அத்தியாயம் -30

லதா பேசுவதை கேட்டு சிலையென சமைந்து போனவள், அவள் கணவன் பேசுவதை கேட்டவுடன் கடுப்பானாள்.

சத்யா, “இல்லம்மா நீங்க சொல்லிட்டீங்கல்ல, இன்னைக்கே போலாம். வரலன்னு சொன்னீங்கன்னா. ஏன் எதுக்குன்னு கேட்பாங்க,

லதா, “அதெல்லாம் நான் சமாளிச்சுடறேன்ப்பா”

“என்ன சமாளிப்பீங்க. எது சொன்னாலும் அவங்க அபசகுனமா நினைப்பாங்க. மாமாவை வேற வர வச்சுருக்கீங்க. அசோக் வேலை இல்லாதவன்னு நினைச்சிங்களா உங்க இஷ்டத்துக்கு வர சொல்லவும் போக சொல்லவும்.

என்கிட்ட கேட்டாவது பொண்ணு வீட்ல பேசியிருக்கணும்”என்க, லதா அமைதியாக இருந்தார்.

ஆம், பொண்ணு பார்க்க போவது பற்றிதான் அவர்கள் பேசி கொண்டு இருந்தனர் அதை கேட்டுதான் மீனா அதிர்ந்து நிற்கிறாள்.

லதா, “சரி. தப்புதான் சொல்லிட்டேன். இப்போ அதுக்கு என்ன பண்ணலாம். சும்மா…சும்மா அதையே சொல்ற. பேர புள்ளைங்க எல்லாம் வந்திருக்க நேரத்துல எதுக்கு போவணுமேன்னு கேட்டேன்.

 அவங்க வந்தா என்ன? ஒரு வாரத்துல போயிடுவாங்க. இவங்களைப்பத்தி அவங்களுக்கு எதுவும் தெரியவேண்டாம். மூணு பேரையும் இங்க இருக்க சொல்லிட்டு நம்ம போயிட்டு வந்திரலாம்”என்றவன் அங்கிருந்து சென்றுவிட்டான்.

இவை அனைத்தையும் கேட்ட மீனாவோ ‘கொடும கொடுமன்னு கோவிலுக்கு போனா அங்க ரெண்டு கொடுமை கமான் கமான்னு சொல்லுச்சாம் அது மாதிரி இருக்கு என் நிலைமை. தலை வலிக்கு மாத்திரை வாங்கலாம்னு போனா அவங்க பங்குக்கு அவங்களால முடிஞ்சத செஞ்சுட்டாங்க.

பொண்ணா பார்க்க போறீங்க பொண்ணு எப்படி பாக்குறீங்கன்னு நானும் பார்க்கறேன். விட்டுட்டு போக பிளான் பண்றீங்களா, உங்க பிளானை எப்படி பனால் ஆக்குறேன்னு பாருங்க’என்று நினைத்தவள் வேகமாக அறைக்குள் சென்று குழந்தைகளை எழுப்பி குளிக்க வைத்து தயாராக்கி, தானும் தயாராகி ஆளுக்கு முன்னால் வந்து ஹால் சோபாவில் அமர்ந்துவிட்டாள்.

மற்றவர்கள் அனைவரும் கிளம்பி வர, இவர்கள் மூவரும் கிளம்பி இருப்பதை பார்த்து ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

ஜெகன் லதா அருகில் வந்தவர் “என்னம்மா இவங்களையும் கூட்டிட்டு போறோமா”என்க,

 “தெரியலையேங்க. நான் ஒன்னும் இவங்ககிட்ட சொல்லலியே”

“இவங்களை எப்படி கூட்டிட்டு போக முடியும். அங்க இவங்க யாருன்னு கேட்டா என்ன பதில் சொல்வோம்” என்று அவர்களுக்குள் பேசி கொண்டிருக்க,

லதா, “இருங்க நானே கேட்குறேன்”என்றவர் மீனாவிடம் “என்னம்மா. கிளம்பிட்டீங்க போல. வெளிய எங்கயும் போறீங்களா”

“ம்ம்…. ஆமா அத்தை. புள்ளைங்க வெளிய எங்கயாவது போலாம்னு சொன்னாங்க.

சரி, நாம வீட்ல வெட்டியாதானே இருக்கோம் போயிட்டு வரலாம்னு தயாரானேன். நீங்களும் வெளிய கிளம்பிட்டீங்க போல. அப்போ எல்லாரும் ஒன்னா போலாமா”என்று அப்பாவி போல் கேட்க,

லதாவோ ‘இந்த புள்ள தெரிஞ்சு பேசுதா…தெரியாம பேசுதான்னு புரியலையே’என்று தனக்குள் பேசி கொண்டவர் “அ…. அ…அது…. இல்லம்மா.. நாங்க….”என்றவர் சொல்ல தடுமாறும் சமயம்

வைட் ஷர்ட், சேண்டில் நிற பேண்ட் அணிந்து தயாராகி வந்தான் சத்யா.

அனைவரும் ஹாலில் நின்றிருப்பதை பார்த்தவன் “என்னாச்சு? ஏன் இப்படி நின்னுட்டு இருக்கீங்க. கிளம்பலாமா?”என்று கேட்க,

லதா தயக்கத்தோடு “போலாம்ப்பா.. ஆனா…. அங்க பாரு”என்று கண்களால் காட்ட,

திரும்பி பார்த்த சத்யா அங்கு புது பெண்ணாக தயாராகி இருந்த மீனாட்சியையும், குழந்தைகளையும் பார்க்க,அவர்கள் ஓடி வந்து தந்தையை அணைத்து கொள்ள,

இருவரையும் தூக்கி கொண்டவன் முகத்தில் இருந்த சிரிப்பை லதாவும், ஜெகனும் கண்கள் கலங்க பார்த்தனர்.

எவ்வளவு நாட்களுக்கு பிறகு இப்படி சிரிக்கிறான் என்று,

குழந்தைகளுடன் பேசியவன் நேரமாவதை உணர்ந்து  “அவங்க வரணும்னு நினைச்சா வரட்டும்மா” என்றுவிட்டு வெளியே செல்ல,

லதாவோ “வாங்க போலாம்” என்று சொல்ல, அனைவரும் அவர் பின்னோடு சென்றனர். பெண் வீட்டை நோக்கி சென்றது கார்.

மீனாவோ காரில் குழந்தைகளின் காதில் ஏதோ சொல்லி கொண்டே வர, அவர்களும் மண்டையை மண்டையை ஆட்டி கேட்டு கொண்டு வந்தனர்.

 ஒரு பெரிய வீட்டின் முன் கார் நிற்க, அனைவரும் கீழே இறங்கினர். பெண்ணின் தாய், தந்தை இருவரும் வந்து அவர்களை வரவேற்க, இவர்களும் அலங்கரித்திருந்த அந்த வீட்டின் உள்ளே சென்றனர்.

சோபாவில் அமர்ந்த லதா அனைவரையும் அறிமுகப்படுத்திவிட்டு இறுதியில் மீனாட்சியிடம் வந்தவர் என்ன சொல்வது என்று அமைதியாகிவிட,

 சத்யா “இவங்க எங்க தூரத்து உறவு. ஒரு வாரம் இருந்துட்டு போலாம்னு வந்திருக்காங்க”என்று சொல்ல,

மீனா முகம் சிறுத்து போனாள். இருந்தாலும் இதெற்கெல்லாம் நான் அசையமாட்டேன் என்பது போல் உடனே தன்னை சமாளித்து கொண்டவள்.

“ஆமாங்க. ஒரே பிரசவத்துல ரெண்டு குழந்தை பெத்துக்கற அளவு தூரம்”என்று சிரித்து கொண்டே சொன்னவள் “வணக்கம்”என்க,

சத்யாவோ பல்லை கடித்தான் என்றால், லதாவோ ‘எதே….’என்று கண்கள் வெளியே தெரித்துவிடும் அளவிற்கு பார்த்தார்.‘இந்த புள்ளையா இப்படி பேசுறது. அப்பாவி புள்ளையாச்சே இது”என்றவர் மனதில் நினைத்து கொண்டிருக்க,

பெண் வீட்டாரோ ஒன்றும் புரியாமல் விழித்து கொண்டிருந்தனர்.

அசோக்தான் “அது ஒன்னும் இல்லைங்க. அவங்களுக்கு ட்வின் பேபிஸ் அதை சொல்றாங்க”என்று சமாளிக்க, அவளும் ‘ஆமாம் ‘என்பது தலையாட்டி வைத்தாள்.

“நல்ல நேரம் முடியும் முன் பெண்ணை வர சொல்லிடலாங்களா” என்றதற்கு அவர்களும் தன் சம்மதத்தை தெரிவிக்க,

சிவப்பு நிற பட்டுடுத்தி அளவான அலங்காரத்துடன் வந்த பெண்ணை அனைவரும் பார்த்து கொண்டிருக்க, “சித்தி……”என்ற அழைப்போடு ஓடி போய் அணைத்து கொண்டனர் குழந்தைகள்.

‘சித்தியா……’என்று அனைவரும் அதிர்ந்து போய் நிற்க,

மீனா, “ஆமாங்க. அவங்க அப்பாவோட செகண்ட் வைப். அவங்களுக்கு சித்திதானே”என்று சொல்ல,

சத்யா அவளை பற்களை கடித்து கொண்டு பார்க்க, அதையெல்லாம் கண்டு கொள்ளாதவள் பெண் வீட்டாரை பார்த்து சிரித்து வைத்தாள்.

அவர்களோ திகைப்புடன் “என்னது. ரெண்டாவது மனைவியா. மாப்பிள்ளைக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சா”என்று கேட்க, பெண்ணோ அழுது கொண்டே உள்ளே ஓடிவிட்டது.

மீனா, “ஆமாங்க ஒரே ஒரு தடவை கல்யாணம் ஆகி ரெண்டே ரெண்டு குழந்தைங்க. அதுவும் ஒரே பிரசவத்துல. ச்சோ…ச்சோ…. இந்த விஷயம் உங்களுக்கு தெரியாதா.

என்னங்கத்த உண்மைய சொல்லிட்டு வர்றதுல்ல. நான்தாங்க அவரோட முதல் பொண்டாட்டி. புருஷனுக்கே பொண்ணு பார்க்க வர, ட்ரெண்டிங் பொண்டாட்டிங்க நான்”என்று சிரித்து கொண்டே சொல்ல,

லதாவோ திரு திருவென விழித்து கொண்டு இருந்தார் என்றால், ஜெகனோ ‘என்னடா நடக்குது இங்க’என்பது போல் விழித்து பின் அவர்களிடம் ஏதோ பேச போக,

அதற்குள் பெண்ணின் தந்தையோ “என்ன சார். இப்படி பண்ணுவீங்கன்னு நாங்க நினைக்கவே இல்லை.

எவ்ளோ நம்பகமான இடம்னு நினைச்சோம். ஆனா நீங்க இவ்ளோ கேவலமான ஆளா இருப்பீங்கன்னு நாங்க நினைக்கவே இல்லை. முதல்ல எல்லாரும் வீட்டைவிட்டு வெளிய போங்க”என்று சொல்ல,

முகம் இறுகிய சத்யா “நாங்க சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேட்குறீங்களா”

“இன்னும் பொறுமையா கேட்க, என்னங்க இருக்கு. மாப்பிள்ளை கலெக்டர்னு சொன்னாங்க. ஆனா கல்யாணம் ஆணவருன்னு சொல்லாம விட்டுட்டீங்க. எங்களுக்கு இருக்கறது ஒரே பொண்ணு. அவளை ரெண்டாந்தாரமா குடுக்கறதுல எங்களுக்கு விருப்பம் இல்ல. நீங்க முதல்ல கிளம்புங்க”என்று வாசலை நோக்கி கையை நீட்ட,

மீனாவிற்கோ பக்கென்று ஆனது. ‘என்னது மாப்பிள்ளை கலெக்டரா அப்போ பொண்ணு பார்க்க வந்தது அசோக் சாருக்கா. இவருக்கு இல்லையா’என்றவள் பதறி போய் சத்யாவை பார்க்க அவனோ இறுகி போய் அமர்ந்திருந்தான் என்றால் அசோக் பேயடித்தது போல் விழித்து கொண்டு இருந்தான்.

தன் தவறை புரிந்து கொண்டவள் பெண் வீட்டாரிடம் பேச போக,

பெண்ணின் தாயோ “ச்சி…. நீயெல்லாம் ஒரு பொண்ணா. கட்டுன புருஷனுக்கு மறுபடியும் கல்யாணம் பண்ண பொண்ணு பார்க்க வந்துருக்க.

என்ன மனுஷி நீ. இதுல புருஷனுக்கு பொண்ணு பார்க்க வர ட்ரெண்டிங் பொண்ணாம்.ஒன்னுக்கு ரெண்டு புள்ளைய பெத்து வச்சுக்கிட்டு பண்ற வேலைய பாரு. நீ எல்லாம் நல்ல குடும்பத்துலதான் பிறந்தியா”என்று  கேட்க,

மீனா அவமானத்தில் முகம் சிறுத்து போனாள். மேலும் அவர்கள் மீனாவை கேவலமாக திட்ட,

“ஸ்டாப் இட்…..”என்று கர்ஜித்த சத்யா, அங்கிருந்த அனைவரையும் அனல் தெறிக்க பார்த்துவிட்டு வெளியே சென்றுவிட, மொத்த குடும்பமும் அவன் பின்னோடு அமைதியாக சென்றனர்.

வீட்டிற்கு செல்லும் வழி முழுவதும் கார் பயணம் அமைதியாக முடிந்தது. அவர்கள் வீட்டிற்குள் செல்லும் முன் சத்யாவிற்கு போன் வர, அதை எடுத்து காதில் வைத்தவன் “ம்ம்…. சொல்லுங்க தீரன்”என்றவாறு வெளியவே நின்றுவிட,

மற்றவர்கள் அனைவரும் உள்ளே சென்றனர். மீனா தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்கும் பொருட்டு அசோக் அருகில் சென்று “சாரிண்ணா. நான் அவருக்குதான் பொண்ணு பார்க்க போறாங்கன்னு நினைச்சி ஏதேதோ பண்ணிட்டேன்” என்றவள் சொல்லி கொண்டிருக்கும்போதே உள்ளே வந்த சத்யா அவளை தன்னை நோக்கி திருப்பி ஓங்கி ஒரு அரை அரைந்தான்.

“சத்யா…. அண்ணா….”என்ற குரல்கள் அதிருப்தியாக வர, அதையெல்லம் காதில் வாங்காதவன் “எங்களை நிம்மதியா வாழ விட கூடாதுன்னே முடிவுல இருக்கியாடி நீ”என்று வார்த்தைகளை கடித்து துப்ப,

மீனாவோ “கோபமாக கூட இதுவரை தன்னை திட்டியிராத கணவன் முதல் முறை அடிக்கவும் விக்கித்து போய் கன்னத்தில் கை வைத்தவாறு “இ…. இ…இல்லைங்க….. நான்….”

“மூச் எதாவது பேசுன. அவ்வளவுதான். நீ பேசுன வரைக்கும் போதும். நாங்க அதை கேட்ட வரைக்கும் போதும். நீ கிளம்பி இருக்கும்போதே நினைச்சேன் எதாவது பிரச்சனை இழுத்து விட போறன்னு. ஆனா என்ன நடந்திரும்னு கொஞ்சம் அசால்ட்டா இருந்துட்டேன்.

உனக்கும் உங்க அப்பாக்கும் அப்படி நாங்க என்ன செஞ்சுட்டோம்னு இப்படி எங்கள நிம்மதி இல்லாம ஓட வைக்குறீங்க “.

“அப்படியெல்லாம் பேசாதீங்க. நான்….” என்றவள் பேச வர, அங்கிருந்த பூ ஜாடியை தூக்கி போட்டு உடைத்தவன் அவளைஉறுத்து விழிக்க, அவளோ கப்பென்று வாயை மூடி கொண்டாள்.

“என்ன…. என்ன சொல்ல போற?

 “இந்த கருமத்துக்குதான் சொன்னேன். உன்னை கூட்டிட்டு போக மாட்டேன்னு. அவங்க யாரும் கேட்கல. அந்த வீட்லதான் நீயும், உங்க அப்பனும் மானத்தை வாங்கிட்டீங்கன்னு இந்த வீட்டுக்கு வந்தோம். இங்க வந்து ரெண்டு வருஷம் நல்ல பேரோட நிம்மதியா இருந்தோம்.

அதையும் கெடுக்கவே இப்போ வந்தியா. எனக்கு பொண்ணு பார்க்கறதா நினைச்சு அப்படி பண்ணுனியா. எனக்கு பொண்ணு பார்த்தா உனக்கு என்னடி. அன்னைக்கு நான் வேண்டாம்னு போனவளுக்கு இப்போ என்ன வந்தது. நாளைக்கே நான் இன்னொரு பொண்ணை பார்த்து கல்யாணம் பண்ணுவேன். என்னடி பண்ணுவ நீ. என்ன பண்ண முடியும் உன்னால.

அதான் டைவஸ் ஆகிடுச்சுல்ல அப்புறம் என்ன. உன் முன்னாடி கடைசியா உன்கிட்ட கேட்டுதானே சைன் பண்ணுனேன். அப்போ சரின்னு மண்டைய ஆட்டிட்டு இப்போ வந்து இப்படி நின்னா என்ன அர்த்தம். உன்னை பார்த்தாலே எனக்கு எரிச்சல்தான் வருது.

குழந்தைகளுக்காகதான் உன்னை இங்க கூட்டி வந்தது. இருக்க போற அஞ்சு நாளும் இருக்கற இடம் தெரியாம அமைதியா இருக்கறதா இருந்தா இங்க இரு. இல்லை வீட்டைவிட்டு வெளிய போயிடு. என் நிம்மதிய நானே கெடுத்துக்கிட்டேன். ச்ச….”என்றவன் வார்த்தைகளை விட,

அவனது ஒவ்வொரு வார்த்தைகளும் அவளை நெருப்பு துண்டுகளாக சுட, புழுவாக துடித்து போனாள் பெண்ணவள்.

மீனா, “ஏங்க இப்படி எல்லாம் பேசுறீங்க. உங்களை பிரியனுங்கற எண்ணம் எனக்கு கொஞ்சமும் இல்லை. அவங்களாதான்….”

“ஷட் அப்…. ஜஸ்ட் ஷட் அப். அப்பா ஆட்டு குட்டின்னு கதை அளந்துட்டு இருக்காம முதல்ல இங்க இருந்து போ. அவங்க சொன்னாங்கன்னா உனக்கு அறிவு இல்ல. நீ படிச்சவதானே, உன்னால ஒரு முடிவை தெளிவா எடுக்க முடியலைன்னா, எதுக்கு கல்யாணம்பண்ணி என் வாழ்க்கையை கெடுத்த. என் கண்ணு முன்னாடி நிற்காத போ. என் வாழ்க்கைல இருந்து போன மாதிரி என்கிட்ட இருந்தும் போயிடு. நாம வாழ்க்கை முடிஞ்சது முடிஞ்சதுதான். இனி அதை ஒட்ட வைக்க நினைக்காத, அது முடியாது. நீ எனக்கு வேண்டாம்”என்றவன் கோபமாக சொல்ல,

வழிந்த கண்ணீரை துடித்து கொண்டே அறைக்குள் ஓடியவள் கதறி அழ துவங்கினாள். தந்தையின் கோப முகத்தை கண்ட குழந்தைகள் தாயின் பின்னாலேயே சென்று விட,

சத்யாவோ தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டான்.

மகன் அருகில் சென்று அமர்ந்த ஜெகன், “வார்த்தைகளை சிதறவிட்டா, திரும்ப அதை அள்ள முடியாதுப்பா”என்க,

அவனோ எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தான். அசோக்கும் “நீ அவங்கள இவ்ளோ பேசியிருக்க வேண்டாம். உங்க மேல இருக்க பாசத்துலதான் அப்படி எல்லாம் பண்ணுனாங்க. கொஞ்சம் பொறுமையா சொல்லியிருக்கலாம்.

லதா, “ஆமாடா. இப்போ எதுக்கு உனக்கு இவ்ளோ கோபம் வருது. அந்த பேச்சு பேசுற. சரி நாளைக்கே இன்னொரு கல்யாணம் பண்றேன்னு சொன்னியே உண்மையாலுமா? பொண்ணு பார்த்து வச்சுட்டியா?” என்று நேரம் காலம் தெரியாமல் கேட்க,

தலையில் அடித்து கொண்ட அசோக் ‘குடும்பமாடா இது. இங்க ஒருத்தனுக்கு ஒரு கல்யாணத்துக்கே வழி இல்லையாம். இதுல இன்னொரு கல்யாணத்துக்கு அடி போடறாங்க’ என்று நினைத்து கொண்டு இருக்க,

சத்யா தாயை முறைத்த முறைப்பில் அமைதியானவர் “இல்ல மகனே ஒரு பொது அறிவ வளத்துக்கலாம்னுதான் கேட்டேன். வேண்டாம்னா விடு”என்று வழிய, அவன் எழுந்து வெளியே சென்றுவிட்டான்.

“ஏங்க இப்போ நான் என்ன கேட்டேன்னு இந்த பய வெளிய போறான். அந்த பய கேவலமா பாக்குறான்”என்று அசோக்கை கை காட்டி அவர் கேட்க,

கண்ணனோ “என்னம்மா நீ. அவனே கோபத்துல ஏதோ உளறுறான். அதை புடிச்சுக்கிட்டு நீ பேசிட்டு இருக்க”.

 “ம்கூம்…என்னண்ணா பண்றது என் பையன் வாழ்க்கை சரியாகணும்னு எனக்கு மட்டும் ஆசை இருக்காதா.

மீனாட்சிய கூட்டிட்டு வரவும் ரெண்டு பேரும் சேர்ந்துட்டாங்கன்னு நினைச்சேன். ஆனா…அந்த பொண்ண தனி ரூம்ல தங்க வைக்கறது, ஒரு வாரத்துல போயிருவான்னு சொல்றது. அவ எதாவது பேச வந்தா எழுந்து போறது. எது சொன்னாலும் எடுதெரிஞ்சு பேசுறதுன்னு இருக்கான். அவன் வாழ்க்கையை நினைச்சா எனக்கு பயமா இருக்குண்ணா.

நடந்த விஷத்துல அமைதியா இருந்ததை தவிர, அந்த பொண்ணு எந்த தப்பும் பண்ணல. அதை இவன் புரிஞ்சுக்காம போக சொல்றான்.

நீங்களும்தானே அன்னைக்கு அந்த பொண்ணு சொன்னதை கேட்டீங்க. அந்த நடு ராத்திரி குழந்தையை காப்பாத்தணும்னு எப்படி பயந்து போய் உசுர கைல புடிச்சுட்டு ஓடி இருக்கும்.

யாரு செஞ்ச புண்ணியமோ அந்த பொண்ணு அங்க வந்து நம்ம வீட்டு வாரிசை காப்பாத்தியிருக்கு இல்லைனா என்ன ஆகியிருக்கும். அந்த கொலைகார கும்பல் இவளையும் எதாவது செஞ்சுருக்கும்”என்று முந்தானையால் மூக்கை சீந்த,

தங்கையை ஆழ்ந்து பார்த்த கண்ணன் “உனக்கு உன் மருமகள் மேல கோபம் இல்லையா லதாம்மா” என்க,

“இருந்ததுண்ணா கழுத்து வரைக்கும் கோபம் இருந்தது. ஆனா என் பேர பிள்ளைகளை பார்த்தவுடனே அந்த கோபம் போன இடம் தெரியல. முத்து முத்தா ரெண்டு புள்ளைங்களை பெத்து தனியா அவங்களை வளர்த்துட்டு வேலைக்கும் போயிருக்கா. பாருங்க ரொம்ப ஒசந்துட்டா.

இங்க மூணு மாசம்தான் இருந்தா ஆனா எல்லா வேலையும் பதவிசா வேலை செய்வா. ம்கூம்…. எங்க கெட்ட நேரம் எல்லாம் நடந்துருச்சு. இப்போ போ…போன்னு சொன்னா அந்த பொண்ணு எங்க போகும். என்ன பண்ணும்.

அதுவும் புள்ளைங்கள வச்சுட்டு .  அவன் மனசுல என்னதான் இருக்குன்னு தெரிஞ்சுக்க அப்படி கேட்டேன்”என்க,

அவர் தலையில் கை வைத்த கண்ணன் “உன் மனசுக்கு நல்லதே நடக்கும் கவலைப்படாத”என்றுவிட்டு சென்றுவிட்டார்.

மகன் வாழ்க்கை நினைத்து வாடும் தாய் ஒருபக்கம். மகள் இருக்கும் இடம் தெரிந்து கொண்டு அவர்களை கொல்ல கோபத்தோடு வரும் மீனாட்சியின் தந்தை மறுபக்கம் அடுத்து என்னதான் ஆகும்.

மீனா அப்பாவை பார்த்தாள் அடுத்து என்ன செய்வாள். கொலைவெறியில் வரும் சென்னப்பன் அடுத்து என்ன செய்ய போகிறார். பொருத்திருந்து பார்க்கலாம்.