நீலவேணிக்கு அத்தனை மகிழ்வாய் இருந்தது மருத்துவர் சொன்னதைக் கேட்டு. லட்சோப லட்சங்கள் நன்றிகளை ஆண்டவனுக்கு மனதினில் சொல்லிக்கொண்டார்.
“டோன்ட் வொர்ரி நீலா மேம்.. ஹி இஸ் பக்கா ஆல்ரைட்.. அச்சுதனோட ஸ்ட்ரெஸ் அண்ட் டிப்ரஷன் லெவல் ரொம்பவே கம்மியாகிருக்கு. லாஸ்ட் டைம் ரிப்போர்ட்ட விட இந்த தடவை பெட்டர் இம்ப்ரூவ்மென்ட். டேப்ளட்ஸ் கூட கம்மி பண்ணிட்டேன்.. இதே போல கிராப் இருந்தா அடுத்த சிட்டிங்கல இருந்து டேப்ளட்ஸ் எதுவுமே வேண்டாம்…” என்று மருத்துவர் சொல்லவும், அச்சுதனை பெற்றவராய் அவருக்கு அப்படியொரு மன நிம்மதி.
“ஆனா இன்னொரு விஷயம்.. இப்போ எப்படி மைன்ட் கிளியரா இருக்கோ. அதுபோலவே கண்டினியூ ஆகணும். ரொம்பவும் எதையும் போட்டு அலட்டிக்கக் கூடாது. அதிகமா யோசிக்கிறது போலவோ, இல்லை அதிகமா அவருக்கு மன அழுத்தம் கொடுக்கிறது மாதிரியான சூழலை அவருக்குக் கொடுக்காதீங்க. ஏன் சொல்றேன்னா, உங்களோடது பெரிய பேமிலி இல்லையா. சோ, சூழ்நிலைகள் எப்பவும் ஒரேமாதிரி இருக்காது தானே…” என்று மருத்துவர் சொல்ல, அவர் சொல்ல வருவதின் சாராம்சம் புரிந்தது இருவருக்குமே.
இருந்தும், அச்சுதனுக்கும் மனதினில் ஒரு ஆசுவாசம் தான். இன்னும் எத்தனை நாளைக்கு மருந்து மாத்திரைகள் என்று எடுப்பது.
அதுவே அவனை ஒரு நோயாளி போல அல்லவா வெளியில் சித்தரிக்கிறது. அதிலும் நோயாளி என்பதனை விட ‘பைத்தியக்காரன்..’ என்றல்லவா பேச்சிருக்கிறது.
‘ஏன்டா டேய் என்னைப் பார்த்தா பைத்தியம் போலவா இருக்கு…?’ என்று எப்போதும் அவனிடம் இந்த கோபக் கேள்வி உண்டு.
‘என்னை அப்படி நினைச்சா நீங்கதான்டா பைத்தியம். என்னோட உயரமே வேற…’ என்று காட்டத்தான் இப்போது தொடங்கியிருக்கும் நகை மாளிகை கட்டுமானம்.
‘என்னோட முயற்சியில.. என்னோட உழைப்புல.. என்னோட திறமைல பாருங்கடா.. நான் யாருன்னு பாருங்க…’ என்று அனைவருக்கும் காட்டிக்கொள்ளவே இந்த புதிய ஏற்பாடு.
அதுவும் அச்சுதன் மனது மட்டுமே அறிந்த ஏற்பாடு..
வெளிப்பார்வைக்கு, தொழிலை பெரிது செய்கிறார்கள் அவ்வளவே. ஆனால் அவன் அப்படி பெரிது செய்திட வேண்டும் என்ற நிச்சயமே இலையே. இருக்கும் சொத்துக்களே இன்னும் நான்கு தலைமுறைக்கு வருமே. இத்தனை மெனக்கெட வேண்டும் என்று அவனுக்கு எதுவுமே இல்லை.
ஒற்றைப் பிள்ளை. இருக்கும் தொழிலை வைத்துக்கொண்டே அவன் ராஜாவாய் இருக்கலாம். ஆனால், அவன் அப்படி இல்லை இல்லையா.
மருத்துவர் சொன்னதைக் கேட்டு அச்சுதனுக்குள் ஒரு பெரும் நிம்மதி தான்.
‘இனி பாருங்கடா நான் யாருன்னு..’ என்று அவனுக்கு அவனே சொல்லிக்கொண்டான்.
வெளி தோற்றத்தில், அவன் அமைதியானவன், பண்பானவன், பணக்காரன் அப்பாவின் தொழிலை அவன் திறம்பட நடத்துகிறான். ஆனால் மனதினுள்ளே அச்சுதன் காயம்பட்ட சிங்கமல்லவா?!
முகத்திற்கு நேரே அவனை புகழ்ந்து பேசும் ஆட்கள் எல்லாம் பிடரிக்கு பின்னே அவனை பைத்தியம் என்றுதானே கேலி செய்கிறார்கள். அத்தனை ஏன் அவனிடம் வேலை செய்பவர்களே சமயத்தில் அவன் இல்லை என்றெண்ணி அப்படித்தானே பேசுகிறார்கள்.
தன்னை சுற்றி நடக்கும் பேச்சுக்கள் அனைத்தையும் கவனிப்பான். மனதினில் வைத்துக்கொள்வான். ஆனால் அதற்கு எவ்விதமான ரியாக்சனும் இருக்காது.
‘போங்கடா டேய்…’ என்ற அலட்சியமே.
இருந்தும் தான் யாரென்று காட்டிட வேண்டும் என்ற உத்வேகம் அவனுள் இருந்துகொண்டே தான் இருந்தது.ஆனால் என்ன, அவனை அப்படியே மனமுடைய செய்யும் விஷயம் தனுஜா விஷயம் ஒன்றுமட்டுமே.
அவனது அத்தனை திடங்களையும், நொடியில் நொறுக்கிவிடும் விசயமெனில் அது ஒன்றுமட்டுமே.
இப்போதும் அவனுக்கு நினைவில் இருக்கிறது. அந்த சாரட் வண்டியில், அச்சுதனைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டே, ஏறி அமர்ந்த தனுஜா. இன்று தான் இருக்கிறோமா இல்லையா என்றே தெரியாமல், அவள் கோமாவில் இருப்பது மட்டுமே அவனுக்கு அத்தனை வருத்தம்.
நடந்த சங்கதியில், அவளுக்கு காயமோ இல்லை வேறேதுவோமோ என்றாலும் கூட மனது ஒரு நிலையில் ஏற்றுக்கொண்டு இருக்கும். ஆனால் இப்படி உயிருள்ள ஜடமாய் அவள் இருக்கையில், அந்த உயிருக்கு அவன் மரியாதை செய்துதானே ஆகிடவேண்டும்.
ஒன்று அவளை குணமாக்கிவிடு.. இல்லையா அவளை எடுத்துக்கொள் இப்படி கிடத்திக் கிடக்காதே ஆண்டவா என்பது மட்டுமே அனைவரின் வேண்டுதலும்.
அச்சுதனுக்கும் அதுவே தான்.
ஆனால் இப்போது அர்ச்சனாவின் வருகை திடீரென்று என்னவோ ஒரு கண்ணுக்குத் தெரியாத ஒரு மாறுதலை கொடுத்துக்கொண்டு இருக்கிறது என்பதனை அவன் உணர்ந்தே இருந்தான்.
அர்ச்சனா – அவனைப் பொருத்தமட்டில் சொந்தக்கார பெண். அவனை விட வயதில் சிறியவள். அவளிடம் தான் உன்னைவிட பெரியவன் அப்படி என்கிற ரீதியில் எல்லாம் அவனுக்கு நடந்துகொள்ள இஷ்டமில்லை. இப்போது தொழில் ரீதியாகவும் அவளோட நேரம் செலவிட வேண்டிய நிலை. அப்படியிருக்க இலகுவாய்த்தான் செல்லவேண்டும்.
ஆனால் இப்போது இந்த இலகுத்தன்னமையே, அவனை லேசாய் தடுமாறச் செய்வதாய் இருக்க ‘இத்தனை ஆண்டுகளாய் இல்லாத இந்த தடுமாற்றம் இப்போதென்ன..’ என்று அவனது மனசாட்சி அவனை கடிந்துத் தள்ளியது.
‘இல்லல்ல… இதுவரைக்கும் எந்த பெண்ணோடவும் பேசி பழகும் வாய்ப்புகள் இல்லை.. தனுஜாவோட அதிகம் நேரடியாய் பேசியதில்லை.. கல்யணம் நிச்சயம் ஆகவும் அடிக்கடி போன்ல பேசினது தான். அதுவும் அதிகமான பேச்சுக்கள் இல்லை.. இந்த அர்ச்சனா அவளும் பேசி என்னையும் பேச வைக்கிறா.. அதுதான் பிரச்னை.. இனி வேலையே மட்டும் தான் பார்க்கணும்..’ என்று தனக்குள் ஒரு முடிவிற்கு வந்துகொண்டான்.
“என்ன அச்சுதா அமைதியாவே இருக்க?” என்று நீலவேணி கேட்க,
“அர்ச்சனாக்கு கால் பண்ணுடா.. கல்யாணம் முடிஞ்சிருக்கும். காளிகாம்பாள் கோவில் போகணும்னு சொல்லிட்டு இருந்தா. போற வழி தானே..” என, அச்சுதனோ அப்பட்டமாய் முறைத்து வைத்தான்.
“என்னடா?!” என,
“எத்தன தடவ சொன்னாலும் புரியாதா? அவ அவளோட பிரண்ட்ஸ் கூட டைம் ஸ்பென்ட் பண்ணனும்னு வந்திருக்கா..” என்று பல்லைக் கடிக்க,
“நான் ஒன்னும் கோவிலுக்கு போகணும்னு சொல்லலை. காலைல கிளம்புறப்போ, நம்ம டைமிங் கேட்டா. சீக்கிரம் எல்லா வேலையும் முடிஞ்சதுன்னா, கோவில் போலாம்னு சொன்னது அர்ச்சனா தான். நீ கால் பண்ணா பண்ணு இல்லைன்னா போ. நானே பேசிக்கிறேன். என்னை கொண்டு போய் கோவில்ல விடு.. ரூமுக்கு நானே போயிப்பேன்..” என,
“அஹா..! பாருடா எங்கம்மா பேச்சை. டாக்டர் ரிப்போர்ட்ஸ் ஓகேன்னு சொல்லவும் பழைய நீலவேணி வெளிய வர்றாங்க போல…” என்று அம்மாவை அச்சுதன் கிண்டல் பேச,
“போடா ராஸ்கல்.. எனக்கு எப்படி நிம்மதியா இருக்கு தெரியுமா?” என்று மகனின் தோளில் தட்டியவர், அர்ச்சனாவிற்கு அழைத்துவிட,
“திருந்தமாட்டீங்க நீங்க..” என்று சொல்லியபடி, இங்கே சென்னையில் இருக்கும் அவர்களின் நம்பெருமாள் நகை கடையின் தலைமை அதிகாரிக்கு அழைத்து பேசிக்கொண்டு நின்றுவிட்டான்.
அவன் பேசி முடிக்கவுமே “அர்ச்சனா கோவிலுக்குத்தான் வந்துட்டு இருக்கலாம். நீ என்னை கோவில்ல விட்டுடு. நாங்க அடுத்து என்னவோ ப்ளான் பண்ணிக்கிறோம். நீ உன் வேலையை பாரு…” என்று அம்மா சொல்லவும்,
“ஹ்ம்ம் கம்பனிக்கு ஆள் வரவும், பெத்த பையனை கழட்டி விடுற தாய் நீங்க…” என்று அவனும் கிண்டல் செய்தபடி, காளிகாம்பாள் கோவிலில் நீலவேணியை இறக்கிவிட,
“இத்தனை தூரம் வந்துட்ட, அம்பாளை பார்த்துட்டு போகலாம் தானே அச்சுதா…” என்று கேட்க,
“தெரியும் இப்படித்தான் சொல்வீங்கன்னு…” என்று சலிப்புடனே காரில் இருந்து இறங்க, அர்ச்சனாவும் சரியாய் வந்துவிட்டாள்.
‘நண்பர்களோடு இருந்துவிட்டு வரவேண்டியது தானே…’ என்று எண்ணியவன், அவள் தங்களைப் பார்த்து சிரித்தபடி வருவதைக் கண்டு நிற்க, அழகிய இளம் ஆரஞ்சும், பச்சையும் கலந்த நிறத்தில் அவள் கட்டியிருந்த மென்பட்டு சேலையும், காதில் போட்டிருந்த பெரிய ஜிமிக்கியும், லேசானா ஒப்பனை என்றுகூட சொல்ல முடியாது. அவள் எப்போதும் செய்துகொள்ளும் லேசான ஒப்பனையில் தான் கிளம்பிச் சென்றாள்.
“ஜடை பின்னி பூ வச்சுக்கிட்டா இன்னும் நல்லா இருக்கும்…” என்று காலையில் நீலவேணி சொல்ல,
“எனக்கு என்னவோ ப்ரீ ஹேர் தான் அத்தை நல்லாருக்கிறது போல தோணும்…” என்றவள், ஒருமுறை ஜடை பின்னி பார்த்து “நல்லவா இருக்கு?” என்று முகத்தை வேறு சுளித்துக் கேட்க,
“உனக்கு எது ஒகேவோ அது பண்ணிக்கோ…” என்று சிரித்தே சொன்னார் நீலவேணி.
இந்த பெண்களை புரிந்துகொள்ளவே முடியாது என்றுதான் அச்சுதனுக்கு அப்போதும் தோன்றியது. டிவியில் யாரேனும் இப்படி முடி விரித்துப் போட்டிருந்தால் ‘என்ன கன்றாவிடா இது…’ என்று நீலவேணி மட்டுமில்லை, அவனின் சித்திக்களே சொல்வார்கள்.
இப்பொது என்னவன்றால் இப்படி.
அதை இப்போதும் நினைத்து, அவள் கேசம் கோதிவிட்டு வரும் அழகைத்தான் பார்த்து நின்றிருந்தான்.
“என்னம்மா பங்சன் எல்லாம் நல்லபடியா முடிஞ்சதா?” என்று நீலவேணி கேட்க,
“சூப்பரா முடிஞ்சது. சப்பிட்டீங்களா நீங்க?” என்று கேட்க,
“இப்போதான் வரும்போது சாப்பிட்டோம்…” என்றவர் “அது.. கோவிலுக்குள்ள தலை விரிச்சு போட்டு வரக் கூடாது ஒரு பேண்ட் இருந்தா போட்டுக்கோவேன்..” என்று நீலவேணி பேச,
“இப்போதான் எங்கம்மாவும் இதையே போன்ல சொன்னாங்க…” என்று புன்னகைத்தவள், அவளது கைபையில் இருந்த ஒரு சிறு க்ளிப்பை எடுத்து, இரு பக்கமும் லேசாய் முடி எடுத்து, நடுவில் கிளிப் மாட்டிக்கொண்டு
“ஓகேவா..?!” என்று தலையை இப்படி அப்படி ஆட்டிக் கேட்டு நிற்க,
“டபிள் ஓகே..” என்று நீலவேணியும் சொல்லி சிரிக்க, அச்சுதனுக்கு பல வருடங்கள் கழித்து இன்று அம்மா உற்சாகமாய் இருப்பது போல தோன்றியது.
அது எதனால் என்றும் அவனுக்கு புரிந்தது தான். ஆனால் இதற்குமேல் தான் என்ன செய்ய முடியும். அவர்கள் சொல்வது போல கல்யாணம், குடும்பம் குழந்தை என்பது இப்போதும் அவனது மனது ஒப்பவில்லை.
உன்னை திருமணம் செய்ய இருந்த ஒருத்தி அப்படி கிடக்கையில், நீ மற்றொரு பெண்ணோடு வாழ்வை தொடங்குவாயா?!
வேகமாய் அவனது மனசாட்சி கேள்வி எழுப்ப, அவ்வளவு தான் அவனின் மொத்த ஆசுவாசங்களும் காணமல் போய்விட்டது. முகத்தினில் மீண்டும் ஒரு இறுக்கம் வந்து அமர்ந்துகொள்ள, பாதி தாடிக்குள் ஒளிந்திருக்கும் அவன் முகத்தினில் அப்படி என்ன கண்டாளோ அர்ச்சனா, இப்போதும் அவன் நின்றிருக்கும் விதத்தை மனதினில் ரசித்துக்கொண்டு தான் இருந்தாள்.
இப்படியாக மூவரும் அம்பாளை வேண்டிவிட்டு வெளி வர “சரி நான் கிளம்புறேன்.. பார்த்து போயிட்டு வாங்க..” என்று அவர்களை சூட்டிற்கு அனுப்பியவன், அவர்களின் நகை கடைக்கு சென்றுவிட்டான்.
எப்போதும் மாதம் ஒருமுறையோ இல்லை பதினைந்து நாட்களுக்கு ஒருமுறையோ வருவது தான். இப்போது மருத்துவமனைக்கு வருகையில், அதையும் இதனோடு சேர்த்துக்கொண்டான்.
பெண்கள் இருவருக்கும் பேச்சுக்கள் மட்டும் ஓயவில்லை. சூட்டிற்கு வந்ததுமே அர்ச்சனா கேட்டாள் “என்னத்தை ரொம்ப குஷியா இருக்கீங்க போல?” என்று.
“ஆமா..!” என்று ஒத்துக்கொண்ட நீலவேணி, மருத்துவர் பேசியதைச் சொல்ல,
“நான் தான் அன்னிக்கே சொன்னேன் தானே. தனுஜா விஷயம் மட்டும் தான் இவருக்கு கஷ்டமா இருக்கு. மத்தபடி ஹி இஸ் ஆல்ரைட்…” என்றுசொல்ல,
“சரிதான். ஆனா அவனும் பிடிவாதமா இருக்கானே…” என்று சொன்னவர் “என்ன ஒன்னு, இன்னுமே கூட, அவன் ரொம்ப குழப்பமாவோ, இல்லை அதிகமா உணர்சிவசப்படுற மாதிரியான விஷயங்கள் பேசிக்க வேண்டாம்னு சொல்லிருக்காங்க…” என்றிட,
“ஏன்?!” என்றாள் வேகமாய்.
“மாத்திரைகள் எல்லாம் கம்மி பண்ணிட்டாங்க. அவன் நல்லாத்தான் இருக்கான்னு நமக்குத் தெரியுது. ஆனா அவனுக்கான வெளியுலக பார்வைகள் பேச்சுக்கள் வேற. அதோட அழுத்தம் அவனுக்குத்தானே தெரியும். இந்த வயசுல அவன் ஏஜ் பசங்க எல்லாம் எப்படி இருக்காங்க. இவனுக்கு என்ன குறை? ஆனா வாழ்கையே குழப்பமா போகுது.
எல்லாமே இருந்தும் எதுவுமில்லைன்னு இருக்கிறது போல. பணம் மட்டுமே சம்பாரிக்கிறது எல்லாம் ஒரு வாழ்கையா?! அவனும் இதெல்லாம் யோசிப்பான் தானே அர்ச்சனா. யோசிச்சும் பிரயோஜனம் இல்லை. முன்னேறி போகணும்னு அவன் மனசு வைக்கணும். அப்படி இருக்கப்போ, மேற்கொண்டு வேற இன்னும் மன அழுத்தங்கள் கொடுக்கிற விஷயங்கள் நடந்தா அது அவனுக்கு மனநிலைல சரிவுக்கு கொண்டு வரலாம்னு டாக்டர் சொன்னாங்க..” என்று சொல்ல,
“ஓ!” என்றவள் “கடவுளே இந்த அம்மாவின் நிம்மதிக்காகவேனும் அச்சுதன் மனசுல கொஞ்சம் மாற்றம் கொடேன்…” என்று வேண்டிக்கொள்ளவே செய்தாள்.
இப்படியே பேச்சுக்கள் கொஞ்ச நேரம், இருவரும் குடும்பத்தினரோடு அலைபேசியில் பேச என்று சிறிது நேரம், அடுத்து எல்லாம் எடுத்துவைத்துவிட்டு, ஓய்வு என்று சிறிது நேரம், பின் மதிய உணவென்று சிறிது நேரம் என்று நேரம் போனதே தெரியவில்லை.
அடுத்து நீலவேணி அங்கிருக்கும் செய்தி தாள்களில் மூழ்கிவிட, அர்ச்சனாவும் அவளது ஐ பேடில் மூழ்கிவிட, அச்சுதன் மதியத்திற்கு மேல்தான் வந்தான்.
“என்னடா எல்லாம் ஓகேவா..” என்று நீலவேணி கேட்க,
“ஓகே தான் ம்மா.. இனி அடுத்தவாரம் ஒருதடவை வரணும். முஹூர்த்த நாள் எல்லாம் வரிசையா வருது. இப்போவே கூட்டம் தான்..” என்று அடுத்து சில கணக்கு வழக்குகள் பற்றி பேச,
அர்ச்சனா முதலில் அவர்களைப் பார்த்தவள், பின் அவர்கள் விசயம் பேசுகிறார்கள் என்று மீண்டும் கவனத்தை, தன் வேலையில் திருப்பிக்கொண்டாள்.
அடுத்து ஒரு கால்மணி நேரம் அவள் வேலையில் மூழ்கிவிட, பின் நிமிர்ந்து பார்க்கையில் நீலவேணியை காணோம். அச்சுதன் தான் “டீ சொல்லப் போறேன்.. ஸ்நாக்ஸ் எதுவும் வேணுமா?” என்று கேட்க,
“எனக்கு ஒரு கிரேப் ஜூஸ் மட்டும் போதும்..“ என்றவள் நீலவேணியை பார்வையால் தேட,
“அம்மா ரூமுக்கு போயிட்டாங்க. ஒரு பத்து நிமிஷம் ரெஸ்ட் வேணுமாம்…” என,
“ஓஹோ..!” என்றவள் மீண்டும் ஐ பேடில் பார்வையை பதிக்க,
“அப்படி என்னதான் வேலை.. நானும் பாக்குறேன் வந்ததுல இருந்து அதுலயே தான் கவனம்..” என்று அச்சுதன் கேட்க,
“ம்ம் படிக்கிறேன்.. பாக்குறேன்.. யோசிக்கிறேன்.. டிசைன் பண்றேன்…” என்றவள் தான் என்ன செய்துகொண்டு இருக்கிறேன் என்பதனை அவனிடம் காட்ட,
“உங்கப்பா உன்னை வச்சே இன்னொரு கன்ஸ்ட்ரக்சன் கம்பனி ஸ்டார்ட் பண்ணிடுவார்…” என்று சிரித்தான் அச்சுதன்.
“பண்ணிட்டா போச்சு. பெரிய கஸ்டமர் நீங்க இருக்கீங்களே போதாதா…” என்றவள்
“நான் ஒன்னு சொன்னா தப்பா நினைக்கக் கூடாது. இதெல்லாம் நீ பேச உனக்கு என்ன ரைட்ஸ் அப்படின்னும் கேட்க கூடாது…” என்றாள் தன்மையாய்.
அவள் இப்படி சொல்லவுமே அவனுக்கு புரிந்துபோனது, அவள் எதை பேசப் போகிறாள் என்று. ஆனாலும் பேசட்டும் என்று பார்த்து நிற்க, அவனது புன்னகை மறைந்தது கண்டு “ஒண்ணுமில்ல.. லைப்ல இதைவிட கஷ்டமான சூழ்நிலை எல்லாம் நிறையபேருக்கு வருது. உங்களை நான் மூவ் ஆன் ஆகச் சொல்லலை. கூடியமட்டும் கொஞ்சம் கேசுவலா இருங்களேன் உங்க அம்மாவுக்காக…” என்று சொல்ல,
“சொல்லனும்னு தோனுச்சு.. அவ்வளோதான்..” என்றவள் என்ன எண்ணினாளோ “ஆனா நீங்க ரொம்ப லக்கி…” என்று சொல்ல, அவனோ கேள்வியாய் பார்க்க,
“நினைச்சதை செய்றீங்க இல்லையா? தப்பா எடுத்துக்காதீங்க, ஒருவேளை, தனுஜா நல்லா இருந்து, உங்களுக்கு அ.. அப்.. அப்படி ஆகிருந்தா, இந்நேரம் தனுஜா உங்களை போல இருப்பாங்களா என்ன?” என்று அவள் மனதில் தோன்றியதை கேட்டேவிட்டாள்.
“அர்ச்சனா…!” என்று அவன் கொஞ்சம் கோபமாய், அதிர்வாகவும் பேச,
“ப்ளீஸ், இது ஜஸ்ட் ஒரு டாக் தான். நான் உங்களுக்கு அட்வைஸ் எல்லாம் செய்யல. சோ, டென்சன் எல்லாம் வேண்டாம்…” என்றவள்
“யோசிங்களேன். பொண்ணுங்களுக்கு இந்த சுதந்திரம் இருக்கா? இல்லைதானே. நான் சொன்னது போல ஆகிருந்தா, இந்நேரம் தனுஜாவுக்கு கல்யாணம் பண்ணி வச்சிருப்பாங்க வீட்ல. அப்பா, அம்மாவை நினை.. குடும்ப சூழலை பாரு.. நமக்குன்னு கௌரவம் இருக்கு.. உன்னோட வாழ்க்கை முக்கியம்னு பிரைன் வாஸ் பண்ணி, ஒண்ணுமே நடக்கலைன்னா, கடைசியா நீ சம்மதிக்கல அப்படின்னா, நாங்க ஏதாவது செஞ்சிப்போம்னு வந்து நின்னு, இந்த பொண்ணுங்களுக்கு தான் எத்தனை இமோசனல் ப்ளாக் மெயில்ஸ்.
ஆனா உங்களுக்கு அப்படி எல்லாம் இல்லை தானே.. அதை சொல்ல வந்தேன்.. தப்பா எடுத்துக்கக் கூடாது…” என்று சொல்ல, அவள் பேச்சில் கொஞ்சம் ஆடித்தான் போனான் அச்சுதன்.
அவள் பேசியது எத்தனை பெரிய நிதர்சனம்.
நிஜம் அதுதான். ஆனாலும் அவன் மனசாட்சி என்ன சொல்லுமோ அதையே தான் அவனும் செய்வான்.