உயிரின் துளி காயும் முன்பே – 3

நேரத்தோடு வந்துவிடுவேன் என்ற அலக்நந்தாவை இன்னும் காணவில்லை, நேரம் இரவு ஏழு மணியைக் கடந்துகொண்டிருந்தது அவளுடைய அலைபேசிக்கு பலமுறை அழைத்து அவர் ஓய்ந்துவிட்டார்.

காலேஜ் பாகில் வைத்திருந்த செல்போன் அடித்து அடித்து உயிரை விட்டுவிட்டது, பயம் மெல்ல அவரைப் பிடித்து ஆட்டப் பெரும் யோசனைக்குப் பிறகு சங்கமித்ராவின் எண்ணிற்கு அழைத்துவிட்டார்.

அலைபேசியின் ஒலியில் கலைந்தவள் “தாத்தா” என்று சத்தமாகவே அழைத்துவிட்டாள், நீண்ட ஏழு வருடங்கள்… யாரேனும் ஒருவர் தன் குடும்பத்திலிருந்து அழைத்துவிட மாட்டார்களா என்று காத்திருந்தாள், ஆனால் இன்று வரை யாரும்  அழைக்கவில்லை.

இன்று தாத்தா அழைத்திருக்கிறார் “தாத்தா” என்றவள் அழைப்பில் அந்தப் பக்கம் ஒரு நொடி மௌனம் “என் பேத்தி அங்க இருக்காளா” என்றவர் கேள்வியில்  “தாத்தா நானும் உங்க பேத்திதானே” என்றாள் அழுகையோடு.

“எனக்கு இருக்குற  ஒரே உறவு அவதான் தயவு செஞ்சு என் நந்தா எங்கன்னு சொல்லு” என்றவரிடம் வேறு என்ன பேச.

“அவளை ******** ஹாஸ்பிடல்ல சேத்திருக்கேன்”  என்க “ஐயோ என் பேத்திக்கு என்ன ஆச்சு” என்று பதறினார்.

“ஒன்னும் இல்ல சின்ன அடி தான் நான் பாத்துக்குறேன், நானே கொண்டு வந்து வீட்ல விடுறேன்” என்க “முடியாது” என்று பிடிவாதமாக நின்றார் அவர்.

“இப்போவே வரேன்” என்று நிற்க “சரி ஆட்டோ பிடிச்சு வாங்க, நான் வெளியே நிக்குறேன்” என்று கூறி கட் செய்தாள்.

“என்னிடம் எப்படி இருக்கிறாய்” என்று கூடக் கேட்க வில்லையே என்று மனம் விம்மியது, உன்னிடம் அவர் பேசுவதே பெரிது வேறு எதுவும் எதிர்பார்க்காதே அதும் நந்தா என்பதால் மட்டுமே உன்னிடம் பேசி இருக்கிறார் இல்லையேல் உயிரே போனாலும் உன்னிடம் பேசுவாரா என்ற மனசாட்சியின் குத்தலில் உதடு கடித்து அழுகையை அடக்கினாள்.

 அரைமணி நேரத்தில் வந்து சேர்ந்தார், தங்களின் தாத்தா ராஜசேகரா இவர் என்று அவளுக்கு மனம் வேதனை கொண்டது, ஆள் மெலிந்து ஏதோ வாழ்கிறேன் என்னும் நிலையில் வந்து நின்றார்.

“நந்தா எங்க, எனக்கு என் பேத்தியைப் பாக்கணும்” என்றவரை அழைத்துச் செல்லக் கைநீட்ட “வேண்டாம்” என்று மறுத்து அவளுடன் நடந்தார்.

சம்பத் பாரியின் அறையில் இருந்தான், அவன் நல்ல உறக்கத்தில் இருக்க இவன் சேரில் சாய்ந்து அமர்ந்திருந்தான், அலக்நந்தாவிற்கு வைத்தியம் நடந்துகொண்டு இருக்க இவர்கள் வெளியில் அமர்ந்தனர்.

மருத்துவரைப் பார்த்ததும் சங்கமித்ரா எழுந்து அருகில் செல்ல “கைல தையல் போட்டாச்சு காயம் கொஞ்சம் ஆழம்தான்”.

“தலைக்கு நாளைக்கு ஸ்கேன் பண்ணிடலாம், ஒன்னும் பிரச்னை இல்லனா நாளைக்கே வீட்டுக்குப் போய்டலாம் ரொம்ப கைக்கு வேலை குடுக்காம பாத்துக்கணும்” என்றவர் கடந்து செல்லச் சங்கமித்ராவை கேள்வியாகப் பார்த்தார் ராஜசேகர்.

கொஞ்சம் தடுமாறியவள் அங்கு நடந்த அனைத்தையும் கூறிவிட்டாள், அவர் அவளிடம் ஒன்றும் பேசவில்லை அமைதியாகச் சென்று அமர்ந்துவிட்டார்.

பேசியாயிற்று அவளிடம்… காலில் விழாத குறையாகக் கெஞ்சினார்கள் எல்லோரையும் தூக்கி  எரிந்து சென்றபிறகு மனம் விட்டுப் போனது எல்லோருக்கும்.

தன் மருமகள் சாரதாவின் குணம் இப்படி மாறிப்போனதின் காரணமும் இவள் தானே என்று தோன்ற அமைதியாகவே அமர்ந்து கொண்டார்.

இடையில் சம்பத் வந்து விவரம் கேட்டு உணவு வாங்கி தந்தான், குழந்தைக்குக் கொடுத்து அவளும் உன்ன ராஜசேகர் அதைத் தொடக்கூட இல்லை விடியும் வரை பழைய நினைவுகளில் உழன்று கொண்டிருந்தனர் இருவரும்.

காலை அவனை வீட்டிற்கு செல்லலாம் என்று கூற நண்பர்கள் இருவரும் வெளியில் வந்தனர், சங்கமித்ராவின் அருகில் சென்ற சம்பத் “ஸ்கேன் பண்ணதும் என்னனு எனக்கு இன்போர்ம் பண்ணுங்க” என்க.

அவள் “சரி” என்று தலை அசைத்தாள், பாரி அவரையே பார்த்திருந்தான்.

பலமுறை நனைத்து சாயம் போன ஒரு சட்டை அவரின் உடலுக்குப் பொருந்தாமல் தொளதொள என்று இருந்தது, நேற்று மாலை அவளைப் பார்த்தபோதும் அப்படிதான் நிறம் மங்கிய ஒரு சுடிதார் அணிந்திருந்தாள் என்று ஓடிய எண்ணத்தைத் தடை செய்தான்.

தலை வலி வின்வின் என்று தெறித்தது இனி வீட்டிற்கு சென்றால் ஒரு பஞ்சாயத்து இருக்கும், சம்பத் வந்து இவனுடன் இனைய இருவரும் லிப்ட் நோக்கி நடந்தனர்.

“தம்பி ஒரு நிமிஷம்” என்றவரின் குரலில் இருவரும் திரும்ப வேகமாகச் சம்பத்தை நெருங்கியவர் “இங்க வெச்சு வைத்தியம் பாக்கற அளவுக்கு எங்களுக்கு வசதி இல்ல தம்பி அனுப்ப சொல்லுங்க நான் கவர்மெண்ட் ஆசுபத்திரிக்கு கூட்டிட்டு போறேன்” என்று அவனிடம் அவர் வேண்டி நின்றார்.

“இல்லங்க தப்பு எங்க மேலயும் இருக்கு கவனிக்காம நாங்கதான்” என்றவனை தடுத்தவர் “இல்லத்தம்பி எங்களுக்கு நேரம் சரி இல்ல உங்க மேல என்ன தப்பு, நீங்க என் பேத்தியை அனுப்ப சொல்லுங்க” என்று பிடிவாதமாக நிற்க.

 “நாங்க காசு கட்டிடுறோம் எல்லா செலவும் எங்களோடது” என்றவனை மீண்டும் “வேண்டாம்” என்று மறுத்தவர், தன் வேஷ்டி மடிப்பிலிருந்து ஒரு சிறிய பொட்டலத்தை வெளியில் எடுத்தார்.

அதைச் சம்பத் கையில் வைத்து அழுத்தி “இங்க எப்படியும் இதைவிட அதிகமா ஆயிருக்கும் இனிமேலும் செலவு செய்ய முடியாது, இப்போதைக்கு இதுதான் இருக்கு எங்களை அனுப்பிடுங்க தம்பி உங்களுக்குப் புண்ணியமா போகும்” என்றவர் கைகூப்ப.

“ஐயோ என்ன பண்றீங்க இருங்க நான் சொல்றேன்” என்றவன் அவருடன் மருத்துவர் அறை நோக்கி நடந்தான், அவரிடம் பேசி டிஸ்சார்ஜ் செய்ய ஏற்பாடு செய்து வெளியேறினர்.

காரில் சென்று அமர்ந்தவன் கையில் இருந்த பேப்பரை பார்க்க அழகான கிளிக்கூண்டு ஜிமிக்கி இரண்டு, எப்படியும் அரை பவன் இருக்கும் அவன் அதிர்ச்சியாக நண்பனைப் பார்க்க அவன் விழிகள் கோபத்தில் சிவந்து இருந்தது.

“பாரி கோவப்படாதடா அவர் நம்ம கிட்ட காசு வாங்க விரும்பல” என்க விழிமூடி சீட்டில் சாய்ந்துவிட்டான்.

அலக்நந்தாவை அரசு மறுத்துவமணை அழைத்துச் சென்று மிச்சம் இருந்த மருத்துவம் பார்த்து வீட்டிற்கு அழைத்து வர இரவானது, வரும் வழியில் இட்லி வாங்கி வந்திருக்க குளிக்க வேண்டும் என்றாள் அவள்.

அவர் காவல் இருக்க எப்படியோ கஷ்டப்பட்டு ஒரு கையால் குளித்து வெளியில் வந்தாள், உள்ளாடை ஒன்றும் அணியமுடியவில்லை இயலாமையில் விழிகள் நிறைந்தது.

“ஒன்னும் இல்லடா சரியாயிடும்” என்று தேற்றியவர் அவளுக்கு உணவை ஊட்டிவிட உண்டு முடித்து மருந்தைச் சாப்பிட்டு அறையில் சென்று படுத்துவிட்டாள், ஸ்கேன் செய்ததில் ஒன்றும் பிரச்சனை இல்லை என்று கூறிவிட்டனர் அதுவே பெரிய நிம்மதியாக இருந்தது.

கொஞ்சம் நாட்களுக்கு வேலைக்குச் செல்ல முடியாது எப்படி சம்மாளிக்க என்று இப்பொழுதே கவலை கழுத்தை நெரித்தது, ராஜசேகர் முடிவு செய்துவிட்டார் அவள் சரி ஆகும் வரை ஏதேனும் வேலைக்குச் செல்வது என்று வேறு வழியும் இல்லை அவர்களுக்கு.

அந்தப் பெரிய அரண்மனை போன்ற வீட்டின் கார் போர்ச்சில் காரை நிறுத்திய சம்பத் “பாரி வீடு வந்துடுச்சு” என்க.

“ஹ்ம்ம்” என்றவன் சில நொடிகள் கடந்தே இறங்கினான்.

“டேய் அவங்க ஏதாவது பேசினா உடனே வாள் எடுக்கத்தாடப்பா பாரிவேந்தனே… கோவத்தை குறைச்சுக்கோ அடலீஸ்ட் காயம் சரி ஆகுற வரைக்கும்” என்க.

நண்பனை அவன் பார்த்த பார்வையே “நீ சொன்ன எதையும் நான் கேட்கப் போவதில்லை” என்று கூறியது.

“ரைட்டு நீ நடத்து ராஜா, ஆண்டவா நான் எந்தச் சேதாரமும் இல்லாம வீட்டுக்குப் போய்டணும்” என்று வேண்டிக்கொண்டு பாரிவேந்தனை முன்னே விட்டு அவன் பின்னே வீட்டிற்குள் சென்றான்.

எதிர் பார்த்தது போலவே சபை நிறைந்து இருந்தது மகனைத் தலையில் கட்டுடன் பார்த்த சுமதி பதறி அருகில் ஓடி வந்து “என்னாச்சுப்பா எப்படி அடி பட்டுச்சு” என்று அவன் கன்னம் பற்ற.

 “எப்படி ஆயிருக்கும் நல்லா குடிச்சுட்டு கூத்தடிச்சுருப்பாரு உங்க புள்ள, நேத்து ராத்திரி கம்பனி குடுத்தது எந்த ஹீரோயின்” என்று நக்கல் குரலில் கேட்டுக்கொண்டே ஹாலில் வந்து நின்றாள் பாரிவேந்தனின் தர்மபத்தினி வீணா.

சுமதியின் பார்வை கண்டனமாக அவளின்  மேல் பதிய  “வீணா பாத்து பேசு” என்ற அதட்டலோடு வந்து நின்றாள் அந்த வீட்டின் மூத்த மருமகள், வீணாவின் உடன்பிறந்தவள் இந்த வீட்டின் மூத்த வாரிசு சச்சிதானந்தனின் மனைவி வானதி.

“என்ன நடந்துச்சுனு தெரியாம உன் இஷ்ட்டத்துக்கு பேசாத” என்றவள் “முக்கியமா அவரைக் கேள்வி கேக்குற உரிமையை நீ இழந்துட்ட” என்றாள் ஆத்திரத்தோடு.

“என்ன தெரியாம பேசுறேன் இவங்க இப்டித்தான்னு தெரியாதா, அதும் தோ நிக்குறாரே ஆருயிர் நண்பர் அவர் தான் யாரையாவது ராத்திரி கூட்டிக்……” என்று முடிக்கும் முன் கண்களில் பொறி பறந்தது.

உக்கிர மூர்த்தியாக அவள் முன் நின்றவன் “கெட் அவுட்”  என்று கர்ஜித்து அவன் அரை நோக்கி மேலேற.

சுமதியின் அருகில் வந்த சம்பத் “அவன் இன்னும் சாப்பிடல சாப்பாடு குடுத்து இந்த மெடிசின் குடுங்கம்மா” என்றவன் வீணாவை அருவருப்பான ஒரு பார்வை பார்த்து வெளியேறினான்.

மகேந்திரன் ஸ்தம்பித்து நிற்க, பல்லைக் கடித்து நின்றிருந்தார் மகேந்திரனின் ஆருயிர் நண்பர் மாதவன், இந்தக் குடும்பத்திற்கு இரு மகள்களை மனம் முடித்துக் கொடுத்த மகராசன், ஆனால் என்ன செய்ய இருவருமே வாழவில்லையே.

மகளைக் கோபமாகப் பார்த்திருந்த அவளின் தாய் ராதிகா “எவ்ளோ பட்டாலும் நீ திருந்த மாட்ட உனக்கு ஒரு அடியோடு விட்டுட்டார் அது தான் எனக்கு வருத்தம், இப்படி எல்லாம் பேச எங்க இருந்து கத்துகிட்ட… உன்ன நான்தான் பெத்தேனா” என்றவர் கிட்சன் செல்ல அவர் பின்னே சென்றாள் வானதி.

அவள் எதிர்ப்பார்த்த போலே மாமியார் சுமதி விழி நீரை  துடைத்துக்கொண்டே மகனுக்கு உணவை எடுத்துக்கொண்டிருந்தார், அவரின் அருகில் சென்றவள் “அத்தை நகருங்க நான் செய்றேன்” என்று அவள் எடுத்து வைக்க.

“அண்ணி” என்று அவர் கையைப் பற்றிய ராதிகா “மன்னிச்சுடுங்க அண்ணி” என்க.

“விடு ராதிகா, என் பெரிய பையன் என் மூத்த மருமக வாழ்க்கையை நாசம் பண்ணிவிட்டான்,  என் சின்ன மகன் வாழ்க்கை உங்க சின்ன மகளால இப்படி ஆயிடுச்சு,  ரெண்டு புள்ளைங்க பெத்தும் ஒருத்தர் கூட நல்லா வாழறத பாக்க முடியல” என்றவர் குரல் இடறியது.

வானதியின் விழிகள் நிறைந்து கைகள் தடுமாற அங்கிருந்து உடனே வெளியேறினாள்.