மலர்ந்த புன்னகை வாடாமல் வீடு வந்து சேர்ந்தான் பாரிவேந்தன், அலக்நந்தாவை உடனே திருமணம் செய்து கொள்ள வேண்டும் அதற்க்கு என்ன வழி என்று இப்பொழுதே சிந்திக்க தொடங்கிவிட்டான்.
பார்க்கிங்கில் காரை விட்டு இறங்கியவன் வீட்டிற்குள் நுழைகையில் பத்மாவின் உயர்ந்த குரலைக் கேட்டுக்கொண்டே ஹாலில் நுழைந்தான்.
“ஏன் அப்படி சொன்னீங்க சித்தப்பா??”.
“நீ வந்ததுல இருந்து அதையே கேக்குற நானும் சொல்லிட்டேன் அப்படி எதையும் நான் சொல்லல” என்றார் மகேந்திரன்.
“நீங்கச் சொல்லாம அந்த மேனேஜர் எப்படி சொல்லுவான், என் புருஷன் எந்த முடிவையும் தனியா எடுக்கக் கூடாதுனு ஆர்டர் வந்துருக்குனு” என்க.
“அவர்கிட்ட கேட்டா அவர் எண்ணப்பண்ணுவாரு, என்கிட்டே கேளு ஏன்னா சொன்னது நான்” என்று தந்தையின் நேர் எதிரே இருந்த சோபாவில் அமர்ந்தான்.
“என்ன சொன்ன மேனேஜர்கிட்ட” என்றவளிடம்.
“எந்த விஷயமா இருந்தாலும் இனிமே என்கிட்டயும் சச்சி கிட்டயும் கேக்காம முடிவு எடுக்கக் கூடாதுனு சொன்னேன்”.
“இதுல எதுக்கு சச்சிய கொண்டு வர அவன் தான் எதுவும் வேண்டாம்னு போய்ட்டானே” என்று அவள் கூற திரும்பித் தந்தையை பார்த்தவன் விழிகளில் அனல் பறந்தது.
“பத்மா நீ பேசவேண்டியத மட்டும் பேசு, அவன் ஆயிரம் தப்பு பண்ணியிருந்தாலும் என் புள்ள, அப்படிலாம் என் புள்ளய விடறதா இல்ல, நான் சம்பாதிச்சது எல்லாமே என் புள்ளைங்களுக்கு தான் அவனை வரக் கூடாது கேள்வி கேட்டக்கக்கூடாதுனு நீ என்ன சொல்றது??” என்றவரை அதிர்ச்சியோடு பார்த்து நின்றாள் பத்மா.
“நானும் இந்த வீட்டு பொண்ணுதான்”.
“இல்லனு நாங்க எப்போ சொன்னோம்” என்றவனை பார்த்தவள் “அப்போ எனக்கும் இந்தச் சொத்துல பங்கிருக்கு, எனக்கு இருக்குன்னா என் புருஷனுக்கும் இருக்கு அவரை முடிவு எடுக்கக் கூடாதுனு நீ எப்படி சொல்லலாம்” என்று அவள் கத்தி பேசக் காதைக் குடைந்து கொண்டான்.
“எவ்ளோ திமிரு இவனுக்கு, என்னோட சொத்தைக் குடுக்க மாட்டறாங்கன்னு கேஸ் போட்டு அப்பன் புள்ளைங்க எல்லாரையும் உள்ள தள்ளனும்” என்று மனதிற்குள் அவள் வன்மம் வளர்க்க.
“என்ன சொன்ன” என்றாள் பத்மா புதிதாக முளைத்த பயத்துடன்.
“மனதில் நினைத்தது எப்படி தெரியும், அதோடு வக்கீலைப் போய்ப் பார்த்ததை யார் கூறியிருப்பார்கள்” என்று குழப்பம் சூழ்ந்தது.
“என்ன சொல்ற பாரி கேஸ் குடுக்க போறாளா” என்று வந்தார் சுமதி, இத்தனை நேரம் ஆபீஸ் விஷயம் பேசுகிறார்கள் நாம் இடையில் போகக் கூடாது என்று தள்ளி நின்றார்.
இவளை மகளைப் போல வளர்த்த தங்களுக்கே துரோகம் செய்கிறாளா என்று ஆத்திரமும் வேதனையும் ஒருங்கே எழுந்தது அவருக்கு.
“அம்மா நீங்க இருங்க ஒன்னும் இல்ல” என்றவன் அவரைத் தன் அருகில் பிடித்து அமர்த்திக்கொண்டான், “உக்காருங்க” என்று பத்மாவிடம் கூறியவன்.
“ஒரு விஷயம் நீங்கத் தெளிவா புரிஞ்சிக்கோங்க பெரியப்பா நம்மள விட்டுப் போகும்போது இப்போ இருக்குற எந்தச் சொத்தும் கிடையாது, ஊர்ல இருக்குற அந்தப் பெரிய வீடும் நாற்பது ஏக்கர் தென்னந்தோப்பும் மட்டும்தான்”.
“என் அப்பா லோன் போட்டு ராப்பகலா தனி ஆளா கஷ்டப்பட்டு சேர்த்தது இப்போ இருக்குற எல்லாமே, ஏன்! இந்த வீடு உள்ப்பட, என்னைக்கு உங்களுக்குக் கல்யாணம் ஆச்சோ அப்போவே ஊர்ல இருக்குற நாற்பது ஏக்கர் தென்னந்தோப்பும் உங்க பேருக்கு மாத்தியாச்சு”.
“அதுல இருந்து நாங்க எந்தப் பங்கும் எடுக்கல ஆனா வீடு… அது நம்மோட பூர்விக வீடு தாத்தா பாட்டி அப்பா பெரியப்பா எல்லாரும் வளர்ந்து வாழ்ந்த வீடு அத விக்க விருப்பம் இல்ல, இன்னொரு வீட்டுக்குக் கல்யாணம் பண்ணி போன உங்களுக்கு மொத்தமா கொடுக்கவும் முடியாது”.
“அதுல உங்களுக்குப் பங்கு இருக்கு வீடு வேண்டாம் பணம் வேணும் சொன்னீங்கன்னா இப்போ கூடச் செக் கொடுக்குறேன் உங்க பங்குக் காசை, அப்புறம் உங்கள சொந்த பொண்ணு மாதிரி என் அம்மாவும் அப்பாவும் வளர்த்தாங்க உங்க கல்யாணத்துக்கு செஞ்சதுக்கு எதுக்குமே அவங்க கணக்கு பாக்கல, நகை கார் பணம் சிட்டில வீடு எல்லாமே குடுத்தாங்க”.
“ஆனா நீங்க அவங்க முதுகுல குத்த பாக்குறீங்க, எங்க போய் என்ன கேஸ் போட்டாலும் இந்தச் சொத்துல அஞ்சு பைசா கிடைக்காது, ஏன்னா இது பூர்வீக சொத்து இல்ல மகேந்திரன் அப்படிங்கற தனிப்பட்ட மனுஷனோட உழைப்பு, இதுல உங்களுக்கே பங்கு இல்லாதப்போ உங்க கணவருக்கு எப்படி இருக்கும்”.
“எங்க கம்பெனில எடுக்குற எந்த முடிவும் எனக்கும் என் அண்ணனுக்கும் தெரிஞ்ச அப்பறம் தான் எடுக்கணும் இதுக்கு ஒதுக்கமாட்டேன்னு சொல்ல வேண்டிய உரிமையும் அதிகாரமும் அவருக்கு மட்டுமே அவர் சொல்லட்டும் நாங்க வெலக்கிக்கிறோம்” என்றான் தந்தையை காட்டி.
மகன் பேசுவதை ஆச்சர்யமாகப் பார்த்திருந்த மகேந்திரன் மனைவியின் கவலையான முகத்தையும் திரும்பிப் பார்த்துவிட்டு “நான் சம்பாரிச்ச எல்லாமே என் பிள்ளைகளுக்குத் தான் இதுல எந்த முடிவையும் எடுக்க அவங்களுக்கு உரிமை இருக்கு, இனிமே அவங்க சொல்றமாதிரி தான் எல்லாமே நடக்கும்” என்றவர்.
“சுமதி கோவிலுக்குப் போயிட்டு வரலாம் வாம்மா” என்க கணவனுடன் எழுந்துவிட்டார் அவர், இருவரும் அவர்களின் அறைக்குள் செல்லப் பத்மாவை திரும்பிக் கூடப் பார்க்காமல் தன் அறைக்குச் சென்றுவிட்டான் பாரி.
கோவிலுக்குச் சென்று வந்த சுமதி ஏதோ யோசனையிலே இருந்தார், பாரி மீண்டும் வண்டலூர் சென்றுவிட்டான்.
“என்ன ஆச்சு ? இன்னும் பத்மா பேசுனதையே யோசிக்கிறியா” என்றார் மகேந்திரன்.
அவர் சொல்லுவதும் சரியாகப்பட சம்மதமாகத் தலை ஆட்டினார் சுமதி, அன்று மாலையே மகனிடம் கூடக் கூறாமல் சம்பத்தின் வீட்டில் போய் நின்றார்.
வாசலில் நின்றவரைப் பார்த்து ஒரு நொடி ஒன்றுமே புரியவில்லை சூர்யபிரியாவுக்கு, எப்பொழுதுமே வருகிறேன் என்று கூறிவிட்டே வருவார், அதிலும் அதிகமாக வந்ததில்லை இன்று எந்த முன்னறிவிப்புமின்றி வந்து நிற்கிறார்.
“வாங்க ஆண்ட்டி” என்றவள் வழிவிட உள்ளே நுழைந்தவர் ஹாலில் நின்றார் தயங்கி “வாங்க ஆண்ட்டி உக்காருங்க” என்று அவரை அழைத்துச் சென்று அமரவைத்தாள்.
“சொல்லாம திடீர்ன்னு வந்து நிக்குறேன் நீ ஒன்னும் தப்பா நெனச்சுக்காதமா, தோணுச்சு உடனே கிளம்பிட்டேன்” என்க.
“ஐயோ என்ன ஆண்ட்டி நீங்க…. உங்கள தீடிர்ன்னு பாக்கவும் கொஞ்சம் அதிர்ச்சி ஆயிட்டேன் ஏதும் பிரச்னையா இருக்குமோனு வேற ஒன்னும் இல்ல” என்றவள் “இருங்க ஆண்ட்டி” என்று அவருக்குக் குடிக்க டீக்கொண்டுவந்தாள்.
பிறகு சுமதியின் அருகில் அமர “நந்தா எப்போ வருவா” என்றவரின் கேள்வியில் குடித்துக்கொண்டிருந்த டீ புரை ஏறியது பிரியாவிற்கு “பாத்துமா” என்ற சுமதி அவளின் முதுகில் தடவி கொடுத்துக்கொண்டே “யாருமே சொல்லல என்கிட்டே”.
“இந்தச் சம்பத் அன்னைக்கு வீட்டுக்கு வந்துட்டு போனான் அப்போகூட சொல்லல” என்க அவருக்கு என்ன பதில் கூற என்று கூடத் தெரியவில்லை அவளுக்கு.
“அப்படியில்ல ஆண்ட்டி நந்தா என்ன நெனைக்குறானு இன்னும் எங்களுக்குச் சரியா தெரியல, ஆனா அண்ணா ரொம்ப தீவிரமா இருக்காங்க அவங்களுக்கு நந்தாவை அவ்ளோ பிடிக்குது” என்க.
“தெரியும்” என்றார் சிரித்துக்கொண்டே.
“அதுனாலதான இந்த நேரத்துல கெளம்பி வந்துருக்கேன் என் மருமகளை பாக்க, அவளுக்கும் நிச்சயம் என் பையன பிடிக்கும் இல்லனா இவ்ளோ உறுதியா நிக்க மாட்டான், விருப்பம் இல்லாத பொண்ணு பின்னாடி போறவன் இல்லையே அவன்” என்றார் சுமதி.
“பாரி எப்போ வருவான்” என்க.
“தெரியல ஆண்ட்டி அவர் வரதும் தெரியாது போறதும் தெரியாது ஆனா இங்க இருந்தா காலைல சரியா ஏழு மணிக்கு இங்க வந்துடுவார், நந்தா கையால டீ குடிக்க” என்றாள் பிரியா.
“அப்படியா” என்று அவர் ஆச்சர்யமாகக் கேக்க “ம்ம் ஒருவார்த்தை கூடப் பேசமாட்டார் அவகிட்ட, டீ வாங்கிட்டு பால்கனில போய் நின்னுப்பார் குடிச்சுட்டு போயிடுவார், ஆனா சரியா அந்த நேரத்துக்கு வந்துடுவார்”.
“ஹ்ம்ம்” என்று தலை ஆட்டியவர் “காலைல எத்தனை மணிக்கு நந்தா வருவா” என்க.
“காலைல ஆறு மணிக்கு மேல வந்துடுவா” என்றாள் பிரியா.
“சரிம்மா நான் மேல வீட்ல போய்த் தூங்குறேன்” என்று சுமதி எழுந்துகொள்ள அவரைக் கட்டாயப்படுத்தி இரவு உணவு கொடுத்துத் தங்கள் கையில் இருக்கும் பாரிவேந்தனின் வீட்டின் சாவியை கொடுத்து அனுப்பினாள்.
சம்பத்தை அழைக்க அவன் எடுக்கவில்லை, சிறிது நேரத்தில் சென்று குழந்தையுடன் படுத்தவள் உறங்கிவிட்டாள் சுமதி வந்தது யாருக்கும் தெரியவில்லை.
இரவு இரண்டு மணிபோல வீட்டிற்கு வந்தவன் கதவைத் திறந்துகொண்டு தன் அறைக்குச் சென்று அப்படியே கட்டிலில் விழுந்தான்.
“அழகி சீக்கிரம் வந்துடுடி உன்ன ரொம்ப தேடுது” என்று தலையணையை அணைத்துக்கொண்டு உறங்கினான்.
அதிகாலை எழுந்துகொண்ட சுமதி தயாராகி கீழே சென்றார், அழைப்புமணி ஓசையில் எழுந்த பிரியா மணி பார்க்க ஆறுமணியை நெருங்கிக் கொண்டிருந்தது.
“நந்தா வந்துட்டாளா” என்று கதவின் அருகில் வந்தவளுக்கு சுமதியின் நினைவு வர “ஐயோ அவர்கிட்ட சொல்லவே இல்லையே” என்று தோன்றியது.
நந்தா வருவதற்கு முன்னே வந்து நின்றவரைப் பார்த்தவள் விழி விரித்து நிற்க “என்னடா தூக்கத்தை கெடுத்துட்டேனா” என்றார் சங்கடத்தோடு.
“ஐயோ பிரியா நேத்துல இருந்து ஏன் இப்படி பண்ற அவங்க என்ன நினைப்பாங்க, என்ன பழக்கம் இது மரியாதை இல்லாம” என்று எண்ணியவள்.
“ஒரு ரெண்டு நிமிஷம் ஆண்ட்டி வந்துடுறேன்” என்று அவசரமாக அறைக்கு ஓடினாள்.
அனைத்தும் முடித்துக் குளித்துக் குழந்தையும் விழித்துக்கொள்ள அவனுக்கும் உடைமாற்றி மின்னல் வேகத்தில் அனைத்தையும் தீர்த்துச் சம்பத்தை உலுக்கி எழுப்பி அவனிடம் அனைத்தையும் கூற, உறக்க கலக்கத்தில் இருந்தவன் பாதி புரிந்தும் பாதி புரியாமலும் அமர்ந்திருந்தான்.
குழந்தையுடன் ஹாலுக்கு வந்தவள் “சாரி ஆண்ட்டி ஒரு நிமிஷம் காபி போடுறேன்” என்று அடுக்களை உள் செல்ல “பிரியா இங்க வாம்மா” என்ற சுமதி.
“நான் என் மறுமவ கையால காபி குடிக்க வந்திருக்கேன் நீ வந்து என்கூட பேசிட்டு இரு, நந்தா வந்ததும் நான் யாருனு சொல்லாத” என்க வாசலில் நிழலாடியது.
பிரியா “வா நந்தா” என்க உள்ளே நுழைந்தாள் அலக்நந்தா எந்த ஆடம்பரமும் இல்லை ஊதா நிறத்தில் சுடிதார் அணிந்து முடியை மொத்தமாக மேலே கட்டி வைத்திருந்தாள், காதில் கழுத்தில் கையில் ஆபரணம் இல்லை அழகாகச் சிரித்துக்கொண்டே உள்ளே நுழைந்தாள்.
“அத்தி” என்று மழலை குரலில் அழைத்து அவளுக்கு நேரே கைகளைத் தூக்கிக்கொண்டு ஓடியது குழந்தை, அள்ளிக்கொண்டவள் “தங்க குட்டி காலையே எழுந்து என்ன பண்றீங்க” என்று அவன் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் பதித்தாள்.
மகனுடன் அவளை நிறுத்திப் பார்த்த சுமதிக்கு பரம திருப்தி, சுமதியை பார்த்து அவள் புன்னகைக்க அவரும் சிரித்துக்கொண்டே “பேர் என்னம்மா” என்று கேட்க அரை வாயிலில் வந்து நின்றான் சம்பத்.
“அலக்நந்தா ஆண்ட்டி” என்றவள், “குட் மோர்னிங்ன்னா” என்று அவனிடம் கூற “குட் மோர்னிங் மா” என்று புன்னகைத்தவன் மெதுவாகச் சுமதியிடம் பேச்சுக்கொடுத்தான்.
ப்ரியாவை பார்த்துக்கொண்டே அடுக்கலைக்குள் நுழைந்தாள் அலக்நந்தா, பின்னேயே உள்ளே சென்ற ப்ரியா “நந்தா அவங்களுக்கு சூப்பரா ஒரு காபி” என்க.
“ஹ்ம்ம் சரி” என்ற நந்தா “என்ன சமைக்கட்டும்” என்று கேட்க.
“ஒரு நிமிஷம்” என்று மீண்டும் சுமதியிடம் ஓடினாள் பிரியா “என்ன ஆச்சு இவங்களுக்கு” என்று எண்ணியவள் தன் வேலையைப் பார்க்க.
“ஆண்ட்டி காலைல நம்ம வீட்லயே சாப்பிடுங்க” என்றனர் கணவன் மணைவி இருவரும்.
“வேண்டாம்டா நான் வீட்டுக்குப் போறேன் அங்க போய்ச் சாப்ட்டுக்குறேன்” என்க.
“அதெல்லாம் முடியாது இங்க சாப்பிட்டு அப்புறமா போங்க, நந்தா சூப்பரா சமைப்பா” என்றவளிடம்.
“பாரி இங்க சாப்பிடுவானா” என்றார் ஆவலாக.
“எப்போவாவது, அதும் இங்க சாப்பிட மாட்டார் நான் மேல குடுத்து விடுவேன்” என்று முடிக்க அவருக்கான காபியோடு வந்தாள் நந்தா, மிகவும் ரசித்துக் குடித்தார் சுமதி.
நந்தாவின் மீது அவர் பார்வை பதிந்து மீண்டது, அடுப்பில் ஒரு கண்ணும் வாயிலில் ஒரு கண்ணுமாக நின்றிருந்தாள்.
“சரியா டைமுக்குதான் வருவானா இப்போ வந்தா என்ன” என்று கரித்துக்கொட்டியது வேறு யாரும் அல்ல அவனின் தாயே.
சிறிது நேரத்திலே தலைக்கோதிக்கொண்டே உள்ளே நுழைந்தான் பாரிவேந்தன், அத்தனை நேரம் வாயிலில் விழி பதித்து நின்றவள் இமைகள் தாழ்ந்துகொள்ள கன்னங்கள் வண்ணம் பூசியது.
விழிகளில் அவளை நிறைத்துக்கொண்டவன் ஹாலில் நுழையச் சோபாவில் அமர்ந்து அவனையே நோட்டம் விட்டுக்கொண்டிருந்தார் சுமதி.
ஒரு நொடி கண்களில் வந்துபோன ஆச்சர்யத்தை மறைத்துக்கொண்டவன் அசராமல் அங்கே சென்று அமர்ந்துகொண்டான்.
அவனுக்கான இஞ்சி ஏலக்காய் தேநீரோடு வந்தவள் அவன் அருகில் வந்து நீட்ட, அசையாமல் அப்படியே அமர்ந்திருந்தான் விழிகள் அவளிலிருந்து விலகவில்லை.
“எனக்குப் பொண்ணை ரொம்ப பிடிச்சுருக்குமா உடனே பேசி முடிங்க” என்று அவள் கையிலிருந்து டீ கப்பை வாங்கினான்.
சட்டென்று நிமிர்ந்து அவனைப் பார்த்தாள் நந்தா “பிடிச்சிருக்கா…” என்றவனின் கேள்வியில் அவள் விழிகள் ப்ரியாவை பார்க்க “அண்ணாவோட அம்மா” என்றாள் சுமதியை காண்பித்து.
“உங்களுக்குப் பிடிச்சுருக்காமா” என்ற மகனிடம் “பிடிக்கலைனு சொன்னா விட்ருவியா” என்றார் சுமதி.
எழுந்து நந்தாவின் அருகில் நின்றவன் அவளின் இடையோடு கைகொடுத்து தன் அருகில் இழுத்து சேர்த்து நிறுத்தினான்.
“யாருக்காகவும் விட மாட்டேன்மா, அவளே சொன்னாலும் ஐ காண்ட் லீவ் ஹேர்” என்றவனை தன்னுடைய அகன்ற விழிகளை விரித்துப் பார்த்தாள் அவனின் அழகி.
எந்தன் உயிரே எந்தன் உயிரே
கண்கள் முழுதும் உந்தன் கனவே
என்னை மறந்தேன் என்னை மறந்தேன்
நெஞ்சம் முழுதும் உந்தன் நினைவே
சொல்லாமல் என்னை எடுத்தாய்
பதிலாக உன்னை கொடுத்தாய்
உலகத்தின் பூக்களே உயிரிலே பூத்ததே
உன்னருகே நான் இருந்தால்
தினம் உன்னருகே நான் இருந்தால்