அத்தியாயம் 13

ஷிவன்யாவின் அறை தாண்டிச் செல்லும் போதே ஒரு பார்வை வீசிச் சென்றான் மனோகர்.நெற்றியோர சுருள் முடிகளுக்குள் சுட்டுவிரலை விட்டு சுழற்றி விரித்து விளையாட்டு கொண்டே இருந்தாள். பார்வையும் சிந்தனையும் தீவிரமாக எதிரே இருக்கும் கணினி திரையில் பாய்ந்து இருந்தது.

என்ன வேலையாக இருந்தாலும் இப்பொதெல்லாம் மனோவின் பார்வை அவள் மீது இருந்து கொண்டே இருக்கும். ஷிவியும் அதை நன்கு உணர்ந்திருந்தாள்.

இப்போதெல்லாம் இவனையும் இவன் காஃபியையும் அவள் முற்றிலும் தவிர்ந்திருந்தாள். கேளாமலே அவளுக்கும் ஒரு கோப்பை குளம்பியை எடுத்துக்கொண்டு அவனுமதியின்றி அவளறைக்குள்ளும் சென்றான்.

உள்ளே வந்தவனை ஷிவி நிமிர்ந்து கூட பார்க்கவில்லை வேலையில் அதிக கவனமுடன் இருந்தாள்.

‘அப்படி என்னதான் வேலை செய்கிறாள்?’ யோசனையுடனே அவளுக்குப் பக்கவாட்டில் அருகே வந்து நின்றவன் குனிந்து கணினி திரையை வெறித்தான்.

சட்டென தன் நெருக்கத்தில் மனோவை உணர்ந்தவள், சுழல் நாற்காலியை பின் இழுத்துக்கொண்டு, விலகினாள்.

அதிதியின் மகள் புகைப்படங்கள் தான் எடிட்டிங் வேலை நடந்து கொண்டிருந்தது. அந்த குழந்தையின் நினைவில் முகம் கனிய, இதழ் மலர்ந்தான் மனோ.

தொடர்ச்சியாக இருந்த சில புகைப்படங்களைக் குறிப்பிட்டு, “இதெல்லாம் ஜெனி இல்லை நான்தான் எடுத்தேன்” என்றபடியே திரும்பி, மேசையில் சாய்ந்து நின்றவன் கை கட்டியபடி ஷிவியை நோக்கினான்.

உண்மையிலே அந்த புகைப்படங்கள் அற்புதமாக இருக்க, முழுதாக பாராட்ட மனமின்றி, “நாட் பேட்” என்றாள் ஒரு இதழ் சுளிப்போடு.

“நல்லாயிருக்கு தானே? நல்லாயிருக்குன்னு சொல்லுங்க” கைகளை கட்டிக்கொண்டு முகம் சுருங்க, சிணுங்கலுடன் அடம்பிடித்தான்.

ஷிவிக்கு சிரிப்பு வருவது போன்றிருந்தது. வெகு எளிதாக, சிறு வித்தியாசம் வெளிக்காட்டாது, சிரிப்பை கட்டுப்படுத்தியிருந்தாள். ஆனாலும் இறுக்கம்தளர்ந்த அந்த காந்த கண்களின் பிரதிபலிப்பைக் கண்டு கொண்டான்.

“சும்மா சிரிங்க, யார் என்ன சொல்லப் போறா? சிரிப்பை எல்லாம் ஏங்க அடக்கி வைக்கணும்? அதுவும் என் முன்னாலா?” இலகுவாக மொழிந்தான்.

“அதென்ன உன் முன்னாலா? நீ யார் எனக்கு?” முகத்தில் அடித்ததைப் போன்று வினவ, மனோவின் மனம் ஒரு நொடி சுருங்கினாலும் வெளிகாட்டிக் கொள்ளாது, “அதை நீங்க தான் சொல்லணும். கண்டுபிடிங்க, கண்டுபிடிச்சி எனக்கும் சொல்லுங்க. நானும் தெரிஞ்சிக்கிறேன்” என்றான் தீவிரமாக.

குரல் மட்டுமின்றி பார்வையிலும் பரவும் தீவிரத்தை ஷிவி நன்கு உணர்ந்தாள்.

ஏனோ உள்ளுக்குள் இருக்கும் உறுத்தல் அவளை மேலும் உரசிப் பார்க்கத் தூண்டியது.

ஒருநொடி உற்றுப் பார்த்தவள், “ஒரு சாயல்ல தம்பி மாதிரி தெரியுது, உன் அடாவடியும் அட்டகாசமும்கூட அவனை மாதிரியே…” என்றவளின் குரலே என்றுமில்லாத அளவிற்கு இளகிப் போய் இனித்தது.

பாசம் தொலைத்த தன் உறவுகளின் நினைவு நெஞ்சோரம் வர இதயம் கனத்தது. அந்த உறவுகள் நன்றாக இருந்திருந்தால் இந்த நேரம் தான் வாழ்க்கையும் வேறு மாதிரி இருந்திருக்குமே? நினைக்காமல் இருக்க முடியவில்லை.

“ஏங்க தம்பின்னு எல்லாம் சொல்லாதீங்க, நான் என்ன பார்க்க தம்பி மாதிரியா இருக்கேன்” என்றபடியே குஸ்தி பயில்வான் போன்று புஜங்கள் இரண்டையும் உயர்த்திக் காட்டிக் கேட்டான்.

கண் இருக்கும் யாராலும் அவ்வாறு கூற இயலாது. நன்றாக வனப்புடன் உடல் எடையை ஏற்றி வைத்திருந்தான். இங்கு வேலையில் சேர்ந்த நாளில் இருந்தே தினமும் உடல்பயிற்சி கூடம் செல்வதும், ஆரோக்கியமான உணவு முறையில் அக்கறை கொண்டதின் பலன் இப்போது கண் கூடாக தெரிந்தது.

“வயசுல இளையவன் தானே? அதுல எந்தவித மாற்றமுமில்லையே? மாற்றவும் முடியாதே?” சுருக்கென கேட்க, பதில் பேச இயலாது வாயடைத்து போனான் மனோகர்.

சடாரென எழுந்தவன் நாற்காலியை உதறிவிட்டு சட்டென வெளியேறிப் போனான்.

என்ன தான் வேலை செய்த போதும் ஷிவி சீண்டிவிட்ட நமச்சல் நாள் முழுக்க இருந்து கொண்டே தான் இருந்தது.

வேலை முடிந்து கிளம்பும் நேரம், இவனை நோக்கி வந்தான் சாஹர்.

“என்னையும் ட்ராப் பண்ணிட முடியுமா மனோ?” என்றபடியே இருசக்கர வாகனத்தின் பின் இருக்கையில் ஏற முயல, “பார்க்க நான் என்ன சின்ன பையன் மாதிரியா இருக்கேன்? உன்னை விட பெரியவன் தானே இனிமே அண்ணன் கூப்பிடுடா” என்றான் கடுப்புடன்.

குரலும் அதட்டலும் சாஹரிடம் இருந்தாலும் பார்வை அவர்களை தாண்டிச் செல்லும் ஷிவன்யாவின் மீது தான். அவளும் அனைத்தையும் கேட்டும் கேளாதது போல அலட்சியமாக சென்றுவிட்டாள்.

அருகில் இருந்த சாஹர் அனைத்தையும் கவனித்தபடி தான் இருந்தான். வந்தநாள் அன்றே அண்ணன் என்ற அழைப்பு வேண்டாமென சிரிப்புடன் கூறியவன் இன்று கடுப்புடன் கட்டாயப்படுத்த சாஹருக்கு எதுவும் சரியாகப்படவில்லை.

மனோகரின் மாற்றம் அங்கிருந்து அனைவருக்கும் கண் கூடாகப் புரிந்தது. ஆனால் ஷிவி பற்றி தவறாக நினைக்கவோ மனோவை சந்தேகம் கொள்ளவோ யாராலும் இயலவில்லை. இருவரையும் அறிந்தவர்கள் அமைதி காத்தனர்.

வெயில் தாழ்ந்த முன் மாலைப் பொழுது தன் அறையில் இருந்து வெளியே வந்த ஷிவி ஒரு கோப்பையில் காஃபியை எடுத்துக்கொண்டு உறிஞ்சியபடியே உலாத்தினாள்.

எடிட்டிங் அறையைத் தாண்டுகையிலே உள்ளே ஜெனியும் மனோகரும் ஆளுக்கொரு இருக்கையில் படபடப்பாக அமர்ந்திருப்பதாகத் தோன்றியது.

மனோ அலைபேசியில் கண்ணும் கருத்துமாக இருந்த போதும் அவன் உடல்மொழியில் படபடப்பு தெரிவது உண்மையோ பொய்யோ?

இடது கையின் கட்டைவிரல் நகத்தை பற்களுக்கு இடையே கடிபட கொடுத்துவிட்டு, கணினியில் ஏதேதோ துழாவிக் கொட்டிருக்கும் ஜெனி படபடப்பில் இருப்பதுநிச்சம் உண்மைதான்.

அறைக்கதவை திறந்துகொண்டு உள்ளே வந்த ஷிவி, “என்ன பிரச்சனை? ஏன் இரண்டு பேரும் டென்ஷனா இருக்கீங்க?” என்றபடியே காஃபி மக்கை மேசையில் வைத்துவிட்டு, கை கட்டிக்கொண்டு நின்றாள்.

விசாரணைக்குத் தயாராக விறைத்து நிற்கும் தோற்றமும் வெளிவந்து விழும் வார்த்தையின் அழுத்தமும் ஜெனிக்குள் குளிர்பிடிக்கச் செய்தது.

இருக்கையில் இருந்து எழுந்து நின்றிருந்த ஜெனி கையைப் பிசைய, வார்த்தையின்றி உதடுகளால் தந்தியடிக்க தொடங்கிவிட்டாள்.

மனோவோ வெகு தீவிரமாக அவன் வேலையிலே கவனமாக இருக்க, முகம் இறுகிப் போன முதலாளியம்மா மீண்டும் கணீரென அதே கேள்வியை கேட்டாள்.

பின் ஒருநொடி நிதானமாக யோசித்து, “அதிதியோடு பேபி ஆல்பம் பிரிண்டிங் லேப்க்கு மெயில் செய்ய சொன்னேனே முடிச்சதா ஜெனி?” என்றவள் உன்னிப்பாக உறுத்துப் பார்த்தாள்.

“அது… அதான் மேம்” ஜெனி தடுமாறியபடி இருக்க, “எப்படியும் ஒன் ஹவர்ல பைல் ரெக்வர் பண்ணிடுவேன். ப்ளீவ் மீ ப்ளீஸ்” வேண்டிய மனோ அனைத்தையும் போட்டுடைத்தான்.

“வாட்தி ஹெல்என்ன நடந்தது? ஜெனி உங்கிட்ட தானே அந்த வேலையை கொடுத்தேன்?” அதிர்ச்சியுடன் அனலாய் கேட்டாள்.

“சாரி மேம், ஃபோட்டோ எடிட்டிங்க்கு ஒரு ஆப் டவுன்லோட் பண்ணோம். அது ஏதோ தவறுதலாகி இருந்த பைல் எல்லாம் டெலீட் ஆகிட்டுச்சு” ஒருவழியாக உளறினாள் ஜெனி.

“நீ செய்தியா இந்த வேலையை?” அதட்டிக் கேட்க, அவளோ தலை கவிழ நின்றாள்.

மனோகர்தான் செய்தான் என்றாலும் காட்டிக்கொடுக்க, மனமின்றி மௌனமாக நிற்க, “ஐ டிட்னாட் எக்ஸ்பேக்ட் திஸ் ஃப்ரம் யூ ஜெனி” காட்டமாகக் காய்ந்தாள்.

அதற்கு மேல் பொறுமையாக வேடிக்கைப் பார்க்க முடியாத மனோ, “அவங்க தப்பு இல்லை. தட்ஸ் மை மிஸ்டேக். எல்லாம் என் நான் செய்த தப்புதான். நான் தான் அதை டவுண்ட்லோட் பண்ணேன்” மனோ உண்மையை ஒப்புக்கொண்டான்.

உடுக்கை, சூலாயுதமின்றி காளி அவதாரம் எடுத்தாள் ஷிவன்யா.

“குட், முதல் நாள் நான் சொன்ன வார்த்தையை உண்மையாக்கி காட்டிடே” நக்கலாக கூறினாள்.

“சாரி இப்படியாகும்னு எனக்குத் தெரியாது”நிமிர்வாக நின்றிருந்தவன் கொஞ்சமும் அசரவில்லை.

மனோகரைப் பார்க்க பார்க்க, ஷிவியின் ஆவேசம் கூட்டிக்கொண்டே செல்ல, “தர்ஷன், தனு” தன் தோழமைகளின் பெயரைக் கூறி பற்களைக் கடித்தாள்.

“என்ன நினைச்சுட்டு இருக்க நீ? உன் இஷ்டத்துக்கு வேலைப் பார்க்க இது ஒன்னும் உன்னோட ஸ்டூடியோ இல்லை. நீ சும்மா இருக்குறதுக்குத்தான் நான் சேலரி கொடுத்து வைச்சு இருக்கேன். உன் அதிகப்பிரசங்கித்தனத்தை இங்க காட்டாதே” அவனைப் பதிலே பேசவிடாது, பட்டசாகப் பொரிந்தாள்.

என்ன தான் கோபம் என்றாலும் அதிகம் வார்த்தைகளை கொட்டாதவள் இப்போது தன் இயல்பை மீறிக் கத்திக் கொண்டிருந்தாள். பயத்தில் ஜெனி சர்வமும் ஓடுங்க அடங்கிப் போய் நின்றிருந்தாள்.

“இல்லைங்க நான் எல்லாத்தையும் சரி செய்திடுவேன்” மனோ முன்னவே வர, “இந்த ஸ்மார்ட்னஸை வேலையில காட்டுனா இட் வில் பி யூஸ் புல், இல்லையா  வேலையே செய்ய வேண்டாம் அமைதியா இரு. நாளைக்கு நான் அதை க்ளைன்ட்கிட்ட டெலிவரி பண்ணனும். நாளைக்கு அந்த பேபிக்கு ஃபஸ்ட் பர்த்டே, பார்ட்டில பிளே பண்ணக் கேட்டிருந்த ஃபோட்டோஸ் எல்லாம், ஓ காட்!” நெற்றியில் கை வைத்தாள்.