மார்கழி மாத குளிர் உடலைத் துளைக்க தாத்தாவின் கையைப் பிடித்திருந்தவள் மெல்ல அந்த அப்பார்ட்மென்டின் உள்ளே அழைத்துச் சென்றாள்.
“வயசான காலத்துல சொல் பேச்சு கேக்குறீங்களா நீங்க” என்றவள் கேள்விக்கு, “வயசானவன் பேச்சை நீ கேக்குறியா” என்றார் அவர்.
“சரிதான் ராஜசேகர் கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா” என்றவள்.
“தினமும் தான வரீங்க ரெண்டு நாலா காய்ச்சல் அடிக்குது அதுக்கு தான சொல்றேன், எனக்கு இங்க ஒன்னும் பிரச்னை இல்லை தாத்தா” என்றவளை நிறுத்தியவர்.
“உன் பாதுகாப்புக்குன்னு இல்லடா, இந்தக் கிழவனோட மன திருப்திக்கு, வயசு புள்ளய வீட்டுவேலைக்கு அனுப்பிட்டு நீ வர வரைக்கும் வயித்துல நெருப்பை கட்டிட்டு இருக்கேன்”.
“அம்மாடி படிப்பு முடிஞ்சதும் இந்த வேலைய விட்டுருடா” என்று விழியில் நீர் நிறைய சொன்னவரைப் பார்க்க மனம் கனத்தது.
“எல்லாம் சரி ஆயிடும் தாத்தா, இன்னும் கொஞ்ச நாள், நீங்க வாங்க” என்று அழைத்துச் சென்றாள்.
லச்சங்களில் வருமானம் ஈட்டி பணத்தில் புரளும் மனிதர்கள் வாழும் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு, அங்குத் தான் கடந்த நான்கு வருடமாக வீட்டு வேலை பார்க்கிறாள்.
மூன்றாம் தளத்தில் வந்து இறங்கியவள் “நீங்க ரெஸ்ட் எடுங்க தாத்தா நான் முடிச்சுட்டு வரேன்” என்று ஒரு வீட்டின் காலிங் பெல் அழுத்தினாள்.
உள்ளே இருந்து ஒரு இளைஞன் வந்து கதவைத் திறந்து “வாம்மா” என்றவன் “நாங்க கிளம்பிட்டோம்” என்று வெளியேற அவன் பின்னையே இன்னும் இரண்டு இளைஞர்கள் சைக்ளிங் செய்யத் தேவையான அணைத்து ஏற்பாடோடு வெளியில் சென்றனர், சிரித்துக்கொண்டே உள்ளே நுழைந்தாள் அவள்.
மிகப் பெரிய ஐ.டி நிறுவனத்தில் நல்ல பதவிகளில் இருப்பவர்கள் மனம்போல் வாழ்வை ரசித்து வாழ்கிறார்கள், அனால் இன்று வரை இவளிடம் வம்பு வளர்த்ததில்லை கண்ணியமாகவே நடக்கிறார்கள்.
அவர்களுக்குக் காலை மதியம் உணவு சமைத்து வைத்து, வீடு கிளீன் செய்து துணிகள் துவைத்து வைக்க வேண்டும் அவளுக்கு அதற்காக மாதம் பதினைந்தாயிரம் சம்பளம்.
இந்த வேலைகளை முடிக்கவே அவளுக்கு இரண்டு மணி நேரம் ஆகும், அதன் பிறகு நான்காம் தளத்தில் இருக்கும் வயதான தம்பதி வீட்டில் வேலை, பிள்ளைகள் வெளிநாட்டில் இருக்க பெற்றோர் இங்கே தனிமையில்.
வயது பெண்ணை இது போன்ற இடத்தில வேலைக்கு அனுப்பிவிட்டு அவரால் நிம்மதியாக வீட்டில் இருக்க முடியவில்லை, பேத்தியின் குரல் கேக்கும் தூரத்தில் படியின் ஓரத்தில் ஒரு ஷீட் விரித்து அமர்ந்து கொள்வார்.
இடையில் ஒரு முறை அவர் அருகில் வந்து பேக் செய்து கொண்டு வந்த காலை உணவையும் டீயையும் தாத்தாவுடன் அங்கேயே அமர்ந்து உண்ணுவாள்.
வெகு எளிமையான உணவுகளே, மீண்டும் அடுத்த வீட்டில் வேலைக்குச் சென்றுவிடுவாள், மூன்று வீடுகளில் வேலை, மூன்றாம் வீட்டில் பாத்திரம் கழுகி துணி துவைத்து வீடு சுத்தப்படுத்த வேண்டும்.
அனைத்தையும் முடித்துக் காய்ந்த துணிகளை எடுத்து வைத்துவிட்டு, துவைத்த துணிகளைக் காய வைத்தாள், “அக்கா முடிச்சுட்டேன் கிளம்புறேன்” என்று கூறி வெளியேறப் பார்க்க “ஏய் நில்லு” என்றார் அந்த வீட்டு பெண்ணின் அன்னை.
அந்தப் பெண் கர்ப்பமாக இருக்க, வேலையைப் பார்ப்பதற்கும் மருத்துவமனைக்கும் இங்கே தான் வசதி என்று இங்கேயே இருக்கிறாள், உடன் அவள் அன்னை வந்து ஒரு மாதமாக இருக்கிறார்.
அவள் அப்படியே நின்றாள், இது போன்ற அவமதிக்கும் வார்த்தைகள் அவளை எப்பொழுதும் சீண்டி பார்க்கும்.
அவரைத் திரும்பிப் பார்க்க “துணிய அப்படியே போட்டுப் போற காசு வாங்குற தான மடிச்சு வெச்சா என்ன” என்றவரை ஒரு நொடி பார்த்தவள்.
“மாசம் முன்னூறு ரூபா” என்க.
“என்னடி இது அநியாயம், ஒரு துணி மடிக்கவா காசு…. அதும் இவ்ளோ” என்க.
“ஆண்ட்டி உங்களால செய்ய முடியாத வேலைக்குத் தான் ஆளு வெக்குறீங்க, அப்போ ஓசில செஞ்சு குடுக்க நீங்க எனக்கு அத்தையா? சித்தியா ?” என்க.
“நந்தா அவங்க ஏதோ தெரியாம பேசுறாங்க, நீ கெளம்பு நேரம் ஆகுது” என்ற பெண்ணைப் பார்த்தவள் “தப்பா எடுத்துக்காதீங்க அக்கா, இங்க துணி மடிச்சுட்டு நின்னா எனக்குக் காலேஜ் போக லேட் ஆகும்” என்க.
“எனக்குத் தெரியாதா நீ போ” என்றாள் அவள்.
“சரிக்கா” என்று இவள் வெளியேற, கதவை அடைந்தவள் “அவ வெறும் வேலைக்காரி இல்ல, ரொம்ப வசதியா வாழந்த குடும்பம் அவர்களது ஏதோ இப்போ இப்படி இருக்காங்க “.
“அவ தனி ஒருத்தியா கஷ்டப்பட்டு வீட்டையும் பார்த்து அம்மா தாத்தாவையும் பார்த்துப் படிச்சுட்டும் இருக்கா”.
“அவளை மரியாதை இல்லாம கூப்பிடாதீங்க, இந்தக் காலத்துல இவ்ளோ நம்பிக்கையான ஆளுங்க எங்கயும் கிடைக்க மாட்டாங்க, அவளைப் பேர் சொல்லிக் கூப்பிடுங்க” என்று உள்ளே சென்றாள்.
வேலைகளை முடித்தவள் தாத்தாவுடன் வீட்டிற்கு நடந்தாள், அங்கிருந்து பத்து நிமிடங்கள் நடந்து சென்றால் குறுகலான ஒரு சிறிய தெரு, அதில் நீளவாக்கில் கிடக்கும் வீடு என்று சொல்லப்படும் அந்தக் கட்டிடத்திற்குள் நுழைந்தார்கள்.
வரிசையாகப் பத்து வீடுகள் முதல் வீட்டிற்கும் கடைசி வீட்டிற்கும் மட்டும் ஜன்னல் உண்டு.
முன்புறம் பின்புறம் இரும்பு கேட், வீடு என்பது ஒரு சிறிய அறை அதைப் பிரித்து அடுப்படி, அந்த அறையின் பாதி அளவில் படுக்கை அறை பெயருக்குக் கூடக் காற்று வராது.
அவள் எப்பொழுதும் சிந்திப்பதுண்டு ஏதோ கொஞ்சம் புண்ணியம் செய்திருக்கிறோம் போல என்று, காரணம் அவர்கள் வீடு கடைசி அதனால் ஒரு சிறிய ஜன்னல் உண்டு.
அந்தக் கட்டிடத்தின் கடைசியில் யாரோ இடம் வாங்கி போட்டு வீடு கட்டாமல் கிடந்த ஒரு சிறிய இடம் உண்டு, அதன் மதில்சுவர் இடிந்து கிடக்க இந்தப் பத்து வீடுகளில் வாழும் பாவப்பட்ட மனிதர்களின் உறங்கும் இடம் அதுதான்.
ஆண்கள் அங்குப் படுத்துக்கொள்ள பெண்கள் கதவைத் திறந்து வைத்து வீட்டில் உறங்குவர், வீட்டிற்குள் நுழைந்தவள் சிறிய பையில் துணிகள் எடுத்து வைத்துக்கொண்டிருந்த அன்னையை பார்த்தாள்.
இவர்கள் இருவரையும் பார்த்த சாரதா “கல்யாண ஆர்டர் வந்திருக்கு ரெண்டு நாள் காஞ்சிபுரம் போறேன்” என்றவர் ஒருநொடி யோசித்து அவளைத் திரும்பிப் பார்த்து “எங்கயாவது ஓடிப் போறதா இருந்தா சாவிய வச்சுட்டு போ, என் பொருளை நான் எடுக்கணும்” என்க.
“இது நாக்கா இல்ல தேள் கொடுக்கா, ஏன் இப்படி பண்ற அவளைக் கேள்வி கேக்குறியே, நீ அம்மாவா அவளைப் பாத்துக்கிட்டியா, ஓடிப் போறியா ஓடிப் போறியானு கேக்குற, ஏன் அவளுக்குப் பிடிச்சு மாதிரி ஒருத்தன பார்த்தா அவ கல்யாணம் பண்ணிக்க போறா உனக்கு என்ன பிரச்சனை” என்றவரை பார்த்த சாரதா தோளைக் குலுக்கி விட்டு வெளியேறினார்.
“நீ விடுடா அவ பேசுறத எல்லாம் கண்டுக்காத” என்ற தாத்தாவைப் பார்த்து மெல்ல சிரித்தவள் மீண்டும் ஒருமுறை குளித்துவிட்டு தாத்தாவுடன் அமர்ந்து உணவுண்டு தன் சைக்கிள் எடுத்துக்கொண்டு மூன்று கிலோமீட்டர் தள்ளி இருந்த கல்லூரிக்குச் சென்றாள்.
அந்த மத்தியான வெயிலில் மாங்கு மாங்கு என்று சைக்கிளை மிதித்துக்கொண்டு செல்லுவாள், கல்லூரி முடிந்து மீண்டும் வீட்டிற்கு வந்தால் தாத்தா கையால் ஒரு வரக்காப்பி.
பிறகு ராத்திரி சமையல் அது பாதி நாட்கள் வெறும் கஞ்சியாகத்தான் இருக்கும், கிடைக்கும் சம்பளம் வீட்டு வாடகை கல்லூரி பீஸ், மருத்துவ செலவு வீட்டு செலவு என்று கரைந்துவிடும், எப்படி இழுத்து பிடித்தாலும் விரும்பிய ஒரு நல்ல உணவைக் கூட உன்ன முடியாது.
ஆசைகள் மனதில் புதைந்து கிடக்கிறது எதையும் வாய் திறந்து கூறிவிட மாட்டாள், கூறினாலும் கேட்டு வருத்தப்பட முடியுமே தவிர நிறைவேற்ற முடியாது.
இரவில் தாத்தா ஹாலில் படுத்துக்கொண்டார் காய்ச்சல் இருப்பதால் வெளியில் படுக்க விடவில்லை அவள், இவள் அறையில் படுத்துக்கொண்டாள், உடல் அசதி எப்பொழுதும் படுத்தவுடன் உறங்கி விடுவாள் இன்றும் அப்படியே.
மறுநாள் காலை எழுந்தவள் காலை மதியம் இரண்டுக்கும் சேர்த்து சாம்பார் வைத்துச் சாதம் வடித்தாள், இத்தனை நேரத்திற்கு எழுந்திருக்கும் தாத்தா இன்னும் எழாமல் இருக்க இவள் சென்று பார்த்தபோது ஜுரத்தில் முனகிக்கொண்டிருந்தார்.
“சொல்ற பேச்சே கேக்குறதில்லை” என்றவள் கொஞ்சம் மிதமான சூட்டில் தண்ணீர் கொடுத்து மருந்தும் கொடுத்தாள்.
அவருக்குக் கொஞ்சமாக ரசம் வைத்துச் சாதம் நன்றாக மசித்து ரசம் ஊற்றி ஒரு பாத்திரத்தில் மூடி வைத்துவிட்டு சுடுதண்ணீரும் அருகில் வைத்து.
வேலை முடித்து வந்தவள் பார்க்கக் கொஞ்சம் தெளிவாக அமர்ந்து பக்கத்து வீட்டு பாட்டியுடன் கடலைப் போட்டுக்கொண்டிருந்தார் தாத்தா.
பார்த்தவள் சிரித்துக்கொண்டே கல்லூரி புறப்பட்டாள், மாலை கல்லூரியிலிருந்து சைக்கிள் எடுக்க அவளுடைய அதர பழைய பட்டன் போன் ஒலி எழுப்பியது.
எடுத்துப் பார்க்க ஏதோ புதிய எண் “ஹலோ” என்றவுடன்.
“மிஸ் அலக்நந்தா தானே” என்றது மறுபக்க பெண் குரல்.
ஒரு நொடி தயங்கியவள் “எஸ்” என்க.
“நாங்க ****** பப்ளிக் ஸ்கூல்ல இருந்து பேசுறோம், அத்வைத்தோட கிளாஸ் மிஸ், அவங்க மதர் இன்னும் வரல போனும் அட்டென்ட் பண்ணல நீங்க வர முடியுமா” என்றார் அவர்.
“நான் ஏன் வரணும், அவன் அப்பாவைக் கூப்பிடுங்க” என்றவள் வைக்கப் போக “மேம் ஒரு நிமிஷம் வெச்சுடாதீங்க, அவங்க அப்பாக்கும் கால் பண்ணிட்டேன் அவர் நம்பர் நாட் ரீச்சபிள், கார்டியனா உங்க பேர் தான் போட்டிருக்கு” என்றார்.
அவள் பதில் பேசும் முன் செவிகளை நிறைத்தது ஒரு மழலை குரல்.
“சித்தி அம்மா இன்னும் வரல, எனக்குப் பசிக்குது அம்மா பாக்கணும் நீ கூட்டிட்டு போறியா” என்ற குரலில் வெடித்து வந்த அழுகையை வாய் மூடி அடக்கியவள், “சித்தி வரேண்டா ராஜ நீங்கப் பயப்படாதீங்க” என்றாள்.
ஆசிரியையிடம் “மேம் ஒரு இருபது நிமிஷம் ஆகும் நான் வந்து சேர அதுவரைக்கும் இருக்க முடியுமா” என்க.
“இங்க பி.டி சார் இருப்பார் மேம், அவர் பாத்துப்பார் இப்போவே மணி அஞ்சு ஆச்சு மேம் வீட்ல என் குழந்தைகளும் வெயிட் பண்ணுவாங்க” என்றார் அவர் சங்கடமாக.
அவளுக்குப் புரிந்தது, அவனுக்கு வகுப்புகள் மூன்று மணிக்கே முடிந்துவிடும் பத்து நிமிடத்திற்குள் அவன் வீட்டிற்கு சென்றுவிடுவான்.
இன்று பிள்ளை ஐந்து மணியைக் கடந்தும் பாவம் பசியோடு இருக்கிறது “ஒகே மேம் நோ ப்ரோப்லேம், நான் வந்துடுவேன் பாத்துக்குறேன்” என்றவள் வேகமாகச் சைக்கிள் மிதித்தாள்.
பள்ளி ஆறு கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது, பசி வயிற்றை கிள்ள தொண்டை தாகத்தில் எரிய, உடல் ஓய்வுக்கு கெஞ்ச அனைத்தையும் தாங்கிப் பள்ளிநோக்கி காற்றாய் பறந்துகொண்டிருந்தாள் அலக்நந்தா.