நிமிடங்கள் கரைந்து கொண்டிருக்க, கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் இறுக்கி கட்டிக் கொண்டு நின்றிருந்தனர்.
இருவருமே அந்த மோன நிலையில் இருந்து மீள முயற்சிக்கவில்லை. மனைவியின் முதுகில் படர்ந்து இருந்த தன் கையை மெல்ல தலைக்கு நகர்த்தியவன், தலையை தன் தோளோடு நன்றாக அழுத்திக் கொள்ள,
அடுத்த சில நொடிகளில் தன் தோளில் அவன் உணர்ந்த சூடு அவளின் தற்போதைய நிலையை உணர்த்தியது.
அவளை மெதுவாக விளக்கி நிறுத்தியவன், “ஃப்ரஷ் ஆகிட்டு வரேன்”, என்று கூறி குளியலறை நோக்கி சென்றான்.
தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு அவன் வெளியே வரும்போது அவனுக்கான குழம்பி மனைவி கையில் தயாராக இருந்தது.
ரகு அதனை கையில் வாங்கி குடிக்க ஆரம்பிக்க, மதி அவன் மறு கையை இழுத்து அதில் தன் தலை சாய்த்துக் கண்டாள்.
ஒருபுறம் மனைவியை தலை சாய்த்துக் கொண்டவன் குழம்பியை குடித்துக்கொண்டு தீவிர சிந்தனையில் இருந்தான்.
அடுத்து என்ன என்ற எண்ணம் மனதில் ஆழமாக ஓடிக்கொண்டிருக்க, கோப்பை காலியானதும் அதனை ஓரமாக வைத்தவன்,
மனைவியை தன்னிடம் இருந்து விலக்கி அமர்த்தி விட்டு, அவனும் அவளை பார்த்தவாறு நன்றாக திரும்பிக் அமர்ந்து கொண்டான். இப்போது நேருக்கு நேராக அவளிடம் “சொல்லு மதி”என்ற ஒரு வார்த்தையை மட்டும் கேள்வியாக அவள் முன் வைத்தான்.
காலை வரை அவளிடம் காட்டிய கோபம் முகம் இனி சுத்தமாக காட்டும் எண்ணம் அவனுக்கு இல்லை. அவள் மறைத்து விட்டாள், அந்த கோபம் அவனுக்கு அதிகமாக இருந்தது.
அதுவும் இத்தனை பெரிய விஷயத்தை தன்னிடம் மறைத்து விட்டாள் என்ற கோபம்.
ஆனால் இப்போது, அவளுக்கு இருக்கும் பிரச்சினையை சரி செய்ய வேண்டும் என்ற எண்ணம் முன் வந்து நிற்க அனைத்தும் தூரம் போய்விட்டது.
உண்மையில் கோபம் தீர்ந்து விட்டது என்று சொன்னால் சரியாக இருக்கும். மதி அனைத்தையும் சொல்ல தயாராக இருந்தாள்.
உண்மையில் அவளுக்கு முதலிலேயே ரகுவிடம் எதையும் மறைக்கும் எண்ணம் இல்லை தான். இருப்பினும் அவனிடம் சொல்ல முடியாமல் போக, அவனுக்கு தொடர்ந்து இருந்த வேலைகள் அலைச்சல் ஒரு காரணம் என்றால்,
தனக்காக நேரம் ஒதுக்கிய போது மட்டுமே அவன் தன் வேலைகளில் இருந்து விடுபட்டு சற்று ஆசுவாசமாக இருப்பான் அதனால் அந்த நேரத்தில் தன் பிரச்சனைகளை சொல்ல அவளுக்கு மனம் இல்லை என்புதும் ஒரு காரணம் தான்.
கூடவே தன்னால் சமாளித்து விட முடியும் என்ற தைரியமும் அவளிடம் இருந்ததும் ஒரு காரணம்.
அதுமட்டுமின்றி அவளுக்கு தேவையான பாதுகாப்பை அவனே அறியாமல் தன் குடும்பத்திற்கும் சேர்த்து அவன் வழங்கி இருந்தானே.
கணவன் தன்னையே பார்த்திருக்க, அவனிடம், “சொல்றேன் ரகு எல்லாத்தையுமே உன்கிட்ட சொல்லிடுறேன். இதுக்கு மேல மறைக்க என்னாலையும் முடியாது”, என்று தன்னை வாட்டி வதைக்கும் பிரச்சனைகளைப் பற்றிக் கூற ஆரம்பித்தாள்.
ஏழு மாதங்களுக்கு முன்பு….
மதி “The society” என்னும் ஆங்கில பத்திரிக்கையின் மதுரை கிளையில் பணியாற்ற தொடங்கி மூன்றரை ஆண்டுகள் நிறைவடைந்திருந்தது.
அங்கு அவள் பணியாற்றும் போது தனியாக குற்றவியல் மட்டுமல்லாமல் அனைத்து துறை சார்ந்த செய்திகளையும் திரட்டுவாள்.
அன்றுதான் ரகு மதுரையில் தன் படப்பிடிப்பைத் தொடங்கி இருந்தான். அன்றைய படப்பிடிப்பு குறித்த தகவலைத் திரட்ட அவள் அலுவலகத்தில் இருந்து அன்று அவளைத் தான் போக சொல்லி இருந்தனர்.
தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் அங்கு பயணித்துக் கொண்டிருந்தவள், ஒரு சாலையில் போக்குவரத்து சமிக்ஞை சிவப்பு நிறத்தைக் காட்ட அது பச்சை நிறமாக மாறுவதற்காக காத்து கொண்டிருந்தாள்.
அப்போது தூரத்தில் அவள் கண்ட ஒரு காட்சி அவளை பதற செய்தது.
அந்த சாலையில் பெரிதாக எந்த வண்டிகளும் செல்லவில்லை. மதியுடன் நின்றிருந்த சிலர் அந்த சிவப்பு விளக்குக்கு மரியாதை அளிக்காமல் அந்த சாலையை தாண்டி சென்று கொண்டிருந்தனர்.
அப்போதுதான் எதிர்ப்புறம் இருந்த ஒரு பெண் தூரத்தில் லாரி வருவதை கண்டும் மெதுவாக சாலையை கடந்து வந்து கொண்டிருந்தாள். அவள் வேகமாக நடந்து விட்டாள் அந்த வண்டியில் இருந்து தப்பிவிடலாம்.
ஆனால் அவள் மெதுவாக நடந்து வருவது அவள் நிச்சயம் தற்கொலைக்கு தான் முயற்சிக்கிறாள் என்பதை உணர்த்தியது. அங்கு இருந்த ஒரு சிலருக்கு அந்த காட்சி பெரிதாக தெரியவில்லை.
அந்த சாலை சற்று சிறியதாக இருந்ததால் மதிக்கு அவள் முகத்தில் இருக்கும் பாவனைகள் தெளிவாகவே தெரிய அதனை வைத்து அவள் என்ன செய்ய முயற்சிக்கிறாள் என்பதை அறிந்து கொண்டாள்.
உடனே தன் வண்டியை இயக்கி அவள் அருகே வேகமாக சென்றவள், அவளை நெருங்கும் சமயம் வேகத்தை குறைத்து அவளைப் பிடித்து இழுத்துக்கொண்டு வண்டியுடன் ஒரு ஓரமாக நின்று விட்டாள்.
அவர்கள் கடந்த அடுத்த இரண்டு நொடிகளிலேயே அவர்களை கடந்து சென்றுவிட்டது அந்த லாரி. அப்போதுதான் சாலையை கடக்க காத்திருந்த ஒரு சில நபர்கள் அவள் செய்ய இருந்ததை உணர்ந்து அந்த பெண்ணை திட்டி விட்டு அங்கிருந்து சென்றனர்.
நல்லவேளையாக அங்கு எந்த போக்குவரத்து காவலர்களும் அந்த நேரம் இல்லை.
சாலையின் ஓரமாக இருந்த கடைகளில் இரண்டு மதிய நேரம் என்பதால் பூட்டி இருக்க, ஒரு கடையின் நிழலில் அந்த பெண்ணை அழைத்துச் சென்று அமர்த்திய மதி அவளுக்கு தண்ணீர் கொடுத்தாள்.
ஆனால் அவள் தண்ணீரை தட்டி விட்டு “என்னை எதுக்கு காப்பாத்தினீங்க. உங்களை நான் காப்பாத்த சொன்னேனா?” என்று அவள் காப்பாற்றிய நொடியில் இருந்து பாடிய பாட்டையே பாடிக் கொண்டு இருக்க, மதி அதைக் கண்டு கொள்ளவே இல்லை.
ஆனால் மதி அவளை அமைதிப் படுத்தும் விதமாக அவள் தலையை தடவி விட, அவள் கையை மீண்டும் தட்டிவிட்டு இப்போது ஓ என்று அழ ஆரம்பித்தாள்
அந்தப் பெண்ணின் அழுகை நிற்க சில நிமிடங்கள் தேவைப்பட்டது சுற்றி பெரிதாக மனிதர்கள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது.
அங்கு இருந்ததே நான்கைந்து கடைகள்தான் அதில் இரண்டு பூட்டி இருக்க, அதன் அருகே அமர்ந்திருந்ததனால் சற்று தொலைவில் இருந்த கடைகளில் இருக்கும் மனிதர்களும் இவர்களை வேடிக்கை பார்த்தார்களே தவிர அருகில் வரவில்லை.
இவர்கள் எதுவும் பேசிக் கொண்டாலும் அது அவர்களுக்கு கேட்காத தூரத்தில் தான் இருந்தனர்.
அதனால் மதி அவளை சமாதானப்படுத்தி ஒரு வழியாக அவளிடம் பேச எத்தனிக்க, ஆனால் அவள் தன்னை பற்றி எதுவும் கூறத் தயாராக இல்லை.
ஆனால் மதி அவளை ஊக்குவிக்கும் விதமாக, “எந்த பிரச்சினையா இருந்தாலும் இப்படி தற்கொலை பண்ணிக்க கூடாதுமா?எதுவா இருந்தாலும் பேஸ் பண்ணனும்”, என்று கூற,
அதற்கு அவள், “எதை ஃபேஸ் பண்ண சொல்றீங்க. ஒருத்தன் என் மானத்தை கூறு போட்டு விக்கிறேன்னு சொல்றான். அவன பேஸ் பண்ண சொல்றீங்களா.
இவன மாதிரி ஆட்களுக்கு யாராலும் தண்டனை வாங்கி தர முடியாது. சட்டம் கூட அவங்க முன்னாடி கைகட்டி தான் நிக்குது.
இருக்க சூழ்நிலையில என் குடும்பத்தை காப்பாத்திறதா என் மானத்தை காப்பாத்தறதான்னு தெரியாம தவிச்சுக்கிட்டு இருக்கேன்.
இப்படி பாடு படறதுக்கு தற்கொலையே மேல்ன்னு தான் சாக துணிஞ்சிட்டேன். உங்களை யாரு என்னை காப்பாத்த சொன்னது”, என்றாள்.
மதிக்கு இப்போது தெளிவாக அவள் சூழ்நிலை புரிந்தது. யாரோ ஒரு பணத் திமிர் பிடித்தவனோ இல்லை சட்டத்தை வளைக்கக் கூடிய ஒருவனோ இவளிடம் விளையாடுகிறான்.
மதி குற்றவியல் தேர்ந்தெடுத்து பத்திரிக்கைமில் பணியாற்றுவதே முக்கியமாக பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் நடக்கும் அநீதிகளை தடுக்கும் எண்ணத்தில் தான்.
அப்படி இருக்கையில் இப்படி ஒரு பெண் வந்து தன் முன் நிற்கும்போது அவளை அப்படியே விட்டுவிடுவாளா என்ன? அடுத்து என்ன? என்று யோசிக்க ஆரம்பித்தாள்.
முதலில் இவளிடம் என்ன பிரச்சனை என்பதை தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணியவள் இவளுக்கு முதல் தேவை நம்பிக்கை தான் என்பதை அறிந்து கொண்டவள் தன் தோழியிடம் அழைத்துச் செல்ல முடிவெடுத்தாள்.
அந்த பெண்ணிடம் எப்படி எப்படியோ பேசி அவளை தன்னுடன் அழைக்க, அந்த பெண் இவளை நம்பலாமா இல்லையா என்று குழப்பத்தில் இருந்தாள்.
ஆனால் எப்படியோ சமாதானப்படுத்தி மதி அவளை அழைத்துச் சென்ற இடம் தன் தோழியின் வீடு.
மதியின் தோழி சரண்யா தேவி அவருக்கு வயது 48. அவர் ஒரு வழக்கறிஞர். முக்கியமாக அவர் பெண்கள் நீதிமன்றத்தில் தான் வழக்குகள் நடத்துவது.
மதிக்கு இந்த மூன்றரை ஆண்டுகளில் எப்படி பல தீயவர்களின் பக்கங்கள் தெரிய வந்ததோ, அதேபோல் சில நல்ல மனிதர்களின் நட்புகளும் கிடைத்திருந்தது அப்படி ஒருவர்தான் இந்த சரண்யா தேவி
போகும் வழியிலேயே அவருக்கு அழைத்து பேசியிருக்க, அவர் வீட்டிற்கு சென்று தான் வரும்வரை காத்திருக்குமாறு கூறினார்.
மதி அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு அவர் வீட்டிற்கு செல்ல அங்கு இருந்த பணிப்பெண் அவர்களை வரவேற்று வரவேற்பறையில் அமர்த்தி, அவர்களுக்கு தேவையான குளிர்பானத்தையும் கொடுத்துவிட்டு அங்கிருந்து நகன்றுவிட்டார்.
இப்போது மதி அவளிடம் அவள் பெயர் என்ன என்று விசாரிக்க, அவன் தன்னை வடிவழகி என அறிமுகம் செய்துகொண்டாள்.
அதன் பின் மதி அவளைப் பற்றி வேறு எதுவும் கேட்காமல், சரண்யா தேவி பற்றி நிறைய கூறினாள்.
தன்னுடைய அலைபேசியில் கூகுளின் உதவியுடன் சரண்யா தேவி எதிர்த்து நின்று மனிதர்களும், அவர் எடுத்துக் கொண்ட வழக்குகளும் அதில் அவர் வெற்றி கண்டதையும் காண்பித்தாள்.
இப்போது அந்த பெண்ணுக்கு முகத்தில் ஒரு தெளிவும் ஒரு நம்பிக்கையும் தோன்றியது. அதன்பின் தான் மதி என்ன பிரச்சனை என்பதை விரிவாக கேட்க ஆரம்பித்தாள்.
வடிவழகி நான்கு வருடங்களுக்கு முன் பத்தாம் வகுப்பு மட்டும் முடித்துவிட்டு வீட்டின் வறுமை காரணமாக எஸ்.எஸ். ஆயில் மில்ஸ்ல் பணிபுரிந்து வருகிறாள்.
ஒன்றரை மாதங்களுக்கு முன்பாக அவள் சிறுவயதின் தோழனுடன் இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
மாப்பிள்ளை வீட்டில் இவளுக்கு என்று நகைகள் எதுவும் போட சொல்லி கேட்கவில்லை என்றாலும் திருமணத்தை நடத்துவதற்கு சிறுதேனும் பண தேவைப்படும் தானே.
இவள் வேலை செய்யும் இடத்தில் இரண்டு வருடங்கள் தொடர்ந்து வேலை செய்தவர்களுக்கு ஐம்பதாயிரம் முதல் மூன்று லட்சம் வரை கடன் கொடுக்கும் வழக்கம் இருந்தது.
அதன்படி மூன்று லட்சம் தொகையை கடனாக பெற்று அதில் மண்டபம் முன்பதிவு செய்வது, சமையலுக்கான முன்தொகை என்று பலவகையில் செலவழித்திருந்தார்கள்.
இப்போதும் கல்யாணத்திற்கு பத்து நாட்களே இருக்கும் நேரத்தில் இன்றும் நாளையும் மட்டும் பணிக்கு சென்று விட்டு அடுத்த நாளிலிருந்து விடுமுறை பெற்றுக் கொள்ளலாம் என்று நினைத்து பணிக்கு சென்றிருந்தாள்.
அதேபோல் மேலாளரிடம் விஷயத்தை கூற அவரும் ஒத்துக் கொண்டார்.
சிறிது நேரத்திற்கு பின் வேலை செய்து கொண்டிருந்தவளை மீண்டும் மேலாளர் அழைப்பதாக கூற, அங்கு சென்றபோது, அவர் முதலாளி அவளிடம் பேச விரும்புவதாக கூறினார்.
என்றைக்கும் கீழ்நிலை வேலை ஆட்களை சந்திக்க விரும்பாத முதலாளி, இன்று தன்னை சந்திக்க விரும்புவது ஏன் என்று குழப்பத்துடன் அந்த அறைக்கு சென்றவளுக்கு பேரிடியை இறக்கினான் அந்த மில்லின் தற்போதைய முதலாளி செல்வராஜ்.
அவள் உள்ளே சென்றதும் செல்வராஜ் அவளிடம் எதார்த்தமாக அவள் எதற்காக விடுமுறை எடுக்கிறாள்? திருமணம் என்றால் அவள் வேறு ஊருக்கு செல்ல நேருமா? போன்ற கேள்விகள் எழுப்ப, அவளும் அனைத்தையும் சாதாரணமாக எண்ணிக் கொண்டு அதற்கு ஏற்றவாறு பதில் கூறினாள்.
கடன் வாங்கிய போதே தொடர்ந்து வேலை செய்வாள் என்று உறுதி செய்தபின் தான் கடன் தந்தனர் என்பது அவளுக்கு அந்த சமயம் நினைவில்லை போல.
“ஆமா கல்யாணம் ஆயிடுச்சுன்னா அடுத்து பிள்ளை பேறு அது இதுன்னு வந்துடுமே, அப்புறம் எப்படி நீ வேலைக்கு வருவ. 30 லட்சத்தை எப்படி அடைப்ப?” என்று அவன் கேட்க
“30 லட்சமா?சார், நான் மூணு லட்சம் தாங்க வாங்கி இருக்கேன். அது இன்னும் ஒரு வருஷத்துல அடைச்சிடுவேன். அவுங்களும் அதை யோசிச்சு சீக்கிரம் குடுத்திருவோம்னு சொல்லிருக்காங்க”,
“மூணு லட்சமா? என்ன கனவு கண்டிட்டு இருந்தியா?30 லட்சம் கையெழுத்து போட்டு வாங்கிட்டு போயிருக்க”,
“சார், இல்லை நான் மூணு லட்சம் தான் வாங்கினேன். மேனேஜர் சார் கிட்ட வேணா கேட்டு பாருங்க சார். பேப்பர் கூட அவர்கிட்ட தான் இருக்கு. அதுல மூணு லட்சம் தான் இருந்துச்சு”, என உறுதியாக கூறினாள்.
அந்த கடன் பத்திரம் தமிழில் தான் இருந்தது அதனால் எளிதாகவே அவளால் படிக்க முடிந்தது. மூன்று லட்சம் என்று தெளிவாக இருந்த எழுத்துக்களை படித்த பின் தான் அவள் அதில் கையெழுத்திட்டிருந்தாள்.
அதனால் தான் இவன் இப்படி கேட்கவும் உறுதியாக அவன் முன் பதிலளிக்க முடிந்தது.
ஆனால் இப்போது அவன் பேச்சு வேறு விதமாக மாறியது, “மூன்று லட்சம் நீ கையெழுத்துப் போட்டப்ப. ஆனால் அதை முப்பது லட்சமா மாத்த என்னால முடியும் என்ன நம்பிக்கை இல்லையா வடிகழகி”, என்று அவன் கேட்க