அத்தியாயம் – 16

அச்சுதன் பெயரை அர்ச்சனா சொல்வாள் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. அத்தனை ஏன் சொல்லிடவேண்டும் என்று அவளும் கூட எண்ணவில்லை தானே.

‘அச்சுதனா?!’ என்று அனைவரும் திகைத்து நின்று, பின்  அனைவரின் பார்வையும் ஒன்று சொன்னாற்போல  இப்போது அச்சுதன் பக்கம் திரும்ப,  அனிதாவோ “அர்ச்சு.. எ.. என்ன டி சொல்ற?” என்றாள் இன்னும் திகைப்பு மாறாமல்.

அர்ச்சனாவோ, கீழே அமர்ந்து முகத்தினை மூடி அழ, அனிதா கேட்ட கேள்வியில் நிமிர்ந்தவள்,  

 “எஸ்.. அச்சத்தான் தான்…” என்றாள் கண்ணில் வழியும் கண்ணீரை துடைத்து.

அச்சுதனே அந்த க்ஷணம் ஆடிப்போய் தான் நின்று இருந்தான்.

“டி அர்ச்சு.. நீ என்ன பேசிட்டு இருக்கன்னு உனக்கு புரியுதா?” என்று அனிதா கேட்க,

ரோஜாவும் கார்மேகமும் சுதாரித்தவர்கள் “டேய் அர்ச்சு…” என்று அவளிடம் சென்று,

“என்ன இப்போ? எதுக்கு இந்த அழுகை உனக்கு? அனி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிட்ட தானே. பின்ன ஏன் அழற?” என்று கார்மேகம் ஆதரவாய் கை பற்றி மகளை எழுப்பி நிற்கவைக்க,

“இல்ல டாடி அது.. அதுவந்து…” என்று தயங்க,

“எதுவுமில்லை.. நீ இப்படியெல்லாம் அழுதா எங்களுக்கு எப்படி இருக்கும் அர்ச்சு..” என்ற ரோஜா,

“அனிதா.. நீ இதுக்குமேல ஒன்னும் பேசாதா.. எதுன்னாலும் நாங்க வீட்ல போய் பேசிக்கிறோம்..” என்று பெரிய மகளையும் கடிய,  அர்ச்சனா அப்போதுதான் கொஞ்சம் தெளிவுக்கு வந்தாள்.     

அச்சுதனையும் அவளையுமே அனைவரும் பார்த்துகொண்டு இருக்க,    “எ.. எல்லாருக்குமே ரொம்ப சாரி.. நான் உங்களோட நல்ல நாள ஸ்பாயில் பண்ணிட்டேன்..” என்று அர்ச்சனா பேச, நீலவேணிக்கோ கண்களில் மளமளவென்று நீர் வழிய,

அச்சுதனோ ‘இதை உன்னிடம் நான் எதிர்பார்க்கவில்லை..’ என்பது போல் நிற்க,

தாமோதரன் தான்  “ம்மா.. அர்ச்சனா.. இதுல சாரி கேட்க ஒண்ணுமே இல்லை. இப்பவும் நீ சொன்ன பதில்ல எங்க எல்லாருக்கும் சந்தோசம் தான்..” என்றவர்,

“பாமி…” என்று மனைவியை பார்க்க,

“அ.. ஆமா.. எங்க யாருக்கும் கோபமோ வருத்தமோ இல்லை. நீ அச்சுதனை விரும்புறன்னு சொன்னது எங்க எல்லாருக்குமே சந்தோசம் தான்…”  என்ற பாமினி

“அக்கா பேசுங்க…” என்று நீலவேணியை இழுக்க, அவரோ மகனின் முகத்தை கலக்கமாய் பார்த்து நின்றிருந்தார்.

ரோஜாவோ “என்னங்க இது?” என்று கார்மேகத்தைப் பார்க்க,

அர்ஜூன் மெல்ல பிரசாந்திடம் “என்னண்ணா?” என்று கேட்க,

“நான் சொன்னேன் தானே லேடி அச்சுதன்னு. அப்போ இது சரியான ஜோடி தான் டா..“  என்று மெல்ல பேச,

“ஆனா அச்சண்ணா ஷாக்காகி நிக்கிறாரே…” என்று பவஸ்ரீ பேச,

“எல்லாருக்கும் ஷாக் தான். ஆனா அனிதா அண்ணி பண்ணது நல்ல விசயமா போச்சு. அட்லீஸ்ட் இப்படியாவது அச்சண்ணா பாஸ்ட்ல இருந்து வெளிய வரட்டுமே…” என்றான் பிரசாந்த்.

“உனக்கு எதுவும் கஷ்டமா இல்லையா?” என்று அர்ஜூன் கேட்க,

“அட போடா நீ வேற.. இனிதான் நமக்கு நிறைய வேலைகள் எல்லாம் இருக்கு டா…” என்று பிரசாந்த் பேச,

இளையவர்களின் பேச்சு, பெரியவர்கள் காதிலும் விழத்தான் செய்தது. சுரேந்திரனோ “அண்ணி.. அமைதியா இருக்கீங்களே…” என்று நீலவேணியை பார்க்க,

“நா.. நான் என்ன சொல்லட்டும்…” என்றவர் “அச்சுதா…” என்றார் மெதுவாய் மகனைத் தொட்டு,

அவனோ அம்மாவின் தொடுகையில் திடுக்கிட்டவன் “ம்ம்…” என,

“ஏதாவது பேசுடா…” என்றார்.

“அவர் என்ன பேசணும் அத்தை? நா.. நான் அனிதா கேட்டதுக்கு பதில் சொன்னேன். அவ்வளவு தான். இதுல அவரை உள்ள இழுக்காதீங்க…” என்றாள் அர்ச்சனா பளீரென்று.

அவளது பேச்சினில் இருந்த தெளிவு, அனைவரையும் வியக்கச் செய்ய “ம்மா.. என் மனசுல எந்த எண்ணமும் இல்லை…” என்றான் அச்சுதனும் வெளிப்படையாகவே.

அவனது வார்த்தைகள், அவளுக்கு வலியை கொடுத்தாலும் “டாடி… போலாமா?” என்று கார்மேகத்தைப் பார்க்க,

அவரும் “சரி…” என்றவர் அனைவரிடமும் விடைபெற, அச்சுதனுக்கு மனது ஒருமாதிரி இருந்தது.

கார்மேகம் எதுவும் பேசாமல் கிளம்பிச் செல்லப் போக “மாமா…” என்று அவரை நிறுத்தியவன், அவரின் அருகே வந்து

“இது.. எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை. நா.. நான் தப்பா எந்த அர்த்ததுலையும் பழகல…” என்று பேச,

“இதுல நீங்க விளக்கம் சொல்லவோ, யாருக்கும் பதில் சொல்லவோ தேவையில்லை. லவ் பண்றேன்னு சொன்னது நான். உங்கக்கிட்ட நான் ப்ரபோஸ் பண்ணலை. எந்த சூழ்நிலைலயும் நானோ, என்னோட காதலோ உங்களை கட்டுப்படுத்தாது. உங்களுக்கு மன அழுத்தமோ இல்லை வருத்தமோ தரக் கூடிய எந்தவொரு விசயமும் என் பக்கம் இருந்து வராது…” என்று அர்ச்சனா நீளமாய் பேச, அவளின் ஒவ்வொரு வார்த்தைகளும் அச்சுதனுக்கு ஒருவித கோபத்தையே கொடுத்தது.

அது அவனது முகத்தினில் தெரிய, அர்ச்சனா அவனைப் பார்த்தவள் பின் நீலவேணியிடம் “நீங்க அன்னிக்கு சொன்னீங்க தான அத்தை.. இவருக்கு ஸ்ட்ரெஸ் ஆகுறதுபோல எதுவும் பேசக்கூடாது செய்யக் கூடாதுன்னு. அப்போவே முடிவு பண்ணிட்டேன். எப்பவுமே என்னோட காதல் வெளிய தெரியக் கூடாதுன்னு. ஆனா இங்க இப்படி கல்யாண பேச்சுக்கள் வரும்னு நான் நினைக்கல…” என்று சொல்ல,

“இப்போ நீ பேசிட்டு இருக்கிறது மட்டும் நல்லவிசயமா அர்ச்சனா? நடக்காத ஒரு விசயத்துக்கு நம்பிக்கை வளர்த்துக்காத…” என்று அடிக்குரலில் அச்சுதன் பேச,

“நடந்தே ஆகனும்னு நான் சொல்லவே இல்லையே…” என்றாள் மிக மிக இலகுவாய்.

அவளது இந்த பாவனையும், பேச்சும் வீட்டினர் அனைவரையும் மேலும் வியக்க வைக்க, அர்ச்சனாவோ “உங்கமேல எனக்கு தோணின இந்த பீலிங்க்ஸ் என்னையும் மீறி நடந்த ஒன்னு. தட்ஸ் ஆல். அதுக்காக நான் உங்களை வந்து நீங்க என்னை லவ் பண்ணனும், கல்யாணம் பண்ணிக்கனும்னு எல்லாம் கேட்டுட்டு இருக்க மாட்டேன். நடந்தா சந்தோசம் தான். ஆனா நான் கேட்கவேல்லாம் மாட்டேன். கேட்டு உங்களை ரொம்ப டென்சன் பண்ணவும் மாட்டேன்…” என்று பேசும் போதே அவளுக்கு மீண்டும் குரல் உடைய,

“அச்சுதா..” என்ற நீலவேணி “அழ வைக்காதடா…” என்று சொல்ல,

“ம்மா நான் புரியவைக்க முயற்சி பண்றேன்…” என்றவன் “மாமா அத்தை.. சாரி.. எங்க எது தப்பாச்சுன்னு எனக்கே தெரியலை…” என்று சொல்ல,

“நீங்க சாரி கேட்கனும்னு எந்த அவசியமும் இல்லை…” என்று அவனுக்கு அர்ச்சனாவே பதில் தர,

‘இவள் பேசியே அனைவரையும் ஒருவழி செய்துவிடுவாள்..’ என்று எண்ணியவன்,

“நீ ரொம்ப டென்சன்ல இருக்கன்னு நினைக்கிறேன். நிதானமா யோசி.. யூ ஆர் எ ப்ரில்லியன்ட் கேர்ல்…” என்றவன் அவன் வீடு நோக்கி நடை போடப் போக,

“அச்சத்தான்…” என்றாள் நிதானமாய்.

எட்டுப்போட்டவனின் கால்கள் நிற்க, அவனின் அருகே சென்றவள் “இப்பவும் சொல்றேன் ரிலாக்ஸ் பண்ணுங்க.. மண்டைல எதுவும் ஏத்திக்க வேணாம். உங்களுக்கு நான் ப்ரபோஸ் எல்லாம் பண்ணல ஓகேவா…” என்றவள்

“கிளம்பலாமா டாடி…” என்று சொல்லியபடி திரும்பி நடக்க, அச்சுதன் அவளை திரும்பி ஒரு பார்வை பார்த்தவன், விடுவிடுவென்று வீடு நோக்கிச் செல்ல, வேகமாய் நீலவேணி வந்து அவளது கரத்தினைப் பற்றிக் கொண்டார்.

தமோதரனோ “எங்களுக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை சம்பந்தி…” என்று பேச,

“எங்களுக்கும் தான் தெரியலை.. நேத்தே இவ ஒருவார்த்தை சொல்லியிருந்தா பரவாயில்லை…” என்று கார்மேகம் பேச,

“சொல்லவே கூடாதுன்னு தான் டாடி இருந்தேன்.. பாருங்களேன் எப்படி போறார்னு. இனி மருந்து எல்லாம் டோசெஜ் கூடும்…” என்று அவள் வருத்தமாய் சொல்ல, பிரகாஷ் அனிதாவை முறைத்து நின்று இருந்தான். 

“என்னை ஏங்க முறைக்கிறீங்க?” என,

“அர்ச்சு வேண்டாம்னு சொல்லும்போதே விட்டிருக்கணும். தனியா அவக்கிட்ட பேசி என்ன எதுன்னு கேட்டிருக்கணும். இப்போ பாரு ரெண்டு குடும்பத்துக்கும் சங்கடமான சூழல்…” என்று பேச,

“எனக்கென்ன தெரியும் இவ இப்படி சொல்லுவா அப்படின்னு…” என்ற அனிதாவும், வேகமாய் தங்கையிடம் வந்தவள் “சாரி அர்ச்சு…” என்றிட,

“விடுக்கா…” என்றவள், பிரசாந்தைப் பார்த்து “சாரி…” என்று சொல்ல,

“அட அதெல்லாம் இருக்கட்டும் லேடி அச்சுதன்.. நடுவில இந்த அச்சத்தான் அப்படின்னு என்னவோ சொன்னீங்களே இது எப்போ இருந்து?” என்று பிரசாந்த் கேட்ட விதத்தில் அர்ச்சனா முகத்தினில் லேசாய் ஒரு புன்னகை தோன்றி மறைய,

“அது ரொம்ப நாளாவே தான்…” என்றாள் மெல்லிய குரலில்.

“எங்களுக்குத் தெரியாதே…” என்று அர்ஜூன் கேட்க,

“அது நீங்க உங்க அண்ணன்கிட்ட தான் கேட்கணும்…” என்றவள்  நீலவேணியிடம் “நீங்க போய் என்ன செய்றார்னு பாருங்கத்தை…” என்றிட,

“தலையை பிடிச்சிட்டு உக்காந்து இருப்பான்…” என்றவர் கார்மேகத்திடம் “மனசுல எதுவும் வச்சுக்காதீங்க…” என்றும் சொல்ல,

“நீங்க போய் அச்சுதனை பாருங்க…” என்று அனுப்பிவைத்தார் அவர்.

நீலவேணி நகர்ந்ததுமே, பிரகாஷ் “மாமா.. நிஜமா எங்களுக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியலை…” என்று பொறுப்பான மருமகனாய் பேச,

“யார்மேல என்ன தப்பிருக்கு மாப்பிள்ளை…” என்றவர் மகளை அழைத்துக்கொண்டு கிளம்பிவிட, காரில் செல்கையில் மூவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை.

இங்கே வீட்டிலும் ஆளுக்கு ஒன்றாய் பேசியபடி, அவரவர் வீடு நோக்கிப் போக, அச்சுதனோ முகத்தை கல்லென வைத்து போர்ட்டிக்கோவில் நடந்துகொண்டு இருந்தான்.

மனது என்னவோ அர்ச்சனா பேசிய வார்த்தைகளையே எண்ணிக்கொண்டு இருந்தது.

அதை விட்டுத் தள்ளு என்று என்ன முயன்றாலும் அவனால் அது முடியவில்லை.

‘என்ன நினைச்சிட்டு இருக்கா.. இப்படி எல்லார் முன்னாடியும் சொல்லிட்டு போயிட்டா…’ என்று அவளை போட்டு மனதினில் வறுத்துக்கொண்டு இருந்தான்.

“இன்னும் எத்தனை நேரம் தான் அச்சுதா நடப்ப நீ..” என்று நீலவேணி பேச,

”எனக்கு தூக்கம் வரலம்மா…” என்றான் பல்லைக் கடித்து.

“எதுக்கு? அதான் உனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை தானே.. அர்ச்சனா, அவ மனசுல இருந்ததை சொல்லிட்டு போயிட்டா. நாங்களும் உன்னை யாரும் கேள்வி கேட்கல தானே.. பின்ன எதுக்கு டென்சன்..?” என்று பேச,

“ம்மா.. வார்த்தைல விளையாடாதீங்க…” என்றான் பட்டென்று.

“சரி.. எதுவும் பேசல.. வா வந்து படு…” என,

“ம்ம்ச் நீங்க போங்க…” என்றவன் மீண்டும் நடக்க,

“நீ எதுக்கு இப்போ இவ்வளோ ரியாக்ட் பண்ற?” என்றார் அவன் மனதினில் இருப்பது வெளி வரட்டும் என்று.

“ரியாக்ட் பண்ணாம? அர்ச்சனா என்ன யாரோவா? அனிதாவோட தங்கச்சி.. நாளைக்கு இது எத்தனை பிரச்சனைகளை உண்டுபண்ணும் தெரியுமா?” என்று பேச,

“என்ன வந்தாலும் நீ உன் இஷ்டத்துக்கு தானே டா இருக்கப் போற.. விடு பார்த்துக்கலாம்…” என்று சொல்ல,

“ம்மா…” என்று பல்லைக் கடித்து முறைத்தவன், வேகமாய் அவனது அறைக்குள் சென்றுவிட்டான்.

இங்கே தாமோதரன் வீட்டிலோ யாரும் உறங்கவில்லை. அனிதா கையை பிசைந்துகொண்டு நிற்க “நீ கொஞ்சம் யோசிச்சு பேசி இருக்கலாம் அனி…” என்று அப்போதும் பிரகாஷ் இதையே சொல்ல,

“அண்ணா விடுண்ணா.. அவங்களுக்கும் டென்சன் இருக்கும்தானே.. அர்ச்சனா பொதுவா வேண்டாம்னு சொல்லிருந்தா, யாரா இருந்தாலும் ரீசன் கேட்பாங்க தானே..“ என்ற பிரசாந்த்

“என்ன அப்பா பேசாம இருக்கீங்க?” என்று சொல்ல,

“என்ன சொல்றதுடா.. யாருக்காக யார்கிட்ட பேசுறதுன்னு எனக்குத் தெரியலை. அர்ச்சனா பேசுறதை பார்க்கிறப்போ, அவளோட எண்ணங்களை அத்தனை ஈசியா மாத்திக்க மாட்டான்னு தோணுது. அச்சுதனும் அப்படித்தானே இருக்கான்…” என்று பேச,

பாமினியோ “இத்தனை வருசமா யாரும் அச்சுதனுக்கு கல்யாணம் பண்ண முன்ன வரலைன்னு நினைச்சு இருந்தோம். அவனும் அதையே காரணமா சொல்லி தப்பிச்சான். இனி அப்படி முடியாது இல்லையா.. கொஞ்சம் ஆறப் போடுவோம்.. காலமே எல்லாத்துக்கும் ஒரு கணக்கு வச்சிருக்கும்…” என்று பேச,

அனிதாவோ மறுநாள் விடிந்ததுமே, இங்கே கணவன் வீட்டினில் சொல்லிவிட்டு அவளின் பிறந்தகம் வந்தவள் “அர்ச்சு…” என்றபடி தான் உள்ளே வந்தாள்.

“இன்னும் எந்திரிச்சு வரல அர்ச்சு.. என்ன இத்தனை சீக்கிரம் வந்திருக்க அனிதா?” என்றார் ரோஜா.

“பின்ன நைட்டே உங்களோட வந்திருப்பேன். அங்க என்ன பேசுறாங்கன்னு நான் பார்க்க வேண்டாமா?” என்றவள்

“ஏன் ம்மா இவளுக்கு லவ் பண்ண வேற யாருமே கிடைக்கலையா?” எனும்போதே, அர்ச்சனா அங்கே வர,

“ஏன் டி.. பாரின்லாம் போய் படிச்சியே உனக்கு லவ் பண்ண வேற ஆளே கிடைக்கலையா?” என்று கேட்க,

“ஏன் அச்சத்தானுக்கு என்ன குறை?” என்றாள் அழுத்தம் திருத்தமாய்.

“என்ன குறையா? ஏய் லூசா டி நீ.. அவரைப் பத்தி எல்லாம் தெரியும் தானே…” என்று பேச,

“இதெல்லாம் ஒரு விசயமே இல்லையே…” என்றாள் பட்டென்று அர்ச்சனாவும்.

“அர்ச்சு…” என்று பல்லைக் கடித்தவள் “அவர் மனசு மாறும்னு நீ நினைக்கிறியா?” என்றாள் தங்கையை எண்ணி நிஜமான வருத்தத்துடன்.

“மாறனும்னு நான் கேட்டேனா க்கா.. நான் என் வழியைப் பார்க்கிறேன். அவர் அவர் வழியை பார்க்கட்டும். ஆனா அவர் மேல வச்ச இந்த பாசம், இந்த காதல் எல்லாம் எனக்கு மாறாது…“ என்று அர்ச்சனா பேச ,

“ம்மா பைத்தியமா இவ?“ என்றாள் அனிதா ரோஜாவிடம்.

இதையே தான் அச்சுதனும் எண்ணிக்கொண்டு இருந்தான்.

‘லவ் பண்றேன்னு சொல்றா.. அதுவும் இத்தனை பெரியவங்க முன்னாடியும் சொல்றா.. ஆனா ப்ரபோஸ் எல்லாம் பண்ணலை அப்படின்னு வேற சொல்றா.. கிறுக்கு பிடிச்சிருக்கா இவளுக்கு. அறிவாளின்னு நினைச்சா இப்படி அறிவுகெட்ட அர்ச்சனாவா இருக்காளே…’  என்று அவள் பேசியதையே தான் இன்னமும் எண்ணிக்கொண்டு கட்டில் விட்டுக் கூட எழாமல் இருந்தான் அச்சுதன்.