“கல்யாணத்துக்கு ஓகே சொன்னப்போதும் சரி, எப்ப வேணாலும் பிரிஞ்சிடுவேன்னு சொல்லும் போதும் சரி, என் மனசுல இருந்தது ஒண்ணு தான் இருந்தது. உனக்கு ஏதும் ஆயிடக்கூடாதுன்னு மட்டும் தான்.
நீ கேட்டதும் கல்யாணம் பண்ணிக்கணும்னு எனக்குள்ளையும் ஒரு ஆசை துளிர் விட்டுச்சு. அதுக்காக உன்ன பாத்த உடனே லவ் வந்துருச்சின்னு எல்லாம் சொல்லல.
நீ கல்யாணம் பண்ணிக்கிறேன்னு கேட்டப்போ உன்ன கல்யாணம் பண்ணிக்கலாம்னு தோணுச்சு. ஆனா என்னால உனக்கு ஏதாவது ஆயிடுமோனு பயத்துல நான் அமைதியா இருந்தேன்.
ஆனால் ஜான்விய பாத்ததுக்கு அப்பறம் உன்னை இழக்க சுத்தமா விரும்பல. அந்த நிமிஷம் உடனே உங்க அம்மா கிட்ட என் சம்பதத்தை சொல்லிட்டேன். அதுக்கப்புறம் உன்கிட்ட நான் என்னென்னமோ லூசு மாதிரி பேசினேன் தான்.
அது எல்லாத்துக்கும் காரணம் இது ஒன்னு தான். அதுவும் இப்ப என்னால அப்படி யோசிக்க முடியல. எப்பவுமே நீ என் லைஃப்ல இருக்கணும்.
ஆனா உனக்கோ என் தங்கச்சிங்களுக்கோ நம்ம குடும்பத்தை சேர்ந்தவங்களுக்கோ ஏதாவது ஆச்சுன்னா சத்தியமா என்னால தாங்க முடியாது ரகு”,
என்று கண்ணில் நீர் பெருக அவள் கூடி முடிக்க, ரகு அவள் கல்யாணம் பற்றி பேசும்போது முகத்தில் கனிவையும் காதலையும் தேக்கி அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.
அவள் பேசி முடிக்கையில், “நீ இதெல்லாம் யோசிக்க வேண்டாம். உனக்கும் எனக்கும் நம்ம ஃபேமிலியில் இருக்க யாருக்கும் எதுவும் ஆகாது. அதுக்கு நான் கேரன்டி, சரியா?இப்போ இந்த ஒரு வார பிரச்சனையை பத்தி பேசு. நமக்கு நேரமில்லை. ஒவ்வொரு நொடியும் எனக்கு ரொம்ப முக்கியம் மதி”.
மதியின் மனதெல்லாம் நேசத்தால் நிறைந்திருந்தவனை, தன் ஆசைகள் எல்லாம் திரட்டி கண்களுக்குள் நிரப்பி கொண்டு பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவள் பார்வை தூண்டிலாய் அவனை இழுக்க, அந்த தூண்டிலில் தானாக சென்று மாட்டிக்கொண்டான்.
சில நொடிகளில் அவர்கள் இருவரும் இடையே மௌனம் மட்டும் நிறைந்திருக்க,நேச பார்வையை கொஞ்சமும் மாற்றமல் அவன் மேல் செலுத்திக் கொண்டிருந்தவள் பேச தொடங்கினாள்.
“அம்மா அப்பாவை இழுந்ததுக்கு அப்புறம் நான் அடைஞ்ச வேதனை கொஞ்சம் நஞ்சம் இல்லை. அம்மா அப்பாவை இழுந்தது மட்டும் இல்லாம, அந்த நேரத்தில தங்கச்சிங்கள பிரிஞ்சு இருந்தது எல்லாம் ரொம்ப கொடுமை.
ஆனா இந்த ரெண்டு வாரம் கல்யாணத்துக்கு அப்புறம் நான் ரொம்ப சந்தோஷமா இருந்தேன் தெரியுமா? இந்த சந்தோஷம் கூட எனக்கு முழுசா கிடைக்கல.
அன்னைக்கு சரத் சார் கிட்ட இருந்து கால் வரவரைக்கும். கன்னத்துல அடிபட்ட அடுத்த நாள் நீ ஷூட்டிங் கிளம்பின, அன்னைக்கு தான் சரத் சார் கிட்ட இருந்து கால் வந்தது”
———————–
சரத்திடமிருந்து மதிக்கு அழைப்பு வந்திருந்தது. அவர் சிதம்பரத்தின் உதவியாளனை மிரட்டி விசாரித்ததில் அவர்களுக்கு கிடைத்த தகவல் என்னவென்றால், சிதம்பரம் தான் லாரி ஏற்பாடு செய்து மதியை கொல்ல முயற்சித்து இருக்கிறான்.
ஆனால் அதில் அவளுடைய தாய் தகப்பன் மாட்டிக்கொண்டு இறந்திருக்கின்றனர் என்றார் சரத். மதியால் அதனை தாங்கிக் கொள்ள முடியவில்லை. வேதனை, மனம் முழுக்க வியாபித்திருந்தது.
ஆனால் அதை ரகு வந்ததும் அவனிடம் காட்டிக் கொள்ளாமல் இருக்க மிகுந்த சிரமப்பட்டு போனாள். இருந்தும் ரகு அவளின் சோர்ந்த முகம் கண்டு என்ன ஏது என்று அப்போதே விசாரித்தான்.
ஆனால் அவள் ஏதேதோ காரணம் சொல்லி மழுப்பி விட, அவனும் அடிபட்டதனால் சோர்வாக இருக்கலாம் என்று அதனை விட்டு விட்டான்.
அன்று இரவே அவளால் தூங்க முடியாமல் தன் தாயின் அலறல் குரல் கேட்டு அலறி எழுந்து இருந்தாள். ரகு கேட்ட போதும் கெட்ட கனவு என்று கூறி சமாளித்து விட்டாள்.
அடுத்தடுத்த நாட்களும் அவளுக்கு அலறல் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்க, கண்களை மூட முடியாமல் தடுமாறிப் போனாள். ஆனால் ரகுவின் தூக்கம் மட்டும் கெடாமல் பார்த்துக் கொண்டாள்.
இப்படியே இரண்டு நாட்கள் செல்ல மூன்றாம் நாள் மருத்துவரை அணுகினாள். மருத்துவர் சொன்ன செய்தி அவளுக்கு இடியாகத்தான் இருந்தது.
இருந்தும் மனதில் இருந்த குற்ற உணர்ச்சி தான் இறந்தாலும் பரவாயில்லை என்ற எண்ணத்தை அவளுக்குள் விதைத்திருந்தது.
ஆனால் ரகுவுடனான நிமிடங்களில் மற்ற அனைத்தையும் மறந்து அவனுடன் இருக்கும் பொழுதை மட்டும் ரசிக்க வைத்தது.
உண்மையில் அந்த பொழுதுகளில் அவளுக்கு மற்ற எதுவும் நினைவு இருக்கவில்லை.
ரகு ஒருவன் மட்டுமே நினைவில் இருந்தான். என்றானாலும் தான் இறந்து விடுவோம் என்ற எண்ணம் அவளுக்கு பதிந்து போக, இருந்தும் அவனுடன் வாழ வேண்டும் என்ற ஒரு ஆசை அவளை அவர்களின் வாழ்க்கை ஆரம்பித்த தினமன்று, திடமாக அவனிடம் நம்பிக்கையாக தான் மீண்டு வருவேன் என்று பேச வைத்தது.
மறுநாளே அவனுக்கு அந்த உண்மைகள் தெரிய வந்துவிட இப்போது இவன் முன்பு அனைத்தும் கூறும் நிலையில் அமர்ந்திருந்தாள்.
———————-
அவள் கூறிய அனைத்தையும் ஒன்று விடாமல் கேட்டுக் கொண்டவன், தன் அருகிலேயே தூங்காமல் தவித்து இருந்திருக்கிறாளே. தான் இப்படி இருந்திருக்கிறோமே என்று ஒவ்வொரு நொடியும் வேதனையை கூட்டிக் கொண்டிருந்தது ரகுவிற்கு.
ரகுவின் வேதனை முகம் கண்ட மதி, அவனை நெருங்கி அவன் நெற்றியில் முத்தமிட்டவள், அவன் காதருகே சென்று மெல்லிய குரலில்,
“இப்படி வேதனை படாத, நான் நல்லா தான் இருக்கேன். நல்லா ஆயிடுவேன். அந்த திடத்த கொடுத்ததே நீயும் உன் காதலும் தான். நீ இப்படி சோர்ந்து போனா நான் எப்படி திடமா இருக்க முடியும்”
என்று கேட்கவும், தன்னை நிலைப்படுத்தி கொண்டவனாக,
“சரி இப்ப நான் உன்கிட்ட ஒன்னு சொல்லுவேன். அதை நீ கேட்டு அப்படியே நடக்கணும்”, என்று கூறினான்.
“என்ன சொல்ல போற?நீ என்ன சொன்னாலும் நான் கேட்பேன்”,
என்று அவளும் அவன் என்ன கூற போகிறான் என்று அறியாமல் வேகமாக பதிலளித்தாள்.
மெல்ல மூச்சை இழுத்து விட்டவன் இப்போது அவளை நேருக்கு நேராக பார்த்து,
“நாளைக்கு காலையில இருந்து 48 மணி நேரத்துக்கு, நான் உன் கண்ணு முன்னாடி இருக்க மாட்டேன். உன் கிட்ட பேசவும் மாட்டேன். என் குரல் கூட உனக்கு கேட்காது. அந்த அளவுக்கு தூரமாய் இருப்பேன்.
உன்னை நீயே இந்த ரெண்டு நாள் திடமா வச்சிக்கிறது மட்டும்தான் எனக்கு நீ பண்ண போற ஒரே விஷயம். அது மட்டும் இல்லாம நீயும் எனக்கு கால் பண்றதுக்கோ இல்ல என்கிட்ட பேசறதுக்கும் முயற்சி பண்ணவே கூடாது”, என்று கூறியதும்,
மதி முகத்தில் அதிர்ச்சி தோன்றிட, அவள் ஏதோ கூற வரும் முன், அவளை கைநீட்டி தடுத்தவன்.
“இதுக்கு நீ நோ சொல்லவே கூடாது. நான் சொல்றதை நீ செஞ்சுதான் ஆகணும். உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா, இறந்து போனாலும் பரவால்லன்னு யோசிச்சிருப்ப.
அதுக்கான தண்டனை தான் இந்த ரெண்டு நாள். ரெண்டு நாள் என்னை பத்தி மட்டும் யோசிக்கணும். நல்லா ஞாபகம் வச்சுக்கோ நீ இல்லனா நானும் இல்ல.
இதை மட்டும் மறக்கக்கூடாது. இப்போ பேசாம சாப்பிட்டு, தூங்க முயற்சி பண்ணு. நாளைக்கு காலைல வரைக்கும் என்னை பார்த்துட்டு இருக்கலாம். அதுக்கு உனக்கு டைம் இருக்கு”,
என்று கூறிவிட்டு வேகமாக கீழே சென்றவன் மதிக்கும் தனக்கும் தேவையான உணவை ஒரே தட்டில் எடுத்து வைத்துக் கொண்டு அங்கு இருந்த தன் தாய் மற்றும் சித்தியை நிமிர்ந்து பார்த்தான்
சித்தியிடம் பேசுவது போல் தாய்க்கும் சேர்த்து தகவல் கூறும் விதமாக இரண்டு நாட்கள் மதி அலுவலகம் சம்பந்தமான வேலையை வீட்டிலிருந்து பார்க்கப் போவதால், அவளை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம்.
தானும் வெளியூருக்கு செல்ல இருப்பதால் வரவேற்பு வேலைகளை அவளுக்கு தொந்தரவு தராமல் அவர்களே பார்த்துக் கொள்ளுங்கள், வேண்டும் என்றால் ரவியையும் துணைக்கு வைத்துக் கொள்ள கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டவன்,
மீண்டும் அங்கிருந்த சமையல் ஆட்கள் இடம் திரும்பி மதிக்கு தேவையான உணவை மட்டும் மூன்று வேளையும் சரியாக கொடுக்கும்படி பணித்துவிட்டு விறுவிறு என படிக்கட்டுகளில் ஏற ஆரம்பித்தான்.
அவன் படிக்கட்டில் ஏறுவதை பார்த்த வண்ணமே கௌதமி தேவியிடம்,
“இவன் பொண்டாட்டிய தொந்தரவு செய்றது தான் நம்ம வேலையா? என்னமோ நமக்கு வேலையே இல்லாத மாதிரி பேசிட்டு போறான.”,
என்று கோபம் போல் முகத்தை விறப்பாக வைத்துக் கொண்டு கூற, அதைக் கேட்ட தேவி அமைதியாக மனதுக்குள் புன்னகைத்துக் கொண்டார்.
சத்தமாக சிரித்தால் கௌதமியின் முறைப்பை பெற வேண்டி இருக்குமே.
மேலே சென்ற ரகு, மதிக்கு உணவு ஊட்டியவன் தானும் உண்டு முடித்தான். அவள் நன்றாக தூங்க வசதி செய்துவிட்டு தானும் அவள் அருகே தூங்க முயற்சித்தான்.
வெகுநேரமாகியும் இருவருக்கும் தூக்கம் கண்ணை அண்டாமல் போக அந்த இரவும் ரகுவிற்கு அரை குறைத் தூக்கத்திலும் மதிக்கு தூக்கமின்மையிலும் முடிந்தது.
மதி இரவு முழுவதும் கணவன் முகத்தை பார்ப்பது மட்டுமே ஒரே பணி என்பது போல் அதை மட்டும் செய்து கொண்டிருந்தாள்.
விடியலில் கண் முழித்தவன் தன் முகத்தையே பார்த்திருக்கும் மனைவியிடம் ஒரு வார்த்தையும் பேசாமல் எழுந்து குளியல் அறைக்கு சென்று தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வெளியே வந்தான்.
மெதுவாக கிளம்பி தயாரானவன் வெளியேறும் முன் அவளை திரும்பி பார்க்க, தன் நிலையிலிருந்து மாறாமல் அப்படியே அமர்ந்திருந்தாள் அவனைப் பார்த்த வண்ணம்.
அவளை அப்படியே விட்டு செல்ல மனம் இயலாமல் அவள் அருகே வந்தவன், அவள் நெற்றியில் முத்தமிட்டான். கன்னங்களிலும் தன் முத்தத்தை பதித்தவன், கடைசியாக இதழிலும் தன் முத்திரையை பதித்துவிட்டு, “எனக்காக காத்திருப்பியா?” என்று கேட்டான்.
மதி சோர்வோடு கண் மூடி திறந்து சம்மதம் தெரிவிக்க, மீண்டும் அவள் இதழில் நீண்ட முத்தம் ஒன்று நிலைப்பெற்றது. முத்தத்தின் ஈரம் காயும் முன்பு வீட்டில் இருந்து வெளியேறி இருந்தான் ரகு.
அவன் சென்ற அரைமணி நேரத்தில் ஜீவா சக்தி இருவரும் ‘தரண் இல்லம்’ முன்பாக நின்றிருந்தனர்.
இருவரையும் வரவேற்ற கௌதமியும் தேவியும் அவர்களின் திடீர் வரவை பற்றி விசாரிக்க, இரண்டு நாள் விடுமுறை கிடைத்ததால், அதனை அக்காவுடன் செலவழிக்கும் எண்ணத்தில் புறப்பட்டிருந்தனர்.
அது மட்டும் இன்றி அனைவருக்கும் இன்பதிர்ச்சி கொடுக்க, காலை விடியலிலேயே இங்கு வந்து சேர்ந்ததாக தெரிவித்தனர்.
இருவரையும் மகழ்ச்சியுடன் வரவேற்றவர்கள், அலுவலக பணியாள் மதி இரண்டு நாள் வீட்டிலேயே வேலை செய்ய இருப்பதாகவும் ரகுவும் பணி நிமித்தமாக, ஊருக்கு வெளியூருக்கு சென்றிருப்பதாகவும் கூறிட,
சகோதரிகள் முதலில் சோகமானார்கள். ,பின் தன் தமக்கையுடன் செலவழிப்பதற்கான நேரம் எப்படி கிடைத்தாலும் மகிழ்ச்சி தான் என்று திரும்பிய உற்சாகத்துடன் வேகமாக படிக்கட்டுகளில் அவள் அறைநோக்கி சென்றனர்.
அறைக் கதவை திறந்து கொண்டு உள்ளே செல்ல மதி அப்போதுதான் குளித்துவிட்டு தலையை உலர்த்திக்கொண்டு இருந்தாள்.
கதவை திறந்த சத்தம் கேட்கவும் மதி திரும்ப, அங்கு நின்ற சகோதரிகள் இருவரையும் கண்டு இன்ப அதிர்ச்சியை பிரதிபலித்தது அவள் முகம்.
ஆனால் அவளைக் கண்ட மகிழ்ச்சி மற்ற இருவர் முகத்திலும் இல்லை. மாறாக வேதனை அளவுக்கு அதிகமாக தெரிந்தது.
அதனை கண்டதுமே அவர்களுக்கு எல்லாம் புரிந்து விட்டது என்பதை அறிந்து கொண்டவள், அந்த சூழலை எப்படி கையாள என தெரியாமல் தடுமாறி நின்று இருந்தாள்.