பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாக தேடி பார்த்தேன்
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே
அதைத் தேடி தேடி பார்த்தேன்
உயிரின் துளி காயும் முன்னே
என் விழி உனை காணும் கண்ணே
என் ஜீவன் ஓயும் முன்னே
ஓடோடி வா
வானம் எங்கும் உன் பிம்பம்
ஆனால் கையில் சேரவில்லை
காற்றில் எங்கும் உன் வாசம்
வெறும் வாசம் வாழ்க்கையில்லை
அவனுள் புதைந்துகொண்டாள் அலக்நந்தா, விழிநீர் அவன் சட்டையை நனைக்க அவள் உச்சியில் நாடி பதித்து விழிமூடி நின்றான்.
அவர்களுக்குத் தனிமை கொடுக்க விரும்பிய மற்றவர்கள் மெல்ல அங்கிருந்து விலகி நடக்க அறையின் கதவு திறந்து வெளி வந்தார் மருத்துவர்.
அனைவரும் மீண்டும் அங்கு வர “பயப்பட ஒன்னும் இல்ல சின்னக் காயம்தான் நீங்க இப்போவே கூட்டிட்டு போகலாம்” என்றார்.
ஒருவருமே அறையின் உள் செல்லவில்லை, பாரிவேந்தனை பார்த்த சம்பத் “பாரி நீ நந்தாவை கூட்டிட்டு போ இங்க நாங்க பாத்துக்குறோம்” என்க அனைவரும் சம்மதமாகத் தலை அசைத்தனர்.
“அம்மாவைப் பார்த்துட்டு” என்றவளை ஒரு நொடி பார்த்து நின்றவன் “போ” என்றான்.
அவள் உள் சென்று பார்க்கக் காட்டில் அமர்ந்திருந்தார் சாரதா, நந்தாவை பார்த்தவர் “இன்னும் சாகலையானு பாக்க வந்தியா” என்க.
“அம்மா” என்று அவள் அருகில் நெருங்கப் பார்க்க அவள் கைபற்றி வேகமாக இழுத்தவன் தன்னோடு அழைத்துச் சென்றான்.
அவளைத் தன் அணைப்பில் வைத்திருந்தவன் அவளுடன் லிப்ட்டில் கீழிறங்கி தன் காருக்குச் சென்றான், காரில் ஏறி அமர்ந்தவள் கைகளில் முகத்தைப் புதைத்துக்கொண்டாள்.
“அழகி” என்றவன் அழைப்பில் நிமிரவில்லை.
அவள் முகத்தைப் பற்றி வலுக்கட்டாயமாகத் தன்னை பார்க்க வைத்தவன் “நீ என்ன பண்ணாலும் அவங்க அப்படிதான் பேசுவாங்க கொஞ்ச நேரம் எதைப்பதியும் யோசிக்காம இரு” என்றவன்.
“இங்கவா” என்று அவளைத் தன்னோடு சேர்த்தனைதான் சிறிது நேர அமைதிக்குப் பிறகு “பிரிஞ்சு இருந்தா உங்கள மறந்துட்டு வேற யாரையாவது கல்யாணம் பண்ணிப்பேன்னு நினைசீங்கதானே” என்க அவன் இதழில் குறுநகை.
“அடிப்பாவி” என்று வாயில் கை வைத்தவன் மெல்ல சிரிக்க அவன் உடல் குலுங்குவதில் அதை உணர்ந்தவள் நிமிர்ந்து அவனைப் பார்த்து முறைத்தாள்.
“பாருடா…. இன்னும் இந்தப் பார்வையை நீ மாத்தலயா” என்று அவள் மூக்கின் நுனியை பிடித்து ஆட்டியவன்.
“ஆமா எப்போ பாத்தாலும் அழுதுட்டே இருக்குற இந்த அழகிய விட்டுட்டு அழாம இருக்குற ஒரு கிழவியைக் கட்டலாம்னு பார்த்தேன்” என்றவனை நிமிர்ந்து பார்த்தவள் முகம் மீண்டும் வாடியது.
“அதுதான் நடக்கும் போல” என்றவள் விழிகள் நிறைய.
“பச்… அழகிமா என்னடி” என்றான் அவள் முகத்தை நிமிர்த்தி.
“நானே கிழவி ஆயிடுவேன் போல இவங்க சம்மதம் சொல்றதுக்குல்ல”.
“சரி… ஆனா என்ன?? கிழவியா ஆனாலும் எனக்கு நீ அழகிதான், சரி சொல்லு பேசாம உங்க அம்மாவைப் பாட்டியா ஆக்கிட்டு மறுபடியும் பொண்ணு கேக்கவா” என்றான் விளையாட்டாக.
ஒரு நொடி அவன் உலகம் சுழல்வதை நிறுத்தியதாகத் தோன்றியது, சட்டென்று காரிலிருந்து வெளியில் இறங்கிவிட்டான்.
அவன் விளையாட்டாகக் கேட்ட ஒரு விஷயத்திற்கு எத்தனை திடமாகத் தன் சம்மதத்தை சொல்கிறாள், தன்னை அவள் தேடியதின் அளவை, காதலின் ஆழத்தை இந்த நொடி பரிபூர்ணமாக அவன் உணர்ந்துகொண்டான்.
அவளை எண்ணி கர்வம் ஒருபுறம் கவலை ஒருபுறம் அவனை வாட்டியது.
திரும்பிக் காரின் உள்ளே பார்க்க ஏக்கம் சுமந்த விழிகளோடு அவனைப் பார்த்திருந்தாள் அவன் அழகி, என்ன முயன்றும் அவன் கட்டுப்பாடுகள் கரை உடைத்தது.
“அழகி…. வாட் ஆர் யு டூயிங் டு மீ” என்று தடுமாறியவன் அவளை நெருங்கி இடையோடு கைக்கொடுத்து அணைத்து தூக்கி தன் மடியில் அமர்த்தியவன் அவள் இதழைத் தன் வசப்படுத்தினான்.
அழுத்தமாக அவன் கை அவள் இடையில் அழுந்தியது, உணர்ச்சியின் பிடியில் அவன் சட்டையை இருக்கி பிடித்துக்கொண்டாள்.
அலக்நந்தாவின் அதரங்களிலிருந்து அவள் கழுத்துவலைவில் ஊறத்தொடங்கிய அவன் இதழ்கள் அவளுள் பட்டாம்பூச்சிகளை பறக்க வைத்தது “வேந்தரே” என்றவள் அழைப்பில் அவள் செவிமடலில் அழுத்தமாகப் பற்தடங்கள் பதித்தான்.
“என்கிட்டே இருந்து தள்ளிப்போ அலக்” என்றான் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி ஏதோ கூற வந்தவளை தடுத்தவன், அவளைத் தன் இறுக்கமான அணைப்பில் வைத்துக்கொண்டான்.
பேச்சும் செய்கையும் வேறுபட்டது அந்த நொடி, இனியும் பொறுத்திருந்தால் அவளை இழந்துவிடுவோமோ என்ற பயம் கூடவந்துவிட்டது அவனுக்கு.
நந்தா சென்றபிறகு வெகுநேரம் அங்கு அப்படியே அமர்ந்திருந்தும் ஒருவரும் உள்ளே வரவில்லை, வெகுநேரம் அமர்ந்திருந்தவர் அவரே வெளியில் எழுந்துவர ராஜசேகர் மட்டும் அங்கு அமர்ந்திருந்தார்.
பாரியும் நந்தாவும் சென்றபிறகு அனைவரையும் கிளம்ப சொல்லிவிட்டார் ராஜசேகர், உடன் இருப்பதாகக் கூறிய மித்ராவை வேண்டாம் என்று மறுத்துவிட்டார்.
மற்றவர்கள் மனதிற்கு சாரதாவின் இந்தச் செயல் ஒரு வித வெறுப்பை தந்தது ஆகையால் பாரி சென்றவுடன் அவர்கள் அனைவரும் சென்றுவிட்டனர்.
மாமனாரை பார்த்த சாரதாவிற்கு கொஞ்சம் பயமாகக் கூட இருந்தது என்ன சொல்லுவாரோ என்று ஏதோ ஒரு வேகத்தில் செய்துவிட்டார்.
“மாமா” என்று அழைக்க நிமிர்ந்தும் பார்க்கவில்லை ராஜசேகர் எழுந்து நடக்க தொடங்க, சாரதா சுற்றிலும் தன் பார்வையை சுழற்றினார்.
ஒருவரையும் காணவில்லை எங்குச் சென்றிருப்பாள் என்று நந்தாவை அவர் விழிகள் தேடியது எங்கும் காணவில்லை. மாமனாரின் பின்னால் நடக்க தொடங்கினார் ஒரு ஆட்டோ பிடித்து வீட்டிற்கு சென்று சேர்ந்தனர்.
இரவு நெருங்கும் வேளை அவளை வீட்டிற்கு கொண்டுவந்துவிட்டான் பாரிவேந்தன், வீட்டின் உள் வந்தவன் “எப்போ எங்க வீட்டில இருந்து உறுதி பண்ண வரணும்” என்றான் சாரதாவை நேரே பார்த்து.
அவர் அசையாமல் அதிர்ச்சியில் அப்படியே நிற்க “நல்ல நாள் பார்த்துச் சொல்லுங்க” என்றவன் ராஜசேகரிடம் கூறிக்கொண்டு நந்தாவிடம் தலை அசைப்பில் விடை பெற்றான்.
நந்தா தாயை நிமிர்ந்தும் பார்க்கவில்லை தன் அறைக்குள் நுழைந்துகொண்டாள் அனைவருக்கும் உணவை அவளே ஆர்டர் செய்தாள்.
தாத்தாவும் பேத்தியும் மட்டும் சாப்பிட சாரதா இருவரின் மீதிருந்தும் பார்வையை அகற்றாமல் வெறித்திருந்தார், மூன்று நாட்கள் கடந்திருக்க மகளும் பேசுவதில்லை மாமனாரும் பேசுவதில்லை.
அவர் கையால் கொடுக்கும் எதையும் அவர் உண்பதுமில்லை, சாரதாவே மூன்று நாட்களாக யோசனையில் இருந்தார் ஒரு முடிவுக்கு வர முடியாமல் பைத்தியம் பிடித்தது, அன்று நந்தா வேலைக்குச் சென்றபிறகு குழந்தையுடன் வந்திருந்தாள் மித்ரா.
வெகுநேரம் தயங்கி அமர்ந்திருந்தவள் அன்னையின் அருகில் சென்று அமர்ந்துகொண்டாள்.
“கடைசி வரைக்கும் வானதி முல்லா உள்ள குத்திட்டே இருப்பா, இன்னைக்கு நந்தாவுக்கும் அந்த வலிய நீ குடுக்கப்போறியா? மூணு வருஷம் அவ தவம்போலக் காத்திருந்தா, இப்போகூட புரியலையா அவளோட விருப்பமும் நிம்மதியும் எங்க இருக்குனு”.
“இன்னொரு மித்ரா வேண்டாம், என்னமாதிரி கூட இல்ல அவ, நீ சம்மதம் சொல்லணும்னு தானே காத்திருக்காங்க நிச்சயமா இன்னும் எவ்ளோ வர்ஷம் ஆனாலும் வேற கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்க, வயசு போன அப்பறம் மக வாழக்கையை அழிச்சுட்டோமேன்னு நீ வருத்தப்படுவ”.
“நான்தான் உங்க எல்லாருக்கும் வேண்டாதவளா ஆயிட்டேன், உங்க உறவை இழந்துட்டேன் உன் பிடிவாதத்தால நந்தாவை இழந்துடாத” என்றவள் அதோடு கிளம்பிவிட்டாள்.
வெறுப்பு இன்னும் குறையவில்லை என்றாலும் பிடிவாதத்தின் அளவு கொஞ்சம் இறங்கியது சாரதாவிற்கு.
மாமனாரின் அருகில் சென்றவர் “மாமா அவங்கள உறுதி பண்ண வரச் சொல்லுங்க நாளான்னைக்கு நாள் நல்லா இருக்கு” என்க தன் செவிகளை அவரால் நம்பவே முடியவில்லை.
என்றாலும் அதிர்ச்சியை முகத்தில் காண்பிக்காமல் “நீ உறுதியா ஒரு முடிவு சொல்லு, தூங்கி எழுந்ததும் இது மாறவும் வாய்ப்பிருக்கு என் பேதிக்கு நம்பிக்கை குடுத்து என்னால ஏமாத்த முடியாது” என்றார்.
“உங்க புள்ளைமேல சத்யம் என் முடிவு மாறாது வரச்சொல்லுங்க” என்று சொல்லிச் சென்றார், சந்தோஷத்தில் துள்ளி குதிக்க தோன்றியது ராஜசேகருக்கு உடனே சுமதியை அழைத்து விஷயத்தைப் பகிர்ந்துவிட்டார்.
அலக்நந்தாவை காத்து அவள் அலுவலக வாயிலில் நின்றிருந்தான் பாரிவேந்தன், அவனைப் பார்த்ததும் வேக நடையில் அருகில் வந்தாள்.
வேலை பளுவைவிட மனதின் பாரம் அதிகம் அழுத்தியது அவளை, ஒன்றும் பேசவில்லை காரின் கதவைத் திறந்துவிட்டான் அவள் ஏறியவுடன் வண்டி வேகமெடுத்தது, அவளிடமும் அமைதி தொலைவில் ஒதுங்கி ஒரு இடத்தில வண்டியை நிறுத்தினான்.
அவள் கேள்வியாய் அவனைப் பார்க்க, தன்னை நோக்கி அவளை இழுத்தவன் “அன்னைக்கு ஹாஸ்பிடல்ல அம்மா கிட்ட என்ன சொன்ன” என்றான் சம்பந்தம் இல்லாமல்.
“என்ன சொன்னேன்” என்று விழிக்க அவள் செவிமடலில் மீசைமுடி குறுகுறுக்க “நிறைய கனவு கண்டுட்டேன் சொன்னல்ல” என்றபோது அவள் உடல் சிலிர்த்தது.
“அந்தக் கனவை எல்லாம் நிஜமாக்க போறேன்” என்றபோது உடலில் மெல்லிய அதிர்வு “அழகி என்னைத் தாங்குவாளா” என்றான் கிறக்கமாக.
மொத்தமாக அவன்மேல் சாய்ந்து இறுக்கமாக விழிகளை மூடிக்கொண்டாள் நந்தா.
“இட்ஸ் ஹாப்பனிங்” என்றான் காதலாக, அவள் விழிகள் நிறைய தொடங்க “அழுதீனா கடிச்சுருவேண்டி” என்க.
விரிந்த புன்னகையோடு விழிகளும் நிறைந்து வழிந்தது, அவன் பற்தடங்கள் அழுத்தமாக அவள் கன்னத்தில் பதிந்தது.
இரு வீட்டாருடன் சம்பத்தும் மனைவி குழந்தையுடன் வந்திருந்தான், பெரிதாகப் பேச்சுக்கள் ஏதும் இல்லை பூ வைத்து உறுதி செய்துகொண்டனர், மருமகளுக்கு கழுத்தை ஒட்டி வைர மாலையை அணிவித்தார் சுமதி.
இளம் மஞ்சள் நிற பட்டுப் புடவையில் பாரிவேந்தனின் கண்ணை நிறைத்தாள் அவன் அழகி, அப்பொழுதே அழைத்துச்செல்ல அவன் தயாராகத்தான் இருக்கிறான் இவர்கள் தான் நல்ல நாள் திருமணம் எல்லாம் பேசுகிறார்கள்.
சம்பத்தின் அலைப்பேசி இருவரின் புகைப்படத்தால் நிரம்பி வழிந்தது, அவன் அருகில் நின்றிருந்தவளின் மல்லிப்பூ வாசமும் மையிட்ட விழிகளும் அவனை மையல் கொள்ள வைத்தது, அவள் விரல்களை இறுக்கமாகக் கோர்த்துக்கொண்டான்.
சாரதாவை பற்றிய பயம் இருந்ததால் ஒரே வாரத்தில் திருமண தேதியை முடிவு செய்துவிட்டனர்.
எந்த ஆடம்பரமும் இல்லை அதை அவர்கள் இருவரும் விரும்பவும் இல்லை, புடவை அலங்காரங்கள் கூட மிக எளிமையாகத் தேர்வு செய்துகொண்டாள் அலக்நந்தா.
அழைப்பும் வெகுசிலருக்கே… நெருங்கிய உறவு நட்ப்புவட்டம் என்று முடிந்துவிட்டது, வானதியின் பெற்றோரை அழைக்கச் செல்வதை பற்றி மாஹேந்திரனும் சுமதியும் பேசத் தானே சென்று அழைப்பதாகக் கூறினான் பாரிவேந்தன்.
“இல்லப்பா அவங்க பொண்ண பறிகொடுத்தவங்க இன்னொரு பொண்ணு வாழம நிக்குறா, நீ போனா ஏதும் கோவமா பேசிட்டா வேண்டாம்” என்றார் சுமதி.
“நான் போறேன்” என்றவன் நந்தாவிடமும் கூறிவிட்டு அவர்கள் வீட்டிற்கு சென்றான்.
வீணாவின் மரணத்திற்கு பிறகு சில மாதங்களில் அவர்கள் இங்கிருந்த அனைத்தையும் விற்றுவிட்டு அவர்கள் ஊருக்குச் சென்றுவிட்டனர்.
மகேந்திரன் அழைத்தாலும் பேசப் பெரிதாக விருப்பம் காண்பிக்கவில்லை, எதையும் நினைவு வைக்க விரும்பவில்லை அனைத்தையும் மறக்கவே இங்கு வந்திருக்கிறோம் என்று ஒரு முறை மாதவன் கூற அதன் பிறகு இவரும் தொல்லை செய்யவில்லை.
பாரிவேந்தனை அவர்கள் எதிர்ப்பார்க்கவில்லை என்பது அவர்கள் அதிர்ந்து நின்றதிலே தெரிந்தது, அறையிலிருந்து வெளியில் வந்த வானதியின் கையில் தவழ்ந்தது ஒரு வயது குழந்தை.
இவன் ஆச்சர்யமாக அவளைப் பார்க்க “வா பாரி” என்றவள் “மா என்ன அப்படியே நிக்குறீங்க” என்ற பிறகே கணவன் மனைவி இருவரும் சுயம் பெற்றனர்.
“வாங்க” என்று இருவரும் ஒன்றாக அழைக்க உள்ளே சென்று அமர்ந்தான்.
அவர்கள் ஒருவித பதட்டத்தில் இருப்பதாகத் தோன்றியது அவனுக்கு.
“நீ உண்மை தெரிஞ்சு வந்திருப்பியோன்னு அவங்களுக்கு பயம்” என்றவள் அவனுக்கு எதிரில் அமர்ந்தாள், அவன் கேள்வியாய் பார்க்கவும்.
“இன்னொரு கல்யாணத்துல சுத்தமா விருப்பம் இல்லை இவங்களுக்காகச் சரின்னு சொன்னேன், வீணா போன அப்பறம் சுத்தமா வெறுப்பு வந்துடுச்சு, கல்யாணம் குடும்பம் என்னால முடியாதுனு தெளிவா புரிஞ்சுடுச்சு”.
“ஒரு மாற்றம் தேவைன்னு இங்க வந்துட்டோம் இவங்களுக்கு அப்புறம் எனக்கு யாருனு ஒரு பயம் இருந்தது எதுக்காக யாருக்காக வாழறோம்னு எனக்கும் இருந்தது, அப்போ முடிவு பண்ணினேன் எங்களுக்குப் புதுசா ஒரு உறவு வேணும்னு”.
“தெரிஞ்ச டாக்டர் மூலமா கருமுட்டை தானம் வாங்கி எனக்குள்ளே நானே சுமந்த என் குழந்தை பேரு வீனா” என்றாள் உணர்ச்சி குவியலாக “இப்போ இவ தான் எங்க உலகம் இவளை விட்டுட்டு இவங்க ரெண்டுபேரால ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது”.
“இப்போ ரொம்ப நிறைவா இருக்கு எங்க வாழ்க்கை” என்க அவனுக்குக் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது “ஆனா இதுக்கு ஏன் பயம்” என்றான் புரியாமல்.
“புள்ளைக்கு அப்பான்னு உன் அண்ணன் பேரைத்தான் போட்டிருக்கேன்” என்றாள் அசராமல்.
“என் கனவுகளை அழிச்சு என் இளமையை பாழாக்கி, இன்னொருத்தனோட என்னால ஒரு எதிர்காலத்தை அமைச்சுக்க முடியாம போனதுக்கு காரணம் உன் அண்ணன்தான் அதான்” என்றாள் அவனைத் தீர்க்கமாகப் பார்த்துக்கொண்டே.
மெல்ல விரிந்த புன்னகையோடு “சபாஷ்” என்று கைதட்டியவனை அவள் பெற்றோர் ஆச்சர்யமாகப் பார்த்தனர்.
“இதுல எங்கேயும் தப்பில்ல அப்பறம் எதுக்கு பயம், என்னைக்காவது உண்மை தெரிஞ்சாலும் அவன் வந்து கேக்க மாட்டான், அப்படியே கேட்டாலும் இந்தப் பதிலே போதும் அவனுக்கு” என்றவன் தன் திருமணத்திற்கு அவர்களை அழைத்தான்.
“தப்பா எடுத்துக்காதீங்க தம்பி அந்த ஊருக்கு வரத நாங்க விரும்பல கொஞ்ச கொஞ்சமா எல்லாத்தையும் விட்டு விலகி வரோம் இப்படியே விட்டிருங்க” என்றவர்களிடம் வேறு ஒன்றும் கூற முடியவில்லை.
அவளுக்குத் தன் வாழ்த்தைத் தெரிவித்து திரும்பிவிட்டான், போகும்போது இருந்ததை விட மனம் கொஞ்சம் லேசாக இருந்தது இப்பொழுது.
ஊதா நிற பட்டுப்புடவையில் அப்சரஸாக அவனின் முன் நின்றிருந்தாள் அவனின் அழகி, மங்கள நான் பூட்டும் வேலை இருவரின் விழிகளும் பின்னிக்கொள்ள, அவனின் சொந்தமாக மாறிய நொடியில் இதயம் இடம்மாறி துடித்தது.