இப்போது அவள் அதிர்ச்சியில் விழிவிரித்து பார்த்து நின்றாள். இருந்தும் தன்னை திடப்படுத்திக் கொண்டு, “சார் என்ன சொல்றீங்க?” என்று கேட்க,
“ஆமா மூணு லட்சத்தை 30 லட்சமா என்னால மாத்த முடியும்னு சொல்றேன். அதுவும் ஒரே மாசத்துக்குள்ள நீ தரேன்னு சொல்லி ஒன்றரை மாசம் ஆகியும் நீ தராம இருக்கன்னு சொல்றேன்.
இல்லனா அந்த கடன் பத்திரத்தை மொத்தமா கிழிச்சு போட்டுட்டு 30 லட்சத்தை திருடிட்டு போயிட்டேன்னு கூட சொல்ல முடியும்னு சொல்றேன்”, என்று அவன் கூற,
“சார் ப்ளீஸ் என்ன பேசுறீங்க?…நான்…..நான்….எதுக்காக இப்படியெல்லாம் பேசுறீங்க?”என்று மிகவும் பதட்டமாக வாயில் இருந்து வார்த்தை வராமல் தடுமாறியது வடிவழகிக்கு.
அதற்கு அவன், “இதெல்லாம் நடக்கக்கூடாதுன்னு நீ நெனைச்சா நான் சொல்ற மாதிரி கேட்டா போதும்” அவள் எந்த பதிலும் கூறாமல் அவனைப் பார்த்த வண்ணம் அமைதியாக நின்றிருக்க,
“ஒன்னும் இல்ல வடிவழகி நீ என்ன பண்ணனும்னு சொல்றேன் நல்லா கேட்டுக்கோ. எப்படியும் உனக்கு கல்யாணத்துக்கு அப்புறம் ஃபஸ்ட் நைட் நடக்கும் அதுக்கு முன்னாடி ஒரு சின்ன ரிகர்சல் பாரு என்கூட”,
எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் தெளிவாகவே கூறிவிட்டான். இதுதான் விஷயம் என்று. ஆனால் கேட்டவள் தான் அதிர்ச்சியின் விளிம்பில் இருந்தாள்.
வடிவழகி சற்று தைரியமான பெண்தான் இதற்கு முன் அவள் எழ்மை நிலையை பயன்படுத்தி சிலர் வேறு விதமாக பேசியிருக்கின்றனர்.
ஆனால் நேரடியாக இப்படி ஒரு விஷயம் தனக்கு நடப்பது இதுதான் முதல் முறை. அது உடலில் நடுக்கத்தை ஏற்படுத்திய போதும் சற்று துணிச்சலை வரவழைத்துக் கொண்டு,
“என்ன நினைச்சுட்டு இருக்கீங்க உங்க மனசில? நீங்க நினைக்கிற மாதிரி பொண்ணு கிடையாது நான்?” என்று குரல் உயர்த்தி பேச,
அதற்கு அவன், “ஓ…நீ இந்த அளவு தைரியசாலியா? சரி இன்னும் தெளிவா சொல்றேன் கேட்டுக்கோ. நீ திருடிட்டேன்னு போலீஸ் உன் வீட்டுக்கு அனுப்புவேன். அப்புறம் கல்யாணம் நிக்கும்.
மாப்பிள்ளை வீட்டுக்காரங்க உன்னை வேணாம்னு தூக்கி போட்டு போயிடுவாங்க. ஒருவேளை அப்படி தூக்கிப்போட்டு போகலன்னு வச்சுக்கோ அவங்களும் இதில கூட்டுன்னு சொல்லுவேன்.
வெளிய சொல்லிட்டு இருந்தாங்க. மாப்பிள்ளை உனக்கு சின்ன வயசு பிரண்டாமே? அவனை போலீஸ் ஸ்டேஷன்ல வச்சு ஒரு நாலு நாளைக்கு நல்ல லாடம் கட்ட சொல்றேன்.
அப்படியும் அவன் உன்னை தான் கட்டிக்குவேன் ஏதாவது சொன்னான்னு வச்சுக்கோ, அப்புறம் அதுக்கு மேல அவன் உயிருக்கு நான் பொறுப்பில்லை. என்ன எப்படி வசதி?”, என்று கூறியதும் இருந்த சிறு துணிச்சலும் மொத்தமாக காணாமல் போய்விட்ட்து அவளுக்கு.
“ஒரே ஒரு நாள்தான் கல்யாணத்துக்கு முன்னாடி. நீ அந்த மூணு லட்சத்தை கூட கொடுக்க வேணாம். நீயே வச்சுக்கோ. கொஞ்சம் யோசி. நாளைக்கு வரைக்கும் வெயிட் பண்றேன்.
நாளைக்கு வந்து பதில் சொல்லு. இன்னைக்கு உனக்கு ஹாப் டே லீவு கிளம்பு”, என்று அவன் மிக சாதாரணமாக கூறிவிட்டு மீண்டும் தன் வேலையை தொடர சென்று விட்டான்.
வடிவழகி தான் அதிர்ச்சியில் உறைந்து அங்கேயே நின்று விட்டாள். யாரோ அவன் அறைக்கு கதவை தட்டி விட்டு உள்ளே வரும் சத்தம் கேட்டதும் சுயநினைவுக்கு மீண்டவள் வெளியே இருந்து உள்ளே வந்த மேனேஜரை கூட கண்டுகொள்ளாமல் வேகமாக அங்கிருந்து புறப்பட்டாள்.
அவன் விடுமுறை கொடுத்திருக்கிறான் என்பதெல்லாம் அவளுக்கு தெரியவில்லை, இந்த நொடி இங்கு இருக்கக் கூடாது என்று எண்ணம் மட்டும் இருக்க வேக வேகமாக நடந்து வெளியேறினாள்.
எப்போதும் நிற்கும் பேருந்து நிலையத்தில் கூட நிற்காமல் நடந்து கொண்டே சிறிது தூரம் தள்ளி வந்தவள், எண்ணம் முழுக்க ஏதேதோ யோசனைகள் அவளால் நிதானமாக எதையும் யோசிக்க முடியாமல் போக ஒரு துளி கூட தைரியம் மனதில் இல்லாமல் போனது.
வெயில் சுளிர் என்று அடிப்பது கூட உணராது அந்த சாலையில் நின்றிருந்தாள். தூரத்தில் ஒலிப்பானின் சத்தம் கேட்டதும் சுயநினைவுக்கு வந்தவள், திரும்பி பாரக்க தூரத்தில் அந்த லாரி வந்து கொண்டிருந்தது.
அதை பார்த்ததும் ஒரு நொடி கூட யோசிக்காமல் அதன் முன் விழுந்து விடும் எண்ணத்தில் மெதுமெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தவளைத் தான் மதி இழுத்து பிடித்து கூட்டி வந்திருந்தாள் சரண்யா தேவியை சந்திக்க.
கேட்டுக் கொண்டிருந்த மதிக்கு தன் முன் நின்றிருந்தவளின் நிலை தெளிவாக புரிய அது கொடுத்த தாக்கம் சற்று அதிகமாகவே அவள் மனதில் இருந்தது.
இது போல் பல பிரச்சினைகளை இந்த மூன்றரை வருடங்களில் பலமுறை பார்த்திருக்கிறாள். ஆனால் ஒவ்வொரு முறையும் இப்படி ஏதாவது ஒரு பெண்ணின் அவல நிலையை கேட்கும்போது அது உயிர் வரை சென்று வலிக்கத்தான் செய்கிறது.
இப்போதும் அதே நிலையில் அவள் இருக்க, வடிவழகி கதறி அழுதுக் கொண்டிருந்தாள். இப்போது மதிக்கு அவள் கதறல் கோபத்தைத் தூண்ட, அந்த செல்வராஜ் கொன்றுவிடும் வெறி இருந்தது.
ஆனால் அவனுக்கு அத்தனை எளிதான தண்டனை கிடைக்கவும் அவள் விரும்பவில்லை. அவனுக்கான் தண்டனையை சரியாக வாங்கி தர தீர்மானித்தாள்.
அதே உறுதியுடன் வடிவழகியை தேற்ற எத்தனித்த நேரம் சரண்யா தேவியின் மகிழுந்து அந்த வீட்டின் வாசலில் வந்து நின்றது.
48 வயதிலும் 30 வயதுடைய தோற்றத்தில் இருந்த சரண்யா தேவி தன் கம்பீர நடையுடன் அந்த வீட்டின் வரவேற்பறைக்குள் நுழைந்ததும் அவள் அழுகை நின்றிருந்தது.
அழுது தடத்துடன் அமர்ந்திருந்த வடிவழகியை கண்டதுமே அவளுக்குத்தான் பிரச்சனை என்று புரிந்து கொண்டு அவள் அருகிலேயே அமர்ந்து கொண்டவர், வீட்டு பணியாளிடம் அவருக்கு தேநீர் வாங்கி அருந்தினார்.
தேநீரை அருந்தியபடி நிதானமாக மதியிடம் என்ன நடந்தது என்று அவர் விசாரிக்க, அவள் வழிவழகியின் தற்கொலை முயற்சியை பற்றி மட்டும் கூறிவிட்டு, மற்றதை அவளையே கூறுமாறு கூறினாள்.
சரி என்று அவளும் மதியிடம் கூறிய அனைத்து விஷயங்களையும் அவரிடமும் கூறி முடித்தாள். சரண்யா தேவி சில நிமிடங்கள் யோசனையின் பிடியில் இருந்தார்.
பின் நிதானமாக, “வடிவழகி தினமும் எல்லா பொண்ணுக்கும் ஏதோ ஒரு வகையில, ஏதாவது ஒரு பிரச்சனை இந்த உலகத்தில் வந்துகிட்டு தான் இருக்கு. எதுக்கும் தற்கொலை தீர்வு கிடையாது.
இந்த கேஸ் ஆரம்பிச்சா நிச்சயமா பெரிய பிரச்சனை வரத்தான் செய்யும். உன்னை இந்த கேஸ்ல நான் முழுசா இழுக்காம இருந்தா கூட உனக்கு பிரச்சனை வரதுக்கான வாய்ப்பு இருக்குதான்.
அப்ப அத நீ தைரியமா எதிர்கனுமே தவிர தற்கொலை பண்ணிக்க கூடாது. அதுல நீ உறுதியாக இருந்தா தான் நான் உதவி செய்வேன். என்ன சரியா?”
வடிவழகிக்கு இருவரும் மீதும் தோன்றி இருந்த நம்பிக்கை அவளுக்கு தைரியமும் தந்திருக்க, அது அவளை சரி என்று உறுதியாக கூற வைத்தது. அதன் பின் மீண்டும் அவர் பேச ஆரம்பித்தார்.
“அவன் இவ்வளவு தைரியமா பேசுறானா இதுக்கு முன்னாடி கூட அவன் நிச்சயமா வேற பொண்ணுங்க கிட்ட பிரச்சனை பண்ணி இருக்கணும்.
அது எதுலையும் மாட்டிக்காம இருக்கிறதால தான் உன்கிட்ட இப்படி பேசிறிக்கான். ஒரு ரெண்டு நாள் டைம் இருந்தா போதும். அங்க எத்தனை பெண்கள் இந்த மாதிரி பாதிக்கப்பட்டிருக்காங்களோ அவங்க எல்லாரையும் மொத்தமாக திரட்டி இங்க கூட்டிட்டு வரலாம்.
அப்படி வேற யாரும் இல்லனா கூட உன்னை இதிலிருந்து என்னால காப்பாத்த முடியும். தைரியமாக இரு. இந்த பிரச்சனைய கோட்டுக்கு கொண்டு போறதுல உனக்கு ஆட்சேபனை இருக்கா?”, என்று அவர் கேட்க,
அதற்கு, “இல்ல எனக்கு கோர்ட்டுக்கு வர முடியும்னு தோனல. இன்னும் பத்து நாள்ல கல்யாணம் இருக்கு. இப்போ இந்த பிரச்சனை அதிகமாச்சுனா அவர் கண்டிப்பா என்ன எதுவும் தப்பா நினைக்க மாட்டார் தான்.
ஆனா அவருக்கு இதனால் பெரிய பிரச்சனை வரும்னு அவன் சொன்னது எனக்கு பயமாக இருக்கு”, என்று அவள் தன் பயத்தை தெரிவிக்க,
“சரி உன்ன நான் இந்த கேஸ்குள்ள இழுக்காம அவனை எப்படி சமாளிக்க முடியும்னு நாம பார்க்கலாம். ஒன்னும் இல்ல நாளைக்கு உன்னை வந்து பார்க்க சொன்னான்ல. அதே மாதிரி அவனை போய் பாரு.
ஆனா அவன் கிட்ட மூணு நாள் மட்டும் டைம் கேளு. மூணு நாள் எல்லாம் நமக்கு தேவைப்படாது. இன்னைக்கு இல்ல நாளைக்குள்ளேயே அவன பத்தி எல்லாம் திரட்டிரலாம். அதனால நீ மூணு நாள் டைம் கேட்டுட்டு தைரியமா வீட்ல போய் ரெஸ்ட் எடு.
எதை பத்தியும் யோசிக்காத. உன் போன் நம்பர் என்கிட்ட இருக்கட்டும் நீயும் என் நம்பரும் மதி நம்பரும் வாங்கிக்கோ அதுபோக இன்னும் ரெண்டு பேரோட போன் நம்பர் தரேன். பிரச்சனைனா கூப்டு.
நாங்க எடுக்கலன்னா கூட அந்த நம்பருக்கு கால் பண்ணிடு. இப்ப நீ தைரியமா போ உனக்கு எதுவும் நடக்காது”, என்று கூறி அனுப்பி வைத்தார்.
மதி சென்று அவளை பஸ் ஏற்றி விட்டு திரும்பி வந்தாள். மதியும் சரண்யா தேவியும் திட்டங்கள் தீட்ட தொடங்கினர். அவர்களின் நம்பிக்கைக்கு உரியவர்கள் மூலம் செல்வராஜ் குறித்த அனைத்து தகவல்களும் திரட்டப்பட்டது.
அவன் குடும்ப நபர்களில் ஆரம்பித்து அவர்கள் செய்யும் வேறு தொழில்கள் அவன் நண்பர்கள் என அனைத்து தகவல்களும் அவர்கள் திரட்ட,
அதில் முக்கியமாக அவன் விசுவாசிகளுக்கு விசுவாசிகளாக சிலர் இருந்திருக்க, அவர்கள் பணத்திற்கு அதிக விசுவாசம் கொடுப்பவர்கள் என்பதை அறிந்து அவர்கள் மூலம் நிறைய தகவல்களை திரட்டி கொண்டனர்.
சரண்யா தேவி யூகித்தது போல் அவன் இதற்கு முன்பும் பல பெண்களிடம் இதே போல் நடந்திருக்கிறான் என்றும் பாதிக்கப்பட்ட பெண்களில் ஒரு பெண் தற்கொலை செய்து இறந்து விட்டாள் என்பதும் அவர்களுக்கும் தெரிய வந்திருந்தது.
அவள் மரணத்திற்கு காரணம் அந்த பெண்ணின் தாய் தந்தையருக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாக இருக்க, அதனையும் தேடி திரட்டி அவர்களுக்கும் நம்பிக்கை அளித்து அவர்களை வழக்கு பதிய வைத்திருந்தார் சரண்யா தேவி.
இதற்கிடையில் சரண்யா தேவி கூறியது போல் வடிவழகி மறுநாள் காலை சென்று அவனை மூன்று நாட்கள் காத்திருக்குமாறு கூறிவிட்டு வந்திருந்தாள். அவனுக்கு சந்தேகம் வராதுபடி தான்.
அவர்கள் இருவர் கூட்டணியில் இணைந்து கொண்ட இன்னும் மூன்று நபர்கள். இவள் கல்லூரி காலத்தில் உடன்படித்த அவள் நண்பனின் தந்தை அவர் ஒரு தனியார் துப்பறியும் முகவர், சரத் சந்திரன்.
அவரின் நம்பிக்கைக்குரிய திறமையான உதவியாளன் வாசு மற்றும் இவர்களுடன் அந்த பகுதியின் இன்ஸ்பெக்டர் மிகுந்த நேர்மையான மனிதர் ரமேஷ் கண்ணன்.
செல்வராஜன் சாதாரண மில்லின் முதலாளி மட்டுமல்ல அவன் அந்த பகுதி சட்டமன்ற உறுப்பினர் சிதம்பரத்தின் மகனும் ஆவான்.
அவனை கைது செய்து நடவடிக்கை எடுக்கும்போது எந்த பக்கத்தில் இருந்தெல்லாம் பிரச்சனை வரலாம் என்று அனைத்தையும் யூகித்து அதற்கேற்றார் போல் அவனை சரியாக வளைத்து பிடித்து கைது செய்திருந்தனர்.
அவன் தந்தை சிதம்பரம் அவனை ஜாமினில் கூட எடுக்க முடியாது படி மிக வலுவான ஆதாரத்துடன் அவனை கைது செய்திருக்க, வழக்கு நீதிமன்றத்திற்கு சென்றது. நீதிமன்றத்தில் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் வழக்கு நடந்தது.
சிதம்பரம் தன் சொத்துக்கள் அனைத்தையும் பறிகொடுத்து கூட மகனை மீட்டெடுக்கும் முயற்சியில் இருந்தார். உண்மையில் அவருக்கு மகன் மீது அத்தனை பாசம் இருந்தது. ஆனால் அவரால் அவனை ஜாமினில் கூட வெளிய எடுக்க முடியாத சூழ்நிலை.
வடிவழகி சரண்யா தேவியை சந்திக்கும் இரண்டு மாதங்களுக்கு முன், செல்வராஜ் தன் ஆசைக்கு இணங்க சொல்லி கட்டாயப்படுத்தியதன் காரணமாக தன் மானத்தை இழக்க விரும்பாத மாலினி என்ற பத்தொன்பது வயதே ஆன ஒரு சிறு பெண் தற்கொலை செய்து கொண்டாள்.
அந்தப் பெண்ணின் தற்கொலைக்கு காரணமானவன் யார் என்று அறிந்தும் தன் மகளின் மானத்தை காப்பாற்றும் பொருட்டு, அவள் பெற்றோர்களும் அமைதியாக இருந்திட, இப்போது அவள் இறந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு அவளுக்கான நியாயம் கிடைத்திருந்தது.
ஆம் செல்வராஜிற்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்திருந்தது. தான் பெற்ற மகனை காப்பாற்ற இயலாத அந்த தந்தை இதற்கு யாரெல்லாம் காரணம் என்று வெறிகொண்டு தேட ஆரம்பித்தார்.
தேடியவருக்கு முன் நின்றது சரண்யா தேவி, ரமேஷ் கண்ணா, கூடவே சரத் சந்தர் மட்டுமே. அதற்கு பின் இருந்த அந்த இரண்டு இளைஞர்களை மூத்தவர்கள் மறைத்துவிட,
ஆனால் அவர்கள் கெட்ட நேரம் சிதம்பரம் எப்படியோ தன் அதிகாரத்தை பயன்படுத்தி பின் இருந்த வாசு, மதி இருவரையும் கூட அடையாளம் கண்டு கொண்டார்.
அவருக்கு ஒரு பெண்ணின் மரணத்திற்காக தன் மகனை சிறையில் அடைத்தவர்களை இன்னொரு பெண்ணின் மரணத்தின் மூலம் பழிவாங்க வேண்டும் என்று கேடுகெட்ட எண்ணம் தோன்றியது. அதனால் அவர் தன் முதல் குறியை மதிக்கு தான் வைத்தார்.
அன்று கோயிலுக்கு தன் பெற்றோருடன் புறப்பட தயாராக இருந்த மதி, கடைசி நொடியில் தனக்கு ஒரு அவசர வேலை இருப்பதால் தான் மட்டும் வீட்டில் இருப்பதாக கூறினாள்.
ஆனால் அக்கா இல்லாமல் தாங்களும் வரமாட்டோம் என்று இரு தங்கைகளும் அவள் உடனே தங்கிவிட, பெற்றவர்கள் இருவரும் புறப்பட்டனர்.
“சரி நாங்க மட்டும் கோயிலுக்கு போயிட்டு வரோம். நீங்க இல்லாம நாங்க மட்டும் ஃப்ரீயா போயிட்டு வருவோம்”, என மகிழ்ச்சியுடன் கூறி சென்ற தந்தையையும் அவருடன் செல்ல முறைப்புடன் சென்ற தாயையும் கடைசியாக உயிரோடு கண்டது அந்த நொடி தான்.
அதன் பின் இருவரையும் பிணமாகத்தான் கண்டனர் மூன்று சகோதரிகளும்.