இருவரும் நின்றிருப்பதை கண்டவர்கள் ‘இப்போது யாரை சமாதானப்படுத்துவது’ என்று புரியாமல் விழித்து கொண்டிருந்தனர்.
அப்போது சத்யா அருகில் வந்த தீரன் “உங்க குழந்தைகள நாங்களே பார்த்துக்கறதுனாலும் எங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல.
ஆனா…அவங்க அப்பா பாசத்துக்கு ஏங்குவாங்க. உங்களுக்குள்ள இருக்க பிரச்சனையால குழந்தைகளை ஏங்க விடாதீங்க. அவங்க உங்க குழந்தைங்க அவங்களை உங்க கூட கூட்டி போறதுல உங்களுக்கு என்ன பிரச்சனை”.
சத்யா, “பிரச்சனை…. குழந்தைகளை மட்டும் கூட்டி போறதுல இல்ல. மிஸ்டர் பிரகதீரன். உறவு இல்லாத பொண்ண வீட்டுக்கு கூட்டி போனா என் பேர் கெட்டு போயிடும். நல்ல பையங்கர பேர் மட்டும்தான் என்கிட்ட இருக்கு. அதையும் கெடுத்துக்க சொல்றீங்களா?” என்ற கணவனை முறைத்து பார்த்த மீனாட்சி.
‘அடே அப்பா நல்ல பையனாம்ல…நல்ல பையன். இவன் பண்ற சேட்டைய தாங்க முடியாம திரிஞ்சவ நான். என்கிட்டயே நடிக்கறான் பாருங்க மக்களே’ என்று நினைத்து கொண்டிருக்க,
சீனு, “என்னப்பா சத்யா இப்படி பிடிவாதமா இருந்தா என்ன அர்த்தம். குழந்தைங்களை பார்த்தும் அவங்களை விட்டுட்டு போக உனக்கு மனசு வருதா என்ன?”
“கஷ்டமா இருந்தாலும் சில உண்மைகளை ஏத்துக்க பழகிட்டேன்ங்க. நான் குழந்தைகளை மட்டும் வேணா…….”
மீனாட்சி, “அதெல்லாம் முடியாது. நானும் வருவேன். குழந்தைங்க நான் இல்லைனா அழுவாங்க”என்று வேகமாக சொல்ல,
சற்று நேரம் அமைதியாக இருந்த சத்யா பெரு மூச்சுடன் “சரி சார் நீங்க எல்லாரும் சொல்றதால ஒரு வாரம் விருந்தாளியா அவங்க எங்க வீட்டுக்கு வரட்டும். அப்புறம் அவங்க வழிய பார்த்துட்டு போகட்டும். நான் அப்பப்போ குழந்தைகளை வந்து பார்த்துக்கறேன்”என்று சொல்ல,
பல்லை நற நறவென கடித்த மீனாட்சி “சரி நான் போயிட்டு வரேன்”என்று அனைவரையும் பார்த்து சொல்லிவிட்டு விறு விறுவென வெளியில் சென்று நின்று கொண்டாள்.
கண்ணம்மாவும் மலையும் சத்யா பேசியதை கேட்டு திகைத்து போயிருந்தனர். இருவரும் மீண்டும் சேரவே மாட்டார்களோ என்று. அதனால் சத்யாவிடம் பேச தயக்கம் ஏற்பட, ஒருவரை ஒருவர் அமைதியாக பார்த்து கொண்டனர்.
அவர்கள் அருகில் வந்த சத்யா மலையிடம் “நல்லா படி. எதுவும் உதவி வேணும்னா தயங்காம எனக்கொரு போன் பண்ணு”என்றவன் தன் பாக்கெட்டில் இருந்த கார்டை எடுத்து கொடுத்துவிட்டு “நீங்கதான் நான் வேண்டான்னு போனீங்க. நான் இல்லை. சோ எந்த தயக்கமும் என்கிட்ட வேண்டாம்”என்றுவிட்டு கண்ணம்மாவிடம் திரும்பியவன் “உனக்கும் அதுதான். நல்லா படி. இது உன் குடும்பம் நல்லா பார்த்துக்கோ. அப்புறம் நாளைக்கு மறு வீட்டு விருந்துக்கு உன் ஹஸ்பண்ட கூட்டிட்டு கோயம்பத்தூர் கண்டிப்பா வரணும்”.
அவன் முகத்தை தூக்கி தன்னை பார்க்க வைத்தவன் “என்னை பொறுத்தவரை நீங்க எந்த தப்பும் பண்ணல. நான் வேணும்னு நினைச்சீங்கன்னா கால் பண்ணுங்க. வீட்டுக்கு வாங்க. உங்களுக்காக எப்பவும் நான் இருக்கேன்”.
கண்ணம்மா, “அக்காவும் எந்த தப்பும் பண்ணலையே மா….பண்ணலையேங்க”
“சும்மா மாமானே சொல்லு. கஷ்டப்பட்டு அதை மாத்த ட்ரை பண்ணாத”.
“நான் எப்பவும் யாரையும் எதுக்கும் போர்ஸ் பண்ண மாட்டேன். உங்க அக்காவா வந்து பிரியலாம் கையெழுத்து போட்டு குடுங்கன்னா குடுத்தேன். இப்போ உங்களுக்கும் நான் வேண்டாம்னு தோணுனா பரவால்ல விடுங்க”.
“இல்ல மாமா.அப்படி எல்லாம் இல்ல கண்டிப்பா நாங்க வரோம்”என்று இருவரும் ஒரு சேர சொல்ல, அவர்களை பார்த்து சிரித்துவிட்டு, அனைவரையும் பார்த்தவன் “நீங்க ரொம்ப பெரிய உதவி செஞ்சுருக்கீங்க. அதுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு எனக்கு தெரியல. ஆனா சொல்லிதான் ஆகணும் ரொம்ப நன்றி” என்று கையெடுத்து கும்பிட்டவன்,
“நீங்க எல்லாரும் புது பொண்ணு மாப்பிள்ளையோட நாளைக்கு எங்க வீட்டுக்கு வரணும்”என்று கூற,
அவர்கள் தங்கள் சம்மதத்தை தெரிவித்த உடன் மென்மையாக சிரித்தவன் “ரொம்ப நன்றி நான் வரேன்”என்று காரை நோக்கி செல்ல,
அங்கு விளையாடி கொண்டிருந்த குழந்தைகள் “ப்பா….”என்றவாறு ஓடி வந்து அவன் காலை கட்டி கொண்டனர். அவர்களை தூக்கியவன் “எல்லாருக்கும் பாய் சொல்லுங்க”என்று சொல்ல,
அவர்களும் சிரித்து கொண்டே கையை அசைத்தனர்.
மீனா ஸ்ரீயை அணைத்து கொண்டு “நான் கிளம்பறேன்க்கா”என்று அழுது கொண்டே சொல்ல,
“எதுக்கு மீனும்மா அழற. உன் வாழ்க்கைலயே உருப்படியான ஒரு டெசிசன் எடுத்துருக்க, அதுல நிலையா இருந்து இந்த மீனா யாருன்னு சாதிச்சு காட்டு”என்று சொல்ல,
அவளும் சரி என்று தலையசைத்து, கண்ணம்மாவை வீட்டிற்கு வர சொல்ல,
“மாமா மறு வீட்டு விருந்துக்கு நாளைக்கு வர சொல்லியிருக்காருக்கா. நாங்க எல்லாரும் வருவோம்”என்ற தங்கையை கண்டு சிரித்தவள் “சந்தோசம்”என்று மட்டும்சொல்லிவிட்டு,
அனைவரிடமும் விடை பெற்று காரில் ஏறியவள் மனதில் பெரும் வருத்தம் சூழ்ந்தது.
‘அப்போ அவருக்கு என் மேல மட்டும்தான் கோபமா. ம்கூம்…நான் பேசுன பேச்சுக்கு இது தேவைதான். கடவுளே நான் பண்ணியது எல்லாமே தப்புதான். அதுக்காக அவரை என்கிட்ட இருந்து பிரிச்சுடாத. அவர் எனக்கு வேணும். இனி யாருக்காகவும் அவரை நான் பிரிய மாட்டேன்’என்று நினைத்து கொண்டு இருந்தவள் தந்தையை கண்டால் முடிவை மாற்றி கொள்வாளா……
“தனி ஒருவனாக கோயம்பத்தூரில் இருந்து வந்தவன் இப்போது மகன், மகள், மனைவி என குடும்பமாக திரும்பி செல்கிறான்.
கார் சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்தது. குழந்தைகள் நன்றாக விளையாடி, வேடிக்கை பார்த்து என இருந்துவிட்டு டயர்ட் ஆகி தூங்கி போயினர்.
மீனாட்சி வெகுநாட்கள் கடந்து கணவனுடனான பயணத்தை ரசித்து கொண்டிருந்தாள். இந்த பயணம் அவளுள் பல எண்ணங்களை உருவாக்கியது.
திருமணம் முடிந்து முதல் முறை கோயம்பத்தூர் செல்லும் போது நடந்த நிகழ்வுகள் அனைத்தும் நினைவு வர, தனக்குள் சிரித்து கொண்டவள் கணவனை திரும்பி பார்க்க, அவனோ முகத்தை உர்ரென்று வைத்து கொண்டு அமர்ந்திருந்தான்.
‘எப்போவும் அழகான சிரிப்போட இருக்கவரு எப்படி மாறி போயிட்டாரு’ என்று பெரு மூச்சு விட்டவள் மீண்டும் வேடிக்கை பார்க்கும் வேலையை தொடர்ந்தாள்.
சற்று தூரம் சென்று காரை நிறுத்தியவன் இறங்கி செல்ல, அவளோ ‘இங்க என்ன……’என்று பார்க்க, அங்கு ஒரு ஹோட்டல் இருந்தது.
‘ஹோ….. காபி குடிப்பாரு போல’என்று நினைத்தவள் அருகில் ஒருவன் வந்து நிற்க, பயந்து போனவள், அவனிடம் “என்னவென்று கேட்க,
“சார் இதை குடுத்துட்டு வர சொன்னாரு” என்று மூன்று கிளாசை நீட்டினான்.
அதில் குழந்தைகளுக்கு இரண்டு டம்ளர் பாலும், இவளுக்கு டீயும் இருந்தது. அதை கண்டு மகிழ்ந்து போனவள் ‘என் புருஷன் என்னை வெறுத்துவிடவில்லை’என்று நினைத்து அதை வாங்கி வைத்தவள், குழந்தைகளை தூக்கி டம்ளரை அப்படியே வாயில் வைக்க, அவர்கள் உறக்கத்திலேயே பாலை குடித்து முடித்தனர்.
தானும் டீயை குடித்தவள் மனம் சந்தோஷமாக இருக்க, கணவன் வந்தவுடன் “ரொம்ப தேங்க்ஸ்ங்க”என்று சிரிப்புடன் சொல்ல,
“யாரையும் பார்க்க வச்சு சாப்பிடற பழக்கம் எனக்கு இல்லை. அதான் வாங்கினேன்”என்றவன் வேறு எதுவும் பேசாமல் காரை ஸ்டார்ட் செய்ய,
மீனாவிற்கு கண்கள் கலங்கிவிட்டது. எனக்கு உன் மீது எந்த பாசமும் இல்லை. நீ தவறாக எதயும் யோசித்து வைத்து கொள்ளாதே என்பது போல் அவன் சொன்ன வார்த்தைகளில்.
அவள் கண்ணீரையும் அவன் கண்டு கொள்ளவில்லை. அதன்பினான அவள் வாடிய முகத்தையும் அவன் கண்டு கொள்ளவில்லை.
கார் ஒரு பெரிய வீட்டின் முன் நிற்க, மீனா இது யார் வீடு என்பது போல் பார்த்து கொண்டு இருந்தாள்.
வாட்ச் மேன் வந்து கதவை திறந்துவிட அழகான அந்த வீட்டின் போர்ட்டிக்கோவில் சென்று நின்றது கார்.
காரைவிட்டு இறங்கியவன் மீனாவிடம் எதுவும் சொல்லாமல் குழந்தைகளை தூக்கி கொண்டு வீட்டை நோக்கி செல்ல, மீனா அவசர அவசரமாக இறங்கி அவன் பின்னோடு ஓடினாள்.
இரண்டு குழந்தைகளையும் இரு பக்கமும் வைத்து கொண்டு அவன் காலிங் பெல் அடிக்க சிரமப்பட, குழந்தையை வாங்க கையை நீட்டிய மீனாவை கண்டு கொள்ளாதவன் காலால் கதவை உதைக்க போக, அதற்குள் கதவு திறந்து கொண்டது.
“ஹேய் நீ கல்யாணத்துக்கு போயிருக்கறதா அத்த சொன்னாங்க. கையில குழந்தைங்களோட வந்து நிக்கற, என்ன இவங்க ரெண்டு பேரும் ரிட்டர்ன் கிப்டா”என்றவன் குரலில் அவனை முறைத்த சத்யா.
“நீ எப்போ வந்த. மாமா நல்லா இருக்காரா”என்றுகேட்டு கொண்டே வீட்டின் உள்ளே வர, அவன் பின்னோடு வந்த பெண்ணை கண்டு திகைத்து போன அசோக் “யாரு இந்த பொண்ணு. எந்த கல்யாணத்துக்கு போன. ரிடர்ன் கிப்ட் எல்லாம் பயங்கரமா இருக்கு”,என்றவனை முறைத்த சத்யா “நீயெல்லாம் கலெக்டராடா. யோசிச்சே பேச மாட்டியா. வாய்க்கு வந்ததை உளருவியா” என்று கடுப்பாக கேட்க,
“அவ்வா…. அவ்வா…. அவ்வா” என்று வாயில் அடித்து கொண்டவன் “அத்த…. மாமா…. இங்க வந்து பாருங்க. உங்க புள்ள என்ன பண்ணிட்டு வந்திருக்காருன்னு. கல்யாணத்துக்குன்னு நேத்து கிளம்பி போயிட்டு இன்னைக்கு ரெண்டு புள்ளைங்களோட வந்து நிக்கறாரு. கூடவே ஒரு பொண்ணும்”என்று கத்த,
முந்தானையில் தன் கைகளை துடைத்து கொண்டே வந்த லதா “என்னடா உளறுற….”என்று கேட்க,
அவர் அருகில் சென்றவன் “அங்க பாருங்க” என்று வாசலில் தயங்கி நின்று கொண்டிருந்த மீனாவை கை காட்ட, லதா அதிர்ந்து போனார்.
அதே நேரம் ஹாலில் சத்தமாக இருக்கவும் என்னவென்று பார்க்க வந்த ஜெகனும் மீனாவை கண்டு அப்படியே நிற்க,
அங்கு வந்த கண்ணன்தான் மீனாவை “உள்ள வாமா”என்று அழைத்தார்.
அதன்பின்பே தயங்கி உள்ளே வந்த மீனாவையும் மகன் கையில் இருக்கும் குழந்தைகளையும் புரியாமல் பார்த்த லதா “என்னப்பா…..”என்று கேட்க,
பேச்சு சத்தத்தில் எழுந்து கொண்ட குழந்தைகள் அங்கிருந்தவர்களை கண்களை உருட்டி உருட்டி பார்த்து கொண்டிருந்தனர்.
ஜெகன், “என்னப்பா சொல்ற” என்ற தந்தையை பார்த்தவன், “உங்க பேர குழந்தைங்கப்பா. ஒரு வாரம் இங்க இருந்துட்டு போயிடுவாங்க” என்று சொல்ல,
வேகமாக மகன் அருகில் நின்ற குழந்தையிடன் சென்ற லதா “டேய் குட்டி பையா…. அப்படியே உன் அப்பன் மாதிரியே இருக்கடா”என்று தூக்கி கொள்ள,
ஜெகன் மற்றொரு குழந்தையை தூக்கி கொண்டு “உங்க பேரு என்னடா”என்க,
அவர்கள் அருகில் சென்ற மீனா “ரித்திகா, ரித்விக் மாமா. நல்லா இருக்கீங்களா”என்றுவிட்டு இருவர் காலிலும் விழ, அவர்கள் அமைதியாக இருந்தனர்.
மீனா, “என் மேல உங்களுக்கு கோபம் இருக்கறது நியாயம்தான். ஆனா அன்னைக்கு என் சூழ்நிலை அப்படி அமைஞ்சு போச்சு என்னை மன்னிச்சுடுங்க “என்க,
லதாவோ, “நீ கேட்டவுடனே மன்னிக்கற அளவுக்கு நீ சாதாரண தப்பு பண்ணல. அதே சமயம் வீட்டுக்கு வந்த விருந்தாளிங்ககிட்ட சண்டை போடற பழக்கம் எங்ககிட்ட இல்ல.
வாங்க கீழ அந்த அறையில நீங்க இருந்துக்கோங்க”என்று பட்டும் படாமலும் சொல்ல, மீனா மனம் உடைந்து போனாள்.
“மாமா…. நீங்களாவது நான் சொல்றதை….”
“எங்களுக்கு எங்க மகன்தான் முக்கியம்மா. அவன் என்ன விருப்பப்படறானோ அதுதான் இங்க நடக்கும். ஏன்னா உங்களால அதிகம் பாதிக்கப்பட்டது அவன்தான். அவனோட விருந்தாளியா நீ வந்திருக்க. கண்டிப்பா உனக்கு எந்த குறையும் நாங்க வைக்க மாட்டோம்”என்று பேசியவரை கண்டு கண் கலங்கியவள், தான் எடுத்த முடிவை நினைத்து அரண்டுதான் போனாள்.
அவர்கள் பேசி கொண்டதை வைத்தே வந்தவர்கள் யார் என்பதை புரிந்து கொண்ட அசோக் “ஹாய் மீனாட்சி. நான் அசோகமித்ரன்…. தி….”
“ம்ம்…. தெரியும். திருச்சில கலெக்டரா இருக்கீங்க. நான் அங்கதான் —-ஸ்கூல வேலை பார்த்துட்டு இருந்தேன்”.
“ஹோ அப்படியா சூப்பர். ஆனா…. நீங்க கோயம்பத்தூர் சரோன்டிங்ல ஏதோ கிராமம்னு கேள்வி பட்டேனே”
“எல்லாம் என் தலையெழுத்து அங்க போய் இருக்கணும்னு”என்றவள் தான் அங்கு சென்ற கதையை சொல்ல, குழந்தைகளை கொஞ்சுவது போல் அவர்களை கவனித்து கொண்டிருந்த லதா, ஜெகன் இருவருமே திகைத்து போயினர்.
லதா மனதின்னுள்ளே ‘இந்த தங்கங்கள கொல்லணும்னு நினைச்சிருக்கானே மனுஷனா அவன். அவனுக்கு எல்லாம் நல்ல சாவே வராது’என்று திட்டி கொண்டிருக்க,
அதற்குள் குளித்து தயராகி வந்த சத்யா “ம்மா சாப்பிடலாமா” என்று கேட்க,
“ம்ம்…வாப்பா”என்று பரிமாற போனவர் அருகில் சென்ற மீனா. “நீங்களும் உட்காருங்க அத்த. நான் எல்லாருக்கும் சாப்பாடு வைக்கறேன்” என்றவுடன், பறந்து சென்று விழுந்தது சத்யா குடித்த தண்ணீர் டம்ளர்.
“ம்மா விருந்தாளிய முதல்ல உட்கார வச்சு சாப்பாடு போடுங்க. நம்ம குடும்பத்து ஆளுங்க அப்புறம் கூட சாப்பிட்டுக்கலாம்”என்று அவளுக்கும் இந்த குடும்பத்துக்கும் சம்மந்தம் இல்லை என்பதை தெளிவாக உரைக்கும் பொருட்டு அவன் சொல்ல,
எடுத்த இட்லி பாத்திரத்தை அங்கேயே வைத்த மீனா “இல்ல எனக்கு பசியில்ல. நீங்க சாப்பிடுங்க அத்த. நான் குழந்தைகளுக்கு ஊட்டிவிட்டுட்டு அப்புறம் சாப்பிட்டுக்கறேன்” என்க,
சத்யா ஒரு குழந்தையை தன் மடியில் அமர வைத்தவன் “ம்மா.. வீட்டுக்கு வந்தவங்களை பட்டினி போட்டுட்டு சாப்பிடற பழக்கம் நமக்கு இல்ல. நான் இந்த குழந்தைக்கு ஊட்றேன். நீங்க அவனுக்கு ஊட்டுங்க. அவங்களை சாப்பிட சொல்லுங்க”என்று அழுத்தமாக சொன்னவன் தாயிடம் பரிமாற சொல்ல,
அவனுக்கான இரண்டு இட்லியை எடுத்து வைத்தவர், மற்றவர்களுக்கு பரிமாற, அனைவரும் மீனாவை பரிதாபமாக பார்த்தனர்.
கண்ணில் கண்ணீர் வடிய சாப்பிட முடியாமல் தண்ணீரை குடித்து குடித்து இரண்டு இட்லிகளை உள்ளே தள்ளியவள் போதும் என்றுவிட்டு எழுந்து அவளுக்கு என்று ஒதுக்கிய அறைக்கு சென்றுவிட்டாள்.
குழந்தைகள் சமத்தாக சாப்பிட்டுவிட்டு தந்தையுடன் விளையாட ஆரம்பித்துவிட்டனர்.
அப்படியே இரண்டு நாட்கள் ஓட, அன்றும் சாப்பிட்டுவிட்டு தந்தையுடன் விளையாடியவர்கள் நடு இரவு உறங்கும் நேரம் வர குழந்தைகள் தாயை தேட துவங்கினர். ஏதேதோ பேசி அவர்களை சமாளிக்க முயன்றவன் முடியாமல் போக, அவர்களை தூக்கி கொண்டு மீனா அறை முன் வந்து நின்றான்.
நேரம் ஆகிவிட்டதால் அறை கதவை தட்ட யோசித்தவன், பின் குழந்தைகள் தூக்கத்திற்கு சிணுங்கவும் கதவை தட்ட, அழுது…. அழுது முகம் சிவந்து சோர்ந்து போய் கதவை திறந்தவள் அங்கு நின்றிருந்த கணவனை திகைத்து “எ…. என்னாச்சுங்க?” என்று கேட்க,
அவனோ அவள் சிவந்த விழிகளை ஒரு நொடி ஆழ்ந்து பார்த்தவன் பின் தன் பார்வையை திருப்பி கொண்டு
“குழந்தைங்க அழுதாங்க. அதான் ……” என்க,
“ஓ….”என்றவள் குழந்தைக்காக கையை நீட்ட, அவளிடம் குழந்தையை கொடுக்காமல் அப்படியே நின்றிருந்தான். அவனை நிமிர்ந்து பார்த்தவள் அவன் பார்வை சொன்ன செய்தியை புரிந்து கொண்டு கதவை நன்றாக திறந்து வைக்க,
அறை உள்ளே சென்றவன் இருவரையும் பெட்டில் படுக்க வைத்துவிட்டு கிளம்பியவன் கதவு அருகே சென்று
“அழறதால எதுவும் மாற போறது இல்ல. இங்க இருந்தா கஷ்டபட்டுதான் ஆகணும். முடிஞ்ச அளவு சீக்கிரம் கிளம்பிடு அதுதான் உனக்கு நல்லது” என்றுவிட்டு திரும்பியும் பாராமல் சென்றுவிட, செல்லும் கணவன் முதுகையே வெறித்து பார்த்து கொண்டிருந்தாள் மீனா.
வெகுநேரம் தூங்காமல் விழித்து கொண்டு இருந்தவள் விடியும் வேளையில் உறங்கி போனாள்.
காலை தாமதமாக எழுந்தவள் தலை வலிக்கவும், தலையில் கை வைத்து கொண்டு வெளியில் வர, அங்கு லதா பேசி கொண்டிருந்த விஷயத்தை கேட்டு தலையில் இடி விழுந்தது போல் உணர்ந்தவள் அப்படியே விக்கித்து போய் நின்றாள்.
மீனா அப்படி திகைத்து போகும் அளவிற்கு லதா என்ன சொல்லியிருப்பார்.
ஒருவேளை இருவரின் பிரிவைபற்றிய பேச்சாக இருந்தால் மீனாவின் நிலை என்ன….. அடுத்தடுத்த….. எபியில் பார்க்கலாம்.