சென்னையில் பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டு விட்டான் ஆனந்த். இன்னும் ஒரு வார காலத்தில் பெங்களூரு செல்ல வேண்டும். இப்போதைக்கு விடுதியில்தான் தங்கப் போகிறான். மனைவியையும் மகனையும் தனியே விட்டுச் செல்வதில்தான் அவனுக்கு மிகுந்த வருத்தம்.
“முன்னாடியே நீங்க அப்ராட் போறதாதான் இருந்தீங்க, மறந்துட்டீங்களா? இப்போ இதோ இங்க இருக்க பெங்களூர்தானே போக போறீங்க? நான் சமாளிச்சுக்குவேன்” என தைரியமாக சொன்னாள் தேன்.
ஆயினும் ஆனந்துக்கு அவர்களை அப்படி தனியே விட்டு செல்ல பயம்தான். ஏதாவது அவசரம் என்றால் இவனால் உடனே ஓடி வரவா முடியும்? மாமனாருக்கு அழைத்து பேசினான். சொல்லப் போனால் உறவுகளில் அவருக்குத்தான் வேலை கிடைத்த விஷயத்தை முதலில் பகிர்ந்து கொள்கிறான்.
நிலைமையை அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “நான் எதுக்கு இருக்கேன் மாப்ள? இங்க வெட்டியா பொழுத ஓட்டுறதுக்கு பதிலா என் பேரன் கூட சந்தோஷமா பொழுத கழிப்பேன், நீங்க கவலையே படாதீங்க, ரெண்டு நாள் அவகாசம் கொடுங்க, வந்திடுறேன் நான்” என சொல்லி அவனுக்கு நிம்மதியை வழங்கினார் தங்கப்பன்.
வினயாவின் மாமனாருக்கு காரியம் நடக்கவிருக்க அதில் கலந்து கொள்ள வர சொல்லி ஆனந்துக்கு பேசினான் வினயாவின் கணவன் வாசு. அந்த தேதியில் ஆனந்த் பெங்களூருவில் இருப்பான், தங்கப்பனோடு மனைவியை அனுப்பலாம்தான். சென்ற முறை பயணம் செய்து வந்ததிலேயே தருணுக்கு உடல் முடியாமல் போய் விட்டது.
மீண்டும் மகனை அலைய வைக்க வேண்டாமென நினைத்தவன் அப்பாவுக்கு அழைத்து அவரை சென்று வருமாறு கூறினான். அவரும் ஒத்துக் கொண்டார்.
அப்பாவிடம் பேசும் போது வேலை கிடைத்ததை சொல்லாமல் இருக்க முடியவில்லை அவனால். அருகிலிருந்த அவனது அம்மாவுக்கும் விஷயம் தெரிய, உடனே அவரும் மகனிடம் பேசினார்.
என்ன வேலை, எவ்வளவு சம்பளம், எங்கு தங்குகிறாய் என அவர் விசாரிக்க ஆரம்பித்து விட்டார். எதற்கும் அவனால் பொய் சொல்ல முடியவில்லை. உண்மை விளம்பியாக அனைத்தையும் சொல்லி விட்டான்.
“எனக்கு அப்பவே தெரியும்டா உனக்கு நல்ல வேலை கிடைக்கும்னு. உனக்காத்தான் எல்லா சாமிக்கும் வேண்டி வச்சிருந்தேன். என் வேண்டுதலுக்கு செவி சாய்ச்சிட்டாரு கடவுள். ஹ்ஹம்… இப்ப எங்க போய் மூஞ்சிய வச்சிப்பாளாம் உன் பொண்டாட்டியும் அவ குடும்பத்தாரும்? என்னா பேச்சு பேசினாங்க?” என மகனை ஏற்றி விட பார்த்தார் சுந்தரி.
“எதுக்கும்மா தேவையில்லாம தேனை பத்தி பேசுற? நீ வை, நான் அப்புறமா பேசுறேன்”என பேச்சை துண்டிக்கத்தான் பார்த்தான், ஆனால் அவர் விடவில்லை.
“ஒரு மாசத்துல அவளையும் உன் கூட கூப்பிடிப்பதானே? பெங்களூரு சுத்தி பார்க்கணும்னு எனக்கு ரொம்ப நாள் ஆசை. நம்ம மயிலு பாவம்டா, மாமனார் மாமியார் மூஞ்சிய பார்த்துகிட்டே ஜெயில்ல வாழற மாதிரி வாழறா. அங்க நல்ல பெரிய வீடா புடி, அடுத்த மாசம் நாங்கல்லாம் அங்க வர்றோம்” என்றார்.
அங்கு வீடு பிடிக்கும் எண்ணத்திலேயே தான் இல்லை என அவன் சொல்ல, அதெப்படி, மனைவியோடு வாழாமல் தனியாக இருப்பாயா என கேள்வி கேட்டார்.
தேன் சென்னையிலிருந்தே வேலை பார்க்க போவதாகவும் மாமனார் துணைக்கு வந்து தங்கப் போவதாகவும் அவன் சொல்ல, அது சரி வராது என்றார்.
பெண்ணை கொடுத்த இடத்தில் அவளின் பெற்றோர் வந்து போக இருக்கலாமே தவிர, இப்படியெல்லாம் தங்க விடக்கூடாது என வியாக்கியானம் பேசினார்.
“அப்புறம் அவ தனியாவே இருப்பாளா?” எனக் கேட்டான் ஆனந்த்.
“நீ ஏன் என்கிட்ட சொல்லலை? அகிலன் சென்னையிலேயே ஏதாவது வேலை பார்க்கலாம்னு ஒரு யோசனைல இருக்கிறதா முந்தாநாள்தான் சொன்னான். நீ கேட்டுகிட்டா நாங்க வந்து இருக்க மாட்டோமா?” எனக் கேட்டார் சுந்தரி.
“அவனுக்கு இங்க வேலை கிடைச்சா தங்கிக்க நிறைய பிஜி இருக்குமா, நீயும் அப்பாவும் அங்க இருக்க வீட்ட பூட்டி போட்டுட்டு இங்க வந்து தங்க முடியுமா?”
“இந்த வீட்ட வாடகைக்கு விட்டா சரியா போச்சு. என்ன இருக்கு இந்த ஊருல? சென்னைல வந்து கொஞ்ச நாள் இருக்கேன். உன் மாமனார வர வேணாம்னு சொல்லிடு, நாங்க வந்து தங்குறோம்” என அடமாக சொன்னார்.
தான் உடன் இருக்கையில் பெற்றோர் இங்கு வந்து தங்கினாலே ஆயிரத்தெட்டு பிரச்சனைகள் வரும், இதில் தான் இல்லாத சமயத்தில் வர வைப்பதா? என அதிர்ந்து விட்டான்.
வழக்கம் போல முகத்தில் அடித்தது போல வராதே என அம்மாவிடம் சொல்ல முடியவில்லை, இருந்த போதும் அவரது திட்டத்தை நிறைவேற்றவும் கூடாது என மனதில் திண்ணமான எண்ணம்.
“என்னடா பேச்சையே காணோம்? நீ இருக்கப்பவே வந்திடுறோம், டிக்கெட் போட்ரு. அப்புறம் அடுத்த மாசமே அந்த அம்பதினாயிரம் கடன அடைச்சுடு, வட்டி வேஸ்ட் ஆகுதா இல்லையா?” என்றார்.
“நமக்குன்னு ஒரு வீடு வேணும்னு பார்த்து பார்த்து கட்டின வீட்டும்மா அது. அந்த வீடு நமக்கில்லைனு ஆகிட கூடாதுன்னுதான் என் வேலை வரை போக விட்டேன். அங்கதான் நீங்க இருக்கணும். உங்க செலவுக்கு தேவையானத அனுப்புறேன், அதுக்கு மேல என்னை தொந்தரவு பண்ணாதம்மா. தேனு நகையெல்லாம் இன்னும் கைக்கு வரலை, என் மாமனாருக்கு தர வேண்டிய பணம் வேற இருக்கு. புரிஞ்சுக்கம்மா” என்றான்.
வர வர நீ ஆள் மாறி விட்டாய், கடமையை கை விடுகிறாய் என லேசாக அழுது பார்த்தார் சுந்தரி.
அத்தனை அழுத்த மனம் படைத்தவன் இல்லை என்ற போதும் இனியும் பேசா விட்டால் மனைவிக்கு நியாயம் செய்யாதவன் ஆகி விடுவோம் என உணர்ந்து, “மகனா, பிரதரா என்ன கடமையோ அத முடிஞ்ச அளவுக்கு செஞ்சிட்டேன்மா, ஹஸ்பண்டா, அப்பாவா கூட எனக்கு சில கடமைகள் இருக்கும்மா. வைக்கிறேன்மா”என சொல்லி பேச்சை முடித்துக் கொண்டான்.
கணவன் பேசியதையெல்லாம் கேட்டுக் கொண்டுதான் இருந்தாள் தேன். அந்தப் பக்கம் பேசியது காதில் விழாததால் சற்று குழப்பமாகத்தான் இருந்தாள்.
“என்னங்க விஷயம்?” என அவள் கேட்கவும் அம்மாவை பற்றி எப்படி குறையாக சொல்ல என விழித்தான்.
நீயெல்லாம் திருந்தவே மாட்ட எனும் விதமாக பார்த்தவள் அங்கிருந்து சென்று விட்டாள். அவனாக அவளை தேடி வந்து உள்ளதை சொன்னான்.
“நீங்க இப்ப சொல்றதெல்லாம் தணிக்கை செய்யப் பட்டதா, இல்லை தணிக்கை செய்யாததா…” என அவள் கிண்டலாக கேட்கவுமே, “தேனு…” என பாவமாக இழுத்தான்.
புன்னகை செய்தவள், “உங்கம்மா குணம் இதுதானே, சரியாத்தான் அவங்ககிட்ட பேசியிருக்கீங்க, ஆனா இதே நிலைப்பாட்டோட நீங்க இருக்க முடியுமான்னு நான் பார்க்கணும்” என்றாள்.
அவன் கண்டனமாக பார்த்தான். கண்கள் சிமிட்டி சிரித்தவள், “உங்கள எங்க தட்டணும் எங்க இழுக்கணும்னு அத்தைக்கு ரொம்ப நல்லா தெரியும். பழைய படி இருந்தா நிச்சயம் நீங்க அவங்க கைப் பொம்மைதான்” என்றாள்.
“போடி…” என சொல்லி நகரப் பார்த்தவனை இழுத்து பிடித்தவள், “அவங்கள வர வேணாம்னு நீங்க சொல்லிட்டீங்க, வந்தாலும் எப்படி சமாளிக்கன்னு எனக்கு தெரியும். ஆனா… நீங்க மட்டும், தேவைக்கு அதிகமாவோ இல்லை தேவையில்லாமலோ அங்க ஏதாவது செஞ்சதா எனக்கு தெரிஞ்சுது…” என முடிக்காமல் நிறுத்தினாள்.
அவன் குறு குறுப்பாக அவளையே பார்க்க, “என் சொந்தக்கால்ல நிக்கிற தைரியம் எனக்கு வந்திடுச்சு, சும்மா சும்மா உங்களை இப்படி செய்ங்க அப்படி செய்யாதீங்கன்னு இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் கொடுக்க எனக்கு நேரமும் இல்லை விருப்பமும் இல்லை, என் வழிய பார்த்திட்டு போயிட்டே இருப்பேன்”என்றாள்.
“முதல்ல போறேன் போறேன்னு சொல்றத நிறுத்து. உன் மனசுல என்னை விட்டு போற எண்ணம் எங்கேயோ ஆழ படிஞ்சு போயிருக்கு, அதான் இப்படி சொல்ற. போறணும்னு நினைக்கிறவ எதுக்கு கல்யாணம் பண்ணிக்கணும்? போய் பாரு அப்புறம் தெரியும் சேதி” என கோவப்பட்டான்.
“நல்லாருக்கு உங்க கோவம், இப்படியே இருங்க மாறிடாதீங்க” அவனது தோளில் தட்டி சொன்னாள்.
“நான் கோவமா பேசுறேன் தேனு”
“அதான் தெரியுதே, மனுஷனுக்கு கோவமும் முக்கியம். தேவை படுற இடத்துல கோவ படணும், குரல் உசத்த வேண்டிய நேரத்துல உசத்தணும். இல்லைனா போட்டு மிதிச்சு குழிக்குள்ள புதைச்சிடுவாங்க. அதனால நல்லாவே கோவ படுங்க” என்றாள்.
“போதும் போதும் என்னை ஏத்தி விட்டது. சூடா டீ போட்டு தாயேன்” என அவளின் கவனத்தை திசை திருப்பினான். அவளும் சமையலறை சென்று விட்டாள்.
அம்மாவின் அழுகை ஒரு பக்கம் உறுத்தினாலும் தன் முடிவில் உறுதியாகவே இருந்தான் ஆனந்த். மனைவியின் பேச்சினால் அல்ல, கடந்த சில மாதங்களாக அவன் கடந்து வந்த பாதை போதித்த பாடம் இது.
மகளுக்கு துணைக்கு செல்லப் போவதாக தங்கப்பன் சொல்லவும் என்ன எது என விசாரித்து ஆனந்த் பெங்களூரு செல்லப் போவதை தெரிந்து கொண்டனர் கலைவாணியும் ராஜ்குமாரும்.
ராஜுக்கு தங்கையை நினைத்து நிம்மதியாக இருக்க, கலைவாணிதான் மாப்பிள்ளையுடன் செல்லாமல் இவள் ஏன் சென்னையில் இருக்க வேண்டும், அது சரியாக வராதே என ஆரம்பித்தார்.
அவர்களின் முடிவு இது, தன்னால் முடிந்த உதவியை செய்ய முடியுமே தவிர, என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது என்றெல்லாம் நான் கருத்து சொல்ல மாட்டேன் என திட்ட வட்டமாக சொல்லி விட்டார் தங்கப்பன்.
மகளின் மீதான கோவத்தை விட்டொழித்து அவளுக்கு அழைப்பு விடுத்தார் கலைவாணி. பீதியுடன்தான் பேச ஆரம்பித்தாள் தேன்.
வேலைக்கு போகாதே, நீயும் உன் கணவருடனே செல், இனிமேல் வரவு செலவுகளை உன் கையில் வைத்துக்கொள் என போதனைகள் செய்தார் கலைவாணி. இடையிடையே உன் கணவனை முழுதும் நம்பி விடாதே, அவரெல்லாம் திருந்தும் ஜென்மம் இல்லை, அவரது அலைபேசியை அடிக்கடி வேவு பார், அவரது வீட்டினருடன் பேசும் போது ஒட்டு கேள் என தவறாக வேறு வழி காட்டினார்.
பொறுமையாக கேட்டுக் கொண்ட தேன், “அம்மாவா எம்மேல உனக்கு அக்கறை இருக்கலாம். அதுக்காக நீ சொல்ற எல்லாமே நான் கேட்கணும்னு இல்லை. அவரை பத்தி தப்பா பேசவும் உனக்கு உரிமை இல்லை. எங்க வாழ்க்கைய நாங்க பார்த்துக்கிறோம்மா. நீயும் உன் உடம்ப பார்த்துக்க, அண்ணி இன்னும் வீட்டுக்கு வரலைதானே? அண்ணன் லைஃபை எப்படி சரி செய்யலாம்னு பாரும்மா. எனக்கு வேலை இருக்கும்மா” என சொல்லி, அம்மாவுடனான பேச்சை முடித்துக் கொண்டாள்.
தன்னை மதிக்கவில்லை, தான் நல்லதுக்கு சொல்வது புரியாமல் இருக்கிறாள், மீண்டும் கஷ்டம் என வந்து நிற்கட்டும் அப்போது பார்த்துக் கொள்கிறேன் என கணவருக்கும் மகனுக்கும் கேட்கும் படி புலம்ப ஆரம்பித்து விட்டார் கலைவாணி.
ராஜ்குமார் தன் அம்மாவை சமாதானம் செய்ய, “கத்திட்டு இருக்க தவக்களைய கத்தாதன்னு சொன்னா கேட்குமாடா? போ போயி வேற வேலை இருந்தா பாரு” என்றார் தங்கப்பன்.
கலைவாணி அவரை முறைக்க, அவரும் பதிலுக்கு முறைத்து விட்டு சென்றார்.
வினயாவின் இறந்து போன மாமனாரின் பெயரில் ஏதோ பூர்வீக சொத்து இருக்கிறது. அவரது உடன் பிறந்தோருக்கும் அதில் பங்கு இருக்கிறதாம். இரண்டு சகோதரிகள் வட மாநிலத்தில் செட்டில் ஆகி விட்டனர். ஒரு சகோதரர் மைசூரில் இருக்கிறார். அவர்களுக்கு உரிய பங்கை கொடுத்து விட்டு அந்த சொத்தை வினயாவின் கணவன் வாசுவையே எடுத்துக் கொள்ள சொல்கின்றனராம்.
அடிக்கடி இங்கு வர முடியாது, காரியத்துக்கு வரும் சமயத்திலேயே பணத்தை செட்டில் செய்து விட்டால் மற்ற நடைமுறைகளையும் சூட்டோடு சூடாக முடித்து விடலாம் என சொல்கின்றனராம்.
காலக்கெடு கேட்டால் மனம் மாறி விடுவார்களோ என நினைத்த வாசுவும் அவர்கள் சொல்வது படியே நடக்க நினைக்கிறான். குறித்த காலத்துக்குள் பணம் புரட்ட சிரமம் என்பதால் மனைவியின் உதவியை நாடினான்.
அப்பாவின் ரிடையர்மென்ட் பணம் வங்கியில் இருப்பது வினயாவுக்கு நினைவு வந்தது. அதை கணவனிடம் சொன்னவள், “அப்பாட்ட விஷயத்தை சொல்லி அந்த பணத்தை கேட்கலாம். மெதுவா திருப்பி கொடுத்துக்கலாம்” என்றாள்.
“அதுல உன் கூட பொறந்த மத்த ரெண்டு பேருக்கு கூட பங்கு இருக்குமே. அவங்களோட சம்மதத்தையும் கேட்டுக்கிட்டு வாங்குறதுதான் முறை வினயா. அவங்களுக்கு ஓகேன்னாதான் நான் வாங்கிப்பேன், இல்லைனா உன் பங்குக்கு உள்ளதை மட்டும் கேட்டு வாங்கி தா, அது கூட ஒரு வருஷத்துல உங்கிட்ட திருப்பி கொடுத்திடுவேன். மிச்சத்துக்கு வேற யோசிக்கலாம்” என்றான் வாசு.
“அதெப்படி சமம்திக்காம போவாங்க? கடனாத்தானே வாங்குறோம், அப்பாவே பேசிக்குவார். பணத்துக்கு என்ன செய்யன்னு டென்ஷன் எடுக்காம தூங்குங்க” என அத்தனை உறுதியாக சொன்னாள் வினயா.
மாமனாரிடமிருந்து பணம் கிடைத்து விடும் என நம்பிய வாசுவும் உறங்க சென்று விட்டான்.
வினயா தன் அம்மாவுக்கு அழைத்து விஷயத்தை சொன்னாள். மகளுக்கு சொத்து சேர்கிறது என்றால் வேண்டாமென்றா சொல்வார் கலைவாணி. கையோடு மகனிடம் பேசினார். அவன் சம்மதம் சொல்லவும் கணவரிடம் பேசினார்.
ஆனந்துக்கு பணம் கொடுத்ததை சொன்னால் சிக்கலாகும், பெரிய மகளுக்கு தர மாட்டேன் எனவும் சொல்ல முடியாது.
எப்படி சமாளிக்கவென விழி பிதுங்கி நின்றார் தங்கப்பன்.