அத்தியாயம் 8

அன்று நீலாயதாட்சி மிக முக்கியமான விஷயம் பேசுவதற்காக அவனை அறைக்கு அழைத்திருந்தாள்… கரும்பு தின்னக் கூலியா…அதுவும் வழக்கமாக டாப், ஸ்கர்ட் அல்லது பேன்ட், சில நேரங்களில் மேலே அணியும் கோட் என மேல்நாட்டு பாணியில் உடை அணிந்து வருபவள் அன்று அலுவலகத்துக்குப் புடைவை உடுத்தி வந்திருந்தாள்.

கறுப்பு நிற பாந்தினி சில்க், சரிகை வேலைப்பாடுகளுடன் கூடிய குட்டைக் கை வைத்த கறுப்பு நிற ரவிக்கை, கூந்தலை மொத்தமாக அள்ளி உச்சியில் குதிரைவாலாக முடிந்திருக்க அவள் நடுமுதுகில் முடிந்திருந்தது கூந்தல். அவளின் உடைத்த பாதாம் நிறத்துக்கு அந்தக் கறுப்புப் புடைவை அட்டகாசமாக இருக்க அவனால் அவளிடமிருந்து விழிகளை அகற்ற முடியவில்லை.

கையைக் கன்னத்தில் தாங்கி அவளையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தவனைக் கண்டு பல்லைக் கடித்தவள் “மிஸ்டர் விக்னேஷ்!” எனக் கடுப்பாகக் கூற வேண்டுமென்றே திடுக்கிட்டவன் போல் நடித்து “சொல்லுங்க நீலா!” என்றான்.

“நம்ம் கம்பனில ஒரு ப்ராசசிங் யூனிட் ஸ்டார்ட் பண்ணினா என்ன?”

“ப்ராசசிங் யூனிட்டா… அது எதுக்கு? அதுதான் வேஸ்ட் எல்லாம் ப்ராப்பரா கவர்மென்ட் நாம்ஸ் ( norms ) படி அவங்க சொல்லி இருக்கிற இடத்தில் கொண்டு போய் டிஸ்போஸ் பண்றோமே”

“ஆமா பண்றோம். ஆனா அந்த யூனிட்டை நாமே ஆரம்பித்தா இப்போ இன்வெஸ்ட் பண்ற அமௌன்ட் அதிகமா இருந்தாலும் மொத்த வேஸ்ட் கொண்டு கொட்டுற ட்ரான்ஸ்போர்ட் செலவு குறையும்ல…அது மட்டுமில்லாம ப்ராஸஸ் ஆகி வர்ற தண்ணியை ரீசைக்கிள் செய்தும் பயன்படுத்தலாம்…இன்னொரு ஃபேக்டரில அப்படிப் பண்றதாக் கேள்விப்பட்டேன்”

“இன்னொரு ஃபேக்டரியா? எந்த ஃபேக்டரி?”

அவள் தன் மடிக்கணினியில் அந்தக் காணொளியைத் திறந்து கணினியை அவன்புறம் திருப்பப் போக அவனோ அவளை ‘இரு’ என்பது போல் சைகை காட்டி விட்டு அவள் பின்னால் வந்து அவள் இருக்கையில் கை வைத்து நின்றான்.

“இப்போ ப்ளே பண்ணுங்க”

அவன் திடீர் செய்கையில் கொஞ்சம் திகைத்தாலும் இது இருவரும் சேர்ந்து பார்ப்பதற்கு வசதி என்பதால் வேறு வழியில்லாமல் ப்ளே பட்டனை அழுத்தினாள்.

அவன் காணொளியைப் பார்க்க அவளுக்கோ பெரும் அவஸ்தையாக இருந்தது.

தலைக்குக் குளித்துத் தலையை முடிந்திருக்க, கழுத்துக்கடியில் கசகசவென இருந்ததால் முடியை மொத்தமாக அள்ளி முன்னுக்குப் போட்டிருக்க அவள் வெண்ணிற முதுகு மொத்தமும் அவன் பார்வைக்கு விருந்தாகிக் கொண்டிருக்க முள்ளின் மேல் அமர்ந்திருக்கும் உணர்வு அவளுக்கு…திரும்பி அவன் பார்வை எங்கே இருக்கிறது எனப் பார்க்கவும் துணியவில்லை அவள்…

இரண்டு முழு நிமிடங்கள் பிறகு காணொளி முடிய மீண்டும் அவள் முன் சென்று அமர்ந்தான் அவன்.

“இந்த ஃபேக்டரி திருப்பூர்ல இருக்கு…ப்ராசசிங் செய்த கழிவுகளை சென்னை மற்றும் திண்டுக்கல் இரண்டு இடத்துலதான் கொட்ட கவர்மென்ட் அனுமதி கொடுத்திருக்கு… அதுனால அவங்களுக்கு ட்ரான்ஸ்போர்ட் செலவு ஆகும்…ஆனா நாம சென்னை பக்கத்துலயே இருக்கிறனால நமக்கு அந்த அளவு ஆகாது…அதுவும் இப்பத்தான் கம்பனி மறுபடி சரியாகிட்டு வர்ற நிலைமைல நாற்பது கோடி ஐம்பது கோடி போட்டு ப்ராசசிங் யூனிட் அனாவசியம்…இல்லை காசு நிறைய வச்சுருக்கீங்கன்னாப் பண்ணுங்க”

கொஞ்சம் குத்தலாகச் சொல்லி அவன் முடிக்க அவள் முகம் கடுத்தது.

விக்னேஷோ ஏற்கனவே படு அவஸ்தையில் இருந்தான். கை நீட்டித் தொட்டு விடும் தூரத்தில் அவள் முதுகு இருக்க காணொளியில் மட்டுமே கவனம் வைப்பது அவனுக்குக் கடினமாகத்தான் இருந்தது…அதில் அவள் எந்த ஊரின் தொழிற்சாலை என்பதைச் சரியாகக் கவனிக்காமல் சொல்லி இருக்க அவள் மேல் ஏற்பட்ட தாபத்தை மடைமாற்றக் கோபமாக இருப்பவன் போல் காட்டிக் கொண்டான்.

அதன் பின் இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டே நேரம் கடக்க அவனோ அவளின் ஒவ்வொரு அசைவுக்கும் ‘கொல்றாளே கொல்றாளே சதிகாரி’ என மனதுள் வைது புலம்பிக் கொண்டிருந்தவன் அவள் கிளம்பி விட்டால் பின் அவளை ஆசை தீரப் பார்க்க முடியாதே என்று வெளியே அவனுக்கு வேலையிருந்தும் கிளம்பாமல் அங்கேயே சட்ட வட்டமாக அமர்ந்திருந்தான்.

அவன் பார்வை தன்னையே தொடர்வதை உணர்ந்து முதலில் முறைத்துப் பார்த்தவள் அவனைக் கிளப்ப முயற்சிப்பதில் ப்ரயோஜனமில்லை என்பதை இந்தச் சில நாட்களில் நன்றாகவே புரிந்து கொண்டிருந்ததில் அவனிடம் எதுவும் பேசாமல் தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவள் கிளம்பும் நேரம் ஆகியும் அவன் அசையாமல் அமர்ந்திருக்க அவனை ஓரக் கண்ணால் பார்த்து முறைத்துக் கொண்டே எழுந்தாளவள்.

தன் மடிக்கணினியில் எதையோ பார்ப்பது போல் பாவனை செய்து கொண்டிருந்தவன் அவள் தன்னிருக்கையில் இருந்து எழுந்திருப்பது கண்டு ‘என்ன’ என்பது போல் பார்த்தான்.

“நேரமாச்சு நான் கிளம்புறேன்” என்றவள் தன் கைப்பையை எடுத்துக் கொண்டு மேஜையின் பக்கவாட்டில் நடந்து அவனைக் கடந்து செல்ல முயல்கையில் அவன் மீதே கவனத்தை வைத்திருந்தவள் நடையில் தடுமாறிக் காலை மாற்றி வைத்ததில் புடைவை தடுக்கி விட முன்னே சாய்ந்து விழப் போனாள்.

அவளைப் போல் ஓரக்கண்ணால் அல்லாமல் கொஞ்சமும் லஜ்ஜையின்றி நேராகவே அவள் மீது விழிகளைப் பதித்திருந்தவன் நடப்பதை மின்னலின் விரைவில் உணர்ந்து கொண்டு வினாடிக்குள் எழுந்து சுழன்று அவள் பின் சென்று வலக்கையை முன்புறம் செலுத்தி அழுத்தமாக அவள் இடை பற்றி விழுந்து விடாதவாறு தாங்கி நிறுத்தினான்.

ஒற்றை மடிப்பாய்ப் பின் செய்திருந்த முந்தானையை, ‘கிளம்பப் போகிறேன்’ என்று சொல்லி எழுந்த போதே அவள் மொத்தமாக அள்ளித் தோளில் போட்டிருக்க, புடைவை மறைக்காமல் வெண்ணையின் நிறத்தில் பளீரிட்ட இடையிலும் இன்னும் கொஞ்சம் முன்வயிற்றிலும் கொஞ்சம் அழுத்தமாகக் கையைப் பதித்து அவளைத் தன்னுடன் சேர்த்து நிறுத்தியிருக்க,பெண்ணவளோ அவன் செய்கையால் சட்டென மூண்டு விட்ட கோபத்துடன் அவனிடமிருந்து திமிறி விடுபட்டதுடன் அல்லாமல் அதே வேகத்துடன் தன் வலக்கையை அவன் கன்னத்தில் இடியை இறக்கியிருந்தாள்.

தாங்கிப் பிடித்து அவள் விழுந்து விடாமல் காப்பற்றியவனுக்கு நன்றி நவில்வதற்கு பதில் கோபம் கொண்டவள்,கோபம் கொண்டது மட்டுமல்லாமல் ‘கீழ விழப் போனா இப்பிடித்தான் இடுப்புல பிடிச்சுத் தூக்குவாங்களா… எப்படா மேல கைய வைக்கலாம்னு காத்துகிட்டு இருந்துருப்பான் போல’ என மனதுள் வசைபாடியதோடு அந்தக் கோபத்தின் எதிரொலியாகச் சட்டென அவனை அடித்து விட்டாள்.

அவள் செய்கையில் ஒரு கணம் அதிர்ந்த அவன் விழிகள் அதே வேகத்தில் ஆத்திரத்தைத் தத்தெடுத்தன.

சட்டென அவளைத் தன்னருகே இழுத்து சேர்த்துப் பிடித்தவன் அவளையும் இழுத்துக் கொண்டே கதவருகே சென்றான்.

“ஹேய்! என்ன செய்றீங்க… விடுங்க!” எனத் திமிறியவளைக் கொஞ்சமும் பொருட்படுத்தாது கதவருகே இருந்த சுவரில் சாய்த்து நிறுத்தியவன் வலது கையாலும் உடலாலும் அவளை சுவருடன் அசைய முடியாதபடி பிடித்துக் கொண்டு இடது கையுயர்த்திக் கதவின் மேல் தாழை இட்டான்.

ஓரக்கண்ணால் அவன் செய்கையைக் கண்டவள் “நோ விக்னேஷ்…என்ன பண்ணிட்டு இருக்கீங்க நீங்க? ஏன் இப்பிடி ரஃப்ஃபா பிஹேவ் பண்றீங்க? கதவைத் திறங்க… ஐ ஹேவ் டூ கோ”

“ஷ்ஷ்ஷ்…” என்று சர்ப்பத்தைப் போல் சீறியவனின் குரலில் அமைதியானவள் அவன் முகம் பார்க்க, செய்கைக்கு இணையான கடுமை அதில் இல்லை எனவும் கொஞ்சம் தளர்ந்தாள்.

மனதில் அவள் அடித்து விட்டதில் கோபமிருந்தாலும் அவளுடன் உடலுரச நின்றிருந்தவன் அவள் அண்மையை அனுபவித்த வண்ணம் எதுவும் பேசாமல் அவள் முகத்தையே பார்த்தபடி இருக்க அவளோ ஒரு கசந்த புன்னகையுடன் முகத்தைத் திருப்பினாள்.

முத்தமிடத் தூண்டும் மொழுமொழுவென்ற கன்னம் முன்னிருக்க இதழ்களை ஈரப்படுத்திக் கொண்டானவன். அவன் இன்னும் குனிய அவன் எண்ணம் புரிந்தோ என்னவோ சட்டென முகத்தைத் திருப்பி அவன் கண்களை நேராகப் பார்த்தவள் “சோ எல்லாம் இதுக்குத்தான் இல்ல…இந்த உடம்பைத் தொடுறதுக்குத்தான்…எப்படா வாய்ப்புக் கிடைக்கும்னு காத்துகிட்டே இருக்க வேண்டியது… கிடைச்சதும் மேல பாய வேண்டியது”

வேண்டுமென்றே அவனைக் கோபமூட்டி அவனிடம் இருந்து தப்ப எண்ணியவள் எதிர்பார்த்தது போலவே அவன் முகம் சிவக்க ஆரம்பித்தது. ஆனாலும் பதிலேதும் கூறாமல் அவளையும் தள்ளி நிறுத்தாமல் பார்த்தவண்ணம் இருந்தவனைக் கண்டு அவளுக்கும் ஆத்திரம் மிக “கடைசில சராசரி ஆம்பிளைங்கிற மாதிரி உங்க உடல்பலத்தைக் காட்டுறீங்க இல்ல…ஒரு பொண்ணைக் கீழானவள்னு காட்ட சரியான உத்தி… உங்களுக்கும் ரேப் பண்றவனுக்கும் என்ன வித்யா…” அவள் முடிக்கவில்லை…

“ஏய்!” என கர்ஜித்தவனைக் கண்டு மிரட்சியடைந்து வாயை மூடினாள்.

“இன்னும் ஒரு வார்த்தை…ஒரு வார்த்தை பேசின கொன்னு புதைச்சுருவேன்” என்றவன் இடது கையால் சிகையை அழுத்தமாகக் கோதிக் கொண்டான்.

“யாருடி உடல் பலத்தைக் காட்டினது?  நீயா? நானா?” என்றவன் தன் இடது கன்னத்தைத் திருப்பி அவளிடம் காட்டி, “பாருடி… நல்லாப் பாரு… பேய் மாறி அறைஞ்சுட்டு இவகிட்ட உடல்பலத்தைக் காட்டினாங்களாம்… அடி… இல்ல மேல விழுந்து பிராண்டுன்னு கையைக் கட்டிகிட்டு நிக்கணுமோ உன் முன்னால?”

மாநிற சருமமுடையவனாயினும் கன்னத்தில் அவள் கைத்தடம் அழுத்தமாகவே தெரிந்தது. அவன் கன்னம் பார்த்ததால் மட்டுமல்ல… தன் கை தீயாய் எரிந்த போதே அவளுக்குத் தெரியும், அவனுக்கு விழுந்த அடி சாமானியமானதல்ல என்பது…தான் தவறு செய்து விட்டோம் என்பதும் புரிந்திருக்க அதைக் காட்டாதிருக்கத்தான் அவன் மேல் பழி போடுவது போல் அவள் பேசியது…ஆனால் அதனாலேயே மாட்டிக் கொண்டாள்.

அப்போதும் தளராமல் அவன் பார்வையைத் தாங்கி நிற்பவளைக் கண்டவன் “சீ!” என்று அவளைப் பிடித்துக் கீழே தள்ளி விட்டு சட்டெனக் கதவைத் திறந்து கொண்டு வெளியேறினான்.

செல்லும் வழியில் நந்தினியைப் பார்த்தவன் ஒரு கணம் யோசித்து விட்டு இடது கன்னம் அவள் பார்வையில் படாத வண்ணம் முகத்தை லேசாகத் திருப்பிக் கொண்டு “நந்தினி! உங்க மேம்க்கு ஏதோ தலைவலியாம். ஒரு ஹாஃப் ஆன் ஹவர் யாரும் டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு சொன்னாங்க… சோ யாரும் உள்ள போகாமப் பார்த்துக்கோங்க…நீங்க கூட இப்பப் போக வேணாம்” என்றவன் விறுவிறுவெனத் தன் அறைக்குச் சென்று விட்டான்.

இப்போதெல்லாம் விக்னேஷ் தன் அறைக்கே வருவதில்லையாதலால் அவன் இருக்கையின் எதிர்ப்புற இருக்கையையே தன் பணியிடமாக மாற்றிக் கொண்டு விட்டிருந்த ப்ரதீபா புயல் போல் அறைக்குள் நுழைந்தவனைக் கண்டு அதிர்ந்து போனாள்.

“பாஸ்! என்னாச்சு?”

“எதுவும் பேசாத தீபா! ஒரு கப் காஃபி சொல்லு”

வேகமாகக் கேன்டீனுக்கு அழைத்து அவனுக்குக் காஃபி சொல்லி விட்டு வைத்தவள் அப்போதுதான் அவன் கன்னத்தைக் கவனித்தாள்.

என்னவென்று புரியாமல் சங்கடமாக உணர்ந்தவள் எதுவும் சொல்லாமல் அவனுக்குத் தனிமை கொடுத்து அறையை விட்டு வெளியேறினாள்.

நீலாயதாட்சியின் அறையில்,

சில நிமிடங்களுக்கு அவன் தள்ளி விட்டுப் போன நிலையிலேயே கிடந்தவள் யாராவது உள்ளே வரும் வாய்ப்பு இருக்கிறதென்ற எண்ணம் எழ எழுந்து மெதுவாக நடந்து சென்று தன் இருக்கையில் அமர்ந்தாள்.

நடந்து போன விஷயங்களைத் தன் மனக்கண்ணில் ஒரு முறை ஓட்டிப் பார்த்தவளுக்குத் தன் தவறு புரிந்தது. கீழே விழப் போனவளைத் தாங்கிப் பிடித்தது தவிர அவன் கைகள் அத்துமீறவில்லை என்பது உண்மைதான்… ஆனால் தோளையோ கையையோ பற்றாமல் அதென்ன இடையைப் பற்றுவது…

மீண்டும் நடந்ததை நினைவுபடுத்திப் பார்க்க அவன் அமர்ந்திருந்த நாற்காலியிலிருந்து எழுந்து வந்த நிலையில் அவன் செய்ததைத் தவிர வேறு வழியில்லை என்பதும் அவன் முன்னே அவள் தோளைப் பற்றி நிற்க வைக்க முயற்சித்திருந்தால் அவன் பிடிக்குள் அவள் நிற்பது கடினமாயிருந்திருக்கும் என்பதும் அவன் பிடியையும் மீறிக் கொண்டு அவள் கீழே விழுந்திருக்க வாய்ப்பு இருக்கிறது என்பதும், புரிந்தாலும் புரிந்ததை ஒப்புக் கொள்ளாமல் பெண்மனம் வீம்பு பாராட்டியது.

மேஜை மீதிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து நீரருந்தியவள் தன் கைப்பையை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.

வண்டியில் ஏறி அமர்ந்தவள் ஓட்டுனரிடம் “வீட்டுக்கு போ கமலி!” என்று விட்டு அமைதியானாள்.

வண்டி கிளம்பி சில நிமிடங்களில் நல்ல மழை பொழிய ஆரம்பித்தது. ஏனோ அவளுக்கு மழையில் நனைய வேண்டும் போலிருந்தது. செல்லும் வழியில் பூங்கா ஒன்று எதிர்ப்பட “வண்டியைக் கொஞ்சம் ஓரமா நிறுத்து” என்று கமலியைப் பணித்தாள்.

கீழே இறங்கி அந்தப் பூங்காவிற்குள் நுழைந்தவள் மழையில் நனைந்து கொண்டே மெல்ல நடக்கலானாள். அவள் மனதின் வெம்மையை அந்த மழை போக்குமா? கடந்த ஆறு வருடங்களாக இந்த வெம்மையில் மனம் புழுங்கித்தானே திரிகிறாள்…அது ஒருநாளில் மாறி விடப் போகிறதா?

விக்னேஷின் பார்வைகளும் பாவனைகளும் புரியாமல் போக அவளொன்றும் குழந்தை அல்ல…ஆனால் அவன் என்ன நினைத்து இதைச் செய்கிறான் எனத் தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது அவளுக்கு…

மனைவியின் மேலுள்ள காதலால் இத்தனை ஆண்டுகள் தனியாக இருக்கிறான் என்று ப்ரதீபா கூறியது அப்போது உண்மையில்லையா… ஒருவேளை ப்ரதீபா அறியாத பக்கங்கள் இருக்குமோ அவன் வாழ்வில்… அவன் மாமன் பெண் பற்றிக் கூட ப்ரதீபா ஏதோ சொன்னாளே…ஒருவேளை அவளிடமும் இதுபோல் நடந்து கொள்வானோ…அதை ப்ரதீபா அறியாமல் இருப்பாளோ?

ஆண் துணையில்லாமல் தனியாக நிற்கும் பெண் எளிதில் தடம் புரண்டு விடுவாள் என நினைத்து அவளை அணுகுகிறானோ… அவன் மனதில் என்ன இருக்கிறது என அவன் வாயிலிருந்தே வரட்டும் என்று எண்ணியவள் கடந்து போன நாட்களாக அவனைப் பெரிதாகக் கண்டிக்காமல் குழந்தையை விளையாட விட்டுப் பார்க்கும் அன்னையைப் போல் வேடிக்கை பார்த்திருந்தாள்.

அன்று அவள் வாழ்க்கையில் ஒரு முக்கியமான நாள். முதன் முதலில் அவள் கணவனைச் சந்தித்த நாள்…இத்தனை வருடங்களில் இந்த நாளன்று தவறாமல் கோவிலுக்குச் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தாளவள். அதற்காகவே புடைவை கட்டியவள் அதனாலேயே இப்படி ஒரு ப்ரச்சனை வருமென எதிர்பார்க்கவில்லை.

அவனது ‘கொன்னு புதச்சுருவேன்’ என்ற வார்த்தைகள் இன்னும் கூட அவள் காதில் ஸ்பஷ்டமாக ஒலித்துக் கொண்டிருந்தன. கோபக்காரன்தான்…ஆனால் கோபமிருக்கும் இடத்தில் குணமிருக்கும் என்று சொல்வார்களே என்று எண்ணியவளுக்குக் கீற்றாகப் புன்னகை உதயமானது.

பத்து நிமிடங்களுக்கும் மேலாக மழையில் முன்னும் பின்னும் நடந்து அந்தப் பூங்காவைச் சுற்றி வந்தவள் பின் போதுமென முடிவு செய்து வண்டியில் வந்தமர்ந்தாள்.

அடுத்து வந்த இரண்டு நாட்களும் விக்னேஷ் அவள் அறைப்பக்கம் கூட வரவில்லை. அவளும் வழமை போல் தன் பணிகளைச் செய்து கொண்டிருந்தாள். அவனுக்கு அழைத்தால் ப்ரதீபா எடுத்துப் பேசினாள். தேவையானவற்றை அவனிடம் கேட்டு அவளிடம் தெரிவித்தாள்.

அவர்கள் சண்டையிட்டு அன்று மூன்றாம் நாள்…தட்சணா வந்து அவனிடம் ஏதோ சந்தேகம் கேட்க அவன் நெற்றியைச் சுருக்கினான்.

“இதை உங்க மேடம்கிட்டல்ல கேக்கணும்…எங்கிட்டக் கேக்குறீங்க?”

“மேடம் இன்னிக்கு வரல சார்”

“ஓ…ஏன்…என்னாச்சு?”

“காய்ச்சலாம் சார்…டிஸ்டர்ப் பண்ண வேணாம்னும் எதுன்னாலும் உங்ககிட்டக் கேட்டுக்கணும்னும் காலைலயே ஃபோன் செய்து சொல்லிட்டாங்க… இந்த மெயில் இன்னிக்கு அனுப்பியாகணும். அதான் உங்ககிட்ட வந்தேன்.”

அவளுக்குத் தேவையான வடிவில் திருத்தங்களைச் செய்து கொடுத்தவன் யோசனையில் ஆழ்ந்தான். சில நிமிடங்களில் ப்ரதீபாவை அழைத்தவன்

“நான் கிளம்புறேன் தீபா… நீ பார்த்துக்கோ…ஏதாவது வேணும்னா மொபைல்ல கூப்பிடு”

“பாஸ்! இன்னிக்கு மதியம் அந்த ப்ரகாசம் மில்ஸ் மேனேஜர் உங்களைப் பார்க்க வரேன்னு அப்பாய்ன்மென்ட் வாங்கி இருக்கார்”

“கால் பண்ணி நாளைக்கு வரச் சொல்லிடு”

மேஜை மேலிருந்த தன் பொருட்களை எல்லாம் சேகரித்து ப்ரீஃப்கேசுக்குள் போட்டுக் கொண்டே அவள் அடுத்தடுத்துக் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் பதில் கூறியவன் கடைசியாக அவள் கேட்ட “பாஸ் நிஜமாவே நீலா மேடமை லவ் பண்றீங்களா?” என்ற கேள்விக்குப் புன்சிரிப்புடன் “இன்னுமா அது உனக்குப் புரியல?” என்று கண்சிமிட்டிச் சிரித்து பதில் சொல்லி விட்டு வெளியேறினான்.

நேராக அவள் வீட்டுக்குச் சென்றவன் உள்ளே நுழைந்த போது பொன்னம்மா அவனை எதிர்கொண்டார்.

“வாங்க தம்பி!”

“அம்மாவுக்கு இப்ப எப்பிடி இருக்குது?”

“காய்ச்சல் அடிக்குதுங்க தம்பி…மாத்திரையைப் போட்டுட்டுப் படுத்துருக்காங்க… எல்லாம் இந்தப் பாழாப் போன மழைனால வந்தது”

“மழையா…ரெண்டு நாள் முன்னதான மழை பெய்ஞ்சுச்சு”

“ஆமாங்க தம்பி, அன்னிக்குத்தான்…காரை நிறுத்திப்பிட்டுக் கொட்டுற மழைல நனைஞ்சாங்கன்னு கமலி வந்து சொன்னா…அன்னிக்கு லேசாத் தடுமம்தான் பிடிச்சது… முந்தாநாளும் நேத்தும் தும்மிகிட்டு இருந்தாங்க…நான் கஷாயம் போட்டுக் கொடுத்தேன்…ஆனா இன்னிக்குக் காய்ச்சல் வந்துருச்சு…டாக்டருக்குச் சொல்லச் சொன்னா மாட்டேங்கிறாங்க… நீங்களாவது கொஞ்சம் சொல்லுங்க தம்பி”

“டாக்டர் நம்பர் இருக்கா?”

அவள் அலைபேசி எண்கள் எழுதி வைத்திருக்கும் குறிப்பேட்டைக் கொணர்ந்து கொடுத்தாள்.

அதில் மருத்துவரின் எண்ணுக்கு அழைத்து வரச் சொன்னவன் நீலாவின் அறையை நோக்கி நகர்ந்தான்.

லேசாகக் கதவைத் திறந்தவன் மெல்லிய விடிவிளக்கின் ஒளியில் ஆழ்ந்த துயில் கொண்டிருந்தவளை சில நிமிடங்கள் இமைக்காது பார்த்தான்.

அவன் நின்ற பக்கத்துக்கு எதிர்புறம் உடலைத் திருப்பிப் படுத்திருந்தவளின்  முகம் மட்டும் நேராக இருந்தது.

கள்ளங்கபடற்ற குழந்தை போல் உறங்கிக் கொண்டிருந்தவளை அள்ளி அணைத்துக் கொள்ளக் கைகள் பரபரக்க, எண்ணியதைச் செய்தால் என்ன நடக்கும் என்று தெரிந்திருந்தாலும் மெல்ல அவளருகே சென்றான்.

அம்பு விழி என்று ஏன் சொன்னான்
அது பாய்வதினால் தானோ
அவள் அருஞ்சுவைப் பாலென ஏன் சொன்னான்
அது கொதிப்பதனால் தானோ
வள்ளுவன் இளங்கோ பாரதி என்றொரு
வரிசையை நான் கண்டேன்
அந்த வரிசையில் உள்ளவர் மட்டுமல்ல
அட நானும் ஏமாந்தேன்
கம்பன் ஏமாந்தான்
இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே
கற்பனை செய்தானே
கம்பன் ஏமாந்தான்