அடுத்த இரண்டு வாரங்கள் சென்று அருண் வந்துவிட்டான். வந்த முதல் இரண்டு நாட்கள் நன்றாக உறங்கி எழுந்தான். மூன்றாம் நாள் இரவு உணவின் போது…
“எதுக்கு இப்போ இவ்வளவு சின்ன வீட்டுக்கு வந்தீங்க? நம்ம வீட்டுலையே இருந்திருக்கலாமே…” என்றதும், அவனை ஒரு மாதிரி பார்த்த ஷ்யாமளா, “அவ்வளவு பெரிய வீட்ல நாங்க மட்டும் தனியா எத்தனை நாள் இருக்கிறது? அக்கம் பக்கம் இருந்தவங்களும் மாறி போயிட்டாங்க. புதுசா வந்தவங்க யார் கூடவும் பழகவும் இல்லை. அதுதான் இந்த அபார்ட்மென்ட் வந்தோம்.”
“உங்க அம்மா தான் டா ரொம்ப கஷ்ட்டப்பட்டு போயிட்டா… இங்க வந்த பிறகுதான் பரவாயில்லை.”
“வந்தது தான் வந்தீங்க பெரிய அபார்ட்மென்ட் பார்த்து போயிருக்க வேண்டியது தான… இது என்ன புறா கூண்டு மாதிரி.”
“எங்களுக்கு இது போதும். நீயும் இங்க வந்து இருக்கியா சொல்லு, வேற பார்க்கலாம்.” என ஷ்யாமளா கேட்டதும்,
“ம்ம் பார்க்கலாம்.” என்றான்.
“ஆமாம் மதியம் எதோ பூனை சத்தம் கேட்டதே, இப்போ காணோமே.” என அருண் சுற்றிலும் பார்க்க…
“அது பக்கத்து வீட்டு பூனை. ஆர்த்தி இல்லாத நேரம் பால்கனி வழியா இங்க வரும். அவ வீட்ல இருக்கும் போது இங்க எட்டி கூட பார்க்காது.”
இன்று என்றில்லை இதற்கு முன்பு கூட ஆர்த்தி பற்றி அருணிடம் ஷ்யாமளா சொல்லி இருக்கிறார். ஆனால் அவளைப் பற்றியோ அல்லது அவர்கள் வீட்டில் வேறு யார் இருக்கிறார்கள் என தெரிந்துகொள்ள அருண் ஆர்வம் காட்டியதே இல்லை. அவன் அப்படித்தான்.
இரவு உணவு உண்டுவிட்டு அருண் பால்கனிக்கு செல்ல… அப்போது எதேச்சையாக திரும்பியவன் பக்கத்து பால்கனி ஊஞ்சலில் இருந்த ஸ்வீட்டியை பார்த்தான்.
அவன் லேசாக விசில் அடித்து அதன் கவனத்தை தன்புறம் திருப்ப… தரையில் உட்கார்ந்து தனது மடிக்கணினியில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த ஆர்த்தி தலையை உயர்த்தி பார்க்க…
அப்போது தான் ஆர்த்தியை கவனித்த அருண், அவள் எதுவும் தப்பாக நினைத்துகொள்ள போகிறாள் என அவசரமாக, “சாரி… சாரி நான் உங்க பூனையை தான் கூப்பிட்டேன்.” என்றதும், ஆர்த்திக்கு சிரிப்பு வந்துவிட்டது.
“ஓகே ஓகே…” என்றாள்.
பேச்சு சத்தம் கேட்டு வெளியே வந்த ஷயாமளா, “இவன் வந்ததுல இருந்து தூங்கிட்டே இருந்தான். அதுதான் உனக்கு அறிமுகம் செய்ய முடியலை.” என சொல்லும்போதே…
“உங்களோட செல்ல பையன்.” என்றவள், “உங்க அம்மாவுக்கு எப்பவுமே உங்க புராணம் தான். உங்களை சுத்தி தான் அவங்க உலகம்.” என ஆர்த்தி சொன்னதும், அவள் எதற்கு அதை சொல்கிறாள் என அருணுக்கு புரியாமல் இல்லை.
“இவங்கதான் என்னை இந்த படிப்பு படிக்க சொன்னது. இங்க இருக்க கம்பெனியில தான் வேலைக்கு சேர்ந்தேன். ஆனா அவன் வெளிநாடு போக சொல்லிட்டான். போகலைனா வேலையை விட்டு நின்னுக்கோன்னு சொல்லுவான். இதே நான் வேலை இல்லாம இருந்தாலும் அப்பவும் இவங்க தான் புலம்புவாங்க.”
யார் என்ன நினைத்தால் என்ன என்று நினைக்கும் ரகம்தான் அருண். ஆனால் ஏனோ ஆர்த்தியிடம் விளக்கினான்.
“என்னோட தப்பு தான் டா… நான்தான் என்னை மாத்திக்கணும். இனி வர காலம் வேற மாதிரிதான். பெத்தவங்களே இனி சேர்ந்திருக்கிறது எல்லாம் சரி வராது. பிள்ளைங்க தனியா போகட்டுமுன்னு தான் நினைக்கிறாங்க.”
“நான் அங்க இருந்த போது எனக்கு வேலை அதிகம் மா… அதோட வீட்டு வேலையும் நானே பார்க்கணும். அதனால தான். அதுக்கு நீங்க இவ்வளவு எல்லாம் யோசிக்க வேண்டாம்.” என்றவன், சரி நான் உள்ள போறேன். அப்புறம் பார்க்கலாம்.” என ஆர்த்தியிடம் சொல்லிவிட்டு சென்றான்.
“நாம் யோசித்தது போல அருண் இல்லையோ…” என அப்போதே ஆர்த்திக்கு தோன்றியது. அது உண்மை என்பது போல…. அருண் வெளிநாட்டில் இருந்து வந்திருந்தாலும், இங்கே இருக்கும் போது அவன் பெற்றோரை தான் முழுவதும் சார்ந்து இருந்தான்.
இங்கே வந்தும் வீட்டில் இருந்தே வேலை பார்த்துக் கொண்டிருந்தான். வேலை பார்க்கும் நேரம் முழுவதும் அவன் அறைக்குள் தான் இருப்பான். வார இறுதியில் சில நேரம் நண்பர்களோடு வெளியே சென்றாலும், பெரும்பாலும் பெற்றோரோடும் வெளியே சென்று வந்தான். ஷ்யாமளா வரவில்லை என்றாலும் விடமாட்டான். நீங்க வீட்ல இருந்து என்ன பண்ண போறீங்க என அழைத்து செல்வான். ஆனால் அவன் பெரும்பாலும் அதிக செலவு வைக்கும் இடங்களுக்கு தான் செல்வான். வசதியான வாழ்க்கைக்கு பழக்கபட்டிருந்தான். அதிலிருந்து அவன் இறங்குவதாகவும் இல்லை.
ஆர்த்தியுமே நல்ல வசதி தான். ஆனால் அவளுக்கு அப்படி பெரிதாக செலவு செய்தால் தான் மகிழ்ச்சி என்பது இல்லை. அவளுக்கு சின்ன சின்ன விஷயங்களே சந்தோஷமாக வைத்துகொள்ள போதும்.
அடுத்த வாரத்தில் இவன் என்ன சொல்ல போகிறானோ என்ற தயக்கத்தில் தான் ஷ்யாமளா ஆரம்பித்தார்.
“அருண் உனக்கு பொண்ணு பார்க்க ஆரம்பிக்கலாமா?” என்றதும், உடனே சரி என்றுவிட்டான். உண்மையில் ஈஸ்வருக்கும் ஷ்யமளாவுக்கும் நம்ப முடியவில்லை.
அவர்கள் உடனே பரபரப்பாக, “நான் பொண்ணு கூட பேசிட்டு தான் முடிவு சொல்வேன்.” என்றான்.
“இதுல என்ன இருக்கு.” என ஷ்யாமளா சம்மதிக்க… “ஒரு தடவை பேசிட்டு எல்லாம் முடிவு சொல்ல முடியாது. ஒரு வாரமாவது பேசணும்.” என்றான்.
என்னது ஒரு வாரமா? யாரு இதுக்கு ஒத்துக்குவா? இவனுக்கு கல்யாணம் ஆனது போல தான் என ஷ்யாமளா நம்பிக்கை இழக்க… இப்போ பொண்ணுங்களே அதுதான் ஆன்ட்டி சொல்றாங்க. அதனால கிடைக்கும் பயப்படாதீங்க என ஆர்த்தி தான் நம்பிக்கையாக சொன்னாள்.
ஆர்த்திக்கு அவளது நண்பர்கள் தான் உலகம். முன்பெல்லாம் நண்பர்களோடு தான் அதிக நேரம் செலவு செய்வாள். ஆனால் இப்போது எல்லாம் வீட்டுக்கு செல்வதில் தான் அவசரம் காட்டினாள்.
“எங்களை விட உனக்கு அங்க அப்படி யாரு இருக்கா?” என சுவாதி கேட்க…
“ஸ்வீட்டிக்கு தனியா இருந்து போர் அடிச்சிடும்.” என காரணம் சொன்னாள்.
அருண் எடுத்ததும் கலகலப்பாக பேசும் ரகம் இல்லை…. சரத்தை சந்தித்த சில நேரங்களில் ஹை, ஹலோ என்பான் அவ்வளவு தான். தன்னை பற்றி குறைவாக நினைக்கிறானோ… அதுதானோ சரியாக பேசாததற்கு காரணம் என்று சரத் நினைத்திருந்தான். ஆனால் அப்படி இல்லை என அவனுக்கே சில நாட்களில் புரிந்தது.
“அவர்கள் அபார்ட்மெண்டில் தீபாவளிக்கு முதல் நாள் இரவு உணவு எல்லோருக்கும் பொதுவாக ஏற்பாடு செய்திருந்தனர். கீழே பார்க்கிங்கில் தான் பஃப்பே முறையில் ஏற்பாடு செய்திருந்தனர். அப்போது சரத்தை சந்தித்த அருண், அவனோடு நன்றாக பேசிக் கொண்டிருக்க…. ஆர்த்தியும் வந்து அவர்களோடு சேர்ந்து கொண்டாள்.
“உங்களுக்கு பொண்ணு பார்க்கிறதா எங்க அம்மா சொன்னாங்களே என்ன ஆச்சு? எதுவும் செட் ஆகலைனா சொல்லுங்க, என் கைவசம் ஒரு பொண்ணு இருக்கு.” என சரத் அருணுக்கு தெரியாமல் ஆர்த்தியிடம் உன்னை சொல்லட்டுமா என்று கேட்க…
அவன் காலை நறுக்கென மிதித்த ஆர்த்தி, “அவர் டேட்டிங் எல்லாம் போய்தான் ஒகே பண்ணுவார். உங்க அம்மாதான் பாவம் என்கிட்டே இவன் இப்படி சொல்றானே இதை போய் பொண்ணு வீட்ல சொன்னா, என்னை அடிக்க வந்துட மாட்டாங்களான்னு பயந்திட்டே கேட்டாங்க.” என சிரித்துக் கொண்டு சொன்னதும், அருணும் சரத்துமே சிரித்து விட்டனர்.
“நான் என்ன அந்த பொண்ணுங்க கூட ஊரா சுத்தனுமுன்னு சொன்னேன். போன்ல பேசணும்னு தான் சொன்னேன்.”
“போன்ல பேசினா மட்டும் அவங்க உண்மைதான் சொல்றாங்கன்னு உங்களுக்கு எப்படி தெரியும்?” என்றான் சரத்.
“போன வாரம் ஒரு பொண்ணு பார்த்தோம். அவங்க வீட்ல உடனே ஓகே சொல்லிட்டாங்க. நாங்கதான் டைம் கேட்டுட்டு வந்தோம். அந்த பொண்ணு கூட நான் பேசின போது, அந்த பொண்ணுக்கு ஒரு ஆர்வமே இல்லை. ஒரு ரெண்டு தடவை பேசின போது எனக்கு புரிஞ்சிடுச்சு… அந்த பொண்ணு அவங்க வீட்ல் கட்டாயபடுத்தினதுனால தான் ஓகே சொல்லி இருக்கு. பாருங்க அவசரப்பட்டு நிச்சயம், கல்யாணம்னு போயிருந்தா என்ன ஆகி இருக்கும்? அதனால கொஞ்ச டைம் எடுத்துக்கலாம் தப்பு இல்லை.”
“தெரியாதவங்களை கல்யாணம் பண்ணிக்கிறது ரிஸ்க் தான் போல… அதுக்கு லவ் மேரேஜ் பரவாயில்லை. நீங்க வேணா லவ் மேரேஜ் ட்ரை பண்ணலாமே…” என சரத் ஐடியா கொடுக்க….
“எனக்கு அந்த மாதிரி யார்கிட்டயும் தோணலை…” என்ற அருண், நீங்க என்று சரத்தை பார்த்து கேட்க…
“எனக்கு எல்லாம் கல்யாணம் ஆகாதுங்க.” என்றான் அவன்.
அவன் தோளில் பட்டென்று அடித்த ஆர்த்தி, “அவன் இப்படித்தான் லூசு மாதிரி உளறுவான்.” என்றதும், “நீங்க… உங்களுக்கு?” என தயங்கி அருண் ஆர்த்தியை பார்க்க…
“எனக்கு வர்ற பையன் பெரிய வேலையில இருக்கணும், நிறைய சம்பாதிக்கணும் அப்படியெல்லாம் நான் எதிர்பார்க்கலை . நல்ல பையனா இருக்கணும். என்னை வேலைக்கு போக கூடாதுன்னு எல்லாம் சொல்லக் கூடாது. இவ்வளவு தான் என் கண்டிஷன்.”