பாட்டி என்றவுடன்,படிக்காத வயதான கிராமத்து பாட்டி என்று நினைவோடு இருந்தால், அது தவறு அவர் சீரியலில் வரும் வில்லி பாட்டி போல அழகாக டிரஸ் செய்து கொண்டு வெளியே வந்திருந்தார்.

      வீட்டில் வேலை பார்க்கும் பெண்ணை, “அலமேலு கொஞ்சம் இங்க வா”, என்று அழைத்தார்.

     அவரோ ஒரு ஆரத்தி தட்டோடு வர,  “கொஞ்சம் இருமா” என்று சொல்லி வாசலிலே நிறுத்தி, பாட்டி அவளுக்கு ஆரத்தி எடுத்தார்.,

     அவனோ அவரையும் அவளையும் வித்தியாசமாக பார்த்தபடி, “பாட்டி என்ன இது”  என்று கேட்டான்.

       “பொறு டா” என்று சொல்லிவிட்டு, “நீ உள்ள வாம்மா”, என்று அவளுக்கு சுத்திய அந்த ஆரத்தி தண்ணீரை கொண்டு போய் வாசலில் கொட்டும் படி அலமேலுவிடம் சொல்லிவிட்டு,

       அலமேலு பாட்டி கையில் கொடுத்த குங்கும சிமிழில் இருந்து குங்குமம் எடுத்து பொட்டு வைத்தார்.

    அவளும் “ஏன் பாட்டி இதெல்லாம்”, என்று கேட்டாள்.

    “எங்க வீட்டுக்கு மொத மொதல்ல பொண்ணுங்க வந்தா இப்படித்தான் நாங்க கூப்பிடுவோம்., அதுவும் கல்யாணம் ஆகாத பொண்ணுங்க வந்தா இப்படித்தான் கூப்பிடனும், நீ வலது காலை உள்ள வச்சு வா பார்ப்போம்”, என்று சொன்னார்.

“ம்ம், வைக்கிறேன்” என்று சொன்னவளை அவர்  கையை பிடித்தபடி உள்ளே அழைத்து  திரும்ப.,

   அவனும் “பாட்டி இங்கே என்ன நடக்குது”, என்று கேட்டான்.,

   திரும்பிப் பார்த்தவர், உனக்கு தனியா ஆரத்தி எடுக்க முடியாது, வலது காலை வச்சு உள்ள வா சொல்றேன்”, என்று சொல்லி விட்டு சென்றார்.

    ‘பாட்டிக்கு இருக்குற லொள்ள பாரு’ என்று நினைத்து கொண்டே உள்ளே சென்றான்.

   உள்ளே வரவும், அங்கு தாத்தா அவளை நலம் விசாரித்துக் கொண்டிருக்க
யோசனையோடு பார்த்தவன்., சற்று நேரம் அமைதியாக இருந்தான்,

   “நான் கிளம்புறேன் பாட்டி” என்றான்.

   அவரோ “சாப்பிட்டு விட்டு போ டா”, என்று சொன்னார் .

“இல்ல வீட்ல கடைக்கு போயிட்டு வந்து இருப்பாங்க, நான் போறேன்” என்று சொன்னவன்,

    பாட்டியை பார்த்து “ஏதோ எனக்கு என்னமோ சரியா படல, கேர்ஃபுல்”, என்று சொல்லிவிட்டு கிளம்பினான்.

“சரிதான் போடா”, என்று பாட்டியும் சொல்லும் போது இவனோ பாட்டியை திரும்பி பார்த்துக் கொண்டே சென்றான்.

    ‘அவள் யார்? எதற்காக இங்கு வந்திருக்கிறாள் ? பாட்டி ஏன் அவளை தாங்குகிறார்., தாத்தாவிடம் பேசும் போதும்,  பாட்டியிடமும் சாதாரணமாக பேசினாலும்.,  அவளுக்கு இவர்கள் புதியவர்களே’ என்பதை ஓரளவு அவனால் ஊகிக்க முடிந்தது.

    காரில் ஏறி பாடலை ஒலிக்க விட்டு சென்றவனுக்கு, இளையராஜாவின் இசையில் மனதெல்லாம் பழைய நினைவுகளின் வலியோடு இருந்தது,

    ‘எதையும் நினைக்க கூடாது என்றாலும், நெஞ்சில் நிறைந்த ஒருத்தி மட்டும் நினைவுகளோடு நின்று கொன்று கொண்டிருந்தாள்’.

   என்ன செய்தாலும் சில விஷயங்களை தவிர்க்க முடியாது., அப்படித்தான் நினைவுகளை கொல்ல யாராலும் முடியாது.,

   நினைவுகள் எல்லாம் மறக்க வைக்க முடியும் என்றாள், நிச்சயம் நினைவுகளை மறப்பதற்கு என்றே ஒரு கூட்டம் அவ்விடத்தில் குவிந்து நிற்கும், கிருஷ்ணாவும் அந்த வகை தான்.

      மனம் தன் போக்கில் நினைத்தாலும், கையோ பழகிய பாதையில் காரை செலுத்தியது.

நேராக வீடு வந்து சேர்ந்தவன் வீட்டில் இருந்த அனைவரையும் கூர்ந்து கவனிக்க தொடங்கினான்.

    ஏனெனில் யார் முகம் பார்த்தாலும் ‘ஏதோ ஒன்றை மறைப்பது போலவே’ தோன்றியது,

     ‘சரி அவர்களாக சொல்லட்டும், நாமாக எதுவும் கேட்க வேண்டாம்’, என்ற எண்ணத்தோடு அவன் அறைக்கு சென்றான்.

    தன்னை ரெப்பரஷ் செய்து கொண்டு வந்தவன், உணவு உண்ண அமர,  அம்மாவும் சித்தியும் வந்து பரிமாற தொடங்கினர்.

     அதே நேரம் நவீன் அருகே அமர, அப்பாவும் சித்தப்பாவும் எதிர்புறமாக வந்து அமர்ந்தனர்.

     ‘கத்திரிக்கா முத்திருச்சு போல, இன்னும் கொஞ்ச நேரத்துல வந்து சேரும்’, என்று அவன் நினைத்துக் கொண்டிருக்க.,

அது போலவே கிருஷ்ணாவின் அப்பா ராகவன் அவனிடம் பேசத் தொடங்கினார்.

      “தம்பி இன்னைக்கு உன் கூட அனுப்பி வைத்த பெண்”, என்று சொல்லி கடையில் நடந்த சம்பவங்களை சொன்னார்.

    “சரி கடையில யாரோ ஹெல்ப் கேட்டு வந்தாங்க, அனுப்பிட்டீங்க, ஆனா யாருன்னு சொல்லலையே”, என்று கேட்டான்.

அனைவரும் ஒன்று சேர்ந்தால் போல கிருஷ்ணாவின் சித்தியை  பார்க்க.,

    அவனும் அவரை கூர்ந்து பார்க்கவும், அவரோ தலையை மட்டும் அசைக்க., புரிந்து கொண்டவனுக்கு அதற்கு மேல் உணவை எடுத்து வாயில் வைக்கும் எண்ணம் இல்லாமல் எங்கோ வெறித்த படி அமர்ந்திருந்தான்.

    அருகில் இருந்த நவீன் தான், கிருஷ்ணாவின் கையைத் தட்டி, “சாப்பிடணும் அப்புறம் மத்ததெல்லாம் யோசிக்கலாம்”,  என்று சொன்னான்.

      கிருஷ்ணாவின் அப்பாவோ, “அந்த பொண்ணுக்கு எதுவுமே தெரியாது போல., இப்ப இங்க வந்து ஹெல்ப் பண்ணுங்க  ன்னு கேட்கும் போது கூட எங்களை யாருன்னு தெரியல., அது மட்டும் இல்லாம உங்க சித்தியை நான் பாட்டி வீட்ல போட்டோல பார்த்தேன், அப்படின்னு தான் சொல்லுச்சு, அங்க இருந்து கிளம்புற வரைக்கும் கூட அத்த ன்னு ஒரு வார்த்தை அந்த பொண்ணு வாயிலிருந்து வரல”, என்று சொன்னார்.

    அவனும் “அதெல்லாம்  லண்டன் வளர்ப்பு ப்பா., அப்படித்தான் இருக்கும், உறவு முறைகள் எல்லாம் தெரியாம தான் போயிருக்கும்”, என்று சொன்னவன்.,

    வேக வேகமாக உணவினை வாயில் அடைத்துக் கொண்டு  கையை கழுவி விட்டு வந்து மீண்டும் ஹாலில் அமர்ந்தவனிடம்.,

    அவன் அம்மா தான், “அந்த பொண்ணுக்கு எதுவும் தெரியாது ன்னு நினைக்கிறேன் பா”, என்று சொன்னார்.

“தெரியாமலே இருக்கட்டும் அதுதான் நல்லது” என்று சொன்னபடி அமைதியாக அமர்ந்திருந்தான்.

     அருகில் இருந்த நவீனோ, “அண்ணா நீங்க போய் ரெஸ்ட் எடுங்க” என்று சொன்னான்.

     “எனக்கு வொர்க் இருக்குடா, எங்க ரெஸ்ட் எல்லாம் எடுக்க, சரி நீ காலையில  சொன்ன இடத்துக்கு போனீயா இல்ல, இப்ப நான் போட்டா., நீ அந்த ஆளிடம்  பேசினீயா”,என்று சொல்லி காலையில் சொன்ன வேலையை நினைவுபடுத்த.,

     அவனும் அவர் ட்ட பேசினேன், அந்த இடத்திற்கு நாளைக்கு நாளைக்கு வாறேன் ன்னு சொன்னேன், அதை பார்த்துக்கலாம்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே கிருஷ்ணாவின் அருகில் அவன் தங்கையும் தங்கை கணவரும் வந்து அமர்ந்தனர்.

   மீண்டும் துளசியை பற்றி பேச்சு வர., கிருஷ்ணா எதுவுமே கவனிக்காதது போல இருந்தாலும் கவனித்துக் கொண்டு தான் இருந்தான்.

       “குழந்தை  எங்கடி” என்று கிருஷ்ணாவின் அம்மா அவன் தங்கையிடம் கேட்டார் .

    “தூங்கிட்டா” என்று சொல்லிய படி  கதை பேசத்  தொடங்கினர்.

     “ஆனாலும் அந்த பொண்ணு நம்ம எல்லாம் யாருன்னு கூட விசாரிக்கல பார்த்தீங்களா, ஏன் சித்தி ட்ட  அத்த  ன்னு கூட பேசல., யாரிடமும் விசாரிக்கல”,என்றாள்.

   “அவங்களுக்கு தப்பிச்சு போகணும், அவ்வளவு தான், தப்பித்து போவதற்கு என்ன வழி உண்டோ, யார்ட்ட ஹெல்ப் கேட்கலாம் அப்படின்னு நினைச்சிருந்தாங்க போல,  சோ ஹெல்ப் கேட்டாங்க”,என்றார் தங்கை கணவர்.

     “தனியா தப்பிச்சு போக சொல்லி இருந்தா தெரிஞ்சிருக்கும்”, என்று நவீன் சொன்னான்.

    அப்போதும் நிமிர்ந்து பார்க்காமல்,  தன் கை நகத்தையே யோசனையாக பார்த்துக் கொண்டிருந்தவன்,  எதுவும் சொல்லவில்லை.,

    அதன் பிறகு அவர்கள் அங்கு நடந்ததை தொடங்கியிருந்தார்கள்.,

    “பின்னாடி போய் நில்லுங்க, நாங்க வர்றோம்னு சொல்லியிருந்தோமா,  வரலைன்னு பயந்து போய் முழிச்சுட்டு இருந்துச்சு” என்று சொன்னான்.

     கிருஷ்ணாவின் தங்கை கணவர் தான், “அப்படி சொல்லாதடா மாப்பிள்ளை, அந்த பொண்ணு நாம ஹெல்ப் பண்றோம்., நாங்க வாரோம் சொன்னதால நம்மள தேடி இருக்கும்., நாம இல்ல அப்படின்னு ஒரு பயம் வந்திருக்கும், வருவார்களோ மாட்டாங்களோ ன்னு  நினைச்சிருக்கும், நான் கொஞ்ச நேரம் இங்க நின்னா கூட மாட்டிக்குவேன், அப்படின்னு தான் சொல்லுச்சு, அதனால எவ்வளவு சீக்கிரமா இங்கிருந்து  தப்பிக்கணுமோ, அவ்வளவு சீக்கிரம் நான் தப்பிச்சாகணும்னு தான் சொல்லுச்சே ஒழிய, யாரையும் கவனிக்கிற மனநிலையில் கூட அந்த பொண்ணு இல்ல, நிச்சயமா இப்போ போய் பேசினால் கண்டிப்பா பேசும்., இப்ப தப்பிச்சிட்டாங்க ன்னு ஒரு நிம்மதியோடு உட்கார்ந்திருக்கும்”, என்றான்.

      அவனும் “ஆமாமா பேசும், பேசும், சரியான வாயாடி பதிலுக்கு பதில் பேசிக்கிட்டே தானே இருந்துச்சு”, என்று சொன்னான்.

   “உன்னை விட மூத்தவடா மரியாதையா பேசு”, என்று கிருஷ்ணாவின் சித்தி சொன்னார்.

    அவனோ, “ஏன்மா உங்க அண்ணன் பொண்ணுக்கு மரியாதை கொடுக்க வேண்டுமாக்கும்”, என்றான்.

     “அப்படி இல்லடா வயசுல மூத்தவங்கள மரியாதையா பேசு ன்னு தான் சொல்லுறேன்”, என்றார்.

     “என்னை விட ரெண்டு வயசு தானே மூப்பு, மரியாதை எல்லாம் ஒன்னும் தேவையில்லை,  இப்பவும் லண்டனுக்கு ஓடி போக தான் ஏர்போர்ட் போகணும்னு சொல்லுச்சு, இப்ப நம்ம  சொல்ல போயி ஏர்போர்ட் போய் மாட்டிக்குவோமா பயந்து போய், நம்ம சொன்னதால பாட்டி வீட்ல போய் உக்காந்திருக்கு, அதுவும் யாரு வீடுன்னு கூட தெரியாமல் தைரியமாக உட்கார்ந்து இருக்கிறத பார்த்தீர்களா,  பாராட்டதமா செய்யணும்., உங்க நொண்ணன் பொண்ண”,என்றான்.

   “ஏண்டா மாப்ள, உனக்கு அந்த பொண்ண கறிச்சு கொட்டாமல் இருக்கவே முடியாதா, நம்ம மேல உள்ள நம்பிக்கையால கூட யாரு என்ன ன்னு கேட்காமல், நீங்க பாதுகாப்பான இடத்திற்கு தான் அனுப்புவீங்க ன்னு நம்பி போய் இருக்கலாம் இல்ல”, என்றார்.

     “நான் என்ன கறிச்சு கொட்டுறது,  பக்கத்துல இருந்தா இந்நேரம் சண்டை வந்து இருக்கும்”, என்று சொன்னான்.

      “உனக்கு சண்டை போடுவதற்கு ஆள் இல்ல, அவளுக்கும் சண்டை போடுறதுக்கு ஆள் இல்ல, அதான் உன்கிட்ட ஆர்க்யூ பண்றாங்க, நல்ல ஆட்கள் டா ரெண்டு பேரும்”, என்று சொன்னார்.

“அப்புறம் இன்னொரு விஷயம் தெரியுமா”, என்று நவீன் சொல்ல தொடங்கினான்.

    “அவங்க அப்பா ஹிட்லராம், ஹிட்லரை விட மோசமான ஆளாம் சொல்றாங்க”.,  என்று சொல்லவும்.

    அதுவரை அமைதியாக இருந்த கிருஷ்ணா நிமிர்ந்து பார்த்தான்,  நவீனை கூர்ந்து பார்க்கவும்.,

   “நிஜமாண்ணா அங்க வந்து எங்ககிட்ட ஹெல்ப் கேட்கும் போது, அந்த ஹிட்லர் வரதுக்குள்ள நான் தப்பிச்சு போகணும், அப்படின்னு தான் சொன்னாங்க”, என்று சொன்னான்.

     மீண்டும் எதுவும் சொல்லாமல் குனிந்து கொண்டவன், அவர்கள் ஆளாளுக்கு பேசுவதை கவனித்து கொண்டு இருந்தாலும்.,

    சற்று நேரத்தில் அங்கிருந்து எழுந்தவன், பொதுவாக அவர்களை நோக்கி, “எதுவும் பிரச்சனை வந்திடாம பாத்துக்கோங்க, என்னைக்கு லண்டன் டிக்கெட் ன்னு கேட்டுட்டு அன்னைக்கு கொண்டு போய் ஏர்போர்ட்ல விட்டுருங்க”, என்று சொன்னான்.

   அத்தனை பேரும் அவனை அதிர்ச்சியோடு பார்த்தனர். கிருஷ்ணாவின் சித்தி தான்,

    “கிருஷ்ணா” என்று அழைத்து நிறுத்த,

   “நமக்கு தேவையில்லாத விஷயத்துல நாம ஒதுங்கி இருக்கிறது நல்லது சித்தி, தப்பா எடுத்துக்காதீங்க உங்களுக்கும் சேர்த்து தான் சொல்றேன்., பிரச்சனை வந்து விடக்கூடாது பாத்துக்கோங்க”,
என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பியவன் அவன் வேலையை பார்ப்பதற்காக சென்று விட்டான்.

     உடனே நவீனிடம்  திரும்பியவர்., “ஏன்டா வேலையை பார்க்க கிளம்பிட்டான் இல்ல., நீ இங்க உட்கார்ந்து என்ன செய்ய போற, மேல படி ன்னு சொன்னதுக்கு,  கூட சேர்ந்து பிசினஸ் பார்க்கேன்னு சொல்லிட்ட,  மேல படிக்க மாட்டேன்னு சொல்லி அடம் பிடித்து வந்து நின்ன தானே, இப்ப போக வேண்டியது தானே, காலையில உனக்கு வேலை கொடுத்தா  காலைல கடைக்கு கூட வாரேன் ன்னு பின்னாடியே வந்துட்ட.,  இப்பவாவது போய் வேலையை பாரு”, என்று சொன்னார்.

   “அம்மாடி,  ஹிட்லர் தங்கச்சின்னு அப்பப்ப நிரூபிக்காதீங்க போங்க”, என்று சொல்லி விட்டு நகர போனவனை கையை பிடித்து இழுத்து முதுகில் ஒரு அடியை போட்டவர்.,

     “போய் தொலை”, என்று விரட்டினார்.

     அவனும் “எங்க அம்மாவுக்கு என் மேல என்ன பாசம்., போய் தொலையாம்”, என்று சொல்லிவிட்டு நகர்ந்தான்.

   அனைவரும் ஆளாளுக்கு அங்கிருந்து பேசிவிட்டு நகர்ந்தாலும்.,  கிருஷ்ணாவின் அம்மாவும் அப்பாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டவர்கள்,  பெருமூச்சோடு அமைதி காத்தனர்.

   கிருஷ்ணாவின் அப்பா தான்., “அவன் எதுவும் வாயை திறந்து சொல்லாத வரை, நாம எதுவும் யோசிக்கக்கூட முடியாது., அதனால் இதற்கு மேல் வேறு எதுவும் கற்பனை செய்து விடாதே”, என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

அவர்களின் கற்பனை நிஜமாகுமா?.