“நீங்க என்னக்கா சொல்றீங்க?” என்று பாமினி கேட்ட கேள்விக்கு நீலவேணியால், மனதார எந்தவித பதிலும் சொல்லவில்லை.
என்னவென்று சொல்ல முடியும் அர்ச்சனாவை அச்சுதனுக்காக பேசலாம் என்று சொல்ல முடியுமா?
அப்படியே சொன்னாலும் கூட, அதற்கு அச்சுதன் முதலில் சம்மதம் சொல்வானா?!
பெரும் தடையாய் அவனே நிற்கையில், அவரால் வேறென்ன தான் சொல்ல முடியும்?!
அவரின் கட்டுப்பாட்டையும் மீறி, ஒரு பெருமூச்சு வந்துவிட “என்னக்கா நான் எதுவும் தப்பா கேட்டுட்டேனா?” என்றார் பாமினி.
“அட அதெல்லாம் இல்லை பாமி…” என்று அவர் கரம் மீது கரம் வைத்தவர் “அர்ச்சனா நல்ல பொண்ணு. புத்திசாலி.. நம்ம சொல்றதை ஈசியா எடுத்து, அழகா புரிஞ்சுக்கிறா. அதே நேரம் அவளோட கருத்தையும் சொல்லாம விடுறது இல்லை. தேவையில்லாத அலட்டலோ, பதற்றமோ எதுவுமே இல்லை..” என்று சொல்ல,
“அதான் க்கா உங்கக்கிட்ட கேட்டேன். அவளோட இருந்திருக்கீங்க.. சோ நீங்க இதெல்லாம் கவனிச்சு தானே பார்த்திருப்பீங்க..” எனும்போதே, அச்சுதன் அங்கே வந்தவன்,
“என்ன ரெண்டு அழகிய லேடீஸ் என்ன ரகசியம் பேசுறீங்க?” என்று கேட்க,
மகனின் பேச்சில் முன்னிருந்த கேலி இப்போது எட்டிப்பார்ப்பது கண்டு, நீலவேணி லேசாய் முகம் மலர்ந்தாலும், மனதிற்குள் அவருக்குள் கவலையாய் இருந்தது. கைக்கு கிடைத்த வரம் பிடிமானம் இல்லாமல் இருக்கிறதே என்று.
“வாடா ப்பா.. உனக்கு தெரியாத ரகசியம்னு இந்த குடும்பத்துல எதுவும் இருக்கா என்ன?” என்ற பாமினி,
‘சொல்லட்டுமா?!’ என்பதுபோல் நீலவேணியின் முகம் பார்க்க, அவரோ சலனமே இன்றி இருந்தார்.
அவரின் மௌனத்தையே சம்மதமாய் ஏற்று “அது அச்சுதா.. நம்ம அர்ச்சனா இருக்கல்ல, அவளை பிரசாந்துக்கு பேசலாமான்னு ஒரு யோசனை…” என்று பாமினி பேசி நிறுத்த,
அச்சுதன் முகத்தினில் ஏதேனும் சின்ன மாற்றமெனும் தெரிகிறதா என்று பார்த்து இருந்தார் நீலவேணி. ஆனால் அவனோ, சரியான கல் நெஞ்சக்காரன் ஆகிற்றே. அவ்வித பாவனைகளையும் முகத்தினில் காட்டாது, லேசாய் நெற்றி சுறுக்கியவன் “பிரசாந்த் என்ன சொல்றான் சித்தி?” என்று கேட்க,
“அவன்கிட்ட இன்னும் சொல்லலை. உங்க சித்தப்பாக்கும், இதோ அக்காக்கும் மட்டும் தான் தெரியும்.. அதான் அவளோட இயல்பு எப்படின்னு பேசிட்டு இருந்தோம்…” என்று சொல்ல,
“அதுவும் சரிதான்…” என்றவர் “என்ன ஜாதக பொருத்தமும் வந்துட்டா நிம்மதி. பிரகாஷ் அனிதாவுக்கே ஜாதகமும் சரியா இருந்ததுனால தான் உன் சித்தப்பா முழு மனசா சரின்னு சொன்னார்..” என்றிட, ஜாதகம் என்றதுமே அச்சுதனுக்கு தனுஜாவின் அப்பா பேசியது நினைவில் வர, அவனது முகம் அப்படியே மாறிவிட்டது.
மகனது முகம் திடீரென்று மாறவுமே, ஒருவேளை அவனுக்கும் தனுஜாவிற்கும் நடந்த திருமண ஏற்பாடுகளைப் பற்றி நினைக்கிறானோ என்று எண்ணியவருக்கு ‘என்னிக்கு இவன் இதுல இருந்து வெளிய வருவான்..?’ என்று கவலையாய் இருந்தது.
பாமினி அச்சுதன் சொல்லியது போல, முதலில் அனிதாவிடம் இந்த பேச்சை ஆரம்பிக்க, அவளோ அதிர்ந்து பார்த்தவள், பின் ‘என்னோட தங்கச்சி என்னோடவே இங்கயே வாழ ஒரு சான்ஸ்…’ என்று எண்ணியவள்,
“நல்ல விஷயம் தானே அத்தை.. ஆனா அவ, ஒரு ப்ராஜக்ட்டாவது நல்லபடியா முடிச்சிட்டு தான் கல்யாண பேச்சுன்னு சொல்லிருக்கா…” என்று சந்தோசமாகவே சொல்ல,
“அதுக்கென்ன ம்மா.. இப்போதான் அச்சுதன் ப்ராஜக்ட் பண்றா தானே.. இப்போ இருந்து பேசினா, கட்டிட வேலை முடியவும் கல்யாணம் வைக்கவும் சரியா இருக்கும்…” என்று பேச,
“ம்ம் முதல்ல உங்க பசங்க ரெண்டு பேர்கிட்டயும் பேசுங்க அத்தை…” என்று சரளமாய் மருமகள் பேசுவதை கண்டு சிரித்துக்கொண்டார் பாமினி.
இப்படியே விஷயம் குடும்பத்தில் அனைவருக்குமே தெரியவர பிரகாஷிற்கு சந்தோசம் தான் என்றாலும் ‘ம்மா இதுல அர்ச்சனா விருப்பமும் முக்கியம்..’ என்றுவிட, அதையே தான் பிரசாந்தும் சொன்னான்.
“ம்மா அரேஞ்சுடு மேரேஜ் அப்படின்னாலும், நீங்க பேசுறது அவங்களை போர்ஸ் பண்றது போல இருக்கக் கூடாது. ஏற்கனவே பொண்ணு குடுத்திருக்கீங்க அப்படிங்கிற கட்டாயத்துல எதுவும் இருக்கக் கூடாது. அவங்களுக்கு ஓகே அப்படின்னா மேற்கொண்டு பார்க்கலாம்..” என்றிட, சுமிதாவும் சுரேந்திரனும் கூட இதையே தான் சொன்னார்கள்.
ஆனால் அர்ஜூனோ “அதென்ன அவங்களுக்கு ஓகே அப்படின்னா மேற்கொண்டு பார்க்கலாம்னு சொல்றது…?” என்று பிரசாந்திடம் கேட்க,
“டேய்.. நான் தான் அன்னிக்கே சொன்னேனே அர்ச்சனா வந்து லேடி அச்சுதன் அப்படின்னு. அதுனால பேசி பார்த்து தான் முடிவு சொல்ல முடியும்…” என்று பெரியவர்கள் முன்னே வெளிப்படையாகவே பேசிவிட்டான்.
மகனது எண்ணம் அறிந்ததுமே, தாமோதரன் “அனிதா, நீ இப்போவே உங்க வீட்ல எதுவும் பேசிக்க வேணாம். முறைப்படி நாங்க தான் பேசனும். வீட்ல நேரா போய் பேசினா, அவங்களுக்கு அது தர்ம சங்கடத்தை கொடுக்கலாம். அதனால அடுத்தவாரம், பிரகாஷ் பர்த்டே பார்டி வருதுல்ல.. அப்போ உங்க அப்பா அம்மாக்கிட்ட நானே தோது பார்த்து பேசுறேன். ஜாதகமெல்லாம் பொருந்தி வந்தா, அடுத்து அர்ச்சனாவும் பிரசாந்தும் பேசி பார்த்து முடிவு சொல்லட்டும்…” என்றிட, அவர் சொல்வதும் சரியாய் பட்டது அனைவருக்குமே.
அனிதாவிற்கோ சந்தோசம் பிடிபடவில்லை. பிரகாஷ் கொஞ்சம் கண்டிப்பும் அழுத்தமும் நிறைந்தவன். எப்போதும் அனிதாவிடம் இப்படி இரு அப்படி இரு என்று சொல்லிக்கொண்டே இருப்பான். ஆனால் பிரசாந்த் அப்படியில்லை. அனைவரிடமும் இலகுவாய் கலகலப்பாய் பழகும் ஒருவன்.
தங்கைக்கு அவன் பொருத்தமாகவே இருப்பான் என்ற நம்பிக்கை அவளுக்கு இருக்க, அப்பாவிடம் சொல்லவில்லை என்றாலும் இதனை அம்மாவின் காதினில் போட்டு வைக்க வேண்டும். வந்த இடத்தில் திடீரென்று இவர்கள் பெண் கேட்டு பேசினால், அது அதிர்ச்சி தானே கொடுக்கும். அம்மா நேரம் பார்த்து அப்பாவிடம் சொல்லட்டும் என்றெண்ணி ரோஜாவிடம் இதனை சொல்லியே விட்டாள் அனிதா.
“என்ன டி நிஜமா தான் சொல்றியா?!” என்று ரோஜா கேட்க,
“ம்மா ஆமா ம்மா… இன்னிக்கு முழுக்க வீட்ல இதே தான் பேச்சு…” என்று நடந்த அனைத்தையும் விலாவாரியாய் சொன்னவள் “ம்மா இதுமட்டும் ஓகே ஆகிட்டா எனக்கு ரொம்பவே சந்தோசமா இருக்கும்..” என,
“எங்களுக்கும் சந்தோசமா தான் டி இருக்கும். ரெண்டு பொண்ணுங்களையும் ஒரே இடத்துல குடுத்துட்டா நிம்மதி தான். நல்ல மனுசங்களும் கூட. இதே ஊர்ல இருக்கலாம். எப்போனாலும் என் பொண்ணுங்களை பார்த்துக்கலாம்.. பிரச்சனை இல்லாத மனுசங்க..” என்ற ரோஜாவிற்கும் மனதினில் என்னவோ இனம் புரியாத சந்தோசம்.
நல்ல மனிதர்கள், வசதிக்கு பஞ்சமில்லை. பிரசாந்த் மீதும் நல்ல அபிப்ராயமே இருந்தது. அர்ச்சனாவின் குணத்திற்கும் அவனுக்கும் பொருந்திப் போகும் என்று எண்ணியவர் கணவருக்கு அழைத்து இப்படி என்று சொல்ல,
“அப்படியா? ஆனா அர்ச்சனா என்ன சொல்றான்னு தெரியலையே..” என்றார்.
“அட அவ என்ன சொல்லப் போறா.. அன்னிக்கே கேட்டதுக்கு ஒரு ப்ராஜக்டாவது பண்ணனும் அப்படின்னா தானே. இப்போ ஆரம்பிக்க போறா தானே. அவங்க பேசட்டும். அடுத்து இவக்கிட்ட பேசிட்டு சொல்லலாம்…” என்றிட ,
கார்மேகமோ “ரொம்ப அவசரப் படாத ரோஜா.. நிதானம் தேவை.. ஏற்கனவே ஒரு பொண்ணு குடுத்திருக்கோம். அவங்க கேட்க நினைக்கிறது சந்தோசம் தான். ஆனா இதுல கட்டிக்க போறவங்க விருப்பமும் முக்கியம். அனிதாவுக்கு எப்படி அவளுக்கு மனசுக்கு பிடிச்ச வாழ்க்கை அமைச்சு கொடுத்தோமோ, அதுபோல தான் அர்ச்சனாவுக்கும். அவளுக்கு பிடிச்சிருந்தா எனக்கும் ரொம்பவே சந்தோசம் தான். இப்போதைக்கு எதுவும் அவக்கிட்ட பேசிக்காத..” என்று வைத்துவிட்டார்.
கணவர் சொல்வதும் சரி என்றுபட, அனிதாவிடம் “அர்ச்சுக்கிட்ட இப்போதைக்கு எதுவும் பேசிக்காத டி..” என்றிட,
“சரிம்மா…” என்றுவிட்டாள் அனிதா.
இங்கே இத்தனை நடந்துகொண்டு இருக்க, அர்ச்சனாவோ அவர்களின் கம்பனிக்கு காலையில் அப்பாவுடன் வந்திருந்தவள், அச்சுதன் நகை மாளிகையின் ப்ராஜக்ட் மீட்டிங்கில் இருக்க, அப்போதுதான் அவளுக்குத் தெரிந்தது அவள் சொன்ன வடிவமைப்பத்தான் அச்சுதன் தேர்வு செய்திருக்கிறான் என்று.
சந்தோசப் படவேண்டிய மனது மேலும் கலங்கி நிற்க, மீட்டிங் முடிந்ததுமே “டாடி நான் திருவானைகாவல் போயிட்டு வர்றேன்…“ என்றுசொல்லி கிளம்பியும்விட்டாள்.
ஸ்ரீரங்கம் கோவிலுக்கு மாதம் ஒருமுறை சென்றால், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரரையும், அளிலாண்டேஸ்வரியையும் வாரம் ஒருமுறையேனும் பார்த்துவிட்டு வந்திடுவாள் இங்கிருக்கும் வரைக்கும்.
மீண்டும் இந்தியா வந்தவள், இங்கே எங்கேயும் செல்லாமல் இருக்க, இப்போதென்னவோ நேற்று சென்னையில் இருந்து வந்ததில் இருந்து மனது அடித்துக்கொண்டு இருக்க, அதிலும் இப்போதும் அச்சுதன் அவள் சொன்ன வடிவமைப்பை தான் முடிவு செய்திருப்பது கண்டு மேலும் கனத்துப் போனது.
பின்னே அச்சுதன் மீது எழுந்திருக்கும் இந்த உணர்வுகளுக்கு பெயர் காதல் என்று திண்ணமாய் தெரிந்த பின்னே எப்படி மனது கனத்துப் போகாமல் இருக்கும்.
அவனைக் காணும் போதெல்லாம் சலனமுறும் மனதை எப்படியும் திசைதிருப்பிடலாம் என்று இருந்தாள். எப்போதுமே அவனையே நினைக்கும் நினைப்பை வேலைகளில் மூழ்கினால் மாற்றிக்கொள்ளலாம் என்று எண்ணினாள்.
ஆனால் நேற்றைய தினம் திருச்சி விமான நிலையம் விட்டு வெளி வந்து, அவரவர் வீடு நோக்கி செல்லும் பொருட்டு, இருவருக்குமே அவரவர் இல்லத்தில் இருந்து கார் வந்திருக்க “ஓகே பார்த்து போயிட்டு வாங்க…” என்று நீலவேணியிடம் சொல்லிவிட்டு,
“பை…” என்று அச்சுதனிடம் சொல்லிவிட்டு அவனிடம் கரம் குலுக்க, அந்த நொடி அவளது இதயத்தில் அப்படியொரு வலி கண்டது நிஜம்.
அவனை விட்டுச் செல்வதா?!
இந்த கரத்தை விட்டு பிரிவதா?!
அது முடியுமா என்று நொடியில் அவளுள் பட்டிமன்றமே நடக்க “நீயும் பார்த்து போ அர்ச்சனா…” என்றவன், கரம் குலுக்கி விடுவித்து நடக்க, போகும் அவர்களையே பார்த்து நின்றவளுக்கு, திரும்பி நடந்திடவே தோன்றவில்லை.
“மேம்…” என்று டிரைவர் வந்து அழைக்க,
“யா..!” என்று தலையை ஆட்டியவளுக்கு, இப்படியே ஓடிச்சென்று அச்சுதனின் கரத்தினை மீண்டும் பற்றிக்கொண்டு ‘நானும் உன்னோடு வருகிறேன்..’ என்று சொல்லவே மனது ஆவல் கொள்ள, ஏனோ அவனில்லாது அவளால் இருந்திடவே முடியாது என்பதுபோல அவளுக்குத் தோன்றிவிட்டது.
‘என்ன அர்ச்சனா இது? நீயா இப்படி பலவீனம் ஆகிறாய்..’ என்று அவளுக்கு அவளே கேட்டுக்கொள்ள,
‘காதல் என்று வந்தால் யாராகினும் அப்படித்தான்..’ என்று அவள் மனம் கூறிய செய்தி கேட்டு அதிர்ந்து போனாள் அர்ச்சனா.
காதலா?!
எனக்கா?
அச்சுதன் மீதா?!
மனதை கட்டுப்படுத்த முயன்று தோற்றுப்போய் அதை காதல் என்று ஏற்றுக்கொள்ளவும் வேண்டுமா?!
அவளது நிலையை எண்ணி எண்ணி அவளுக்கே அழுகை வரும்போல் இருந்தது. இதனை வெளியில் யாரிடமும் சொல்லவும் முடியுமா? அத்தனை ஏன் அச்சுதனிடம் கூட இதனை சொல்ல முடியாதே.
அவனது காத்திருப்பும், கவலைகளும் வேறு ஒருத்திக்கு அல்லவா சொந்தமாகி இருக்கிறது. அது காதல் என்றில்லை என்றாலும், அச்சுதனின் எண்ணங்கள் எல்லாம் வேறாக அல்லவா இருக்கிறது.
அதிலும் அவனுக்கு மன அழுத்தம் தரக்கூடிய எதையும் அவனிடம் பேசக் கூடாதாம். எதைச் சொல்வது? அதுவும் இதை சொல்ல முடியுமா என்ன?
மனது நோந்துபோனவளுக்கு அன்றைய தினமெல்லாம் உறக்கமே வரவில்லை. உற்சாகமே இல்லாமல் தான் அப்பாவுடன் கம்பனிக்கு வந்தாள். இங்கேயே இதனைப் பார்த்ததும் இன்னமும் அவளுள் அழுத்தம் கூட, மூச்சு முட்டுவது போலிருக்க, கோவிலுக்கு கிளம்பிவிட்டாள்.
கேள்வியாய் பார்த்த அப்பாவிடம் “இங்க வந்து கோவிலுக்கே போகலை டாடி…” என்று சொன்னவள் நிற்கவில்லை கிளம்பிவிட்டாள்.
அவள் சென்றபின்னே தான் ரோஜா கணவருக்கு அழைத்துப் பேசியது எல்லாம். அர்ச்சனாவோ, ஜம்புகேஸ்வரரைப் பார்த்தவிட்டு, அகிலாண்டேஸ்வரி அம்மையையும் பார்த்துவிட்டு வெளிப் பிரகாரத்தில் வந்து ஒரு தூணில் சாய்ந்து அமர்ந்துகொண்டாள்.
‘எனக்கேன் தாயே இப்படி ஒரு நிலை..’ என்று அன்னையிடம் கேட்டுவிட்டுத்தான் வந்திருந்தாள்.
அகிலத்தை ஆளும் எல்லாம்வல்ல அந்த நாயகி ஒரு புன்னகையை மட்டுமே அர்ச்சனாவிற்கு பதிலாய் தந்து அனுப்ப, கண்ணீர் வரும்போல இருந்தது அவளுக்கு. அழுதிடவும் கூட அவளுக்கு இப்போது முடியாது. வீட்டிலோ சிறு முகமாற்றம் என்றாலும் கூட அப்பாவும் அம்மாவும் கவனித்துவிடுவர்.
அனிதா சென்றதில் இருந்து, ரோஜா வந்து மகளுடன் படுத்து எதேனும் பேசிக்கொண்டே இருப்பர். இரவு நேரத்தில் கூட தனித்து அழ முடியாது.
அர்ச்சனாவிற்கு இப்போதைக்கு குறைந்த பட்சம் சுதந்திரமாய் அழுதிடவேண்டும். அதற்கும் வழியில்லை என்றுதான் அவள் திண்டாடி போய்விட்டாள்.
‘எத்தனை சந்தோசமாய் இருந்தேன்.. அதிலும் இங்கே வரப்போகிறோம் என்றதும் எத்தனை ஆனந்தம்…’ என்று எண்ணியவளுக்கு அச்சுதனை பார்த்தாலும் அவனது யோசனைகளை வந்ததை முதலிலேயே நமக்குள் தடுத்திருக்கவேண்டும் என்று தோன்ற, இப்போது எதுவும் பயனில்லை என்று தோன்றியது.
இதோ இப்போதும் கூட அவனுக்கு மன அமைதி கொடு ஆண்டவா என்று வேண்டிவிட்டுதானே வந்தாள்.
காதலிப்பவனிடமே சொல்ல காதலையும், அவனிடம் வெளிக்காட்ட முடியாத அவன்மீதான நேசத்தையும் வைத்துக்கொண்டு நான் என்ன செய்யப் போகிறேன் என்ற மிகப் பெரிய கேள்வி அவளுள் எழ, அவளை அவள் சமாளிப்பதே பெரும்பாடாய் இருந்தது.
‘நோ அர்ச்சனா.. நீ இப்படி இருக்கக் கூடாது…’ என்று ஆழ மூச்செடுத்து விட்டவளுக்கு சட்டென்று மனதினில் ஒரு முடிவு மின்னல் வேகத்தில் தோன்றியது.
‘நீ இங்கிருந்தால் தானே. அதுவும் அச்சுதன் உன் கண்முன்னே இருந்துகொண்டே இருந்தால் தானே இதெல்லாம்.. நீ சென்றுவிடு.. திரும்ப அமெரிக்கவே சென்றுவிடு.. எங்கிருந்து வந்தாயோ அங்கேயே சென்றுவிடு…’ என்று அவளது அறிவு அறிவுரைச் சொல்ல ,
“ஆம்.. செல்லத்தான் வேண்டும்.. அச்சுதனின் இந்த நகை மாளிகையை நல்லபடியாய் முடித்துக் கொடுத்துவிட்டு சென்றே விடவேண்டும்..” என்று திண்ணமாய் முடிவு செய்துகொண்டாள்.