பெரும் அமைதி நிலவியது அந்தச் சிறிய வீட்டிற்குள் அனைவரும் அந்தத் தருணத்தை எப்படி கடக்க என்ற சிந்தனையிலும் தாங்கள் பார்த்த காட்சியிலும் அதிர்ந்து நின்றனர்.
மருத்துவமனையிலிருந்து நேரே பாரியின் வீட்டிற்குதான் வந்தனர், அவன் பேசிச் சென்ற வார்த்தைகளின் தாக்கம் அவளிடம் அப்படியே நின்றது.
ஒரு விதமான செயல் இழந்த நிலையில் இருந்தாள் அலக்நந்தா, அவளிடம் பாரிவேந்தன் எதுவும் பேசவில்லை , வெறும் ஆறுதல் வார்த்தைகளை அவளிடம் கூற விரும்பவில்லை.
அவனை ஒன்றும் செய்யாமல் இப்படி நிற்பது அவமானமாக இருந்தது அவனுக்கு , சூர்யப்பிரியா அலக்நந்தாவை ஒருவிதமாகத் தேற்றி வீட்டிற்கு அனுப்பிவைத்தாள்.
பாரிவேந்தன் அவளுடன் பின்னையே சென்றான் ஆனால் இருவரிடமும் எந்தப் பேச்சுக்களும் இல்லை அவள் வீட்டின் உள் செல்லும் வரை பார்த்து நின்று திரும்பியவன் அப்பொழுதே அந்தக் கயவனை தேடி சென்றான்.
உடலில் ரத்தம் வடிய மூலையில் சுருண்டு அரற்றியவனை மீண்டும் இவன் அடிக்கப் பாயச் சம்பத்தும் சச்சியும் அடக்கிப் பிடித்து அமர்த்தினர்.
“இவன சாகடிச்சு என்னப்பண்ண , செய்யச்சொன்னவன பிடிக்கணும்” என்றவர்கள் ராகேஷை தேடி சென்றனர்.
அவன் அங்கு இல்லை , மருத்துவமனையில் தான் மாட்டிக்கொண்டதை இவன் கூறியவுடனே ஹைதராபாத் தப்பி விட்டான்.
அவனைத் தேடும் பணியைச் செவ்வனே முடக்கி விட்டவர்கள் வீடு வந்தனர் , இத்தனை வேதனையோடு ஒரு இரவைக் கழித்ததில்லை என்று தோன்றியது பாரிக்கு.
எந்த விழிகளில் நீர் நிறைவதை தன்னால் காண இயலாது என்று சொன்னானோ அதே விழிகள் இன்று தன்னால் நிறைந்து தளும்புகிறது , என்ன செய்யப் போகிறாய் என்று மனம் உள்ளே குடைந்து கொண்டே இருக்க , ஒரு நொடி கூட விழிகள் மூட முடியாமல் விழித்தே கிடந்தான்.
காலைச் சச்சியின் அழைப்பு அவனை யோசனைகளிலிருந்து மீட்டது.
தப்பி சென்ற ராகேஷ் , அங்குச் சென்று தன்னால் முடிந்த வரை பாரிவேந்தனுக்கு எதிராகச் செயல்பட்டான்.
“இளம் வயதில் நான்கு வெற்றிப்படங்களை தந்த இயக்குனரின் நண்பரும் , பிரபலமான தயாரிப்பாளரின் மகனும் இந்தியாவின் புகழை ஹோலிவுட்டில் நிலைநாட்டுபவர் என்று கூறப்படும் நபர் முதல்மனைவியை பிரிந்து பிறகும் அவருடன் உறவில் இருந்துள்ளார்”.
“அது அந்தப் பெண்ணின் இரண்டாம் கணவர் அறிந்ததால் அந்தப் பெண் தற்கொலை செத்துக்கொண்ட சூழலில் இவரின் புதிய காதலியைக் கருக்கலைப்பிற்கு மருத்துவமனை அழைத்துச் சென்ற இடத்தில் வசமாகச் சிக்கிக்கொண்டார்” என்று சிறிய துணுக்கு செய்தியாகவும் கிசுகிசுவாகவும் யூடூபிலும் மெல்ல பரவியிருந்தது.
சச்சியும் சம்பத்தும் பாரிவேந்தனுடனே இருந்தனர் , என்ன யோசிக்கிறான் என்றே கண்டறிய முடியவில்லை முகம் கருத்து இறுகிக்கிடந்தது.
வானதியால் இதற்குமேல் பொறுக்க முடியவில்லை , ராகேஷின் வீட்டிற்கு சென்றுவிட்டாள் , கையில் கிடைத்தது எல்லாம் எறிந்து உடைக்க ராகேஷின் பெற்றோர் என்ன செய்ய என்று தெரியாமல் விழித்து நின்றனர்.
மகளைப் பாலோ செய்து வந்த மாதவன் “எங்க உன் புள்ள” என்றார் ராகேஷின் தந்தையிடம் , முன்னமே பாரி சச்சி அனைவரும் வந்து சென்றிருக்க இப்பொழுது இவர்கள், அனைவரின் கோபமும் மகன்மீது என்பதில் தம்பதிக்கு மிகப்பெரிய பயம் சூழ்ந்தது.
“அவன் எங்கு என்று தங்களுக்கு தெரியவே தெரியாது” என்று சாதித்தனர் இருவரும் , நேராக ராகேஷ் வீணா இருந்த அறைக்குச் சென்ற வானதி அணைத்து பொருட்களையும் களைத்து உடைத்து ஆர்ப்பாட்டம் செய்தாள்.
இதுவரை வீணாவின் அலைப்பேசி கிடைக்கவில்லை , ஒருநொடி நிதானித்த வானதி “அது ராகேஷின் கையில் கிடைத்திருந்ததால் அதை அவன் இங்கே வைக்க வாய்ப்பில்லை , ஒருவேளை வீணா அதை அவனுக்குத் தெரியாமல் ஒளித்து வைத்திருந்தாள்?”.
ராகேஷை பற்றி அவள் கூற விரும்பிய ஏதேனும் அதில் இருந்தாள் என்ற எண்ணம் தோன்ற.
மெல்ல தேட தொடங்கியவளுக்கு பால்கனியில் இருந்த போகன்வில்லா செடியின் தொட்டியில் அடர்த்தியான கிளையின் இடையில் கிளையொடு சேர்த்து கட்டப்பட்ட அலைப்பேசி கிட்டியது.
ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது, அதோடு வேகமாகக் கீழே இறங்கியவள் தந்தையின் கைபிடித்து அவரைக் கிட்டத்தட்ட இழுத்துக்கொண்டு வேகமாகக் காருக்கு ஓடினாள் , வீட்டிற்கு சென்று அதில் சார்ஜ் இட்டு உயிர்ப்பித்தவள் ஆதராத்தை தேடினாள்.
வீணாவும் பாரிவேந்தனும் பேசியது பதிவு செய்யப் பட்டிருந்தது, அதோடு வீணா ரெகார்ட் செய்த அவள் பேசும் விடியோவும் இருந்தது, முதலில் அவர்கள் இருவரும் பேசியதை ஓடவிட்டாள் வானதி.
மூன்றுமுறை வீணாவிடமிருந்து அழைப்பு வந்தும் அதை ஏற்கவில்லை பாரிவேந்தன்.
நான்காம் முறை மீண்டும் அவள் அழைக்க ஒருவேளை ஏதேனும் பிரச்சனையாக இருக்குமோ என்று எண்ணியவன் எடுத்தவுடன் “இஸ் எவரிதிங் ஆல்ரைட் வீணா” என்க இந்தப் பக்கம் கனத்த அமைதி.
“வீணா” என்றவன் குரலில் “இருக்கேன் பாரி நீங்க நல்லா இருக்கீங்களா” என்றவள் கேள்வியில் அவனுக்குச் சுர் என்று கோபம் ஏறியது.
“எதா இருந்தாலும் காலைல பேசலாம் , நான் அண்ணிக்கிட்டயும் வரச்சொல்றேன் , எங்க மீட் பண்ணலாம்” என்றான்.
மெல்ல சிரித்தவள் “உங்க அண்ணி எனக்கு அக்கா அவகிட்ட பேச எனக்கு என்ன தயக்கம், எனக்குக் கேட்கவேண்டியது உங்ககிட்ட” என்றவள்.
“ஒருவேளை தேவை இல்லாத விஷயங்களை யோசிச்சு என்னை நானே குழப்பிக்காம உங்ககூட சாதாரணமான ஒரு வாழ்க்கை வாழ்ந்திருந்தா…. நமக்குள்ள பிரிவு வராம ஒண்ணா இருந்திருப்போமா , நீங்க என்னை நேசிச்சிருப்பீங்களா”??.
அவள் கேட்ட அடுத்த நொடி அவனிடமிருந்து வந்து விழுந்தது “நெவெர்” என்ற வார்த்தை.
“மை லவ்…. இட்ஸ் டோட்டல்லி பார் ஹேர்…. பார் மை அழகி , தேவ இல்லாததை யோசிக்காம தூங்கு , எதுவும் பிரச்சனைனா வீட்ல பேசு” என்றவன் வைத்துவிட்டான்.
கேட்டிருந்த பெற்றோருக்கு மனம் வலித்தது , மகள் நிம்மதியின்றி தவித்திருக்கிறாள் தொலைத்து விட்ட வாழ்வு மீண்டும் கிட்டுமா என்று ஏங்கி இருக்கிறாள் என்று கலங்கினர்.
அடுத்த வீடியோ பதிவில் திருமண வாழ்வை பற்றிப் பேசியிருந்தாள் “அம்மா அப்பா உங்க மேல எனக்கு எந்தக் கோவமும் இல்லை , பாரிவேந்தன் கூட எனக்கு ஒரு நல்ல வாழ்க்கையை தான் நீங்கக் குடுத்தீங்க”.
“என்னோட தேவ இல்லாத சிந்தனைகள் , அண்ணன் இப்படி இருந்தா தம்பியும் அப்படிதான் இருப்பான் , தப்பு செய்றான் அப்படி இப்படினு நானே எனக்கு ஒரு வட்டத்தைப் போட்டு எல்லாத்தையும் நாசம் பண்ணிட்டேன்”.
“நிறைய எதிர்பார்போடுதான் ராகேஷை கல்யாணம் பண்ணிக்கிட்டேன், என்கிட்டே நல்ல தான் பேசினான் புரிஞ்சுக்கிட்டான்”.
“ஆனா கல்யாணம் முடிஞ்சு ரெண்டு நாள்வரைக்கும் எங்களுக்குள்ள எதுவும் நடக்கல , மூணாம் நாள் வெளில போலாம் சொல்லிக் கூட்டிட்டுப்போனான் , போனது ஒரு லேடி டாக்டர் கிட்ட , நான் கன்னித்தன்மையோட இருக்கேனான்னு செக் பண்ண!”.
“ஏற்கனவே கல்யாணம் ஆணவனு தெரிஞ்சுதான பண்ணிகிட்டன்னு கேட்டப்போ , உங்களுக்குள்ள ஒன்னும் நடக்கலைனு நீ சொல்ற அதை நானும் தெரிஞ்சுகிறதுல ஒன்னும் தப்பு இல்லையேன்னு சொன்னான் , அங்கேயே தெரிஞ்சுபோச்சு இந்த லைப் எதை நோக்கிப் போகுதுன்னு”.
“ஆனா இங்கேயும் பயம் , முதல் முறை பாரி மேல பழிச்சொல்லி பிரிஞ்சு வந்தேன் , இந்தமுறையும் கட்டினவன தப்பு சொன்னா எல்லாரும் என்னைத்தான் தப்பா பேசுவாங்க”.
“அம்மா அப்பா ஒரு பொண்ணாவது புருஷன் கூட வாழறானு நிம்மதியா இருக்கட்டும்னு நினைச்சேன் , ராத்திரி ஏன் வருதுன்னு என்னைக் கதற வெச்சுருக்கான்”.
“இதுக்குமேல அந்தச் சைக்கோ கூட வாழ முடியாது , திரும்பவும் வாழாவெட்டியா வீட்ல வந்து இருக்கறதுக்கு இந்த முடிவு எனக்கு நிம்மதி தரும் , யாரும் என்ன நெனச்சு கவலைப்படாதீங்க ஐ ஆம் பிரீ சோல் நவ்”.
“அக்கா கல்யாணம் எதுக்கும் தீர்வு இல்லை உனக்கான எதிர்காலம் எப்படி இருக்கணும்னு நீயே முடிவு பண்ணு, விமர்சனம் பண்ற யாரும் உன் கஷ்டத்துல பங்கு எடுத்துக்க மாட்டாங்க , லவ் யு ஆல்” என்று முடிந்திருந்தது.
அன்றைய நாள் வீணாவின் நினைவிலே அழுது கரைந்தனர் அனைவரும் , மறுநாள் காலை வானதியே அறிக்கை வெளியிட்டாள்.
வீணாவின் அலைப்பேசியிலிருந்து கிடைத்த ஆதாரத்தை வைத்துப் போலீசிலும் வழக்கு பதித்தனர் ராகேஷுக்கு எதிராக.
ராகேஷை தேடும் பணியைப் பார்வேந்தன் முடக்கி விட்டிருக்க, ஹைதராபாத்தில் ஒரு பப்பிலிருந்து அவனை இரவு இரண்டு மணிக்கு அள்ளி வந்தனர் , அவன் முகத்தின் அடையாளத்தையே மாற்றிவிட்டனர் விடிய விடிய அடித்ததில்.
“டேய் நான் பைத்தியம் இல்லடா என்ன வெளில விடுங்க டா” என்றவன் அலறலை கேட்ப்பார் யாரும் இல்லை அங்கே , அவன் பேசும் பாஷயும் அவர்களுக்குப் புரியவில்லை , பிறகு? பஞ்சாபின் எல்லையில் யார் கவனத்தையும் கவராமல் கிடக்கும் மனநல காப்பகத்தில் பைத்தியம் என்று சேர்க்கப்பட்டிருந்தான் ராகேஷ்.
அவன் சார்பாகக் கணிசமான தொகையும் அங்கே டொனேஷன் கொடுக்கப்பட்டது , மகன் எங்கு என்று தெரியாது என்ற ராகேஷின் பெற்றோர் இப்பொழுது அவன் உண்மையிலே எங்கே என்று தெரியாமல் காவல் நிலையம் ஏறி இறங்கினர்.
உண்மை வெளிவந்தபிறகும் மற்றவர்களை விமர்சனம் செய்வதையே வேலையாக வைத்திருப்பவர்கள் பாரிவேந்தனையும் அலக்நந்தாவையும் விமர்சித்தனர்.
அன்று பரிதவிக்கும் விழிகளோடு அவனைப் பார்த்துச் சென்றாள் நான்கு நாட்கள் ஆகிறது அவளைப் பார்த்து.
“என்னவானாலும் சரி இன்று அவளைப் பார்க்க வேண்டும்” என்ற முடிவோடு அவன் இருக்க , சச்சிதானந்தன் அழைத்துக் கூறிய செய்தி அவன் பொறுமையை பதம் பார்த்தது , அடுத்த பத்து நிமிடத்தில் அலக்நந்தாவின் வீட்டில் இருந்தான்.
ஒருவரையும் பார்க்கவில்லை அவனைத் தடைய வந்த சாரதாவை எரிக்கும் விழிகளோடு பார்த்தவன் அந்தச் சிறிய அறைக்குள் நுழைந்தான் , உள்ளே அலக்நந்தா ஒரு பக்கமாக ஒருக்களித்து படுத்திருக்க அவள் அருகில் கைக்குழந்தையோடு மித்ரா அமர்ந்திருந்தாள்.
பாரியை பார்த்ததும் எழுந்து உடனே வெளியேறினாள் , நந்தாவின் அருகில் சென்றவன் பார்த்தது வலது கன்னம் வீங்கி விரல் தடத்தோடு கன்றிப்போய் கிடந்தது , கண்கள் எல்லாம் வீங்கி முகமே பார்க்க முடியவில்லை.
உள்ளம் பதற அவளை அப்படியே அள்ளி எடுத்தவன் தன்னோடு இறுக்கி கொண்டு “அழகிமா” என்றான் உயிர் உருக.
அவன் வாசத்திலே விழித்துக்கொண்டவள் வாகாக அவனில் சாய்ந்துகொண்டாள் , வாயைத் திறக்க முடியவில்லை வலி உயிர் போனது.
“என் காதல் என்னவளை காயப்படுத்துகிறதா? காதலிப்பது அவ்வளவு பெரிய குற்றமா” என்று மனம் நொந்தவன் விழிநீர் அவள் உச்சியில் விழுந்து சிதறியது “வந்துடுடி யாரும் வேண்டாம் , என்கூட வந்துடு அழகி…” என்றவனை காதலிக்காமல் எப்படி இருக்க.
பாரிவேந்தன் அலக்நந்தா திருமணத்திற்கு தங்களால் முடிந்ததை செய்ய வேண்டும் என்று எண்ணிய சச்சி மனைவி குழந்தைகளுடன் மாமியார் வீடு வந்திருந்தான்.
குழந்தைகளைப் பார்த்தால் மெல்ல மெல்ல அவர்கள் மனம் மாறலாம் என்று அவன் எண்ணி வந்திருக்க , அங்கு ஒன்றுமே சரி இல்லை.
இவர்களைப் பார்த்த ராஜசேகர் மித்ராவிடம் “உன் ஆத்தாளுக்கு பைத்தியம் பிடிச்சுருக்கு , புருஷன பறிக்குடுத்த துக்கம் இப்படிலாம் பண்றான்னு நானும் கொஞ்சம் பொறுத்து போனா… ஏதோ பரதேசி என்னமோ சொன்னான்னு அந்தப் புள்ளய எப்படி அடிச்சு வெச்சுருக்கானு போய்ப் பாரு”.
“கருக்கலைப்பு செஞ்சியானு என் பேத்தியை அடிச்சு ஆஸ்பத்திரில படுக்க வெச்சுட்டா படுபாவி” என்று கதற கணவனும் மனைவியும் அவசரமாக உள்ளே ஓடிச் சென்றனர்.
அவளை அப்படி பார்க்க முடியாமல் மித்ரா கதறிவிட்டாள் , தங்கள் தாயா இப்படி என்று மனம் பதறியது சச்சி அழைத்து விவரம் கூற மகேந்திரனும் சுமதியும் கூட வந்துவிட்டனர்.
“வரமாட்டான்” என்று அவர் முன்னே வந்து நின்றான் சம்பத்.
“என்ன பண்ணி வெச்சு இருக்கீங்க , என்ன தப்பு பண்ணிட்டா? காதலிச்சது தப்பா , உங்ககிட்ட நந்தாவை கல்யாணம் செஞ்சுக்க கேட்டுத்தான் அவன் வந்து நின்னான் இன்னும் என்ன பண்ணனும் உங்களுக்கு” என்றவனை பார்த்தவர்.
“உங்க பிரென்ட் என் பொண்ண விட்டு விலகிப் போகணும்” என்றார் நிதானமாக.
அவர் கூற்றில் அனைவரும் அதிர்ச்சியாக அவரைப் பார்க்க “உனக்கு என்ன பைத்தியமா” என்றார் ராஜசேகர்.
உள்ளே அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த நந்தா பாரிவேந்தனை இன்னும் இறுக்கமாக அணைத்துக்கொண்டாள் “விட்டுச் செல்லாதே” என்று.
தன் அணைப்பிலே அவளை வைத்திருந்தவன் மெல்ல தன்னிடமிருந்து விலக்கி “வா” என்று அவளைப் பிடித்து எழுப்பித் தன்னுடன் அழைத்துக்கொண்டு வெளியில் சென்றான் , அனைவரின் பார்வையும் அவர்கள்மேல் படிந்தது.
அவன் நெஞ்சோடு முகம் புதைத்து அவனை ஒட்டி நிற்கும் மகளை வெறுப்போடு பார்த்தார் சாரதா.
“இந்தக் கல்யாணத்துக்கு நான் ஒத்துக்க மாட்டேன்” என்றார் ஆக்ரோஷமாக.
“கல்யாணம் பண்ணினாலும் இல்லனாலும் அலக்நந்தா எப்போவும் பாரிவேந்தனுக்கு மட்டுமே சொந்தமானவ அது மாறாது” என்றவனின் அருகில் வந்த சாரதா.
“அவ்ளோ நம்பிக்கை உங்க காதல் மேல இருந்தா… மூணு வருஷம் இவளைப் பாக்காம பேசாம இருங்க , மூணு வருஷம் அப்புறமும் இவளுக்கு உங்க மேலயும் உங்களுக்கு அவமேலயும் இருக்குற காதல் மாறலனா கல்யாணத்தை நானே முன்ன நின்னு நடத்துறேன்” என்றவரை அவன் சந்தேகமாகப் பார்த்தான்.
“நிச்சயமா நந்தா மனசு மாறும் , அவளுக்கு வெறும் இருபத்தியொரு வயசுதான் ஏதோ உங்கள பாத்ததும் மனசு கொஞ்சம் தடுமாறிடுச்சு , இனிமேதான் வாழ்க்கைல நிறைய விஷயங்களைப் பார்க்கப் போறா , படிப்பு முடிச்சு வேலைக்குப் போகப்போறா எவ்வளவோ மாறலாம் இன்னைக்கு சரின்னு தோணுற பலவிஷயம் அப்போ தப்பா தோணலாம்” என்றார்.
நிச்சயம் நந்தாவை மாற்றிவிடலாம் என்ற நம்பிக்கை அவரின் பேச்சில் ஆழமாக இருந்தது , திரும்பி நந்தாவை பார்த்தான் பாரிவேந்தன்.
இருவரும் ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை “காத்திருப்பேன்” என்றவளின் விழி பேசியமொழிக்கு அவள் பிறை நெற்றியில் அழுத்தமாக முத்தம் வைத்து “தெரியும்” என்று பதில் மொழி உரைத்து வேகநடையில் வெளியேறினான் பாரிவேந்தன்.