போகும் வழியிலேயே வாசு கனகவேலிடம், “ஏன் கனகவேலு. முதல் தடவை இப்படி ஒரு விஷயம் பண்றீங்க. எப்படி தைரியமா இதை பண்ணீங்க. அதுவும் அவங்க கொலை குற்றவாளி உங்களையோ உங்க ஆட்களையோ எது வேணாலும் செய்யலாம். சிதம்பரத்துக்கு தெரிஞ்சதுன்னா சும்மா விடமாட்டாரே”,
“நீங்கள் சொல்றது சரிதான். ஆனால் நமக்கு பிடிச்சமான ஒருத்தவங்களுக்காக ஒரு விஷயத்தை இறங்கி செஞ்சோம்னா, கண்டிப்பா அதுல நாம தவற மாட்டோம். அது மட்டும் இல்ல, நான் இந்த விசயத்தை உடனே செஞ்சாலும் யோசிக்காம செய்யல. ஒரு நம்பிக்கை எனக்கு எப்பவுமே இருக்கு.
அப்புறம் என் பசங்க எல்லாமே முன்னாடி ரவுடிசம் நிறைய பண்ணிட்டு இருந்தவனுங்க. முன்னாடி கெட்டதுக்கு பண்ணவங்க இப்ப முதல் தடவை நல்லதுக்கு பண்ண வச்சிருக்கேன்.
அவங்க ரொம்பவே கவனமாதான் எல்லா விஷயத்தையும் பண்ணுவானுங்க. அதே மாதிரி அவங்களுக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் வரதுக்கு நானும் அனுமதிக்க மாட்டேன்.
இதெல்லாம் விட முக்கியம் ஒரு கொலைய பண்ணிட்டு தைரியமா ஊருக்குள்ள சுத்திட்டு இருக்காங்க. நாளைக்கு காசுக்காக எது வேணாலும் பண்ணுவாங்க. எல்லாம் தெரிஞ்சும் அவங்கள விடுறதுக்கு எனக்கு மனசு இல்ல. அதுவும் ஒரு காரணம் தான்”, என்று பெரிதாக பேசி முடித்தான்.
ரகுவிற்கு அவனின் இந்த பேச்சு புன்னகையை தோற்றுவித்தது. கனகவேல் மேல் எப்போதும் ரகுவிற்கு ஒரு தனி அன்பு இருந்தது. இப்போது இன்னும் அது கூடியது.
அதுவும் வார்த்தைக்கு வார்த்தை அதுவரை அவன் பேசிட கூட இல்லாத மதியை அண்ணி அண்ணி என்று கூறும் போது அவன் மேல் பாசமும் நேசமும் மிகுந்தது என்று சொன்னால் மிகையாகாது.
கனகவேல் கூறிய இடத்திற்கு நால்வரும் சென்று சேர, உள்ளே நுழைந்ததும் ரகு அந்த மூவரையும் கண்டவன் ஒரு நொடி அவன் மனதிற்குள் கோபமும் ஆத்திரமும் வந்தது.
அவனுக்கு மதியின் வேதனை அத்தனை தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அதற்கு காரணம் இவர்களும் தானே என்று எண்ணம் அவர்களை நேரில் கண்டதும் வந்ததிட, ஆத்திரத்தில் சப்பு சப்பென்று கன்னங்கள் வீங்குபடி மூன்று பேரையும் மாறி மாறி அடித்தான். வாசுவும் சந்திரனும் தான் அவனை பிடித்து இழுத்தனர்.
கனகவேல் அவர்களை பிடித்துக் கொண்டு வந்து வைத்ததோடு சரி. அவர்கள் மேல் கை வைக்க கூட இல்லை. எனினும் ரகு அவர்களை கண்டதும் அடிக்க ஆரம்பித்தது அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் வாசுவும் சந்திரனும் அவனை தடுத்து நிறுத்தினர். சந்திரன்,
“ரகு நீங்க இந்த மாதிரி எமோஷன் ஆக கூடாது. இவங்கள நம்ம போலீஸ்ல ஒப்படைக்கிறதா இருந்தா கூட இந்த மாதிரி அடிக்கிறது நமக்கு தான் பிரச்சனை. ப்ளீஸ் நீ காம்”,
அவர்கள் வரும் முன்பாக மண்டியிட்டு அமர்ந்திருந்த மூவரும் ரகுவின் அடியில் மொத்தமாக சாய்ந்து விழுந்திருக்க, வாசு ரகுவிற்கு நீரை பருக கொடுத்து அவனை அமைதி படுத்தினான்.
கனகவேல் அவர்களை அடித்து கொல்லட்டும் என்று எகிற, சந்திரன் தான் இருக்கும் சாதக பாகங்களை விளக்கி அவனையும் அமைதிப்படுத்தினார்.
இப்போது ரகு அமைதியாகியவன் நேரடியாக அவர்கள் முன்பு ஒரு நாற்காலியை போட்டு அமர்ந்து கொண்டான். விழுந்து கிடந்த மூவரையும் எழுப்பி நிறுத்துமாறு கனகவேலிடம் கூற, அவன் ஆட்கள் அவன் மூன்று பேரையும் நிமிர்த்தி அமர வைத்தனர்.
இதில் லாரி டிரைவர் இவன் தான் என்று கனகவேல் கைகாட்டவும் அவனுக்கு நேராக தன் முகத்தை கொண்டு சென்ற ரகு,
“பணத்துக்காக பண்ண உன்கிட்ட நீ பண்ணது நியாயமானு எல்லாம் கேட்க போறது கிடையாது. ஆனா நீ பண்ண அந்த விஷயம் அதுக்கு நீ தண்டனை நான் அனுபவிச்சு தானே ஆகணும். ஆமாம் முதல்ல உன்னை எதுக்காக கூட்டிட்டு வந்துருக்கோம்னு உனக்கு தெரியுமா?” அந்த லாரி டிரைவர் ரகுவிடம் அடிவாங்கியதால் உதடு ஓரத்தில் வழிய அத்துடன் பேசினான்.
“சார் நான் எதுவும் பண்ணல சார். நீங்க யாரை பத்தி பேசுறீங்கன்னு எங்களுக்கு தெரியல. நீங்க எதுக்காக எங்களை கூப்பிட்டு வந்து அடிச்சிட்டு இருக்கீங்க?”
“என்ன பண்ணீங்கன்னு தெரியலையா? ஆறு மாசத்துக்கு முன்னாடி ஒரு ஆக்சிடென்ட் பண்ணீங்களே சிதம்பரம் சொல்லி?”,
“சார்…..அந்த.. ஆக்சிடென்ட்டா?”, என்று முழுங்கி முழுங்கி பேசினான் அந்த லாரி டிரைவர்.
மற்ற இருவருக்கும் தலையே பதிங்குது நம்ம ஒன்னு பண்ணு முடியாது. இப்படியே அமைதியா இருந்திட வேண்டியது தான் என்று இருக்க பயந்து அமைதியாகினர்.
“ஆமா அதே ஆக்சிடென்ட் தான் ஏன் அதை சொல்றதுக்கு உனக்கு வாய்ல வார்த்தை வரலையா? ரொம்ப திணறுர மாதிரி இருக்கு”,
“சார் நீங்க நினைக்கிற மாதிரி அந்த ஆக்சிடென்ட் அது…” என்றவன் இழுக்க,
“செய்யும் போது ஜாலியா இருந்துச்சா? ஒழுங்கா சொன்னா ஜெயில்ல கழி திங்கறதோட விட்டுடுவேன். என்னை ஏமாற்றலாம்னு நினைச்சேன் மொத்தமா உன்னை உலகத்தை விட்டு அனுப்பவும் தயங்க மாட்டேன். உன்ன பாக்குறதுக்கு முன்னாடி வரைக்கும் எனக்கு உன் மேல கோபமே இல்ல நீ வெறும் அம்புதான்ற எண்ணம் மட்டும்தான் இருந்துச்சு.
ஆனா உன்ன பார்த்ததுக்கு அப்புறம் எனக்கு எவ்வளவு கோவம் வருது தெரியுமா? இப்ப இருக்க பிரச்சனை எல்லாத்துக்கும் காரணம் நீ தான். நினைக்கும் போது கோபம் பத்திகிட்டு வருது” என்று அவன் கூற
அதற்கு அந்த லாரி டிரைவர், “சார் நீங்க நினைக்கிற மாதிரி அந்த கொலையை நாங்க பண்ணல சார்” என்று கூறினான் திக்கி திணறி.
அதைக் கேட்ட அனைவரும் ஒரு நொடி அதிர்ச்சியாகினர், அடுத்த நொடி ரகு பலமாக சிரிக்க ஆரம்பித்தான். சிரித்து முடித்து சற்று ஓய்ந்தவன்,
“என்ன ஃபன் பண்றியா?” என்றான். ஏற்கெனவே ரகுவின் வெறி நிறைந்த பார்வை அவனை அச்சப்பட வைத்துக் கொண்டிருக்க, அவன் சிரித்த சிரிப்பு அவனை மொத்தமாக நடுங்க வைத்தது.
“சார் நீங்க நினைக்கிற மாதிரி நான் பணம் வாங்கி கொலை பண்ற ஆள் கிடையாது. அது தான் எனக்கே முத தடவை சார். அதையும் நான் சொதப்பிட்டேன் சார். நாங்க போகும்போது எங்களுக்கு முன்னாடி வேற ஒரு லாரி அவங்களை ஏத்திருச்சு சார். உண்மையாவே நாங்க ஏத்தல. ஆனா காசுக்காக நாங்க தான் பண்ணோம்னு அந்த ஆள் கிட்ட போய் சொல்லிட்டோம்.”
“நீ உண்மைதான் சொல்றியா?” என்றான் ரகு. ஏனெனில் அவன் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் உண்மை என்று அவன் கண்களில் இருந்த பயம் விளக்கமாக கூறியது.
“ஆமா சார் உண்மையா தான் சொல்றேன். நான் பணம் வாங்குனது உண்மைதான். ஆனால் அவங்களை என்னால கொல்ல முடியல. ஏன்னா முதல் தடவை ஒரு கொலை பண்றது என்னால முடியலை. அந்த பிஏ தான் அந்த ஆள் சிதம்பரம் கிட்ட கூட்டிட்டு போனான்.
என்னை ஏரியாலயும் சும்மா அப்படி பில்டப் பண்ணுவாங்க. ஆனா உண்மையிலேயே எனக்கு அதெல்லாம் பண்ணவே வராது சார். ட்ரக்ஸ், பணம் கைமாத்திரது, கொஞ்ச பெரிய பிஸ்னஸ் பணறவங்க கிட்ட மாமூல் வாங்கிறது இப்படி தான் பண்ணியிருக்கேன் சார்.
ஒருநாள் கூட கொலை பண்ணது இல்லை. முத தடவை பண்ண போனேன். ஆனா அதுவும் ஃபெயிலியர். ஆனா அதை யாருக்கும் காட்டிக்காம நைசா மழுப்பிட்டேன். அந்த காசை வாங்கிட்டு தலைமறைவு ஆகிட்டேன். எங்களை பத்தி போலீஸ் தேடலைன்னு தெரிஞ்சுதான் ஒரு மாசமா வெளிய சுத்த ஆரம்பிச்சோம். அப்ப தான் உங்ககிட்ட மாட்டிக்கிட்டோம்”
அந்த நொடி தோன்றிய அதிர்ச்சி தான், இப்போது பொழுது மாலையை நெருங்கி இருந்த இந்த வேலையும் கூட அந்த அதிர்ச்சி நீங்காமல் இருந்தது.
உண்மையில் இந்த பிரச்சனை சிதம்பரத்துடன் முடிந்திடும் என்று தான் ரகு நினைத்திருந்தான். மற்ற யாரெல்லாம் மதிக்கு பிரச்சனை செய்யும் படி இருக்கின்றனரோ அவர்களுக்கு கூடிய விரைவில் ஒரு முடிவு கட்டலாம்.
அதுவும் இப்போது மதியின் உடல்நிலைக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சனை சரியான பின் தான் என்று ரகு எண்ணி வந்திருக்க, ஆனால் இப்போது தன் மாமனார் மாமியாரை கொலை செய்தவர்கள் வேறு யாரோ என்ற செய்தி பெரும் இடியாக இருந்தது.
ஏற்கனவே மதிக்கு மருத்துவர் சொன்ன நேரம் குறுகியதுதான். இப்போது வந்திருக்கும் பிரச்சனை இன்னும் நேரத்தை கடத்துவதாக அவனுக்கு தோன்றியது.
இப்போது எப்படி இதை சரி செய்வது என்று சிந்திக்க ஆரம்பிக்க, சந்திரனிடம் மீண்டும் விவாதிக்க ஆரம்பித்தான். சந்திரன் ஒரு விஷயத்தைப் பற்றி கூறியிருந்தார். மதி தன்னால் முடிந்த உதவிகளை பலருக்கும் செய்திருக்கிறாள்.
அப்படி மதியின் உதவியைப் பெற்ற ஒரு நபர் தூத்துக்குடியை சேர்ந்தவர். அங்கு அவர் பெரும் தனக்காரர். அங்குதான் மதியின் தாய் தந்தைக்கும் விபத்து நடந்தது.
அந்த விபத்தை குறித்து அந்த மனிதரிடம் தெரிவித்து. அவர் மூலமாக அங்கிருக்கும் காவலர்களுக்கு அழுத்தம் கொடுத்தால் ஒருவேளை அவர்கள் அந்த லாரி குறித்து சிரத்தையுடன் விசாரிக்க வாய்ப்பு உண்டு என்று கூறினார்.
ரகுவும் அது வரை பயன்படுத்தாத தன் பெயரை பயன்படுத்தி அங்கிருக்கும் காவல் ஆய்வாளரிடம் பேச, அவர்கள் கேட்ட தகவல்கள் அனைத்தும் அன்றும் மாலைக்குள் அவர்கள் கைக்கு வந்து சேர்ந்தது.
கிடைத்த தகவலின் படி அன்று சிதம்பரம் ஏவிய ஆட்களை தவிர்த்து இன்னும் ஒரு கனரக வாகனம் மட்டுமே சரியாக அந்த நேரத்தில் கடந்து சென்றிருக்கிறது. அது மட்டும் இன்றி ஆறு மாதங்களாக காணாமல் போன நபர்களில் அந்த லாரி ஓட்டுனரும் இருக்கிறான்.
அன்று மதுரையிலிருந்து சரக்குகள் ஏற்றிக்கொண்டு புறப்பட்ட அவனும் சரக்குகளுடன் இருந்த லாரியும் காணாமல் போய்விட்டிருந்தது. அது குறித்து தேடல் தீவிரமாக ஆரம்பித்தது.
ரகுவிற்கு நேரம் கடக்க கடக்க மதிக்கு தான் கொடுத்த சத்தியத்தின் படி இரண்டு நாட்களில் வீடு செல்ல முடியாமல் போய்விடுமோ என்று பயம் மனதை கவ்வ ஆரம்பித்தது. ஆனால் அதே சமயம் சிதம்பரத்தின் பிரச்சனையையும் முடிவுக்குக் கொண்டுவர நாராயண மூர்த்தியின் உதவியுடன் சிவனேசனை சந்திக்க ரகு சென்றிருந்தான்.
அவரிடம் ஒரு ஒரு மணி நேரம் பேசியவன், தனக்கு தேவையான தகவலை மட்டும் தந்தால் போதும், வேறு ஏதும் தான் எதிர்பார்க்கவில்லை என்பதை தெளிவாக உறைத்துவிட்டு வந்திருந்தான். அவரும் அவன் கூற்றின்படி செயலாற்ற மறுநாள் காலை சிதம்பரத்தின் வீட்டை அடைந்தார்.
அவருக்கும் இப்போது தன் நண்பனின் மனநிம்மதி மட்டும் முக்கியமாகப் பட்டது. நன் மனைவிக்காக இவ்வளவு தூரம் ஒருவன் இறங்கி வந்திருக்கும்போது, தவறும் தங்கள் பக்கம் தான் என்ற நிலையில், தாங்களும் சரியாக நடந்துக் கொள்ள வேண்டும். அதுவே சரி என்று முடிவு செய்தவர் தன் நண்பனிடம் பேச செனறார்.