உயிரின் துளி காயும் முன்பே  – 19

பேரனை நிச்சயம் எதிர்ப்பார்க்கவில்லை சாரதா, அவனை மீண்டும் பார்த்ததில் அவருக்கு மிகுந்த சந்தோஷம் மகளைப் பற்றி அறிய ஆசை இருந்தாலும் கேட்கவில்லை அதை உணர்ந்த நந்தா அவர் கேட்க்காமலே அனைத்தையும் கூறினாள்.

பாரிவேந்தன் கொண்டு வந்து விட்டதையும் கூறிவிட்டாள், அவர் எதெற்கும் பதில் கூறவில்லை, அன்று இரவு அனைவரும்  ஒன்றாக உணவு உண்டனர்.

பிறகு, அத்து இங்கு முதல்முறை வந்தபோது அவனுக்குத் தூங்குவதற்கு ஏதுவாகச் சிறிய பெட் ஒன்றும் பேன் ஒன்றும் வாங்கி இருந்தாள் அதை அவனுக்குச் சரியாக வைத்துக்கொடுத்து தட்டிக்கொடுக்க அமைதியாக உறங்கிவிட்டான்.

அடுத்த நாள் அவனைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் அதற்காக ஏதேனும் தயார் செய்து வைக்கலாம் என்று அவள் கிச்சன்  செல்ல அங்கே சாரதா காய் கறிகளை எடுத்து வைத்துக்கொண்டிருந்தார்.

“அம்மா என்ன பண்றீங்க நேரம் ஆகுது” என்க.

“அத்துவுக்கு நாளைக்கு ஸ்கூல் போகணுமே அதான் என்ன சமைக்கலாம்னு பாக்குறேன் நாளைக்கு பிரைட் ரைஸ் பண்ணிடவா”  என்றார் ஆர்வமாக.

“பண்ணலாம்மா நீங்கப் போங்க நான் பாத்துக்குறேன்” என்றவளை பார்த்தவர் “அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் வேலைக்கும் போயிட்டு வந்து சமைக்க நேரம் இருக்காது, நா ஒரு வாரம் லீவு சொல்லிக்கிறேன் நீ போய்த் தூங்கு புள்ள எழுந்துக்க போறான்” என்றார்.

அவள் அதற்கு மேல் ஒன்றும் பேசவில்லை பேரனைப் பார்த்தபிறகு கொஞ்சம் கூட்டிலிருந்து வெளிவந்திருக்கிறார் அதைக் கெடுக்க விரும்பவில்லை, என்ன செய்கிறாரோ செய்யட்டும் என்று உறங்கச் சென்றுவிட்டாள்.

காலை நந்தா சம்பத் வீட்டிற்கு சென்றுவிட பேரனை எழுப்பித் தயாராக்கி அவனுக்குக் காலை உணவு கொடுத்து மதியத்திற்கு உணவு பேக் செய்து என்று அனைத்தையும் முடித்தார்.

தெரிந்தவர் இடத்தில் ஆட்டோவுக்குச் சொல்லி வைத்துவிட்டார், நேரத்திற்கு அவனைப் பள்ளியில் விட வேண்டுமே, தாத்தா அவனுடனே சென்று விட்டு வருவதாகக் கூறிவிட்டார்.

நந்தா வந்தபோது அவன் பள்ளி செல்லத் தயாராகி நின்றான்.

“அம்மா அப்பா பாப்பா பாக்கணும் சித்தி” என்றவனிடம் சாயந்திரம் “ஸ்கூல்ல இருந்து வரும்போது போய்ப் பாக்கலாம் இப்போ நேரம் ஆயிடும் நீ ஸ்கூல் போயிட்டு வா” என்றாள், அவனும் “சரி” என்று ஒத்துக்கொண்டான்.

கல்லூரிக்கு நேரத்தோடு கிளம்பிவிட்டாள் மருத்துவமனை சென்றுவிட்டே கல்லூரிக்குப் போக வேண்டும் அன்னையிடம் வந்தவள் “அம்மா இன்னைக்காவது வரீங்களா குழந்தையைப் பார்க்க” என்றாள்.

அடுப்பில் வைத்த பாலை பார்த்துக்கொண்டே “இல்ல என்னால வர முடியாது என்ன கூப்பிடாத நந்தா” என்றார் பிடிவாதமாக.

“சரிம்மா சரி வேண்டாம் நீங்க வர வேண்டாம் நான் பாத்துட்டு வந்து சொல்றேன்” என்றாள் உடனே.

அவருடைய மனநிலையை புரிந்துகொள்ள முடிந்தது அத்துவுடன் அவர் இணக்கமாக இருப்பதே தற்காலம் போதும்  என்ற முடிவுக்கு வந்துவிட்டாள்.

சம்பத்தும் சூர்யபிரியாவும் குழந்தையைப் பார்க்கச் செல்லவிருப்பதாக அவளிடம் கூறினர் அவளையும் தங்களுடன் வண்டியிலே வந்துவிட கூற, இது பார்வேந்தனின் ஏற்பாடு என்று அவளுக்குப் புரிந்தது.

தயாராகி வந்தவள்  மெய்ன் ரோட்டில் காத்திருக்க அவர்கள் வந்து அழைத்துச்சென்றனர்.

மாலை தாத்தா நேராக அத்துவை மருத்துவமனை அழைத்துச் சென்று விட்டார், சித்தியுடன் வருகிறேன் என்று அவன் கூறிவிட அவனை அங்கேயே விட்டுவிட்டு அவர் மட்டும் புறப்பட்டார்.

கல்லூரி முடிந்து மாலை வந்தவள் சிறிது நேரம் அவர்களுடன் இருக்க, வேக நடையில் உள்ளே நுழைந்தான் பாரி “எல்லாம் ஓகே தான” என்று சச்சியிடம் விசாரித்தவன் அவன் செவியில் ஏதோ கூற வேகமாக அறையிலிருந்து வெளியில் சென்றான் சச்சிதானந்தன்.

மித்ரா “என்ன” என்று நந்தாவை கேள்வியாகப் பார்க்க “தெரியல” என்று உதடு பிதிக்கியவள்  “பாத்துட்டு வரேன்” என்று வெளியில் சென்றாள்.

கோரிடேர் இறுதியில் சுமதி ஒரு சேரில் அமர்ந்திருக்க அவரின் அருகில் சச்சி அமர்ந்திருந்தான், இருவருக்கும் எதிரே சுவற்றில் ஒரு காலை மடக்கி கைகளைக் கட்டி சாய்ந்து நின்றிருந்தான் பாரிவேந்தன்.

இப்பொழுது தான் அங்குச் செல்வது சரியாகவராது என்று உணர்ந்த நந்தா அங்கேயே தேங்கி நின்றாள், திரும்பி அவளைப் பார்த்தவன் “வா” என்று தலை அசைக்க “வேண்டாம்” என்றாள் அவள்.

அவன் பார்வை கூர்மையாகத் தானாகவே அவள் கால்கள் அவனை நோக்கி நடந்துவிட்டது, உள்ளுக்குள் தன்னை திட்டவும் அவள் மறக்கவில்லை “அவன் பேசவேயில்லை பார்வைக்கே ஏன் இப்படி உன் உடலின் செல்கள் எல்லாம் அவன் பின்னே போகிறது” என்று.

அவன் அருகில் செல்லச் செல்லத் தேவை இல்லாமல் கால்கள் ஆட்டம் கண்டது, அவள் கைபற்றித் தன் அருகில் நிறுத்திக்கொண்டான்.

நேற்றே முடிவு செய்துவிட்டான் திருமணத்தைப் பற்றி உடனே ஒரு தீர்மானம் எடுக்க வேண்டும் என்று, உரிமையாகக் கைபிடித்து அருகில் நிறுத்த அதிர்ச்சியில் விழிகள் விரிந்து கொண்டது.

அவள் விழிகளைப் பார்த்தவன் “சும்மா சும்மா இப்படி கண்ணை விரிச்சு என்னை டெம்ப்ட் பண்ணாத, என் கண்ட்ரோல் போயிடுச்சுனா நடக்குற எதுக்கும் நான் பொறுப்பில்லை” என்றவனை கண்கள் சிமிட்டி பார்த்தவள் அவன் பார்வை மாற்றத்தில் விழிகளைச் சுமதி மற்றும் சச்சியின் மேல் பதித்தாள்.

அவர்கள் இப்பொழுதும் ஏதோ தீவிரமாகப் பேசிக்கொண்டிருக்க, மகனின் எந்தப் பேச்சிற்கும் சுமதி பதில் கூறவில்லை, அவனை நிமிர்ந்து பார்க்கவும் இல்லை.

பல விதமான சமாதானங்கள் கூறி பார்த்துவிட்டான் கெஞ்சியும் கேட்டுவிட்டான் எதற்குமே அவர் அசரவில்லை, ஆயாசமாக இருந்தது அவனுக்கு.

இத்தனை நாட்கள் யாரையும் பற்றிப் பெரிதாகக் கவலை படவில்லை விரும்பியவளுடன் வாழ்கிறேன் என்ன தவறு என்று இருந்துவிட்டான்.

பாரிவேந்தனின் வாழ்வு தன்னாலே இப்படி ஆகிவிட்டது என்ற குற்றவுணர்ச்சி உள்ளுக்குள் குடைந்து கொண்டு இருக்கிறது, அதோடு இடையில் மகனைப் பற்றிய மன உளைச்சலின் போதுதான் ஒரு தகப்பனாகத் தன் பெற்றறோரை யோசித்து பார்த்தான்.

தன் குழந்தைகளுக்கு உறவுகள் வேண்டும் என்று மனம் ஏங்குகிறது, தங்களுடைய தவறை மன்னித்து ஏற்றுக்கொள்வார்களா என்ற சஞ்சலமும் இருக்கிறது.

அவர்களை அணுக முடியாமல் தவித்துக்கொண்டிருந்தான், இன்று தாய் தன் குழந்தையைக் காண வந்திருக்கிறார் என்பதே மிகுந்த நிம்மதியை தந்தது ஆனால் அவரைச் சமாதானம் செய்ய இயலவில்லை.

பிள்ளையைக் காணவந்தவர் உள்ளே வராமல் இங்கேயே அமர்ந்திருக்கிறார் அவனுக்குக் காரணம் புரியவில்லை பின் ஏன் இத்தனை தூரம் வர வேண்டும்.

“ஏதேனும் செய்யேன்” என்று தம்பியைத் திரும்பிப் பார்த்தவன் அதிர்ச்சியில் வாய் பிளந்துவிட்டான் நந்தாவின் கரங்களைப் பிடித்து நின்றிருந்த பாரிவேந்தனை பார்த்து.

திடீரென்று மகன் அமைதியாகிவிட மெல்ல அவனைத் திரும்பிப் பார்த்தார் சுமதி, அவன் பார்வை சென்ற திசையில் பார்த்தவர் விஷயத்தை அறிந்துகொண்டார், முதல்முறையாக மகனிடம் மவுனம் கலைத்தார்.

“பாரியும் நந்தாவும் விரும்புறாங்க” என்றவரை திரும்பிப் பார்த்தான் சச்சி.

“நீ செஞ்சுட்டு போன நம்பிக்கை துரோகத்தோட வலியை அவங்க கொஞ்சமாவது மறக்க என் மகனோட வாழ்க்கையை பணயம் வெச்சோம், ஆனா அதுவும் பாழாப்போச்சு”.

“நந்தாவை பாரி ரொம்ப விரும்புறான் இந்தத் தடவ அவன் ஆசைப்பட்டது நடக்கணும், நிச்சயமா சாரதா இதுக்கு ஒத்துக்க மாட்டாங்க அவங்களோட இழப்பு அப்படி”.

“நீ என்ன செய்வியோ ஏது செய்வியோ உன்னால வீணாப்போன எல்லா வாழ்க்கையையும் நீதான் சரி பண்ணனும்”.

“உன் புள்ளைங்க தலைல நீங்கப் பண்ண பாவத்தோட கணக்கை இறக்கி வைக்காதீங்க, இவ்ளோ தூரம் வந்த நீங்க ஏன் உள்ள வந்து குழந்தையைப் பார்க்கலைனு கேட்டல்ல”.

“தோ அங்க தெரியுதே அந்த டாக்டர் கிட்டத்தான் இந்தக் குடும்பத்தோட முதல் வாரிசைச் சுமந்துட்டு இருந்த வானதி செக்கப் வந்தா”.

 “அவ வயித்துல இருந்த கரு கலைஞ்சப்போ இதே வரிசையில இருந்த ஒரு ரூம்லதான் என்னைக் கட்டிப்பிடிச்சு கதறினா, இப்போவும் அந்தச் சத்தம் எனக்குக் கேக்குது”.

“வாழ வேண்டிய வயசுல எல்லா சுகத்தையும் தொலைச்சுட்டு தனிமரமா நிக்குறாளே அந்த வேதனைக்கு என்ன பதில் சொல்லப்போற” என்றவரின் ஆவேசமான குரலில் அவரின் அருகில் நெருங்கி “அம்மா” என்று அவரைத் தோளோடு அணைத்துக்கொண்டான் பாரிவேந்தன்.

உடல் தளர அப்படியே சேரில் தளர்ந்து அமர்ந்தான் சச்சி, இத்தனை நேரம் அக்காவின் பிள்ளையைப் பார்த்து நின்ற சந்தோஷம் அனைத்தும் துணி வைத்துத் துடைத்ததை போல அழிந்துபோனது நந்தாவிற்கு.

“ஒரு பொண்ணுக்கு வாழ்க்கையே இல்லாம பண்ணிட்டு  மகனுக்கு வாரிசு வந்ததை கொண்டாட வந்திருக்கியான்னு மனச்சாட்சி காரி துப்புது நா என்ன பண்ணட்டும் பாரி” என்று தவித்தவரை பார்க்க வேதனையாக இருந்தது.

“உன் கல்யாணம் நந்தாவோட அம்மா தாத்தா சம்மதத்தோடுதான் நடக்கணும் பாரி” என்றார் சுமதி.

“அப்படிதான் நடக்கும் நீங்க எல்லாரும் சேர்ந்து நின்னு ஆசிர்வதிச்சு அவளை எனக்குக் குடுங்க” என்க சிறிது நேரம் அமைதியாக நின்றார்.

“குழந்தையைப் பார்த்துட்டு வரேன்” என்றவர் நந்தாவின் கையைப் பற்றிக்கொண்டு மித்ராவின் அறைநோக்கி சென்றார்.

சச்சியின் அருகில் அமர்ந்தவன் “என் கல்யாணத்தைப்பத்தி நீ கவலைப்படாத அதை  நான் பாத்துக்குறேன், முடிஞ்சவரைக்கும்  சரி பண்ண முயற்சி பண்ணு, அண்ணி இப்படி தனியா இருக்குற வரைக்கும் அம்மா உன்ன மன்னிக்க வாய்ப்பில்லை” என்று கூறியவன்.

“உன் மனைவி சங்கமித்ராவை அண்ணின்னு இப்போ வரைக்கும் என்னால கூப்பிட முடியல” என்றவன் அறை நோக்கி நடந்தான்.

சுமதி மித்ராவிடம் எதுவும் பேசவில்லை குழந்தையைப் பார்த்தார், அத்துவிடம் பேசினார் உடனே சென்றுவிட்டார்.

“போலாம் பாரி” என்று அவனிடம் வந்து நிற்க அவன் விழிகள் நந்தாவின் மீது படிந்தது.

அவள் முகத்தில் இதுவரை இல்லாத கலக்கம் “தைரியமா இரு” என்று கண்களால் அவளுக்கு ஆறுதல் கூறி தாயை அழைத்துக்கொண்டு சென்றான்.

நந்தாவும் சிறிது நேரத்தில் அத்துவுடன் வீட்டிற்கு புறப்பட்டுவிட்டாள், மருத்துவமனையிலிருந்து அவள் வெளியில் வர அவர்களுக்காக வெளியில் காத்திருந்தான் பாரிவேந்தன்.

அவள் மனம் அடைந்த நிம்மதி அவளின் விழிகளில் அவனுக்குத் தெரிந்தது, சுமதியை இறக்கி விட்டவன் வீட்டிற்குள் செல்லாமல் அப்படியே வந்துவிட்டான்.

அவளை முன்னாள் ஏறச் சொன்னான், அத்துவிற்கு ஐ பாட் ஒன்றில் கார்ட்டூன் வைத்துக்கொடுத்து ஹெட் போனும் கொடுத்துவிட அவனுடைய உலகில் மூழ்கிவிட்டான்.

“அழகி” என்றவனின் குரலில் அவனைப் பார்த்தவள் அப்படி அழைக்காதே என்று விழிகளால் இறைஞ்சினாள்.

“என்னடா” என்றவனிடம் எப்படி சொல்லுவாள் “உன் அழகி என்ற அழைப்பு  உள்ளுக்குள் நுழைந்து உயிரை வதைக்கிறது” என்று.

அவள் விழிகளே அவனிடம் அனைத்தையும் பேசும்போது வார்த்தைகள் தேவை இல்லையே அவளை மிகவும் வதைக்கிறோம் என்று புரிந்தது.

வானதியிடம் பல முறை பேசிவிட்டான் மறுமணத்தைப் பற்றி முதலில் பிடிவாதமாக மறுத்துவந்தவள், மித்ரா இரண்டாம் முறை கர்பம் தரித்ததை அறிந்த பிறகு தாய் தந்தை தங்கை அனைவரின் அறிவுறையுடன் சுமதியின் கண்ணீர் என்று அவளைக் கொஞ்சம் அசைத்தது.

பெரிதாக எதிலும் ஆர்வம் காட்டவில்லை ஏதோ செய்துகொள்ளுங்கள் என்ற மனநிலையில் இருந்தாள், யாரின் புகைப்படத்தையும் பார்க்கவில்லை.

வீணாவிற்கு மீண்டும் ஒரு வாழ்வு அமைந்ததை போல வானதியையும் ஒரு நல்ல இடத்தில் வாழவைக்க அவளின் தந்தை முயன்றுகொண்டிருந்தார்.

எப்படியும் அவளுக்கு ஒரு நல்ல வழி பிறக்கும் என்ற நம்பிக்கை வந்திருந்தது.

அலக்நந்தாவிடம் அப்பொழுது ஒன்றும் கூறவில்லை ஆனால்  இரண்டாம் நாளே தாயுடன் நந்தாவின் வீட்டிற்கு வந்து நின்றான்.