என்ன முயன்றும் நந்தாவால் வேதனையை அடக்க முடியவில்லை மூன்று நாட்கள் ஆகிறது அவள் உணவு உண்டு, சாரதா அவளிடம் பேசுவதில்லை தாத்தா மட்டுமே இருவருக்கும் இடையில் கிடந்து அல்லாடுகிறார்.
பாரிவேந்தன் வந்து சென்ற அன்று இரவே சச்சி வந்து அத்துவை அழைத்துச் சென்று விட்டான், கையில் உணவோடு நந்தாவின் அருகில் வந்த ராஜசேகர் “சாப்பிடு” என்க அவள் அமைதியாக இருந்தாள்.
“சரி நீ சாப்பிட வேணாம் நான் அப்படியே கிளம்புறேன்” என்றவரை அவள் அதிர்ந்து பார்க்க “நீயும் உன் அம்மாவும் உங்க பிடிவாதத்துல நிக்குறீங்க , நான் எதுக்கு தேவ இல்லாத ஆணியா இங்க , இனிமே இந்த வீட்டுக்கு வரமாட்டேன்” என்றார்.
“தாத்தா” என்று அவர் கையைப் பிடித்துக்கொண்டாள் நந்தா.
“இங்க பாரு உனக்கு அந்தப் பையன பிடிச்சதுல எந்தத் தப்பும் இல்ல, ஆனா உன் அம்மாவால அதை ஏத்துக்க முடியாது அது அவளோட நியாயம் , யாரும் அவளைத் தப்பு சொல்ல முடியாது, மெல்ல மெல்ல பேசிப்பாக்கலாம் நந்தாமா”.
“நிறைய கஷ்டத்தை அனுபவிச்சுட்ட இனிமேலும் அப்படி இருக்காது உன் வாழ்க்கை நல்லா இருக்கும் , இந்தக் கிழவன் இல்லாம போனாலும் என் ஆத்மா அதைப் பாத்து சந்தோஷப்படும்” என்றார் ராஜசேகர்.
“சாப்பிடு நாளைல இருந்து வேலைக்கும் காலேஜுக்கும் போ, எப்போவும் போல இரு , எல்லாம் மாறும் நம்புடா”.
“அந்தப் பையன நீ நம்புறியா இல்லையா நந்தா” என்றவரை பார்த்தவள்.
“நம்புறேன் தாத்தா ரொம்ப நம்புறேன் , எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும் , எனக்கு அவர்….” என்றவள் வார்த்தைகள் பாதியிலே நின்றது.
அவளை ஆறுதலாக அணைத்துக்கொண்டார் ராஜசேகர், இப்பொழுது நடந்திருக்கும் பிரச்னையை எப்படி கையாளுவது என்று தெரியவில்லை.
திருமணத்திற்கு சம்மதிக்க முடியாது என்று சாரதா மறுத்த நிலையில் பாரிவேந்தனின் மீது ஒரு பழியும் விழுந்திருக்கிறது, சாரதாவை எப்படி சமாதானப்படுத்த என்றே அவருக்குப் புரியவில்லை.
ஒரு மாதம் ஆகிறது பாரிவேந்தனும் சுமதியும் அவர்கள் வீட்டிற்கு வந்து சென்று , முதலில் அவன் மட்டும் வந்து பேசுவதாகவே முடிவு செய்திருந்தான்.
சாரதாவின் மனநிலையை கணக்கில் எடுத்துச் சுமதியிடம் பேச, மகனின் திருமணம் என்றவுடன் எதைப்பற்றியும் யோசிக்கவில்லை உடனே கிளம்பிவிட்டார்.
வாயிலில் வந்து நின்றவர்களைப் பார்த்த சாரதாவிற்கு ஒன்றுமே புரியவில்லை , மித்ராவை ஏற்றுக்கொள்ள சொல்லிக் கேட்க வந்திருப்பார்கள் என்று மட்டுமே நினைத்தார்.
ஒரு சதவீதம் கூட நந்தாவிற்காக வந்திருப்பார்கள் என்று சிந்திக்கவில்லை , அவர் அதிர்ச்சியில் அப்படியே நிற்க ராஜசேகர் முதலில் சுதாகரித்தவர் “உள்ள வாங்க” என்று அவர்களை அழைத்துப் பாயை எடுத்துப்போட்டார்.
இருவரும் கீழேயே அமர்ந்து கொண்டனர், அவர்களுக்கிடையில் சங்கடமான ஒரு அமைதி.
“என்ன சாப்பிடுறீங்க” என்ற ராஜசேகரிடம் “கொஞ்சம் தண்ணி மட்டும் குடுங்க” என்றார் சுமதி.
சாரதா அப்படியே நின்றிருந்தார் தண்ணீர் குடித்து முடிக்க அத்துவுடன் வீட்டிற்குள் நுழைந்தாள் அலக்நந்தா , வாயிலில் அவள் கால்கள் வேரோடியது.
“ஏன் இங்கு? அதுவும் இப்பொழுது” என்று அவர்களை ஏறிட்டவள் பயத்தோடு தாயின் முகத்தைப் பார்த்தாள் , அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்த பாரிவேந்தன் அவள் அருகில் வந்து நின்றான்.
அவன் கூறிய வார்த்தைகளைத்தான் கேட்டோமா!! சரியாகத்தான் காதில் விழுந்ததா என்று அவர் அதிர்ந்து நின்றார், அவனுடன் அவள் சேர்ந்து நின்றதே அவருக்கு உண்மையை உரக்க கூறியது.
மகளைப் பார்த்தவர் விழிகளில் கோபத்தையும் மிஞ்சி மீண்டும் ஏமாற்றப்பட்டதின் வலி.
“அம்மா” என்று அழைத்தவளை கை நீட்டித் தடுத்தவர் அறைக்குள் செல்ல முயல , அவரைக் கைப்பிடித்துத் தடுத்தார் சுமதி.
“நடந்த எல்லா தப்புக்கும் என் மகன் சச்சியும் ஒரு காரணம், உங்க இழப்புப் பெருசு எனக்குப் புரியுது , பெரியவங்க யோசிக்காம செஞ்ச தவறால பிள்ளைங்க நிறைய கஷ்டப்பட்டுட்டாங்க”.
“இந்தத் தடவ அது மாதிரி எதுவும் நடக்காம பாத்துக்கலாம், கொஞ்சம் மனசு வைங்க நந்தா நிச்சயமா நல்லா வாழ்வா ப்ளீஸ்” என்றார் சுமதி.
அவரைத் திரும்பிப் பார்த்த சாரதா “உங்க மகனுக்கு நீங்க யாரை வேணாலும் கல்யாணம் செஞ்சு வைங்க இதுல என் சம்மதம் தேவை இல்லாதது” என்றவர் உள்ளே சென்றுவிட்டார்.
கோபம் கொள்ளுவார் வந்தவர்களை அவமதிப்பார் நந்தாவை அடிக்கவும் வாய்ப்பிருக்கிறது என்று அவர்கள் எதிர்ப்பார்க்கச் சாரதாவின் பதில் அவரின் மண உணர்வுகளின் எதிரொலியானது.
அதிர்ந்து நின்றவளை தன்னோடு சேர்த்து அனைத்தவன் தாயை பார்க்க, அவர் என்ன செய்ய என்று தெரியாமல் அவனைத் தவிப்போடு பார்த்தார்.
“நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று அவரிடம் கண் அசைவில் சமாதானம் செய்தவன் “ரிலாக்ஸ்டா சரி ஆகும் அவங்களுக்கு கொஞ்சம் டைம் வேணும்”.
மற்றவரின் உணர்வுக்கு மதிப்பளிக்கிறான் என்று அவர் நினைக்க, அது அவன் அழகியின் விஷயத்தில் மட்டுமே என்பது அவருக்குப் புரியவில்லை.
முழுவதுமாக ஏதோ ஒருவித சிந்தனையில் இருந்தார் சாரதா, வீட்டில் அவருடைய வேலைகள் நடந்துகொண்டே இருந்தது, நந்தாவின் எந்தக் கேள்விக்கும் எந்தப் பேச்சிற்கும் அவரிடமிருந்து பதில் வராது.
நாட்கள் பெரிதாக மாற்றம் இல்லாமல் நகரத்தொடங்க ஒரு நாள் மாலை அவளைக் காத்து நின்றிருந்தான் பாரிவேந்தன் அவளின் கல்லூரியின் வாயிலில்.
அவன் இங்கு வருவதில்லை , இன்று ஏன் என்ன அவசியம் என்ற யோசனையுடன் அவள் வர அவளைப் பார்த்தே அமர்ந்திருருந்தவன் கதவைத் திறந்துவிட்டான்.
அமைதியாக ஒரு பயணம் ஒன்றுமே பேசவில்லை , இருபது நிமிடமாக அலக்நந்தா அவனைத் திரும்பிப் பார்ப்பதும் ரோட்டை பார்ப்பதுமாக இருந்தாள்.
ஒரு கட்டத்தில் முடியாமல் “என்ன ஆச்சு” என்றவள் கேள்வியில் வண்டியை ஓரமாக நிறுத்தினான் , ஏதோ பேச நினைக்கிறான் என்பது புரிந்தது.
“அமெரிக்கா போகணுமா?” என்று கேட்கும்போதே வார்த்தைகள் தடுமாறியது , அவன் இந்தியாவில் இருக்கும் நாட்கள்தான் குறைவு , அலக்நந்தா பாரிவேந்தனின் வாழ்வில் வந்தபிறகே இங்கே அவன் தங்கும் நாட்களின் எண்ணிக்கையும் கூடி இருக்கிறது.
தன் இடக்கையால் அவள் கண்ணத்தை தாங்கியவன் “இங்க வா” என்று அவளைத் தன்னோடு சேர்த்தனைதான்.
“போகணும் ஒர்க் நெறய பெண்டிங் இருக்கு” என்றவன் “என்கூட வந்துடுறியா அழகி” என்றான் , அவள் உடன் வேண்டும் என்ற ஏக்கத்தை மறைக்க இயலாமல்.
“வந்துடவா” என்றாள் அவளும் உடனே.
அவள் முகத்தை உயர்த்தி தன்னை பார்க்க வைத்தவன் “ப்ளீஸ் அழகி” என்று அவள் செவ்விதழில் தன்னை தொலைத்தான், மெல்ல மெல்ல தன்னை தொலைத்துக் கொண்டிருந்தான் அவள் மென்மையில்.
இதழிலிருந்து இடம்மாறி அவள் கன்னத்தில் முத்தம் பதித்ததோடு பற்தடங்களும் பதித்தான் உணர்வுகளின் பிடியில், அவளைச் சேர்த்தணைத்து விழிகள் மூட இருவரின் அணைப்பும் இறுகிக்கொண்டே போனது.
சட்டென்று அவளை விலகி வெளியில் இறங்கினான் , கோபமாக வந்தது தலையை அழுந்தக் கோதியவன் “என்ன பண்ற பாரி , அவ இப்போவே ரொம்ப டிஸ்டர்பா இருக்கா அவளை நீ இன்னும் இன்னும் கஷ்டப்படுத்துற காம் டவுன்” என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டவன்.
சிறிது நேரத்திற்கு பிறகு காரில் வந்து அமர அவனைப் பார்க்க முடியாமல் விழிகளை வேறு பக்கம் பதித்தாள் அலக்நந்தா.
இதுவரை தோன்றாத புதிய உணர்வுகள் நிறைந்து தளும்பியது பாவையிடம் , இடையிடையே கண்ணத்தை தேய்த்து விட்டுக்கொண்டாள் பார்த்தவனுக்கு மிகவும் வருத்தமாகிவிட்டது.
அவள் மனதில் எதிர்ப்பார்ப்புகளை விதைத்துவிட்டோம் என்று தன் மடத்தனத்தை நொந்துகொண்டான்.
யு.எஸ் போக வேண்டிய அவசியம் இப்பொழுது , இத்தனை நாட்கள் தள்ளிப் போட்டதை போல இனி முடியாது போவதற்கான முடிவை எடுத்தபிறகும் மனம் ஏனோ முரண்டு பிடிக்கிறது.
அவளைப் பார்த்தே ஆக வேண்டும் என்ற உந்துதலில் உடனே வந்துவிட்டான் , நடந்த எதுவும் அவனும் எதிர்பாராதது , சாரதா மறுத்தபிறகு இன்றே அவளை நேரில் காண்கிறான்.
பூமி இருள் போர்வையை மெல்ல விரித்துக்கொண்டிருக்க வீட்டின் அருகில் வந்தவுடன் அவனைத் திரும்பிப் பார்த்தாள் அலக்நந்தா , அவள் கூந்தல் இழைகளைக் காதோரம் ஒதுக்கியவன் நெற்றியில் அழுத்தமாக முத்தம் பதித்து “பாத்துப்போ” என்க.
“சரி” என்ற தலை அசைப்புடன் இறங்கி நடந்தாள்.
பேத்தி வரும் நேரம் கடந்தும் காணாமல் வருந்திய ராஜசேகர் பஸ்ஸ்டாப்பில் காத்திருக்க அவர் விழிகளில் இந்தக் காட்சி விழுந்தது, என்ன செய்யப் போகிறோம் இவர்கள் விஷயத்தில் என்பதே அவருக்குப் பெரும் வேதனையாக இருந்தது.
விரும்பும் இருவரை சேர்த்துவைத்து அவர்கள் வாழ்வதை தூர நின்றாவது வாழ்த்தலாம் , ஏன் இந்தப் பிடிவாதம் இவளுக்கென்று மருமகளை மனதிற்குள் வறுத்தார்.
அவள் அந்தத் தெருவுக்குள் நுழையும் வரை அங்கேயே இருந்து பார்த்திருந்து சென்றான் பாரிவேந்தன்.
அன்று இரவு அனைவரும் உணவருந்தி முடித்தபிறகு நந்தாவிடம் அறைக்குப் போகச் சொன்னார் ராஜசேகர் , அவள் இருவரையும் கேள்வியாகப் பார்த்துக்கொண்டே அந்தச் சிறிய அறைக்குள் நுழைந்து கதவைச் சாற்றினாள்.
உள்ளுக்குள் குடைந்துகொண்டே இருந்தது என்னவாக இருக்கும் என்று.
அலக்நந்தா அறைக்குள் சென்றபிறகு மருமகளை பார்த்த ராஜசேகர் “உன்கூட கொஞ்சம் பேசணும்” என்க.
“எனக்குச் சம்மந்தம் இல்லாதவங்கள பத்தி என்கிட்டே எதுவும் பேச வேண்டாம் மாமா , வேற ஏதாவதுன்னா சொல்லுங்க” என்றவரை பார்க்கக் கோவமாக வந்தது.
“என்ன ஈகோ இது” என்று.
“உனக்கு என்ன பிரச்சனை சாரதா அவ காதலிச்சதா? இல்ல அந்தப் பையன காதலிச்சதா?” என்க , அவரிடம் மௌனம்.
“இன்னும் ஏன் இந்தப் பிடிவாதத்தை தூக்கி சுமக்கிற , ஒருத்தி அப்படி போய்ட்டா , அவளை நீ மன்னிக்கல அதை நாங்க உன்கிட்ட எதிர்பார்க்கவும் இல்லை உன்னைப் புரிஞ்சுக்கிட்டோம்”.
“ஆனா இந்தத் தம்பி அம்மாவோட முறையா வந்து நம்ம வீட்டு வாசல்ல நின்னார் , நம்ம சம்மதத்துக்காகப் பிள்ளைங்க காத்திருக்காங்க”.
“உனக்கு அவங்களோட சேர விருப்பம் இல்லனா கல்யாணத்தை செஞ்சு வெச்சு தூர நின்னு வாழ்த்திட்டு போ ஆனா ஒத்துக்குவே மாட்டேன்னு என்ன பிடிவாதம் , இப்படி தனியாவே நின்னு என்ன பண்ண போறோம்”.
“நம்ம காலம் போய்டுச்சு அவங்க வாழட்டும் சாரதா கொஞ்சம் யோசிமா” என்றவரை பார்த்தவர்.
“மூத்த பொண்ணோட கண்ணீரும் வலியும் தானே அந்த மனுஷன் இதயத்தைப் பிழிஞ்சுது , என் பிள்ளைகளுக்குச் சேர்த்து வெச்ச எல்லாமே போச்சேன்னு தானே அவருக்கு நெஞ்சுவலி வந்தது”.
“இப்போ அவங்க அவங்க வாழ்க்கை அவங்களுக்கு அந்த மனுஷனை மட்டுமே நம்பி வந்தேனே நான்… எண்ணப்பத்தி யோசிச்சாரா உங்கப்பிள்ளை , எனக்குப் புருஷனா எனக்குத் துணையா நின்னாரா , பாதி வாழியிலே தெருவுல விட்டுட்டு போய்ட்டார்”.
“அவமானப்படுத்தினவன் வீட்டுக்கு வாழப்போயிருக்குற உங்க மூத்த பேத்தி, இல்ல… அவன் வீட்டுக்குத் தான் போவேன்னு அடமா நிக்குற உங்க சின்னப் பேத்தி இவளுங்கள அண்டிப் பிழைக்கணுமா நான் , அதுக்கு ஒரு முழம் கயித்துல தொங்கிட்டு போயிடுவேன்” என்றவரை அதிர்ச்சியோடு ராஜசேகர் நெஞ்சில் கை வைத்துப் பார்த்திருக்க.
தாயின் குரல் உயர்ந்த நொடி முதல் அவர் பேசியதை கேட்டிருந்த நந்தாவின் இதயம் வேதனையில் உரக்க கதறியது , அப்பாவின் மரணம் அம்மாவின் மனதில் எத்தனை பெரிய காயத்தை விதைத்திருக்கிறது.
அந்த நொடி அவள் உணர்ந்தாள் ஒரு மனைவியாகத் தன்னை பற்றி யோசிக்காமல் போனாரே என்ற கோவம் ஒரு மனைவியாகத் தான் தோற்றுவிட்டதாக ஒரு உணர்வு அது உள்ளுக்குள் புரையோடி இத்தனை ஆண்டுகளில் அவர் மனது முழுதும் பெரும் ரணமாக மாறி இருக்கிறது.
இறைவா இந்தக் காயத்தை எப்படி சரிசெய்ய என்று தளர்வாகச் சுவற்றில் சாய்ந்து அமர்ந்தாள்.
வெகுநேரமாக அலைப்பேசி அடிக்க இரவெல்லாம் தாயைப் பற்றிய சிந்தையில் உழன்றவள் சற்று முன்னே கண் அயர்ந்தாள், நேரம் நள்ளிரவு மூன்றை தொட்டுக்கொண்டிருந்தது.
ஒளிர்ந்த பெயரைப் பார்த்ததும் உறக்கம் எல்லாம் காற்றோடு பறந்தது அழைத்தது பாரிவேந்தன் , அவளை அழைத்து மணிக்கணக்காகப் பேசுவதெல்லாம் அவனிடம் கிடையாது.
நெஞ்சை முட்டும் ஆசை இருந்தாலும் அவள் சூழலையும் படிப்பையும் கருத்தில் கொண்டு தன் ஆசைகளை அடக்கிவைத்திருப்பவன்.
அவள் கைகள் கோர்த்து விழிகள் பார்த்துக் கதைகள் பேச அவனுள் அத்தனை ஆசை இருக்கிறது, அவள் மொழிகளோடு விழிகளும் கதை பேசுவதை ரசித்திருக்க ஒவ்வொரு நொடியும் உள்ளம் ஏங்குகிறது.
ஒருவரின் அனுமதியும் தேவை இல்லை என்று அலக்நந்தாவை அழைத்துச்செல்ல பலமுறை யோசித்துவிட்டான், அனு தினமும் அவனை வதைத்துக் கொண்டிருக்கிறாள் பாவை அவள் அறியாமலே, ஆனால் ஒருமுறைகூட அவளிடம் அதை வெளிப்படுத்தியதில்லை.
அலக்நந்தாவை பொறுத்தவரை அவனின் குணமே அதிகம் பேசாமல் இருப்பது அதனால் அப்படி இருக்கிறான் என்பதே.
இந்த நேரத்தில் அவன் அழைப்பை எதிர்பார்க்காதவள் பதட்டம் சுமந்த குரலில் “வேந்தரே” என்று அழைத்துவிட அந்தப் பக்கம் பேரமைதி.
“வேந்தரே” என்றவளின் குரலில் இருந்த கலக்கத்தில் “என்ன கூப்பிட்ட” என்று மௌனம் கலைத்தான் , அப்பொழுதே என்ன சொல்லி அழைத்தோம் என்பது உரைத்தது , இப்பொழுது அவளிடம் மௌனம்.
“அழகி” என்றவனின் ஆழ்ந்த குரலில் “ஹ்ம்ம்” என்றவள் சத்தம் கூடச் சங்கீதமாக அவனைச் சென்று சேர்ந்தது “இப்போ கூப்பிடு” என்க.
“ம்ம்ஹூம்” என்றாள்.
“ப்ளீஸ் அழகி” என்று அவளிடம் கெஞ்சி நின்றான்.
ஒருவித மனசஞ்சலத்தில் இருந்தான் அவளை அழைத்தபோது, “வேந்தரே” என்ற அழைப்பில் அவனின் மனதில் இருந்த சஞ்சலம் கூட மறந்துவிட்டது, அழைத்த நபரையும் மறந்துவிட்டான்.
“எனக்கு உங்கள பாக்கணும் பேசணும்” என்றாள் முதல் முறையாக, இதுவரை அவள் தொடர்ந்து பேசிக் கூட அவன் பார்த்ததில்லை.
“அழகி… அங்க ஏதாவது பிரச்னையா” என்றான் சரியாக.
“ஹ்ம்ம்” என்றாள் அலக்நந்தா.
பேசமாட்டான் என்று அவள் யாரை நினைத்தாளோ, அவன் தானும் பேசி அவளையும் பேசவைத்துக் கொண்டிருந்தான்.