உயிரின் துளி காயும் முன்பே – 8

முதன் முதலில்
பார்த்தேன் காதல் வந்ததே
எனை மறந்து எந்தன்
நிழல் போகுதே

என்னில் இன்று
நானே இல்லை காதல்
போல ஏதும் இல்லை
என்னில் இன்று நானே
இல்லை காதல் போல
ஏதும் இல்லை எங்கே
எந்தன் இதயம் அன்பே
வந்து சேர்ந்ததா

சிலர் இப்படித்தான் முதல் பார்வையிலே நம் இதயத்தைக் குளிர் தென்றலாய் வருடிச் செல்வர், சிலர் காலம் முழுதும் உடன் பயணம் செய்தாலும் நம் மனதில் ஒரு சிறு சலனத்தைக் கூட அவர்களால் ஏற்படுத்த முடியாது.

அலக்நந்தா பாரிவேந்தனின் வாழ்வில் அப்படி ஒருவள், முதல் பார்வையிலே அவனின் மொத்த இதயத்தையும் தன்னுடன் வாரிக்கொண்டு சென்றுவிட்டாள்.

சாரதா மூன்று நாட்களுக்குப் பிறகு வீடு வந்தபோது ராஜசேகர் கஞ்சி வைத்துக்கொண்டிருக்க அலக்நந்தா மூலையில் சுருண்டு படுத்திருந்தாள்.

கையில் பெரிய கட்டு போடப்பட்டிருக்க  “ஐயோ நந்தா என்னடா ஆச்சு” என்று அவள் அருகில் ஓடியவர் அவளை மடிதாங்கினார், சத்தம் கேட்டு எட்டிப் பார்த்த ராஜசேகர் அமைதியாய் நிற்க.

“மாமா என்னாச்சு ஏன் இப்படி கிடக்குறா” என்றார் அவரிடம், ராஜசேகர் விழிகள் நிறைந்தது, மகனின் மரணத்திற்கு பிறகு மருமகள் அனைவரிடமும் இருந்து கொஞ்சம் விலகி நிற்பதாகப் பட்டது அந்த மனிதருக்கு.

கணவனை இழந்த துக்கம் என்பதை அவர் புரிந்து கொண்டார், ஆனால் மித்ராவின் திருமணத்திற்கு பிறகு அனைவர் மீதும் ஒரு வெறுப்பு வந்துவிட்டது சாரதாவிற்கு, எத்தனை வருடங்களுக்குப் பிறகு மாமா என்ற அழைப்பு கூட.

இருவரின் அருகில் நெருங்கியவர் “ஒன்னும் இல்லாம கீழ விழுந்துட்டா கையில அடிபட்டிருக்கு தையல் போட்டிருக்காங்க” என்றவர்.

“இரு டீக்கொண்டு வரேன்” என்று அடுக்களை செல்ல  “இல்ல மாமா உக்காருங்க நான் போடறேன்” என்றவர் மூன்று பேருக்கும் தேநீர் கொண்டு வந்தார்.

மகளுக்கு நன்றாக ஆற்றி அவள் கையில் கொடுத்துத் தலை கோத அவள் அன்னையின் கையைப் பிடித்துக் கன்னத்தில் வைத்துக் கொண்டாள்.

“அம்மாக்கு உன் மேல எந்தக் கோவமும் இல்லடா, உன் அக்காவால இந்தக் குடும்பமே சிதைஞ்சு போச்சு இன்னொரு பொண்ணோட கண்ணீருக்கும் காரணம் ஆயிட்டோம், வயசான காலத்துல மாமா வேலைக்குப் போக இப்படி  வீட்ல  இருக்கோமேன்னு ஒரு இயலாமை”.

“மாமாக்கும் வயசாயிடுச்சு அவருக்கு அப்புறம் உன்ன நான் எப்படி பாத்துப்பேன் என்ன பண்ணுவேன்னு ஒரு பயம், எல்லாமே சேர்ந்து நான் என்னையே இப்படி…” என்றவர்.

“தப்புதான் உன்னைச் சரியா அம்மா கவனிக்கல மன்னிச்சுடுடா எது வந்தாலும் பாத்துக்கலாம் அம்மா இருக்கேன்” என்றவர் நெஞ்சில் சாய்ந்துகொண்டவளுக்கு அப்படியொரு நிம்மதி.

பணம் காசு இல்லையேல் போகிறது இருக்கும் உறவும் தள்ளி நிற்பது நரகம் அல்லவா, அடுத்த நாள் மருத்துவமனை அழைத்துச் சென்று கட்டை பிரித்து மாற்றிக் கட்டினர், மருந்துகளையும் வாங்கி கொண்டு வீடு வந்தனர்.

கையில் அடிபட்டதால் சரியாகக் குளிக்க முடியாமல் இருந்தவளுக்கு வெதுவெதுப்பான நீரில் தலைக்கும் சேர்த்து குளிக்கவைத்தார் சாரதா, நன்றாகத் தேய்த்து குளிப்பாட்ட உடலே லேசானத்தை போல இருந்தது நந்தாவிற்கு.

உடைகள் அணிவித்து சின்னக் குழந்தைக்குச் செய்வதை போல அனைத்தையும் செய்து, மிளகு ரசம் வைத்து இரவு உணவும் கொடுக்க நீண்ட நாட்களுக்குப் பிறகு நிம்மதியான உறக்கம் அந்தக் குடும்பத்திற்கு.

கைக்கொஞ்சம் சரி ஆன பிறகு வேலைக்குச் செல்லத் தயாரான நந்தாவை தடுத்தார் சாரதா “வேண்டாம் நீ இனிமே போகாத நான் பாத்துக்குறேன், நீ படிச்சு முடி” என்க.

அங்கே இருவரும் வேண்டும் வேண்டாம் என்று தர்க்கம் செய்தனர், ராஜசேகர் சாரதாவிடம் “நந்தா போகட்டும் நீ ஒரே ஆளு வேலைக்குப் போன கிடைக்குற எல்லா வேலையும் நேரங்காலம் பாக்காம செய்வ, மூணு பெரும் நம்மால முடிஞ்சது செய்லாம், நந்தா படிப்பு முடிஞ்சு ஒரு வேலை கிடைச்சா நமக்குக் கொஞ்சம் ஆறுதல் ஆகும்” என்க.

“நீங்க என்ன வேலைக்குப் போறீங்க” என்று இப்பொழுது மருமகளும் பேத்தியும் அவரிடம் சண்டைக்கு நின்றனர்.

“கஷ்டம்லாம் இல்ல மா அந்தச் சூப்பர்மார்கெட்ல பொட்டலம் போடுற வேல, அதும் உக்காந்துட்டே வேல முடியலைன்னா நின்னுடுறேன், நீங்கக் கவலைப்படாதீங்க “.

“ரெண்டு பெரும் வேலைக்குப் போயிடுவீங்க இவ அப்படியே காலேஜுக்கு போய்டுவா நான் இங்க விட்டத்த பாத்துட்டு சும்மா இருக்க கடுப்பா இருக்கு, நானும் போய் நாலு மனுஷங்க கூடப் பேசிட்டுவரேன், அப்படியே வேலையும் பாக்குறேன்” என்றவரை ஒன்றும் சொல்ல முடியவில்லை அவர்கள் வீட்டில் டி.வி கிடையாது பொழுது போக வேண்டுமே.

நந்தா வேலை செய்யும்  வீட்டிற்கு காலை எப்பொழுதும் போலச் சென்றபோது அவர்கள் அங்கே அனைத்தையும் பேக் செய்து கொண்டிருந்தனர்.

ஒரு நொடி அவளுக்குப் பதறி விட்டது “போகிறார்களா” என்று.

இவள் உள்ளே சென்றவுடன் “வா நந்தா உன்னைத்தான் எதிர் பாத்தோம் எங்களுக்கு வேற வேற பிரான்ச்சுக்கு மாத்தல் ஆயிருக்கு அதனால நாளன்னைக்கு இங்க இருந்து போறோம், நீ இன்னைக்கு வரலைனா வாட்ச்மென் கிட்ட கேட்டு உங்க வீட்டுக்கே வரலாம்னு இருந்தோம் இப்போ பரவாயில்லையா” என்றான் அவள் கையைக் காட்டி.

அவள் தலை மெல்ல அசைந்தது  “உன் கஷ்டம் எங்களுக்குப் புரியுது, நாங்க செக்யூரிட்டி ஆபிஸ்ல சொல்லி வெச்சுருக்கோம், செக்ரட்ரிகிட்டயும் சொல்லிருக்கோம் யாரவது வேலைக்கு ஆள் வேணும்னு கேட்டா உன் நம்பர் குடுக்க சொல்லி இருக்கோம், வேற வீட்ல வேலை கிடைக்கும் கவலைப்படாத” என்க அவள் என்ன சொல்ல முடியும்.

அவள் கையில் ஒரு மாத சம்பளத்தை வைத்தவர்கள் அவளை வாழ்த்தி அனுப்பினர், அடுத்து என்ன என்ற எண்ணம் மட்டுமே இப்பொழுது, செக்யூரிட்டி ஆபிஸ் அருகில் வந்தவள் தானும் ஒரு முறை நினைவு படுத்திவிட்டு வீட்டிற்கு சென்றாள்.

அடுத்த நாள் மற்ற இரு வீடுகளிலும் வேலையை முடித்துவிட்டு கீழிறங்க “அம்மா நந்தா” என்று அழைத்தார் செக்யூரிட்டி.

 “சொல்லுங்கன்னா” என்று இவள் அருகில் செல்ல, “அந்த லக்க்ஷரி அப்பார்ட்மெண்டல பிலிம் டேரக்டர் வீட்ல வேலைக்கு ஆள் கேட்டாங்க,  நீ போய்ப் பாரு உனக்கு ஓகேனா அங்கேயே போலாமே” என்றார் அவர்.

“சரின்னா” என்றவள் மீண்டும் உள்ளே நடந்தாள், அங்கே அத்தனையும் ஆடம்பரம் தான், இந்தப் பக்கம் இரண்டு மூன்று படுக்கை அறைகள்  கொண்ட வீடுகள்.

இடையில் ஒரு சின்னத் தோட்டம் மற்றும் குழந்தைகள் விளையாடப் பூங்கா, அதன் அந்தப்பக்கம் மிக ஆடம்பர வீடுகள் நான்கு படுக்கை அறைகள் கொண்டது பெரிய பால்கனி, மற்றும் அவர்கள் கேட்கும் விதத்தில் வீட்டின் உள் அமைப்புகளை  மாற்றியும் தருகிறார்கள், அங்கே இரண்டாம் தலத்தில் சம்பத்தும் அதன் நேரே மேலே மூன்றாம் தலத்தில் பாரிவேந்தன் வீடும் இருக்கிறது.

நேரே சென்று இரண்டாம் தளத்தின் டூ.பி வீட்டின் முன் நின்றவளின் பார்வையை நிறைத்தான் கருப்பு டீ ஷர்ட் ட்ராக் பேண்டில் ஒரு கையில் சிகரெட் புகை கக்க மறுகையில் அலைபேசியில் யாரையோ வறுத்துக்கொண்டிருந்த பாரிவேந்தன்.

கதவு திறந்திருக்க ஹாலில் நடந்து கொண்டிருந்தான், அந்தப் பக்கம் இருப்பவர் எந்த ஜென்மத்தில் செய்த பாவமோ இவனிடம் வந்து சிக்கிவிட்டார் என்று எண்ணியவளுக்கு முதல் முறை தன்னை பார்த்தபோது தன்னையும் திட்டினானே என்று மூலையில் மணி அடித்தது.

அவள் மூளை அங்கே ஊரைச் சுற்றிக்கொண்டிருக்க, அவள் வந்த அடுத்த நொடி அவன் புலன்கள் அனைத்தும் விழித்துக் கொண்டது “வேலைய முடிச்சுட்டு கூப்பிடுங்க” என்று அழைப்பைத் துண்டிக்க அந்தப் பக்கம் பேசியவன்  தெறித்து ஓடியிருப்பான்.

அவன் விழிகள் அவளை மொத்தமாக ஆராய்ந்தது கையில் சிறிதாகப் பாண்டேஜ் போட்டிருந்தாள்.

பாரிவேந்தன் மனதளவில் மிகவும் உடைந்திருந்தான், அவள்மீது காமம் அல்ல தாயை தேடும் ஒரு சிசுவை போல அவள் அணைப்பில் சுருண்டுவிட ஏங்கியது அவன் மனதும் உடலும்.

என்ன யோசித்தும் அவளின் மீதான இந்தப் பயித்தியக்கார தனமான பிடித்ததிற்கு அவனால் காரணத்தைக் கண்டுபிடிக்க இயலவில்லை, அவனுடைய வாழ்வின் ஒட்டுமொத்த நிம்மதியும் அவள் ஒருவளிடம் கொட்டிக்கிடப்பதாக நம்பினான்.

உள்ளுக்குள்ளே அவனைச் சிதைத்துக் கொண்டிருந்தாள் அலக்நந்தா, அவளால் சிதைந்து மீண்டும் அவளாலே அவளுக்காகவே தன்னை மீட்டுக் கொண்டிருந்தான்  “என்ன செய்கிறாயடி என்னை” என்று தவித்து நின்றான்.

“இவர் எப்படி இங்கே, இவர் வீடா!! ஐயோ அலக் இப்படி சிங்கத்துக்கிட்ட சிங்குலா வந்து சிக்கிட்டியே, இவர் டேரக்டரா என்ன படம் எடுத்துருப்பாரு” என்று அவள் மூளை ஊர்ச்சுற்றி ஹாலின் நடுவில் வந்து நிற்க அறையின் உள்ளிருந்து வெளியில் வந்தான் சம்பத்.

 “உள்ள வாம்மா” என்றான் நந்தாவிடம்.

அவள் தயங்கி தயங்கி உள் நுழைந்தாள்  “வேலைக்கு…” என்று அவள் இழுக்க, “ஆமா நான் சொல்லியிருந்தேன்  என் மனைவியும் குழந்தையும் இன்னும் நாலு நாள்ல ஊர்ல இருந்து வருவாங்க, வீட்ல கிளீனிங் வேல அப்புறம் காலைல மதியம் சமையல் பண்ணனும் உனக்கு ஒகே வா” என்க.

அவள் பார்வை தன்னாலே பாரிவேந்தனிடம் சென்றது, கைகளைக் கட்டிக்கொண்டு பால்கனி கம்பியில் சாய்ந்து நின்று அவளையே பார்த்திருந்தான்.

மெலிதாக நடுக்கம் பிறந்தது நந்தாவிற்கு, அவள் எந்தத் தவறும் செய்யவில்லை என்றாலும் தன் தமக்கையால் அவர்கள் படும் துன்பம் அறிந்தவள் ஆயிற்றே.

நிச்சயம் அவனுக்குத் தான் இங்கே வந்ததில் விருப்பம் இருக்காது அவனிடம் மீண்டும் திட்டு வாங்கும் முன் சென்று விட வேண்டும்  என்று எண்ணியவள்.

“நான் இங்க வேலைக்கு வந்தா சரியா வராது நீங்கன்னு தெரியாம வந்துட்டேன், வேற நல்ல ஆளா பாருங்க” என்று வெளியேறத் திரும்ப, பாரியை திரும்பிப் பார்த்த சம்பத்தை அவன் அழுத்தமாகப் பார்த்தான் “அவளை இங்கே இருக்க வை” என்றது அவன் பார்வை.

“அடுத்த கொழந்த பெத்துக்கறதா பத்திலாம் யோசிக்க விடமாட்டான் போல… இவன் அப்பா வெட்டுவாரா மாமனார் வெட்டுவாரான்னு பயத்துலே என் இளமை போய்டும் போல ஆண்டவா உனக்குக் கண் இல்லையா”  என்று மனதில் புலம்பியவன்.

“நந்தா ஒரு நிமிஷம், இது என் வீடு இதுக்கும் அவங்களுக்கும் சம்மந்தம் இல்ல, இதுல முடிவை நீ எங்களை மட்டும் பார்த்து எடுமா” என்க.

அன்று மருத்துவமனைக்கு அவன் கொண்டு சென்றது, உதவி செய்தது அனைத்தும் ராஜசேகர் கூறி அறிந்திருந்தாள், அவளால் மறுத்துச் சொல்ல இயலவில்லை “சரி சார் வரேன்” என்க.

“அண்ணான்னு  கூப்பிடுமா சார் என்னமோ மாதிரி இருக்கு” என்றான் உரிமையாக, அவள் மண்டையை நன்றாக ஆட்டினாள்.

“முடிஞ்சா நாளைக்கு வந்து வீட கொஞ்சம் கிளீன் பண்ணிடுமா, அப்புறம் சூர்யாவும் குழந்தையும் வந்ததும் வந்தா போதும்” என்றான் “சரிண்ணா” என்றவள் வேகமாக அங்கிருந்து வெளியேறினாள்.

நண்பனைத் திரும்பிப் பார்த்த சம்பத்துக்கு இரவு அவன் பேசியது மீண்டும் நினைவு வந்து  தன்னுடைய  ஒளிமயமான எதிர்காலம் கண்முன்னே படமாய் ஓடியது.

இரவு நடந்ததை சுருள் படமாக அவள் மூளை மீண்டும் ஓட்டிக்காட்டியது.

ஊருக்குச் சென்று வந்ததிலிருந்து சம்பத் கொஞ்சம் வருத்தத்தில் இருந்தான், சூர்யபிரிய அவனின் மனைவி ஏற்காடு அவளின் ஊர் திருமணம் முடிந்து சென்னை வந்த புதிதில் இந்த வெயிலும் மாசும் அவளுக்கு ஒத்துக்கொள்ளவில்லை.

மெல்ல மெல்ல இங்கே பழகிக்கொண்டாள் என்றாலும் இன்றும் அவளுக்கு இங்கே கொஞ்சம் தடுமாற்றமே, மகளைத் திருமணம் செய்து அனுப்பிவிட்டு சிறிது மாதங்களுக்குப் பிறகு காண வந்த அவளின் பெற்றோர் நான்கு நாட்கள் கூட இங்கே தங்க முடியாமல் ஊருக்குச் சென்றுவிட்டனர்.

சூர்யபிரியாவின் தாய்க்கு உடலில் கொப்பளங்கள் வந்து மிகவும் அவதியுற்றார் ஏனோ அவர் உடல்நிலை இந்த வெப்பத்தை தாங்கவில்லை.

மகள் தாய்மை அடைந்ததை அறிந்து ஆசையில் ஓடி வந்தவர் வயிற்றுப்போக்கால் மருத்துவமணையில் படுத்துவிட்டார், அதனால் ஐந்தாம் மாதம் வளைகாப்பு நடத்தி சூர்யாப்ப்ரியாவை அங்கேயே அழைத்துக்கொண்டனர்.

சம்பத்துக்கு தாய் இல்லை தந்தை மட்டுமே அவரும் ராசிபுரத்தில் கிராமத்தில் இருக்கிறார் விவசாயம் பார்த்துக்கொண்டு, சூர்யபிரிய சம்பத்தின் சொந்த அத்தை மகள் அவனுக்கு அவள் என்பது எப்பொழுதோ முடிவானது, அதில் அவர்கள் இருவருக்கும் விருப்பமும் கூட.

சூர்யபிரிய பிறக்கும்போதே இடது கையில் குறையோடு பிறந்தவள் முழங்கை வரை மட்டுமே இருக்கும், அதை ஒரு குறையாகச் சம்பத்தோ அவனின் தந்தையோ கருதவில்லை.

தங்கை மகள் தங்கள் வீட்டிற்க்கே மருமகளாக வர வேண்டும் என்று விரும்பினார், அப்படி அவளின் கல்லூரி படிப்பு முடிந்ததும் அவர்கள் திருமணம் நடந்தது.

குழந்தையை எடுக்கவும் பார்த்துக்கொள்ளவும் அவளுக்குக் கொஞ்சம் சிரமங்கள் இருந்தது அதனாலே மகளை அனுப்ப மனமின்றி அங்கேயே வைத்துப் பார்த்துக்கொள்கிறார்கள்.

கணவனைப் பிரிந்து இருப்பது அவளுக்கும் வருத்தம் அளிக்கிறது, நம்பிக்கியான ஒரு ஆள் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று அனைவரின் சிந்தனையும் இருந்தது.

அலக்நந்தாவை தன் அருகில் கண்பார்வையில் வைத்துக்கொள்ள வாய்ப்பைத் தேடிக்கொண்டிருந்த பாரிவேந்தனுக்கு “கண்ணா லட்டு திங்க ஆசையா” என்று வந்து சேர்ந்தது ஐ.டி இளைஞர்கள் காலி செய்வது, பிடித்துக்கொண்டான் அன்று இரவே செக்யூரிட்டி ஆஃபிஸில் சொல்லி வைத்துவிட்டான், ஆள் வேண்டுமென்று.

எப்படியேனும் அவளைச் சம்பத்தின் வீட்டில் முதலில் கொண்டுவர வேண்டும் அவளை நெருங்க வேறொரு வழியும் இல்லை, தான் சாதாரணமாகச் சென்று பேச இயலாது, இப்பொழுது இருக்கும் ஒரே வழி அவளை வேலைக்கென்று அழைப்பது.

அங்கிருந்து நேரே நண்பனைக் காண வந்தவன் “சூர்யாவையும் குழந்தையையும் இந்த வீக் கொண்டுவந்து விடச்சொல்லு” என்க.

“என்னடா சொல்ற வந்தா யார் பாப்பாங்க” என்றவனிடம்  “அலக்நந்தா” என்று கூறி அவன் தலையில் இடியை இறக்கினான் பாரிவேந்தன்.

வாய் பிளந்து அவனைப் பார்த்திருந்த சம்பத்தை பார்த்தவன் “அவ இங்க வரணும்” என்றான் அழுத்தமாக.

 “இது சரி இல்ல பாரி அவங்க அக்கா செஞ்ச தப்புக்கு அந்தப் பொண்ண பழிவாங்கப் போறியா” என்றான் சம்பத் கோபமாக.

அமைதியாக நின்ற பாரிவேந்தன் பின் கழுத்தில் கைவைத்து தலை சாய்த்து, விழிமூடி… மனதின் அடி ஆழத்திலிருந்து ஆத்மார்த்தமாகச் சொன்னான்   “ஐ லவ் ஹேர் மோர் தன் ஐ லவ் மைசெல்ப்” என்று.

உலகை உலகை உன்னால் வெறுத்தேன்
உறவாய் உறவாய் உனையே நினைத்தேன்
இந்த உலகெல்லாம் நான் இழந்தாலும்
என் பனிப் பூவே உன்னை பார்த்தால் போதும்.