.” என்றாள்.

“வேற வேலைக்காக படிச்சிட்டு இருக்கேன்.” என்றதும், அருணும் என்னவென்று விசாரித்தவன், தனக்கு தெரிந்த இடங்களில் வேலை இருந்தால் சொல்வதாக சொன்னான்.

“நான் அடுத்த வாரம் கனடா கிளம்புறேன். அப்பாவையும் அம்மாவையும் நீங்க ரெண்டு பேரும் எப்பவும் போல பார்த்துக்கணும்.”

“என்னது திரும்ப போறீங்களா… ஆன்ட்டி டென்ஷன் ஆவாங்களே…” என்றாள் ஆர்த்தி.

“இல்லை இந்த முறை நல்லத்தான் இருக்காங்க. நான் கொஞ்ச நாள்ல இங்கயே வேலை மாத்திட்டு வந்திடுவேன்.” என்றவன் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்துவிட்டு விடைபெற்று செல்ல….

“இதுக்கு தான் என்னை வர சொன்னாரா?” என சரத் ஆர்த்தியிடம் கேட்க…

“அவர் உன்னை கேட்டாரு தான். ஆனா நான்தான் உன்னை கூப்பிட சொன்னேன்.” என்றாள். 

“ஏன் நீயே கூப்பிட வேண்டியது தான…”

“நீதான் என்னை தவிர்க்கிறியே….”

“அப்படி சொல்லி என்னை கழட்டிவிட போறியா?”

“நீதான்னு நான் உறுதியா இருக்கேன் போதுமா?”

“நானும் அதுக்குதான் வேற நல்ல வேலைக்கு முயற்சி பண்றேன்.”

“அதை சொல்லிட்டு பண்ணா என்ன?”

“வேலை கிடைச்சதும் சொல்வோம்னு நினைச்சேன்.”

“இப்போ என்ன என்னை விட உனக்கு அதிகம் சம்பாதிக்கனுமா?”

“உன் சம்பளத்தை தொட எல்லாம் ரொம்ப நாள் ஆகும். அது எனக்கும் தெரியும். எனக்கு கடனை சீக்கிரம் அடைக்கணும். உங்க வீட்ல சொல்லும்போது நான் ஒரு நல்ல கம்பெனியில வேலையில  இருக்கணும் அவ்வளவு தான்.”

“ஓ அதுக்குதானா…. அது பார்த்துக்கலாம்.” என்ற ஆர்த்திக்கு இப்போது தான் மனம் நிம்மதியானது.

வீட்டிற்கு சென்ற அருண், “இந்த சரத்துக்கும் ஆர்த்திக்கும் நடுவுல என்னவோ இருக்கு.” என்றான். 

“அப்படியெல்லாம் எதுவும் இல்லை டா… நானே கேட்டிருக்கேனே…” என ஷ்யாமளா சொல்ல…

“இல்லை எதோ இருக்கு. நீங்க எதுவும் கேட்காதீங்க. அவங்களே சொல்லட்டும்.” என்றான்.

“எனக்கு ஆர்த்தியை ரொம்ப பிடிக்கும் டா அருண். கோமதிக்கு தான் கொடுத்து வச்சிருக்கு போல…” என்றார் ஷ்யாமளா ஆற்றாமையாக.

“வேணா உங்க பொண்ணா தத்து எடுத்துக்கோங்க எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை.” என்றான் அருண் சிரித்துக் கொண்டு. ஆமாம் மகளாகவும் யோசிக்கலாம் இல்ல என்றார் ஷ்யாமளாவும் மனம் நிறைவாக.