பள்ளியின் அருகே நெருங்கியவள் கொஞ்சம் தயங்கி நின்றாள், தன்னை அவர்கள் உள்ளே விட வாய்ப்பு இல்லை என்று அவளுக்குத் தோன்றியது.
பிறகு? அந்தப் பள்ளியின் கேட்டைப் பார்த்தாலே சாமானியமானவர்கள் பத்தடி தள்ளி நிற்பார்கள், கோடீஸ்வரர்களின் பிள்ளைகள் மட்டும் படிக்கும் பிரபலமான பள்ளி, அங்குப் பயலும் பிள்ளைகளே ஏ.சி காரில் மட்டுமே வருபவர்கள்.
ஒரு ஓட்டை சைக்கிள் மிதித்துக் கொண்டு வந்து நிர்ப்பவளை எப்படி உள்ளே விடுவார்கள், அங்கு இருந்த வாட்ச்மேனிடம் சென்று விவரம் கூற அவர் நம்பாத பார்வை பார்த்தார்.
“உள்ள பி.டி சார் இருப்பார், அவர் கூட அத்வைத்ன்னு ஒரு பையன் இருப்பான் அஞ்சு வயசு அவன்கிட்டயே கேளுங்க” என்றவள் வெளியில் இருந்த மரத்தின் நிழலில் கால் நீட்டி அமர்ந்துவிட்டாள் கால் வலி உயிர் போனது.
உள்ளே சென்றவர் சில நொடிகள் கழிந்து மீண்டும் வந்து “உங்கள உள்ள கூப்பிடுறாங்க” என்க.
“அடே… ஏண்டா சாவடிக்கிறீங்க வெளில கொண்டு வந்து விட்டா என்ன” என்று அவர்களைத் தாளித்துக் கொண்டே உள்ளே சென்றாள்.
அவளைக் கண்டவுடன் அத்வைத் ஓடி வந்து கட்டிக்கொண்டான், பி.டி சாரிடம் தன் விவரங்களைக் கூறி நன்றி உரைத்துப் பிள்ளையை அழைத்துக்கொண்டு வெளியேறினாள்.
“அத்து ஜூஸ் குடிக்கிறியா” என்றாள் தன் கையில் இருந்த நூறு ரூபாயை பார்த்துக்கொண்டே.
“சரி சித்தி” என்று அவன் சொல்ல, ஒரு நல்ல கடையில் நுழைந்து அவனுக்கு ஒரு மில்க்ஷேக் வாங்கிக்கொடுத்து, அங்கிருந்த சில் தண்ணீர் கேட்டு வாங்கி ஒரு கிளாஸ் குடித்துக்கொண்டாள்.
உணவு கொடு என்று வயறு இறைந்து கொண்டிருந்தது, அவன் குடிக்கும் வரை காத்திருந்தவள் தாத்தாவிற்கு அழைத்து விவரத்தைக் கூற.
“என்னடா இது புது பிரச்னை, நீ தனியா போய்டுவியா?? இப்போவே இருட்ட போகுது எப்படி வருவ” என்றார் கவலையாக.
“அத்துவ வீட்ல விட்டவுடன் கெளம்பிடுவேன் தாத்தா, வீட்டுக்குள்ள கூடப் போகமாட்டேன் எனக்கு அங்க என்ன வேலை” என்க “அதும் சரிதான் சீக்கிரம் வந்துடு” என்றவர் அழைப்பைத் துண்டித்தார்.
நம்முடைய எண்ணம்போல் அனைத்தும் நடந்து விடுமா என்ன?? நூலை ஆட்டுபவன் எந்தப் பக்கம் இழுப்பான் என்று யார் அறிவார் அவனை அன்றி.
ஒரு வழியாக அவனோடு அவர்கள் வீடு இருக்கும் தெருவை நெருங்கினாள், அனைத்தும் பங்களாக்கள் குட்டியும் பெரிதுமாக எங்கும் பணத்தின் செழுமை நிறைந்து கிடந்தது, அந்தத் தெருவின் இறுதியில் இருந்த பங்களாவின் முன் சென்று நின்றாள்.
“உள்ள போ” என்று அவனிடம் கூற “நீ வா சித்தி” என்று நின்றான் அவன்.
“நான் வீட்டுக்குப் போகணும் அத்து, தாத்தா தனியா இருக்கார்” என்க “ப்ளீஸ் சித்தி வந்துட்டு உடனே போ” என்று பிடிவாதமாக நின்றான்.
வீட்டின் தோட்டம் கடந்து கார் பார்க்கிங் கடந்து வாசலில் விட்டுச் செல்லலாம் என்று எண்ணி உள்ளே அவன் கைப்பிடித்து நடக்க, இரண்டு புதிய கார்கள் நின்றது, அதன் பெயர் கூட அவளுக்குத் தெரியவில்லை மிக விலை உயர்ந்த கார்கள் என்று பார்த்தாலே தெரிந்தது.
வீட்டை நெருங்க நெருங்கச் சிங்கத்தின் கர்ஜனையை போல ஒரு குரல் “வேற ஒரு பெண்ணோட வாழக்கையை அழிக்கிறோம்னு ஒரு சின்ன உறுத்தல் கூட இல்லையா உங்களுக்கு” என்றவன் குரலில் அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிட்டாள்.
அதே வார்த்தைகள் ஏழுவருடங்கள் முன்பு கேட்ட அதே வார்த்தைகள் ஆனால் இப்பொழுது கேட்கும் குரல் மட்டும் வேறு.
“போதும் பாரி போலாம்டா, நீ ஏன் டா இங்கலாம் வர இவங்க கிட்ட பேசி என்ன ஆகப் போகுது” என்றான் உடன் நின்ற நண்பன் சம்பத்.
சோர்வாகச் சோபாவில் விழுந்தவன் தலை பின்னால் சாய வாசல் படியில் நின்ற இருவரும் தலை கீழாகத் தெரிந்தனர், அப்படியே பார்த்திருந்தவன் சட்டென்று எழுந்து திரும்பிப் பார்த்தான்.
“சித்தப்பா” என்று ஓடி வந்த அத்வைத் அவன் காலைக் கட்டிக்கொள்ள அவனின் தலை கோதியவன் பார்வை வாயிலில் நின்றிருந்தவள் மீது அழுத்தமாகப் பதிந்தது.
அழகோவியம் ஒன்று தூசி படிந்து இருப்பதை போல நின்றிருந்தாள், அப்படியே அத்வைதின் தாயின் முகச்சாயல் ஆனால் அவளைவிடப் பேரழகி.
பால் பழம் உண்டு பஞ்சு மெத்தையில் உறங்கி வெயில் படாமல் இருப்பவள் சங்கமித்ரா, அந்தப் பொலிவும் பளபளப்பும் அவளிடம் மிஞ்சி நிற்கும் செழுமையாகத் தெரிவாள்.
ஓயாமல் ஓடி ஓடி உழைத்து வெயிலில் வாடுபவள் அலக்நந்தா அந்த வாட்டம் அவள் முகத்திலும் தெரிந்தது, ஆனால் அந்தக் கண்கள்… கோலிக்குண்டு கண்கள் பெரிய இமை பீலிகள் குடை போல அவள் கண் சிமிட்டும்போதெல்லாம் கவிழ்ந்து மலரும்.
ஒரு நொடியில் அத்தனையையும் நோட்டம் விட்டவன் எண்ணம் எல்லாம் “இந்த அழகை கொண்டு யார் வாழ்வை அழிக்கப் போகிறாள் இவள்” என்றுதான் ஓடியது.
சம்பத் அக்கா தங்கை இருவரையும் திரும்பித் திரும்பிப் பார்த்தவன் “போலாம் பாரி” என்று அவனிடம் கூறி வெளியில் நடந்தான்.
அவனைப் பின் பற்றி நடந்தவன் படியில் கால் வைக்கத் தடுமாறினான் “ஐயோ பாத்து” என்று அவன் கையைப் பிடித்தாள் அலக்நந்தா.
அவன் மீதிருந்து மதுவின் நெடி வர அனிச்சையாகக் கையை அவள் எடுக்க “ஏய் என்ன பாத்து நீ முகம் சுளிக்கிறியா?? உங்கள பாத்துதான் எல்லாரும் அத செய்றாங்க” என்றவன் வார்த்தையில் அவள் விழிகளில் அனல் பறந்தது.
அவனைத் தாண்டி அவள் போக முயலத் தடுக்க பார்த்தவன் அவளை மறிக்க நிலைதடுமாறி படியில் உருண்டாள், பிடிமானத்திற்கு அவனின் சட்டையைப் பிடிக்க அவளோடு அவனும் அவள் மேலே சரிந்தான்.
கூர்முனை கையில் தட்டி கிழிக்க தலையின் பின்பக்கம் தரையில் அடித்ததில் “அப்பா” என்ற சிறு முனகளோடு மயக்கத்திற்கு சென்றாள் அலக்நந்தா.
அவனின் நெற்றி மற்றோரு படியின் விளிம்பில் தட்ட ரத்தம் கொட்ட தொடங்கியது, உள்ளே சென்ற மதுவின் தடுமாற்றம் மனதின் தள்ளாட்டம் என்று நின்றவன் அவளின் பிடியில் சிக்கி சரிந்துவிட்டான்.
முன்னே நடந்த சம்பத் பதறி ஓடி வந்து “பாரி” என்று அவன் கைப்பிடித்து உயர்த்தியவன் உடனே அழைத்துச் சென்று காரில் அமரவைத்து தன்னுடைய கர்ச்சீப் கொண்டு காயத்தில் கட்டினான்.
“நந்தா… நந்தா…” என்று அவள் கன்னம் தட்டி அழைத்துக் கொண்டிருந்த சங்கமித்ரா சம்பத்தை பார்த்து “ப்ளீஸ்” என்க, அலக்நந்தாவை கைகளில் அள்ளிக் காரின் பின்னே இருத்தினான்.
உடன் மகனை அழைத்துக்கொண்டு மித்ராவும் ஏறிக்கொள்ள கார் மருத்துவமனை நோக்கி விரைந்தது.
பெரிதாகக் கேள்விகள் இல்லமால் உடனே சிகிச்சை தொடங்கிவிட்டது, அழைத்துவந்தவன் தென் இந்தியாவின் வளர்ந்து வரும் இளம் தயாரிப்பாளர் என்றால், உள்ளே சிகிச்சைக்குப் படுத்திருப்பவன் ஒட்டு மொத்த சினிமா துறையையும் தன் பணபலத்தால் ஆட்டுவிக்கும் பைனான்சியர் மஹேந்திரனின் வாரிசு ஆயிற்றே.
அதிலும் இந்தியாவின் பெருமையை ஹாலிவுட்டில் பரப்பும் வி.எப்.எக்ஸ் எனப்படும் விஷுவல் எஃபெக்ட்ஸ் கலைஞன், ஒரு பெரிய அறியப்படும் கம்பெனியை ஆறு வருடமாக அமெரிக்காவில் நடத்தி வருகிறான்.
கோடிகள் கொட்டி எடுத்த பல திரைப்படங்களில் அவனுடைய கம்பனி முத்திரையைப் பதித்திருக்கிறது, ஆனால் அவனைப் பெரிதாக வெளி உலகில் யாரும் அறியமாட்டார்.
திரையில் தெரியும் கலைஞன் அல்லவே, ஆனால் அந்தப் படங்களின் சரிபாதி உழைப்பு இவர்களுடையது தான், அதைப் பற்றி அவனுக்குக் கவலையும் இல்லை தங்கள் படைப்பைத் திரையில் காண்பதே அவனுக்குப் போதை தரும் விஷயம்.
“வாட் ஹாப்பேன் சார்” என்ற மருத்துவரின் கேள்விக்குப் படியில் தவறி விழுந்துவிட்டதாகச் சம்பத் தெரிவிக்க “அவர் ட்ரிங்க்ஸ் பண்ணிருக்கார்” என்ற மருத்துவரைப் பார்த்தவன் “ஆமா ஒரு பார்ட்டி” என்று முடித்துக்கொண்டான்.
மருத்துவருக்குத் தெரிந்தது இது வேறு ஏதோ பிரச்சனை என்று ஆனால் அவரால் ஒன்றும் சொல்ல முடியாதே “ஒகே பட் ட்ரீட்மெண்ட் கொஞ்சம் டைம் ஆகும்” என்றவர்.
“நெத்தில காயம் ஆழமா இருக்கு தையல் போடணும், ஆல்கஹால் லெவல் பாக்கணும்” என்று சொல்ல “அந்தப் பொண்ணு எப்படி இருக்கு” என்றான் சம்பத்.
“ஹ்ம்ம் அடி கொஞ்சம் பலம் தான் கையில் எப்படியும் பத்து தையல் வேணும், தலைபின் பக்கம் அடிச்சு விழுந்திருக்காங்க ஒரு ஸ்கேன் பண்ணி பாத்துடலாம் நினைவு வர டைம் எடுக்கும் ஒன்னும் பயம் இல்லை பாத்துக்கலாம்” என்க தலை ஆட்டிவிட்டு வெளியில் வந்து அமர்ந்துவிட்டான்.
எதிர் பக்கம் கிடந்த இருக்கையில் மகனை நெஞ்சோடு சேர்த்து அணைத்துக்கொண்டு விழி மூடி அமர்ந்திருந்தாள் சங்கமித்ரா, “என் வாழ்வின் சாபம் இன்னும் எத்தனை உயிரைக் காவு வாங்கும் இறைவா” என்று அவள் மனம் ஓலமிட்டது.