அத்தியாயம் 7

காலை எப்போதும் ஆறு மணிக்கு எழுந்து விடுபவள் அன்று ஏழாகியும் எழுந்திருக்கவில்லை என்பதால் பொன்னம்மா கால் மணிக்கொருதரம் அவள் அறைக்கு வந்து பார்த்துச் சென்று கொண்டிருந்தாள். ஏழு மணிக்கு அறை வாசலில் எட்டி பார்த்தவள் அவள் விழித்திருப்பது கண்டு உள்ளே வந்தாள்.

“எழுந்துட்டீங்களா அம்மா?”

“ம்ம்ம்…”

“அந்த தம்பி இப்பதான் ரெண்டு நிமிஷம் மின்ன வந்தாங்க”

புருவம் சுருக்கியவள் “யாரது?” என்றாள்.

“அதாம்மா நேத்து உங்களை கொண்டு வந்து விட்டாங்களே அவங்க…யாரோ சீஓன்னு சொன்னீங்களே”

“ஓ அவரா!”

அவளுக்கு எரிச்சல் வந்தது. ‘இவ்வளவு சீக்கிரமா இவனை யார் வரச் சொன்னது…அதுவும் பிள்ளைகள் ஸ்கூலுக்கு கிளம்புற நேரத்துல’ என நினைத்துக் கொண்டவள் ‘வந்தாயல்லவா படு’ என மனதினுள் கறுவியபடி

“போய் அவர்கிட்ட அம்மா இன்னும் எந்திரிக்கல. நீங்க ஆஃபீஸ் போவீங்களாம் அங்க மீட் பண்றாங்களாம்னு சொல்லுங்க” என்று சொல்லிக் கொண்டே அலைபேசியை எடுத்து ப்ரியநந்தினிக்குக் கீழே வர வேண்டாம் எனக் குறுஞ்செய்தி அனுப்பினாள்.

யாரைச் சந்தேகிப்பது யாரை நம்புவது என்பது புரியாத நிலையில் அவள் அறிமுகம் இல்லாத வெளியாட்களைப் பார்க்க அனுமதிக்க மாட்டாள் என்பது தெரிந்தே இருந்ததால் பிள்ளைகளும் சமர்த்தாக அவள் சொற்படிக் கேட்டு நடந்தனர்.

பொன்னம்மாவிற்கு அவள் சொன்னது போல் சொல்ல மனதில்லை. ஆனாலும் எஜமானியின் உத்தரவாயிற்றே!

சென்று அவனிடம் விஷயத்தைச் சொல்ல அவன் முகம் வாடியது கண்டு அவர் மனமும் வருந்தியது.

“சரி பொன்னம்மா நான் ஆஃபீஸ்லேயே பார்த்துக்கிறேன்” என்று விட்டுத் கிளம்பினான்

நேராக நீலாவின் அறைக்குச் சென்ற பொன்னம்மாள் அவளிடம் உரிமையாகக் கோபப்பட்டாள். அவள் மாமியார் காலத்தில் இருந்தே வேலைக்கு இருப்பவராயிற்றே!

“ஏன்மா… அந்தப் புள்ள முகம் வாடிப் போச்சு”

“விடுங்க பொன்னம்மா…இந்த ஆம்பிளங்களே இப்பிடித்தான். இருக்க இடம் கொடுத்தாப் படுக்கப் பாய் கேப்பாங்க… இதெல்லாம் முளையிலேயே கிள்ளி எறிஞ்சுடணும் இல்லைன்னா அப்புறம் காதல் கல்யாணம்னு வந்து நிப்பாங்க”

அவன் சென்று விட்டான் என எண்ணி நீலாவும் பொன்னம்மாளும் படுக்கையறைக் கதவைத் திறந்து வைத்துக் கொண்டு சாதாரண குரலில் பேசிக் கொண்டிருக்க, முந்தைய தினம் மருத்துவரை வரவழைத்துப் பரிசோதித்துக் கொண்டாளா எனக் கேட்க மீண்டும் வீட்டினுள் நுழைந்திருந்தவன் காதில் இவையனைத்தும் அட்சரம் பிசகாமல் வந்து விழ அவன் இதழ்க் கடையோரம் இளம் முறுவல் முகிழ்த்தது.

‘அம்மணி ரொம்பவும் உஷாராத்தான் இருக்கிறா போல’ என எண்ணிக் கொண்டவன் முறுவலுடனே வீட்டை விட்டு வெளியேறினான்.

வாசல் விட்டுக் காலை வெளியே எடுத்து வைத்தவன் மனதில் ஏதோ தோன்ற ‘அவள் பிள்ளைகள்’ என்று எண்ணியபடி அந்த வீட்டின் மேல்புறச் சாளரங்களில் எல்லாம் ஏதாவது முகங்கள் தென்படுகின்றனவா என ஆவலாகத் தேடினான்.ஆனால் அவன் அதிர்ஷ்டம் எதுவும் கிடைக்கவில்லை. பின் விறுவிறுவென நடந்து பிரதான நுழைவாயிலை நெருங்கினான்.

அறையில் நீலாயதாட்சியின் மனதில் ஏதோ தோன்ற தன் அலைபேசியை எடுத்து அதில் இணைக்கப்பட்டிருந்த சிசிடிவி இணைப்பில் பிரதான நுழைவாயிலில் நடப்பவற்றைக் கண்காணிக்க, வண்டிக்காகக் காத்திருந்தவனின் முதுகுப்புறம் மட்டுமே அவளுக்குக் காணக் கிடைத்தது.

விழியகற்றாமல் அவனையே பார்த்த வண்ணம் அவள் நின்றிருக்க சில நிமிடங்களில் ஒரு கார் வர அதில் ஏறிச் சென்றவனைப் பார்த்தவளிடமிருந்து ஒரு நெடுமூச்சு வெளிப்பட்டது.

சீக்கிரமாகவே கிளம்பி விட்டதால் முதலில் தொழிற்சாலைக்குச் சென்று விட்டுப் பத்து மணியளவில் அலுவலகம் வந்து சேர்ந்தான் விக்னேஷ்.

தன் அறைக்கதவைத் திறந்து விட்டு உள்ளே நுழைந்தவனை அவன் மேஜையில் ஏதோ தேடிக் கொண்டிருந்த ப்ரதீபா ஏறிட்டுப் பார்க்க, பார்த்தவள் அப்படியே உறைந்து நின்று விட்டாள்.

இளம் பீச் நிற முழுக்கை சட்டை, கரும்பழுப்பு நிறக் கால்சராய், இடையில் சாம்பல் நிற பெல்ட், மழமழவென ஷேவ் செய்த முகம் என ரேமண்ட்ஸ் மாடல் போல் அம்சமாக அவனை இப்போதுதான் முதல் தடவையாகப் பார்க்கிறாள்.

அவளைப் பார்த்துக் கொண்டே நடந்து வந்தவனின் ஒவ்வொரு அசைவுக்கும் ஷாம்பூக் குளியலால் தளர்ந்து கிடந்த கேசம் ஜிங்ஜிங்கென்று குதிக்க தன் நெஞ்சில் கை வைத்துக் கொண்டே மயங்கி விழுவது போல் பாவனை செய்தாளவள்.

“ஹேய் என்னாச்சு?” அதற்குள் பக்கத்தில் வந்திருந்தவன் அவள் தோள் பற்றி நிறுத்த “பாஸ்! பிஞ்சு நெஞ்சு… இப்பிடியெல்லாம் சர்ப்ரைஸ் ஷாக் கொடுக்காதீங்க… தாங்காது எனக்கு”

அவன் முகத்தில் லேசான சிகப்புடன் வெட்கத்தின் சாயல் தென்பட “பாஸ்!” என்று மறுபடித் தலைசுற்றி விழப் போனாள்.

“ஏய்! போதும் உன் கேலி… நிப்பாட்டு”

“சத்தியமாச் சொல்றேன் பாஸ்! உங்ககிட்டப் ப்ரபோஸ் பண்ணிடலாமான்னு இருக்கு”

“ஏன் பண்ணேன்… இப்ப என்ன?”

“நோ பாஸ்! இந்த தீபா முன் வச்ச காலைப் பின் வைக்க மாட்டா”

“வைப்ப வைப்ப! உனக்குன்னு ஒரு ஆள் வரும் போது வைப்ப”

தாலசீமியா என்ற கொடிய வியாதிக்கு சிறுவயதிலேயே தன் தம்பியை வாரிக் கொடுத்து விட்டவள் பெற்றோர் எத்தனையோ வற்புறுத்தியும் தனக்கென்று ஒரு வாழ்வை அமைத்துக் கொள்ள மறுத்து விட்டாள்.

அவர்களும் ஒரு கட்டத்தில் இறந்து விட, வேலை பார்க்கும் மகளிர் விடுதியில் தங்கிக் கொண்டவள் வாரத்தின் ஐந்து நாட்கள் அவன் அலுவலகத்தில் வேலை பார்த்து விட்டு, வார இறுதியில் நிறைய குழந்தைகள் காப்பகங்கள், முதியோர் இல்லங்கள் என்று சென்று தன்னால் முடிந்த பொருள்தானமும் உழைப்புதானமும் கொடுக்கும் வழக்கமுள்ளவள்.

விக்னேஷும் சில நேரங்களில் அவளுடன் செல்வான். அவனும் எத்தனையோ முறை ‘நல்ல பையனாகப் பார்த்துத் திருமணம் செய்து கொள்’ என்று அறிவுரை கூறி விட்டான். ஆனால் ‘ஊருக்கு மட்டும் உபதேசமா பாஸ்’ என்று அவனைக் கேலி செய்து நழுவி விடுவாள்.

“இந்த ரெண்டு வருஷத்துல ஒரு நாள் கூட நான் உங்களை இப்பிடி உற்சாகமா… செம ஸ்மார்ட்டா… ஹேண்ட்சமா… இன்னும் மானே தேனே பொன்மானே இதெல்லாம் போட்டுக்கோங்க… ஆனா இப்பிடிப் பார்த்தது இல்ல. என்ன விசேஷம் பாஸ்?”

“அப்போ இவ்வளவு நாள் நான் அழகா இல்லைன்னு சொல்றியா?”

“அப்பிடி இல்ல பாஸ்! அழகா இருக்கிறது வேற அதை வெளிக்காட்டிக்கிறது வேற… நீங்க கேர் எடுத்து ட்ரெஸ் செய்து இந்த மாதிரி வந்து பார்த்தது இல்ல.அதான் கேட்டேன்”

“ம்ம்ம்…விஷயம் இருக்கு…அப்புறம் சொல்றேன்”

இன்டெர்காம் அழைக்க எடுத்துக் காதுக்குக் கொடுத்தவன் “எஸ் விக்னேஷ் ஹியர்” எனவும் அந்தப் பக்கம் வாசலில் நின்றிருக்கும் செக்யூரிட்டி பேசினார்.

“ஸார்! புது மேடம் வந்ததும் உங்களுக்குச் சொல்லச் சொன்னீங்களே!”

“ம்ம்ம்…வந்துட்டாங்களா?”

“ஆமா சார்! இப்பதான் கார் உள்ள நுழைஞ்சுது”

“காரை யார் ஓட்டிட்டு வந்தா?”

“யாரோ ஒரு ஆள் உக்காந்துருந்தான் ஸார்”

“ஓகே நான் பார்த்துக்கிறேன்”

“தீபா! நீ இப்ப என்ன செய்ஞ்சுகிட்டு இருக்கே?”

“xxxxxxx கம்பனியோட  லேபர்ஸ் யூனிஃபார்ம் மொத்த ஆர்டர்க்கு கொடேஷன் ரெடி பண்ணச் சொன்னீங்கல்ல பாஸ்…அதுக்கான டீடயில்ஸ் கலெக்ட் பண்ணிகிட்டு இருக்கேன்”

“ஓகே! நீ பண்ணு. நான் போய் நீலாவைப் பார்த்துட்டு வந்துடறேன்”

‘மிஸஸ்’ என்றோ ‘மேடம்’ என்றோ சொல்லாமல் மொட்டையாக அவன் ‘நீலா’ என்றதில் அவனை வியந்து பார்த்தவள் பார்வையை கவனியாதவன் போல் அவன் வெளியேற, ‘விட்டேனா பார்’ என நினைத்துக் கொண்டவள் “பாஸ்” என்றழைக்க, கதவுக் குமிழில் கைவைத்தவன் திரும்பிப் பார்த்தான்.

“மேடமை லவ் பண்றீங்களா பாஸ்?”

முகம் லேசாகச் சிவக்க, கையால் தலையைக் கோதிக் கொண்டவன் எதுவும் சொல்லாமல் புன்னகையுடன் வெளியேற, அவனின் செய்கையில் அவளுக்கு விஷயம் புரிந்து விட, புன்னகைத்துக் கொண்டாள்.

நீலாயதாட்சியின் அறைக் கதவை இருமுறை தட்டியவன் “கமின்” என்ற அனுமதிக் குரல் கேட்க உள்ளே நுழைந்தான்.

தட்சணாவோ, நந்தினியோ, ப்ரதீபாவோ யாராவது இருக்கும் என நினைத்து அனுமதி கொடுத்தவள் விக்னேஷைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பது அவள் முகம் மாறிய தினுசிலேயே தெரிந்தது அவனுக்கு…அவள் எதிர்பாராதது அவன் தோற்ற மாற்றத்தையுமே!

அவனைப் பார்த்த முதல் நாளில் இருந்து முகத்தில் தாடியுடனும், இதழ்கள் புன்னகைத்தாலும் விழிகளில் மெல்லிய சோகத்தின் சாயலுடனும் இருந்தவன் இப்போது முகத்தில் குதூகலம் கொப்பளிக்க நின்றிருந்தான்.

உற்சாகமே ஓருருவெடுத்து வந்தவனாக “ஹாய் நீலா!” என்றவண்ணம் விழிகளில் புன்னகையும் பிரியமும் போட்டி போட அவள் முன் வந்து அமர்ந்தவனைக் கண்டவளுக்கு வார்த்தைகள் வரவில்லை. அதில் அவன் வெறுமனே நீலா என்றது கூட அவள் புத்தியில் உறைக்கவில்லை.

விழி விரித்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளைக் கண்டவன் மெலிதாய்க் கண்சிமிட்ட, திடுக்கிட்டவள் ஒருகணம் கண்களை மூடி முயன்று தன் கண்களையும் மனதையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து “என்ன மிஸ்டர் விக்னேஷ்…இந்தப் பக்கம்…எதுவானாலும் ஃபோன்ல கேட்டிருக்கலாமே”

“ஹவ் ஆர் யூ ஃபீலிங்க் நவ்?( உங்களுக்கு இப்ப எப்பிடி இருக்கு?)”

சில வினாடிகள் அவன் தனக்கு சரியான பதில் தராமல் எதிர்க்கேள்வி கேட்பதை அவதானித்தவள் ஒரு பெருமூச்சுடன் “ஃபைன்…இதைத்தான் ஃபோன்ல கேட்டிருக்கலாமே… அனாவசியமா ரூம்க்கு ஏன் வரணும்னு கேட்டேன்”

அவள் நெற்றிக் காயத்தை விழிகளால் வருடியவன் “எனக்குப் பார்க்கணும் போல இருந்துச்சு” என மெல்லிய குரலில் தன்னை மறந்து உரைக்க “வாட்?” என்ற அவளின் அதிர்ந்து வந்த பதிலில் சுதாரித்து “ஃபோன்ல கேட்டா நீங்க ஃபைன்னுதான் சொல்வீங்கன்னு தெரியும்…ஆனா எப்பிடி இருக்கீங்கன்னு எனக்கு நேர்ல பார்த்துத் தெரிஞ்சுக்கணும் போல இருந்துச்சு…அதான் வந்தேன். டாக்டர் வந்து பார்த்தாரா?”

கைகளை மார்புக்குக் குறுக்காகக் கட்டிக் கொண்டு தன் இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்தவள் “மிஸ்டர் விக்னேஷ்! இதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் ஓவராத் தெரியல… இத்தனை வருஷமா என் விஷயங்களைக் கேர் பண்ணிகிட்ட எனக்கு இனியும் பண்ணிக்கத் தெரியும். நேத்துச் சின்ன உதவி செய்துட்டோம்னு அட்வான்டேஜ் எடுத்துக்கப் பார்க்காதீங்க… ஆக்சுவலி அந்த உதவி கூட உங்களால வந்த ப்ரச்சனைக்கு நீங்க செய்ததுதான். சோ எதுக்கு வந்தீங்கன்னு சொல்லிட்டுக் கிளம்புங்க”

முகம் சட்டெனக் கூம்பினாலும் அதை மாற்றிக் கொண்டவன் தன் கையிலிருந்த ஒரு கோப்பைக் காட்டி அதில் ஏதோ சந்தேகம் கேட்க அவனை முறைத்தாளவள்.

“இதை நேத்து ப்ரதீபாகிட்ட நான் சொல்லி விட்டேனே? அவங்க உங்ககிட்டச் சொல்லலையா?”

“இல்லையே!” என்றவன் சட்டென எட்டி அவள் பக்கமிருந்த இன்டெர்காமைத் தூக்கித் தன் பக்கம் திருப்பி வைத்துக் கொண்டு அதில் தன் அறைக்கு அழைத்தான்.

அவன் சட்டென எட்டி எடுத்ததில் ஒரு கணம் தன்னை நோக்கிக் கையை நீட்டுகிறானோ என அதிர்ந்தவள் பின் அவன் செய்கையின் காரணம் புரிந்ததில் படபடத்து விட்ட மனதைச் சமன்படுத்தியபடி பல்லைக் கடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

“எஸ்!” என்று எடுத்த ப்ரதீபாவிடம் “தீபா! நேத்து அந்த வானதி டெக்ஸ்டைல்ஸ் ஃபைல்ல ஒரு சின்ன க்ளாரிஃபிகேஷன் தேவைப்பட்டுச்சே…அதைப் பத்தி மிஸஸ் நீலா உங்கிட்ட எதுவும் சொன்னாங்களா?”

முந்தைய நாள் அவள் அது குறித்துச் சொன்னதும் அவன் பதில் கூறியதும் ப்ரதீபாவுக்கு நன்றாகவே நினைவிருக்க விக்னேஷும் அப்படி ஒன்றும் எதையும் எளிதில் மறந்து விடுபவனல்ல என்பது தெரிந்திருந்ததால் அவன் விளையாட்டைப் புரிந்து கொண்டவள் “பாஸ்! நடத்துங்க நடத்துங்க! நான் வைக்கிறேன்” என்று வைத்து விட தொடர்ந்து அவள் இருப்பது போல் பாவனையுடன் பேசியவன்

“என்னது எங்கிட்ட சொன்னியா?”

……………………..

“எப்போ?”

…………………………….

“அப்பிடியா எனக்கு சுத்தமா ஞாபகமே இல்லையே…”

………………………………..

“ஓ…ஓகே ஓகே” என்றவன் ரிசீவரைத் தாங்கியில் பொருத்தி விட்டு

“தீபா சொல்லி இருக்கா போல…நான் தான் மறந்துட்டேன்… சாரி உங்க டைமை வேஸ்ட் பண்ணிட்டேன்” என்றவன் எழ “அவங்க பேர் ப்ரதீபாதானே? தீபான்னு கூப்பிடுறீங்க… ரொம்பக் க்ளோஸோ நீங்க ரெண்டு பேரும்?”

பதில் சொல்லாமல் அவன் அவளைக் கூர்ந்து பார்க்கவும் தோளைக் குலுக்கியவள் “ஜஸ்ட் அவுட் ஆஃப் க்யூரியாசிட்டி கேட்டேன். சொல்ல விருப்பம் இல்லைன்னா விட்டுடலாம்”

அலட்சியம் போல் காட்டி அவள் பேசிய விதத்தில் புன்னகை தோன்றினாலும் வெளிக்காட்டாது அடக்கியவன்

“ஓகே நீலா…டேக் கேர்… நான் வரேன்” என்று கிளம்பினான்.

வாசல்வரை சென்றவன் திரும்பிப் பார்த்து “இன்னிக்கு எங்கிட்டப் பேசும் போது கண்ணாடி போட்டுக்க மறந்துட்டீங்க” என்று சொல்லி விட்டுச் சட்டென வெளியேறி விட்டான்.

சட்டென முகத்தைத் தொட்டுப் பார்த்தவள் பின் மெலிதாகப் புன்னகைத்தாள்.

ஆக அவள் வேண்டுமென்று போட்டுக் கொள்கிறாள் எனத் தெரிந்துதான் வைத்திருக்கிறான்.

பொதுவாகவே ஆண்களிடம் பேசுகையில் அவள் கண்ணாடி அணிந்து கொள்வது வழக்கம்… தன் உணர்வுகளைக் காட்டிக் கொள்ளாமல் அவர்கள் உணர்வுகளை அவதானிப்பது அவளை அவர்களை விட சற்று உயர்ந்த நிலையில் வைத்திருக்கும் என்பதால் அப்படிச் செய்பவள் பெண்களிடம் இயல்பாகவே இருப்பாள். ஆனால் இதை அவன் எப்படிக் கண்டுகொண்டான் என்ற யோசனையில் ஆழ்ந்தாளவள்.

இந்த நிகழ்வுகளுக்குப் பிறகு அவள் அறைக்குக் கார்த்திக்கின் வருகை அதிகரிக்க ஆரம்பித்தது. பெரிதாக ஒன்றும் காரணம் இல்லையென்றாலும் இன்டெர்காமிலோ அலைபேசியிலோ கேட்டுக் கொள்ளக் கூடிய சிறிய விஷயங்களுக்குக் கூட நேரில் வர ஆரம்பித்தான். ப்ரதீபாவை இப்போதெல்லாம் நீலாயதாட்சி கண்ணால் காணக் கூட முடிவதில்லை. அவள் வர வேண்டிய வேலைகளுக்கும் கூட அவனே வந்து நின்றான்.

நீலாவும் ஏன் வருகிறீர்கள், உங்களுக்கு வேறு வேலை இல்லையா, எனக்கு வேலை இருக்கிறது, கிளம்புங்கள், என்று விதம் விதமாக அவனைக் கிளப்பி விட முயற்சித்து அதில் தோல்வியே கண்டாள்.

தட்சணா போல் யாரையாவது வைத்துக் கொண்டு அவள் இதுபோல் பேசினாலும் பொருத்தமாக ஏதாவது காரணம் கூறி, தான் அந்த அறையில் இருக்க வேண்டித்தான் இருப்பதாக அவர்களிடம் காட்டி விடுவான்.

அப்படியே அவள் சொல்வதை மதித்து வெளியே சென்றாலும் மீண்டும் கொஞ்ச நேரத்தில் ஏதாவது ஒன்றைத் தூக்கிக் கொண்டு வந்து விடுவான்.

அங்கிருக்கும் நேரம் தன் மடிக்கணினியை அவள் மேஜையில் வைத்து வேலை பார்த்துக் கொண்டும் அலைபேசியில் பேச வேண்டிய விஷயங்களைப் பேசிக் கொண்டும் என்றுதான் இருப்பான்.மொத்தத்தில் வெளியே செல்லும் நேரம் தவிர அலுவலகத்தில் இருக்கும் நேரமெல்லாம் அங்கேயேதான் குடியிருந்தான்.

ப்ரதீபாவின் பரிகாசச் சிரிப்புக்களையோ ‘என்ன நடக்குது பாஸ்’ என்ற கேள்விகளையோ கூட அவன் பொருட்படுத்தவில்லை.

மறுத்துக் கூறித் தடுத்து விடும் அதிகாரமும் தைரியமும் இருந்தும் ஏனோ நினைத்ததைச் செயல்படுத்த நீலாயதாட்சியால் முடியவில்லை.

இப்படியே நாட்கள் கடந்திருக்க அவள் ஜெர்மனியிலிருந்து வந்து முழுதாக இரண்டு மாதங்கள் முடிந்திருந்தன.

தொழிலும் தேவையான முதலீடு கிடைத்து விட்டதில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வந்து கொண்டிருந்தது.

அவள் சரியான நேரத்துக்கு வந்து சென்று கொண்டிருந்தாலும் விக்னேஷ் நேரம் காலமில்லாமல் அலுவலகத்திலும் தொழிற்சாலையிலும்தான் இருந்தான்.அவனது அயராத உழைப்பு கனி கொடுக்கத் தொடங்கியிருந்தது.

இப்போதெல்லாம் அவளறைக்கு அவன் வரவை ஆவலுடன் எதிர்பார்க்கத் தொடங்கியிருந்தாலும் அதை அவனறியாமல் மறைத்து முறைத்துக் கொண்டுதான் இருந்தாள் நீலாயதாட்சி.

அவள் என்னதான் முறைத்தாலும் அவளைக் கண்டுகொள்ளாமல் ஒரு புன்னகையிலும் கண்சிமிட்டலிலும் அதை அலட்சியப்படுத்தி அவளண்மையில் திரிபவனின் கோப முகம் காணும் நாள் நெருங்கிக் கொண்டிருப்பதை அவள் உணரவில்லை.

என்னை விட யாரும் இல்லை அன்பு செய்து உன்னை வெல்ல
எந்த தேசம் போன போதும் என்னுடைய சொந்த தேசம்
உனது இதயம் தானே
என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்
செல்ல சண்டை போடுகிறாய்
தள்ளி நின்று தேடுகிறாய்
அன்பே என்னை தண்டிக்கவும் உன்
புன்னகையில் மன்னிக்கவும்
உனக்கு உரிமை இல்லையா