அச்சுதன் கார்மேகத்தோடு மேற்படி பேச்சு வார்த்தையில் இறங்கியிருக்க, அர்ச்சனாவோ வெறும் பார்வையாளராய் தான் அமர்ந்திருந்தாள். ஒரு வார்த்தை கூட பேசவில்லை. எல்லாம் அப்பாவே பேசட்டும் என்று விட்டுவிட்டாள்.
அது என்னவோ அவளுக்கு காரணமின்றி அவன்மீது கோபம்.
அத்தனை பிரயத்தனப்பட்டு, இரண்டே நாட்களில் அவனுக்கு ஆசையாய் வடிவமைப்புகளை அனுப்பினால், உடனே பார்க்காமல் பேச்சு வேறு என்று இப்போதும் கோபம் தான்.
தொழில் முறை பேச்சுக்கள் தானே, அப்படியே இருக்கட்டும் என்று அப்பாவிடமே விட்டுவிட்டாள். கார்மேகத்திற்கே மகளின் இந்த கோபம் புதிதாய் இருக்க, எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை அவர்.
ஆனால் அவள் உம்மென்றே அமர்ந்திருப்பதை கவனித்தவர் “உனக்கு எதுவும் சொல்லனுமா அர்ச்சு…” என்று கேட்க,
“நோ டாடி…“ என்றுவிட்டாள்.
அச்சுதனும் கூட அவளை திரும்பிப் பார்த்தவன் “நான் தான் டிசைன்ஸ் எல்லாம் சூப்பரா இருக்குன்னு சொல்லிட்டேன் தானே அர்ச்சனா…” என்றிட,
“நீங்க அப்பாக்கிட்டே பேசிக்கோங்க…” என்று அவனிடமும் முகம் காட்ட,
“அர்ச்சனா…” என்று கண்டிப்புடன் கார்மேகம் பார்க்க,
“விடுங்க மாமா.. அவளுக்கு எதோ எரிச்சல்..” என்றவன் “நீங்க சொல்லுங்க மாமா.. எந்த டிசைன் எடுத்தா, அங்க அந்த இடத்துக்கு பொருந்தி போகும்..” என்று அவரிடமே கேட்க,
“ஹா ஹா.. இது நல்ல கதையா இருக்கே தம்பி.. அஞ்சும் அஞ்சு ரகம். ஆனா அற்புதமா இருக்கு. ஒவ்வொன்னும் வேற வேற பட்ஜெட். உங்க பட்ஜெட் எப்படின்னு எனக்கு இப்போவரைக்கும் தெரியாது. அதுனால நீங்கதான் முடிவு பண்ணனும்..” என்று பொறுப்பை அவனிடமே கொடுத்துவிட்டார்.
“எனக்கும் அதுதான் கஷ்டமா இருக்கு மாமா.. எதுக்கும் அம்மாக்கிட்ட ஒருதடவை காட்டிடுறேன்..” என்றவன், இப்போதும் அர்ச்சனாவைப் பார்க்க, அவள் இன்னமும் அப்படியேத்தான் அமர்ந்திருந்தாள்.
“அவளை விடுங்க.. கொஞ்ச நேரத்துல தானா சரியாகிடுவா..” என்ற கார்மேகம் “வீட்ல பேசிட்டு சொல்லுங்க.. நல்ல நாள் பார்த்து பூமி பூஜை முன்னாடி போட்டுடலாம்..” என்றும் சொல்ல,
“சரிங்க மாமா…” என்றவன் அவர் கொடுத்த கோப்புகளை எல்லாம் எடுத்துக்கொண்டு கிளம்ப,
“அர்ச்சு…” என்றார் கார்மேகம்.
“என்ன டாடி…” என்று அப்பாவினைப் பார்த்தவள், அச்சுதன் கிளம்ப எத்தனித்து இருப்பதைப் பார்த்து “சரி போயிட்டு வாங்க… பை…” என்று சொல்லி அவளது கேபின் வந்துவிட்டாள்.
என்னவோ மனது அப்படியொரு சுணக்கம் கொண்டது. இவனுக்காக என்று செய்தால், கொஞ்சம் கூட அவனுக்கு அது புரியவில்லை என்கிற கோபம்.
‘லூசு அர்ச்சனா…’ என்று அவளுக்கு அவளே திட்டிக்கொண்டாள்.
அச்சுதனுக்கும் இதற்குமேல் அர்ச்சனாவிடம் என்ன பேச என்று தெரியாததால், அவனும் கிளம்பிவிட்டான் வீட்டிற்கு. வரும் வழியிலேயே வீட்டினர் அனைவரையும் இருக்கவும் சொல்லிவிட, அச்சுதனின் வார்த்தைக்கு மறுப்பேது, அவனது வருகைக்காக காத்திருக்க, அவனும் வந்தவன் அர்ச்சனா வடிவமைத்திருந்த ஐந்து வரைபடங்களையும் அதன் பட்ஜெட் இத்தனை என்றும் வீட்டினர் அனைவரிடமுமே காட்டி,
“எப்படி சித்தப்பா இருக்கு?” என்று கேட்க, சித்தப்பாக்கள் இருவருக்குமே சந்தோசம் தான்.
தங்களை முன்னிறுத்தி கேட்கிறான் என்று.
“எல்லாமே நல்லா இருக்கே அச்சுதா. இதுல எதை சொல்றது…” என்று சுரேந்திரன் கேட்க,
“எனக்கும் அதே தான். அதன் பொறுப்பை உங்கக்கிட்ட விட்டுட்டேன். நீங்க எல்லாம் கலந்து பேசி சொல்லுங்க…” என்றவன்
“ம்மா.. என்ன சொல்றீங்க?” என்றும் நீலவேணியிடம் கேட்க,
“குழப்பமா இருக்குடா..” என்றார்.
பாமினியோ “அனி சும்மா சொல்லக் கூடாது. அர்ச்சனா சூப்பரா செஞ்சிருக்கா. ரெண்டே நாள்ல இத்தனை செய்யனுமா ரியல்லி சூப்பர்…“ என்று சொல்ல, அனிதாவிற்கு முகம் கொள்ளா புன்னகை.
அதிலும் பிபி சகோதரர்கள் இருவரும் “அண்ணா, இதுல ஒன்னு செலெக்ட் பண்றது கஷ்டம். பேசாம அதையும் அர்ச்சனாகிட்ட விட்டிருக்கலாம்ல. இல்லை ஒரே ஒரு டிசைன் மட்டும் செஞ்சு தர சொல்லிருக்கலாம்…” என்று சொல்ல,
“எதுக்கு..? இதுக்கே என் தங்கச்சி ரெண்டு நாளா தூங்க கூட இல்லை.. உங்களுக்கு என்ன வேணும்னு நீங்க தான் முடிவு பண்ணனும்…” என்று அனிதா குறுக்கே வர,
தாமோதரனோ மனைவியின் முகம் பார்த்தவர் “அதுக்கில்ல அனிதா, டிசைன் பண்ணது அர்ச்சனா. அவளோட மனசுல கண்டிப்பா ஒரு ஒப்பினியன் இருக்கும் தானே…” என்றார்.
“எஸ் கண்டிப்பா..” என்று பிரசாந்த் சொன்னவன்,
“அண்ணா நீங்க அர்ச்சனாகிட்டயே கேளுங்க. அடுத்து முடிவு பண்ணலாம். இல்லைன்னா இதுல எதிர்காலத்துக்கு வேணும்னு எனக்கொரு டிசைன் நான் எடுத்துக்கிறேன். அடுத்து அர்ஜூன் இருக்கான், அவனுக்கு ஒன்னு குடுத்துடுவோம். அடுத்து பிரகாஷ் புது ஹோட்டல் எதுவும் கட்டினா அவனுக்கு ஒன்னு குடுப்போம். அடுத்து பவஸ்ரீ இருக்கா, பேசாம அவளுக்கு ஒரு பேலஸ் கட்டி குடுத்துடலாம்…” என்று பேச, அனைவருக்குமே சிரிப்பு.
ஆனால் யாருக்குமே இதுதான் சிறப்பு என்று ஒன்றை தேர்வு செய்ய முடியவில்லை. அனிதாவிற்கு தங்கையை எண்ணி பெருமை பிடிபடவில்லை. அச்சுதனோ மனதினில் ஒரு கணிப்பு வைத்திருந்தான். அவனது பட்ஜெட் பொருத்து. ஆனாலும் வீட்டில் இத்தனை பெரியவர்கள் இருக்கையில் யாரிடமும் கேட்காமல் செய்ய முடியுமா என்ன?!
அதிலும் அம்மாவின் விருப்பமும் அறியவேண்டும் இல்லையா?!
பாமினியோ அர்ச்சனாவை அடுத்த மருமகளாய் கொண்டு வரும் எண்ணத்தில் இருப்பதால், அவளுக்கு இன்னும் இதில் முக்கியத்துவம் கொடுக்கக் எண்ணி “எதுக்கும் அர்ச்சனாக்கிட்ட ஒருவார்த்தை கேட்கலாம்.. இல்லையாக்கா…” என்று நீலவேணியை பேச்சில் சேர்க்க,
“அவளோட டிசைன்ல இதுதான் பெஸ்ட்னு அவளே எப்படி சொல்லுவா?” என்றார் நீலவேணி.
“இருந்தாலும் கேட்கிறதுல என்னக்கா தப்பு…” என்றவர் “அனிதா.. நீ அர்ச்சனாக்கிட்ட பேசேன்…” என,
“அச்சோ..! இல்லத்தை.. என்னை இதுல இழுக்காதீங்க.. பின்ன ஏதாவது வம்புன்னா அடுத்து என் தலை உருளும்..” என்று அவள் விவரமாய் பின்வாங்கிவிட,
“நாங்க இத்தனை சொல்றோமே அச்சுதா.. நீயே கேளேன்..” என்றிட, அவன் சொல்லவா முடியும் அவள் கோபித்துக்கொண்டு பேசாமல் இருக்கிறாள் என்று.
“அது சித்தி…” என்று அவன் இழுக்க,
“நான் சொல்றேன் தானே கால் பண்ணு.. நாங்க எல்லாருமே கேக்குறோம்னு சொல்லு…” என்றிட, அச்சுதனால் அதற்குமேல் மறுக்க முடியவில்லை. அர்ச்சனாவிற்கு அழைக்க, அவளோ அழைப்பை ஏற்றாள் இல்லை.
‘அப்படியென்ன கோபம்..’ என்று எண்ணியவன் “ம்மா உங்க போன் குடுங்க…” என்று அம்மாவின் போனை வாங்கியவன், அவளுக்கு அழைத்துவிட, நீலவேணி எண்ணில் இருந்து அழைப்பு என்றதுமே அர்ச்சனா உடனே எடுத்துவிட்டாள்.
“ஹலோ அத்தை…” என்றிட,
“அத்தை இல்லை.. அத்தையோட பையன்..” என்றவன் “கட் பண்ணிடாத.. எல்லாரும் இருக்காங்க..” என்று ரகசிய குரலில் சொல்ல,
‘எல்லாருமா?!’ என்று அவள் யோசிக்கும் போதே “ஸ்பீக்கர்ல போட்டிருக்கேன்.. எல்லாரும் உன்னோட ஒப்பினியன் கேட்கிறாங்க.. நீதானே டிசைன் பண்ண. சோ இதுல எது நல்லாருக்கும்னு உன்கிட்டயும் கேட்க சொல்றாங்க…” என்று வேகமாய் சொல்ல வந்ததை சொல்லிவிட்டான்.
“நா.. நானா?!” என்று தயங்க
“ஆமா அர்ச்சனா நீதானே டிசைன் பண்ண.. நீயே சொல்லேன்..” என்று பாமினி பேச,
“அதுக்கில்ல அத்தை.. நான் எப்படி?” என்று தயங்கினாள்.
தாமோதரனும் “உன்னோட கருத்தை தெரிஞ்சிக்க நினைக்கிறோம் ம்மா.. முடிவு அடுத்து பார்த்துக்கலாம்..” என்று பேச,
சுரேந்திரனும் சுமிதாவும் கூட “இத்தனை அழகா செஞ்சிருக்க, அதுல எது இன்னும் அழகுன்னு உனக்கொரு கற்பனை இருக்கும் தானே…” என்று சொல்ல, அர்ச்சனாவிற்கோ நன்றாய் மாட்டிக்கொண்ட உணர்வு.
‘இதில் ஏன் தன்னை இழுக்கவேண்டும்…’ என்ற கேள்வி வேறு..
அச்சுதனே வீட்டில் பேசுகிறேன் என்று சென்றபின், வீட்டினர் ஏன் தன்னை கேட்கவேண்டும் என்று எண்ணியவள்,
“அது.. பட்ஜெட் கோட் பண்ணிருக்கோம் இல்லையா.. அது பொருத்து, அ.. அச்சு.. அத்.. அச்சத்தானுக்கு எது சரியா வரும்னு தோணுதோ அது சொல்லச் சொல்லுங்க..” என்று அனைவருக்கும் பொதுவாய் அவள் திக்கி திணறி பேச, அவளது திணறல் அச்சுதனுக்கு சிரிப்பை கொடுத்தது.
‘அச்சத்தான்னு எல்லார் முன்னாடியும் சொல்ல அத்தனை தயக்கம்…’ என்று எண்ணியவன் முகத்தில் அரும்பிய புன்னகையை வீட்டினர் அனைவருமே பார்க்க, அதற்கான காரணம் நீலவேணிக்கு தானே புரியும்.
ஆனால் பாமினியின் விருப்பத்தில் குறுக்கே நிற்க முடியாதில்லையா, அலைபேசியை வாங்கியவர் “நீ டென்சன் ஆகிக்க வேணாம் அர்ச்சனா.. அஞ்சுல ஏதாவது ஒன்னு சொல்லிடு.. அடுத்து இவங்க பார்த்துக்கட்டும்…” என்றிட,
“சரிங்கத்தை..” என்றவள் “நான் ரெண்டாவதா பண்ணின டிசைன் எனக்கு ஓகேன்னு பட்டுச்சு. மெயின்டெயின் பண்ணவும் ஈசி. சிம்பிள் அண்ட் ரிச் லுக்ல இருக்கும். மத்தது இன்டீரியரே காஸ்ட் ஜாஸ்தி. நுணுக்கமான வேலைகளும் ஜாஸ்தி. மெயின்டெயின் பண்ணவே நீங்க தனியா செலவு செய்யணும். அந்த டிசைன் அப்படி இல்லை..” என்றவள்,
“உங்களோட நகை மாளிகைக்கு பணக்காரங்க மட்டுமே வந்து போறதா இருக்கக் கூடாது இல்லையா? எல்லாரும் வரணும் தானே…” என்றும் பேச, அவளது பேச்சு சாதுர்யம் கண்டு தாமோதரன் பாமினியின் முகத்தினைப் பார்த்து ஒரு திருப்தி புன்னகை சிந்த, நீலவேணி அனைத்தையும் கவனித்துக்கொண்டு தான் இருந்தார்.
அச்சுதனுக்கோ பார்வை எல்லாம் அவள் சொன்ன இரண்டாவது வரைபடத்தின் மீதிருக்க, அவனுக்குமே அவளது பேச்சு சரியென்று பட, அதன் பட்ஜெட் எத்தனை என்று பார்த்தவனுக்கு திருப்தி.
அவன் கணக்கிட்டு இருந்தமைக்கு, பக்கத்தில் தான் இருந்தது.
“ஓகே.. தேங்க்ஸ் அர்ச்சனா. பேசிட்டு சொல்றேன்…” என்றவன் அழைப்பை துண்டித்துவிட, மீண்டும் அங்கே ஒரு கலந்துரையாடல். இறுதி முடிவு என்பது அச்சுதனிடம் தான் என்பதால்,
அச்சுதன் அர்ச்சனா சொன்ன காரணங்களையும் கணக்கிட்டவன், அவள் சொன்ன இரண்டாவது வடிவமைப்பையே தேர்வு செய்ய, நீலவேணிக்குத்தான் இதனை எல்லாம் காண்கையில் மனது மீண்டும் சோர்வுற்றுவிட்டது.
சுமிதாவோ பேச்சு வாக்கில் “பரவாயில்லை.. தொழில் அனுபவம் இல்லைன்னாலும், ரெண்டு பக்கமும் யோசிச்சு பேசுறா..” என்று அர்ச்சனாவிற்கு பாராட்டு பத்திரம் வாசிக்க, அனைவரும் அடுத்த வேலைகளை கவனிக்கச் செல்ல,
அர்ச்சனாவோ ‘என்னை ஏன் கேட்கணும்…’ என்று நூறாவது முறையாய் கேட்டுக்கொண்டு வீடு வந்து சேர்ந்திருந்தாள்.
“என்ன அர்ச்சு வந்துட்ட…” என்று அம்மா கேட்டதற்கு,
“டயர்ட் ரோஸ்…” என்றவள் “நான் அடுத்த சண்டே சென்னை போகணும்…” என்று சொல்ல,
“எதுக்கு டி?” என்றார்.
“என்னோட யூஜி மேட் கல்யாணம். வரும்போது இப்போதான் கால் பண்ணா. என்னோட கிளாஸ் எல்லாரும் வர்றாங்க..” என்றிட,
“அப்பாக்கிட்ட சொல்லிட்டியா?” என்றார்.
“இன்னும் இல்லைம்மா..“ என்றவள் அப்படியே போய் படுத்துவிட்டாள்.
அடுத்த ஞாயிறு அர்ச்சனாவும் சென்னை செல்லவேண்டும். அச்சுதனும் சென்னைக்கு செல்லவேண்டும். இருவர் கிளம்பி இருப்பதும் இருவருக்கும் தெரியாது.
ஆனால் மறுநாளே, அச்சுதன் கார்மேகத்திடம் ‘இது ஓகே மாமா…’ என்று அர்ச்சனா சொன்ன வரைபடத்தை உறுதி செய்தவன், அடுத்த வேலைகளுக்கான பேச்சில் இறங்க,
“நல்லது தம்பி.. நீங்க நாள் பார்த்து சொல்லுங்க பூஜை போட்டு முறையா ஆரம்பிக்கலாம்..” என்றுவிட்டார்.
அர்ச்சனாவிடம் இதுதான் என்று அவனும் சொல்லவில்லை. அவன் சொல்லியிருப்பான் என்று அப்பாவும் சொல்லவில்லை.
அச்சுதனோ “சென்னை போற வேலை இருக்கு மாமா.. போயிட்டு வந்தும் நல்ல நாள் பார்த்து பூஜை போட்டுக்கலாம்…” என்று கிளம்பிட, அடுத்தடுத்த நாட்கள் எல்லாம் அதன்போக்கில் சென்றது.
அர்ச்சனா, அச்சுதனுக்கு அழைத்துப் பேசவும் இல்லை. அவனும் அழைக்கவும் இல்லை. அர்ச்சனாவிற்கு அவன் எதை தேர்வு செய்தான் என்று என்னிடம் சொல்லவே இல்லையே காட்டமும் இருந்தது. அப்பாவிடம் தானாய் கேட்கவும் விருப்பமில்லை.
அச்சுதனுக்கோ கார்மேகம் சொல்லியிருப்பார் என்ற நினைப்பில் அவனும் பேசவில்லை. பின்னே புதிதாய் ஒன்றை ஆரம்பிப்பது என்பது சும்மாவா?! அதற்கான அடிப்படை வேலைகள் எத்தனை இருக்கிறது. முக்கியமாய் பணம் புரட்டவேண்டுமே..
கையில் இருந்தாலும், அத்தனையையும் அதிலேயே போட முடியாது இல்லையா. கணக்குகள் எப்படி காட்டுவது, எத்தனை லோன் வாங்குவது என்று ஆடிட்டர்களோடு பேச்சு வார்த்தையில் இருக்க, இடையில் ஒருமுறை தனுஜாவையும் சென்று பார்த்துவிட்டு வந்தான்.
கட்டிட வேலைகள் ஆரம்பித்தால் தான் இருவருக்கும் பேச்சுக்கள் இருக்கும் போல. அவளோ தோழியின் திருமணத்திற்கு என்று ஷாப்பிங் சென்று வந்தவள், அக்காவிடம் தான் சென்னை செல்வதைச் சொல்ல,
“அப்படியா என்ஜாய் பண்ணு டி. என்னைத்தான் எங்கயும் விடல.. பார்த்து போயிட்டு வா…” என்றிட, சனிக்கிழமை மாலை விமானத்தில் தான் கிளம்பி இருந்தாள்.
ரோஜாவும் அவளை வழியனுப்ப என்று விமான நிலையும் வந்திருக்க “ம்மா ஆனாலும் ரொம்ப பண்ற நீ? நான் போயிக்க மாட்டேனா?” என்று அர்ச்சனா கடிய,
“நீ பாரின் போயிட்டு வந்தவ தான். அதுக்காக இப்படி தனியா அனுப்பும் போது கொஞ்சம் சங்கடமா இருக்கு. அனிதா இப்படி எங்கயும் போனதில்லை…” என்றவர்,
“அண்ணி…” என்று யாரையோ அழைப்பது பார்த்து திரும்பிப் பார்க்க, அங்கே நீலவேணியும் அச்சுதனும் இருந்தனர்.
‘இவங்களா…’ என்று பார்க்க, இவர்களை பார்த்ததும் நீலவேணி இவர்களிடம் வந்துவிட, ரோஜாவும் “என்ன அண்ணி இங்க?” என்று கேட்க,
“சென்னை போறோம். நாளைக்கு ஹாஸ்பிட்டல்ல அப்பாயின்மென்ட்..” என்று நீலவேணி தயங்கியே சொல்ல, அச்சுதனோ முகத்தினில் எதையும் காட்டாமல் இருக்க,
“இவளும் சென்னை தான் போறா.. நாளைக்கு ப்ரண்ட் கல்யாணமாம்.. கிளம்பிட்டா..” என்ற ரோஜா “தனியா அனுப்ப சங்கடமா இருந்தது.. இப்போ உங்களை பார்க்கவும் நிம்மதியா இருக்கு..” என,
“அதுக்கென்ன அண்ணி…” என்ற நீலவேணி “நைட் ஸ்டே எங்கம்மா?” என்று அர்ச்சனாவிடம் கேட்க,
“பிரண்ட்ஸ் பிக்கப் பண்ண வந்திடுவாங்க அத்தை. அவங்களோட போயிப்பேன்..” என்று சொல்ல,
“அப்படியா? அச்சுதன் சூட் தான் புக் பண்ணிருக்கான். வேணும்னா எங்களோட வந்து ஸ்டே பண்ணிக்கிறியா?” என்று நீலவேணி கேட்க,
“அதானே.. நல்லதுதான். அர்ச்சு.. நீ இவங்களோடவே போயிக்கோ. காலைல கிளம்பி கல்யாணம் போயிக்கோ..” என்று ரோஜா சொல்ல, அர்ச்சனாவிற்கு எரிச்சலாய் இருந்தது.
அவளுக்கு அவளது மன போராட்டங்களே பெரிதாய் இருந்தது. அச்சுதனை பற்றியே எண்ணும் மனதை என்ன செய்வது என்று அவளுக்குத் தெரியவில்லை. பேசினாலும் அவனது எண்ணமே. பேசாமல் விட்டாலும் அவனது எண்ணமே. இதில் போகும் இடத்திலும் அவனே வந்து நிற்க, இதனை விதி செய்யும் சதி என்பதா என்றும் தெரியவில்லை.
பெண்கள் இருவரும் இப்படி பேசி முடிவு செய்ய, அச்சுதனோ எதுவுமே பேசாமல் நிற்க, அவனது மருத்துவ பரிசோதனை என்றதுமே, அர்ச்சனாவிற்கு அவளது மனவோட்டங்கள் மாறி, இப்போது ஆராய்ச்சி அவன்மீது பாய, அச்சுதனோ இறுகிய முகத்துடன் தான் நின்றிருந்தான்.