பூத்தது ஆனந்த முல்லை -11

அத்தியாயம் -11

தேன் முல்லையும் மகனும் வீட்டில் இல்லாமல் போகவும் தன் மீதுள்ள கோவத்தில்தான் வீட்டை விட்டு சென்று விட்டாள் என முடிவு செய்து விட்டான் ஆனந்த். 

இந்த நேரத்தில் எங்கு சென்றிருப்பாள், மீண்டும் அவளுடைய பிறந்த வீடு புறப்பட்டு சென்று விட்டால் எந்த முகத்தை வைத்துக்கொண்டு அவளை மீண்டும் இங்கு அழைப்பது, செல்லும் வழியில் அவளுக்கு ஏதேனும் ஆபத்து நேரிட்டிருந்தால் என பலவித சிந்தனைகளால் ஆக்கிரமிக்கப் பட்டு அப்படியே நின்றிருந்தான் ஆனந்த். 

அந்த நேரம் பார்த்து அவனுடைய அக்காவின் கணவன் பாஸ்கர் அழைத்தான். அழைப்பை ஏற்க வேண்டாம் என நினைத்தவன், அவனுக்கிருந்த பதற்றத்தில் தவறுதலாக அழைப்பை ஏற்று விட்டான். 

மகனுக்கு மொட்டை அடிக்க போகிறோம், குடும்பத்தோடு வந்து விடுங்கள் என அழைப்பு விடுத்தான் பாஸ்கர். 

“என்னால வர முடியாத சூழ்நிலை மாமா, அப்பாம்மாவும் தம்பியும் வருவாங்க” என நல்ல விதமாகவே சொன்னான் ஆனந்த். 

“நீங்க வரலைனா உங்க அக்கா மூஞ்சு தூக்கி வச்சிட்டு நிப்பா, வந்திடுங்க, டிக்கெட் வேணும்னா நான் போட்டுத் தர்றேன்” என பாஸ்கர் சொல்லவும் எரிச்சலடைந்து விட்டான். 

“கூச்ச படாதீங்க, பஸ்ல போடவா ட்ரெயின்ல போடவா? கை செலவுக்கும் பணம் போட்டு விடுறேன்”  என மேலும் ஆனந்தை சீண்டி விட்டான் பாஸ்கர். 

அக்காவின் கணவன் ஆகிற்றே, அதைவிட ஏதாவது வம்பு செய்ய சமய சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டே இருப்பவன். ஆகவே, “எனக்கு வேற முக்கியமான கால் வருது, உங்ககிட்ட அப்புறமா பேசுறேன்”என சொல்லி பாஸ்கரின் பதிலுக்கு காத்திராமல் அழைப்பை துண்டித்து விட்டான். 

இந்த நேரம் தான் வீட்டை விட்டு சென்றிருக்க கூடாது என தன்னை தானே கடிந்து கொண்டவன், தேனின் அலைபேசி, கைப்பை போன்றவை வீட்டிலேயே இருப்பதால் ஊருக்கு செல்ல புறப்படிருக்க மாட்டாள் என சமாதானம் செய்து கொண்டான். 

அந்தக் குடியிருப்பு வளாகத்தில் இரவு நேரப் பணியில் இருக்கும் செக்யூரிட்டியிடம் சென்றவன் அவனது வீட்டுக்கு வெளியில் இருக்கும் சி சி டி வி கேமரா பதிவுகளை பார்க்க வேண்டும் என கேட்டான். 

ஆனந்தின் பதற்ற முகத்தில் அதிகம் கேள்விகள் கேட்காமல் அனுமதி தந்தான் செக்யூரிட்டி. தேன் தருணோடு மாடிப் படிகளில் ஏறிச் செல்வதை கண்டவன் விரைந்து வீட்டுக்கு சென்றான்.

ஏதோ கணவன் மனைவி சண்டை என நினைத்தாலும் வேறு ஏதேனும் ஆபத்து என்றால் என்ன செய்வது என்பதால் செக்யூரிடியும் அவனை பின் தொடர்ந்தான். 

மொட்டை மாடியில் மகனோடு நின்றிருந்தாள் தேன். நிம்மதியாக பெரிய மூச்சு விட்ட ஆனந்த், “என்ன தேனு ஏன் இங்க வந்து நிக்குற?” எனக் கேட்டான். 

“வேற என்ன பண்றது, உங்களை மாதிரி என்னால வெளில போக முடியாதே” சுள் என அவள் பேசியதும் ஏதோ சொல்லப் போனவன் செக்யூரிட்டி வரவும் அமைதியாக இருந்தான். 

தேன் மகனை தூக்கிக் கொண்டு கீழே செல்லவும் சங்கடமாக செக்யூரிடியை பார்த்தான் ஆனந்த். 

“நீங்களும் போங்க ஸார், ரொம்ப நேரம் ஆகிடுச்சு” என செக்யூரிட்டி சொல்லவும், சற்று நேரம் கழித்து செல்வதாக சொன்னான். 

செக்யூரிட்டி விடவில்லை, ஏதேனும் அசம்பாவிதம் என்றால் என்ன செய்வது என நினைத்தவன் ஆனந்தை அங்கிருந்து செல்ல வைத்து விட்டுத்தான் கிளம்பினான். 

தேன் மகனோடு படுத்து விட்டாள். தருண் உறங்கியிருந்தான், தேன் கண்கள் மூடியிருந்தாள், உறங்கி விட்டாளா என இவனுக்கு சரியாக தெரியவில்லை.

 அவள் தன் அம்மாவிடம் பேசிய விதத்தில் கோவமடைந்துதான் வெளியே சென்றான். இப்போது தேனின் கோவத்தில் நியாயம் இருப்பதாக உணர்ந்தவனுக்கு அவளருகில் படுக்க பயமாக இருந்தது.

இனியும் இந்த இரவை சண்டையால் நிரப்பாமல் இருக்க நினைத்து, ஹால் வந்து படுத்துக் கொண்டான். 

அடுத்த நாள் தன் போல வேலைகளை செய்து கொண்டிருந்தாள் தேன். நன்றாக தூங்கினாயா? என்ன சமையல் இன்று என அவனாக வழிய வந்து பேசியும் எந்த பதிலும் தராமல், அதே சமயம் முகத்தை தூக்கி வைத்துக் கொள்ளாமல் நிதானமாக இயல்பாக நடமாடிக் கொண்டிருந்தாள். 

அவனை கடக்கும் ஒரு தருவாயில் அவளின் கையை பிடித்துக் கொண்டவன், “ஊருக்கு வரலைன்னு அம்மாட்ட சொல்லிட்டேன், அந்த கடனையும் நான் அடைக்க மாட்டேன், நேத்து நைட் மாமா போன் பண்ணினப்ப அவர்கிட்டேயும் நான் வரலைன்னு தெளிவா சொல்லிட்டேன். இதுக்கு மேல என்ன செய்யணும்னு எதிர்பார்க்கிற?”எனக் கேட்டான். 

“ஓ… எனக்காக எவ்ளோ எவ்ளோ பெரிய விஷயமெல்லாம் செஞ்சிருக்கீங்க? ரொம்ப சந்தோஷங்க”என இகழ்ச்சி சிரிப்போடு சொன்னவள், அவனது கைப் பிடியை அகற்றி விட்டு குளிக்க சென்று விட்டாள். 

அவள் வேலைக்கு புறப்படும் சமயம் அன்றைய கடைசி முயற்சியாக, “மூஞ்சில அடிச்சு பேசுறதெல்லாம் எனக்கு வராது தேனு, ஆனா அவங்ககிட்ட சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன். என்ன இருந்தாலும் என்னை பெத்தவங்க, வயசானவங்க, நான் பார்த்துக்கிறேன்னு சொல்லியும் நீ பேசின, அது சரியில்லையோன்னு தோணிச்சு, காசு பணம் இல்லைனா கோவ படக்கூட உரிமை கிடையாதா எனக்கு?” எனக் கேட்டான். 

அவனை பார்த்து செயற்கையாக புன்னகையை வரவழைத்துக் கொண்டு சிரித்தவள், “எவ்ளோ நல்லவர்ங்க நீங்க, பெத்தவங்க மனச காயப்படுத்தாத உத்தமர் நீங்க. இப்படியே இருங்க” என்றாள். 

அவள் என்ன சொல்ல வருகிறாள் என ஒன்றும் புரியாமல் உச்சந்தலையில் கை வைத்து ஆட்டிக் கொண்டவன், “என் அப்பாம்மா தம்பி அக்கா எல்லாரை விடவும் எனக்கு நீயும் தருணும்தான் முக்கியம், அத உனக்கு  எப்படி புரிய வைக்கிறதுன்னுதான் எனக்கு தெரியலை” என்றான். 

“நோட்டு ஒண்ணு வாங்கி விளக்க உரை எழுதி தாங்க, படிச்சு புரிஞ்சிக்கிறேன். உங்க பையன் வளர்ந்து படிக்க ஆரம்பிச்சதும் அவனுக்கும் படிக்க கொடுக்கிறேன், அவனும் படிச்சு புரிஞ்சுப்பான்” என்றவள் மகனுக்கு தேவையானவை எடுத்து வைத்திருந்த பையை தோளில் போட்டுக் கொண்டாள். 

தயாராகி தத்தி தத்தி நடந்து கொண்டிருந்த மகனை ஆனந்த் தூக்கிக் கொள்ள, மகனுக்காக கை நீட்டினாள். 

அப்பாவின் கழுத்தை கட்டிக் கொண்ட தருண், “அப்பா…அப்பா…” என நன்றாக அழைத்தான். 

மகனை உச்சிமுகர்ந்து, “எங்க இன்னொரு முறை சொல்லுங்க அப்பா… அப்பா” என  சொல்லிக் கொடுத்தான். 

குழந்தையும் மீண்டும் மீண்டும் அப்பா என அழைத்தது. உருகிப் போனவன், “எவ்ளோ அழகா சொல்றான் பாரு தேனு” என்றான். 

“சரி கொடுங்க அவனை, டைம் ஆச்சு” என்றாள். 

“என்ன இப்படி எதுவுமே நடக்காத மாதிரி பேசுற, இவன் அப்பான்னு அழகா கூப்பிடுறான் தேனு” என்றான். 

“ஆமாம் அதுக்கென்ன இப்ப? குழந்தைன்னா அப்படியே இருக்குமா? வளருமே, அவனுக்குன்னு நல்ல எதிர்காலத்த அமைச்சு தர்ற பொறுப்பும் கடமையும் எனக்கு இருக்கு. அதுதான் எனக்குள்ள ஓடிக்கிட்டு இருக்கு, வேற எதையும் கவனிச்சு ரசிக்கிற நிலைமையிலா இருக்கேன் நான்?” என சொல்லி, தன்னிடம் வராத மகனை  வற்புறுத்தி வாங்கிக் கொண்டவள் வெளியேறி விட்டாள். 

மனைவியின் பேச்சு அவனை வெகுவாக வலிக்க செய்தாலும் அவளை அப்படி பேச வைத்தது தன்னுடைய நடத்தைதான் என்பதை புரிந்திருந்தவன் அப்படியே  ஹாலிலேயே அமர்ந்திருந்தான்.

ஏதோ ஒரு நொடி பசியெடுக்கவும்தான் எழுந்தான். முந்தைய நாள் இரவில் பணி இல்லாத காரணத்தால் உறக்கம் வரவில்லை. மனைவி வேலை செய்யும் குழந்தைகள் கேர் சென்டருக்கு சென்றவன் தருணை தன்னிடம் விடும் படி கேட்டான். 

“நீங்க தூங்குங்க, இவன் என்னோடவே இருக்கட்டும்” என சொல்லி தர மறுத்தாள்.

 “இவனோட டைம் ஸ்பெண்ட் பண்ணவே முடியலை, இன்னிக்கு நான் வச்சிக்கிறேனே” என அவன் சொல்லவும், மகனை தந்து விட்டாள். 

அங்கிருந்து புறப்படுவதற்கு முன், “இவன் மட்டுமில்ல, நீயும் என் பொறுப்புதான். உங்களுக்கு செய்றத கடமைன்னு எல்லாம் சொல்ல மாட்டேன் தேனு, நீங்க ரெண்டு பேரும்தான் நான் வாழுற வாழ்க்கைக்கு அர்த்தம். இவனோட எதிர்காலம் பத்தியெல்லாம் பேசுற, என் எதிர்காலம் உங்களை வச்சுதாங்கிறத மறந்திடாத”என சொல்லி கிளம்பினான். 

இத்தனை நாட்கள் ஆகியும் திவ்யா திரும்பி வராததில் ராஜ்குமாருக்கு இப்போதுதான் கொஞ்சமாக பயம் வந்தது. அவளுக்கு அழைப்பு விடுத்தான். நீண்ட நாள் பிரிவில் மனம் சோர்ந்திருந்த திவ்யாவும் அழைப்பை ஏற்றாள்.  

“என்ன நினைப்புல இருக்க நீ? உள்ளங்கைல வச்சு உன்னை நான் தாங்கும் போதே அம்மா வீட்ல போய் உட்கார்ந்துகிட்ட, ஊரு உலகத்துல போய் பாரு, அவனவன் எப்படியெல்லாம் பொண்டாட்டியை இம்சிக்கிறான்னு, அவனுங்க மாதிரிலாம் இருந்தா என்ன செய்வ?” எனக் கேட்டான். 

அவன் பேசிய தொனி பிடிக்காமல் அமைதியாக இருந்தாள்.

“ஒழுங்கா வீடு வந்து சேருற வழிய பாரு, இல்லனா ரொம்ப கஷ்ட படுவ” என அவன் சொல்லவும், அழைப்பை துண்டித்து விட்டாள். 

“நீ கஷ்ட படுறியோ இல்லையோ நான் கஷ்ட படுறேன்” மெல்லிய குரலில் சொன்னவன் பின்னர்தான் அவள் அழைப்பை துண்டித்து விட்டதை கவனித்தான். 

கோவம் கொண்டவன் மீண்டும் அவளை தொடர்பு கொள்ள முயலவில்லை. 

எதற்கும் கேள்வியே கேளாமல் தான்  அமைதியாகவே இருந்து விட்ட காரணத்தால்தான் தன்னுடைய அருமை அவனுக்கு தெரியாமலேயே போய் விட்டது என கருதிய திவ்யாவும் கணவனுடன் பேச முயலவில்லை.