வதைக்கிறாய் என்னை மெதுவாக..(நீ பார்த்த விழிகள் -பாடல்)
இதழில் புன்னகையை மட்டும் வறண்டு போக செய்து விடாதே என்று உணர்த்திச் சென்ற தன்னவனை மட்டும் மனமுழுக்க சுமந்து இருப்பவளின் இதழ்கள், அந்த பாடல் வரிகளை கேட்டதும் மென்மையாக புன்னகைத்துக் கொண்டது.
ரகுவிற்கு ஒரு பழக்கம் உண்டு தான் பதிந்து வைத்திருக்கும் பாடல்கள் அனைத்தையும் தனித்தனியாக சோகம், காதல், ஊக்கம் என்று அவன் தொகுப்புகளாகப் பிரித்து வைத்திருப்பான்.
அதில் தன் மனைவிக்கு என்று அவன் புறப்படும் முன்பாக சரியாக காதல் பாடல்களை இயக்கி விட்டு சென்றிருந்தான்.
அவளும் அவன் கிளம்பிய நொடியில் இருந்து அந்த பாடல்களின் மென்மையுடனே அந்த காலைப் பொழுதில் அறையிலேயே உலாத்திக் கொண்டிருக்க, அந்த சமயம் தான் அவள் சகோதரிகள் அறை வாசலில் வந்து நின்றிருந்தனர்.
ஜீவா, “எங்ககிட்ட சொல்லிருக்கலாம்ல அக்கா”, என்று அவளை கேட்க, சக்தியும் அதே கேள்வியை தன் பார்வை வழி கேட்டு நின்றிருந்தாள். இருவருக்கும் எந்த பதிலும் அளிக்காமல் புன்னகையுடன் கையை நீட்ட இருவரும் ஓடிவந்து அவள் கைகளுக்குள் புகுந்து கொண்டனர்.
சில நொடிகள் மூவரும் அணைப்பில் அடங்கி நின்றிருக்க, ஜீவா, சக்தி இருவர் கண்களும் நீரில் நிறைந்து விட்டது. மதி மெதுவாக இருவரையும் விலக்கிட, மீண்டும், “எங்க கிட்ட சொல்லணும் உனக்கு தோணவே இல்லையா?” என்று கேள்வி வந்து விழுந்தது.
இப்போதும் மதி இடம் இருந்து எந்த பதிலும் இல்லை, மாறாக, “சரி டீ ரொம்ப பண்ணாதீங்க. வந்து உட்காருங்க”, என்று கூறி இருவரையும் அங்கிருந்து சோபாவில் அமர்த்தி தானும் அங்க அமர்ந்தாள்.
இப்போது இருவரையும் பார்த்து “என்ன காலையில முழுசா விடியறதுக்குள்ள கிளம்பி வந்து இருக்கீங்க. உங்க அத்து நேத்தே சொல்லிட்டாரா?”, என்று கேட்க, அதற்கு,
“நாங்க என்ன கேட்கிறோம். நீ என்ன பேசிட்டு இருக்க?”, என்று ஜீவா கோபமாக கேட்டாள்.
“சரி கோபம் படாது ஜிவ்வுகுட்டி. இப்ப என்ன பண்ண சொல்ற? என்ன சொல்ல சொல்ற? எனக்கு இப்படி ஆயிடுச்சுன்னு சொல்ல முடியுமா? சொல்ல முடியல அவ்வளவுதான். உங்க அத்துவே அவரா தான் கண்டுபிடிச்சாரு.
ஆனா உண்மையிலேயே இன்னும் கொஞ்ச நாள் ஆயிடுச்சின்னா என்னால முடியலன்னு உங்க கிட்ட தான் வந்து நின்றிருப்பேன். வேற யார் இருக்கா நான் வந்து நிற்கிறதுக்கு”, என்றாள்.
உடனே சக்தி, “இவ்வளவு நாள் நீ வெயிட் பண்ண வேண்டிய அவசியமே இல்ல. முதல்ல என்கிட்ட சொல்லி இருக்கலாம். நான் ஒரு டாக்டர் தான? எனக்கு தெரிஞ்சு நீ வீட்டிலேயே சரியா தூங்கலன்னு நினைக்கிறேன். நான் உன்னை கவனிக்காம விட்டுட்டேன். டாக்டரா இருந்து என்ன பிரயோஜனம்?
நீ என் அக்கா உனக்கே என்னாச்சின்னு தெரியாம இருந்திருக்கேன். என்னை நெனச்சா எனக்கே கோபம் வருது”, என்று கோபமாக சக்தி தன்னை தானே திட்டி பேசினாள்.
மதி, “லூசு, நானே அம்மா அப்பா இறந்து கொஞ்ச நாள் தான் அங்கிருந்தேன். கிளம்பி இங்க வந்துட்டேன். இப்போ தான் எனக்கு பிரச்சனையே ஆரம்பிச்சிருக்கு, உனக்கு எப்படி தெரியும் ரொம்ப ஓவரா பண்ணாத”, என்று தன்னையே தேவையில்லாமல் திட்டிக் கொள்ளும் தங்கையிடம் கண்டிப்பு குரலில் கூறினாள்.
மீண்டும் ஜீவா, “ஆனால் அக்கா, நீ இப்படி எல்லாத்தையும் மறைச்சிருக்கவே கூடாது. ஒன் வீக்கா நீ தூங்காம இருந்திருக்க. உனக்கு மனசாட்சியே இல்லையா? இப்படியா பண்ணுவ யார்கிட்டயும் சொல்லாம”, என்று அதே விசயத்தில் வந்து நிற்க,
“அடியே! போதும்டி ரெண்டு பேரும் ஓவரா பண்ணிட்டு இருக்கீங்க. உங்க அத்து என்னை பார்த்துக்க சொல்லித்தான் இங்க உங்களை கூப்பிட்டு இருப்பாரு. தனியா இருக்கேன் சின்ன பிள்ளை மாதிரி அழுவேன்னு நினைச்சு உங்க ரெண்டு பேரையும் விட்டுட்டு போயிருக்காரு. அதனால ஒழுங்கா என்னை பாத்துக் கோங்க”, என்று கூற ,
“நீ அழுவன்னுலாம் விட்டுட்டு போகல. உங்க அக்காக்கு ஓவரா திமிர் கூடிருச்சு. அவ திமிரை குறைக்கணும் அதனால ரெண்டு பேரும் வாங்கன்னு அத்து சொன்னாரு. அதான் வந்தோம்”, என்று ஜீவா தன்னை மீட்டவளாக தன் தோரணையுடனே கூற,
மதி அவளை பார்த்து சிரித்துக் கொண்டே, “உங்க அத்து கூட சேர்ந்துடீங்க. அப்போ இப்படி தான் பேச தோனும். சரி வாங்க சாப்பிடலாம். காலையிலயே வந்திருக்கீங்க சாப்பிட்டு இருக்க மாட்டீங்க”, என்று கூறி இருவரையும் கீழ அழைத்தாள்.
ஆனால் சக்தி உடனே அவளை மறுத்து, “நோ, நோ, இனிமே உன்னோட சாப்பாடு எல்லாத்தையும் நாங்களே கொண்டு வந்து இங்க கொடுக்கிறோம். இல்லனா கீழ இருந்து யாரையாவது எடுத்துட்டு வர சொல்லலாம்.
நீ எவ்ளோ டயர்டா தெரியுற இதோட போய் அத்தை முன்னாடி நின்ன. அவங்க கரெக்டா கண்டு பிடிச்சுடுவாங்க. அத்தை ரிசப்ஷன் வேலையும் ஆபீஸ் வேலையும் ஒண்ணா பாக்குறாங்க. அட்லீஸ்ட் கொஞ்சம் நிம்மதியா பாக்கட்டும்.
உன் பிரச்சனை அவங்க வரைக்கும் போகக்கூடாதுன்னு அத்து சொல்லிட்டு போயிருக்காரு. அதனால ஒழுங்கா நாங்க சொல்றத கேட்டு குட் கேர்ளா இருக்கனும். ஓகே?” என்றாள்.
மதி புன்னகையுடனே சரி என்று தலை ஆட்ட ஜீவா இருவரையும் பார்த்து நின்றவள், இப்பொழுது, “ஓகே. அப்ப நான் போய் மூணு பேருக்கும் பிரேக்ஃபாஸ்ட் எடுத்துட்டு வரேன். அத்தைங்களும் சாப்பிட்டு கிளம்பிறாங்கலான்னு பார்த்துட்டு வரேன்”, என்று கூறி வேகமாக கீழே இறங்கினாள்.
சிறிது நேரத்தில் காலை உணவுடன் வந்துவிட, உணவை முடித்ததும், மதியுடன் இருவரும் வாய் ஓயாமல் பேசிக்கொண்டே இருந்தனர். மதி முன்பே தாய் தந்தையுடன் இருக்கும் பொழுது அனைவரும் பேச இவள் கேட்டுக் கொண்டே படுத்து உறங்கி விடுவாள்.
அதன் பின் அவளை ஒழுங்காக உறங்க வைப்பர். இது முன்பு வாடிக்கையாக நடக்கும் ஒன்று.
இப்போதும் அப்படி உறங்கி விட மாட்டாளா என்ற நட்பாசையில் இருவரும் விடாமல் அவளிடம் பேசிக் கொண்டு இருக்க, மெத்தையில் படுத்திருந்த மதி உறக்கத்தை ஒரு நொடிக் கூட தழுவவில்லை.
ஆனால் அவளின் தளர்ந்த உடலும் கண்களில் இருந்த சிகப்பும் அவள் எத்தனை சோர்வுடன் இருக்கிறாள் என்பதை தெளிவாக காட்டியது.
கிட்டத்தட்ட இரண்டு மணி நேரங்களுக்கு மேல் பேசியே நேரத்தை கடத்தி இருக்க, ஜீவா தான் காலை உணவு உண்டு வெகு நேரம் ஆகிவிட்டது குளிர்பானம் எடுத்து வருகிறேன் என்று கீழே சென்றாள்.
அந்த சமயத்தில் தான் சக்திக்கு வாசுவிடம் இருந்து அழைப்பு வந்தது. அவள் பேசும் அனைத்தையும் அமைதியாக கேட்டுக் கொண்டு புன்னகையோடு தான் அமர்ந்திருந்தாள் மதி.
தவிர வாசுவிடம் பேச முயற்சிக்கவில்லை. அவளுக்கு தெரியும் இப்போது அவன் வரிசையாக பல விஷயங்களுக்கு தன்னை திட்ட ஆரம்பித்து விடுவான். அனைத்தையும் நேரடியாகவே சென்று பேசிக் கொள்ளலாம் என்று முடிவுக்கு வந்திருந்தாள்.
அதனால் அவர்களிடம் அந்த அழைப்பில் பேசாமல் இருக்க, சக்தி பேசி முடித்து வைத்ததும் அவர்கள் இருவருக்கும் நடந்த அந்த உரிமைச்சண்டை அவளை இன்னும் புன்னகைக்க வைத்தது.
ஜீவா வந்துவிட, வாசு உடன் பேசிய செய்தியை பகிர்ந்து கொண்டாள் சக்தி. நேரம் செல்ல பேச்சு ஒரு பக்கம் இருந்தாலும் மூவரும் அவரவர் படிப்பு, பணி என்று அது சம்பந்தமான வேலைகளை பார்க்கவும் தவறவில்லை.
அனைத்திற்கும் இடையில் மதிக்கு கணவன் எண்ணம் தான் மனதில் வியாபித்திருந்தது. மாலை நேரம் நெருங்கிய போது ரவி மதியைப பார்க்க வந்திருந்தான். நேராக மேலே வந்து அறையின் கதவைத் தட்ட, ஜீவாவே வந்து கதவை திறந்து விட்டாள்.
எப்போதும் போல் அவளுடன் வம்பிழுக்க அந்த நொடி அவனுக்கு தோன்றாத காரணத்தால், “எப்படி டா இருக்க?” என்று கேட்டவன், “உள்ள வரலாமா?” என்றான். “வாங்க ரவி ணா. என்ன கேள்வி இது?” என்று உள்ளே அழைத்தாள்.
உள்ளே வந்ததும் மதியை கண்டவன், “என்ன மதிமா இப்படி பண்ணலாமா? நீ ரகு கிட்ட சொல்லி இருக்கணும் இல்ல”, என்று கேட்க,
உடனே மதி, “அண்ணா எல்லாரும் இதே கேள்வி. நீங்களுமா? ப்ளீஸ் இதை விடுங்களேன். நானும் என்னதான் பண்றது. உங்களுக்கு தான் தெரியும் இல்ல”, என்றாள்.
“சரி கேக்கல விடு”, என்றவன் சக்தியை கண்டு, “சக்தி குட்டி, எப்படி இருக்குடா என்று கேட்டான்.
சக்தி, “நாங்க நல்லா தான் இருக்கோம் அண்ணா. ஆனா நீங்க தான் நல்லா இல்ல போல இருக்கே”
“என்னடா சொல்ற நான் நல்லா தானே இருக்கேன்”,
“நல்லா இருந்தீங்கன்னா வந்ததும் ஜீவாவை குட்டி பிசாசு எப்படி இருக்கன்னு கேட்டு இருப்பீங்க, என்னையும் சக்தினு கூப்பிடாம சகதி எப்படி இருக்குன்னு கேட்டு இருப்பீங்க?ஆனா ரெண்டுமே இல்லாம நீங்க ரொம்ப ஃபார்மலா விசாரிக்கிறீங்க.
அதான் நீங்க சரியில்லையோ எங்க அக்காக்கு மாதிரி உங்களுக்கும் ஏதாவது உடம்பு முடியாம போயிடிச்சோன்னு கேட்டேன்”, என்றதும்,
மதி அவள் தலையில் நங்கென்ற ஒரு கொட்டுவைத்து, “என்னை எதுக்கு டி எக்ஸாம்பிள்லா சொல்ற?”, என்று கேட்டாள்.
“உன்னை தான் எக்ஸாம்பிளா சொல்ல முடியும். எல்லாத்தையும் மறைச்சு மறைச்சு வச்சிருக்க. அதே மாதிரி ரவி அண்ணாவும் மறைச்சு வச்சிருக்காரோன்னு நெனச்சு கேட்டேன்”, என்றதும் ரவி சிரித்துவிட்டான்.
“ரகு சொன்னதிலிருந்து ரொம்ப டல்லாவே இருந்தேன். நீங்களும் எப்படி இருக்கீங்களோ? இதை எப்படி எடுத்துக்க போறீங்களோனு ஒருபக்கம் அவனுக்கு எண்ணம்.
அது எனக்கும் வந்துருச்சு அதான் உங்களை பார்த்த உடனே எப்படி இருக்கீங்கன்னு கேட்டேன். சரி இப்ப சொல்லு நீ எப்படி இருக்க இந்த குட்டி பிசாசு உன்ன எதுவும் டார்ச்சர் பண்ணுச்சா? என்று இப்போது பழைய ரவியாக பேசினான்.
“இப்பதான் ரவி அண்ணா மாதிரி இருக்கீங்க”, என்றாள் ஜீவா.
சக்தி, “சரி அண்ணா நான் உங்களுக்கு ஏதாவது சாப்பிட கொண்டுவரேன். நீங்க இப்பதானே வேலை முடிஞ்சு வந்திருக்கீங்க” என்று கிளம்ப தயாராக,
“அதெல்லாம் வேண்டாம். நான் வந்ததும் எனக்கு எல்லாம் தயாராகிடும். நான் கீழ போய் ஹால்ல உக்காந்ததும் எல்லாம் கொண்டு வந்து கொடுத்துடுவாங்க சக்தி”, என்றவன்,
“மதிமா உன்கிட்ட தான் பேசணும்னு நினைச்சேன்”, என்றான்.
“சொல்லுங்க ரவி ணா. என்ன விஷயம்?”, என்றாள்.
“ரகுவ பத்தி தான் பேசணும்”
“அவருக்கு என்ன ணா. இந்த பிரச்சனைல அவர் வேற எதாவது மறந்திட்டாரா?” என்று சற்று படப்படப்புடன் கேட்க,
“அதெல்லாம் இல்லம்மா? இப்போதைக்கு உன்னை தவிர வேற எதுவும் அவனை அஃபக்ட் பண்ணாது. வேற எந்த பிரச்சனையா இருந்தாலும், நானே இந்த சமயத்தில அவனை கூப்பிட மாட்டேன்”.
ஆசுவாசத்துடன் அவன் சொல்லவருவதை கவனிக்க ஆரம்பித்தாள்.