13

பள்ளியில் வேலைகள் அனைத்தும் முடிந்துவிட்டது, சேர்மேனுக்கு  மிகுந்த திருப்தி வெகுவாகப் பாராட்டித் தன் மழிச்சியை வெளிப்படுத்தினார்.

அவர் தன்னையே பாராட்டுவதை போல அத்தனை சந்தோஷமாக நின்றிருந்தாள் கொற்றவை,  நிச்சயம் நிறைய பேரிடம் சொல்லுவார் என்பது அவரின் பேச்சிலே தெரிந்தது.

அவனிடம் விடை பெற்று அவர் சென்றுவிட இருவர் மட்டும் அங்கே, “தேங்க்ஸ்” என்றவனை அவள் ஆச்சர்யமாகப் பார்க்க  “நான் இங்க கார்டனிங் பண்ண நீயும் ஒரு காரணம்” என்றான்.

“நிச்சயமா இல்ல, உங்க திறமைக்குத் தான் இந்த வாய்ப்பு ஆனா கண்டிப்பா ட்ரீட் கேப்பேன்” என்க  “கொடுத்துட்டா போச்சு” என்றான் விஷமமாக மீசையை முறுக்கி.

விழிகள் விரிந்துவிட சட்டென்று தலையைத் தாழ்த்திக் கொண்டாள், அவன் சிரிப்பதை அறியமுடிந்தது.

“நாக்கிளம்புறேன்” என்றவன் திரும்பி நடந்துவிட வெகுநேரம் அங்கேயே நின்றவள் மீண்டும் உள்ளே சென்றாள்.

ராதாவிற்கு இப்பொழுது நன்றாகவே நடக்க முடிந்தது, அத்தனை முறை சொல்லிய பிறகும் இரண்டு நாட்கள் அவரைக் குளிக்க வைக்காமல் இருந்தாள் அருணா.

இரவு வந்து பார்த்த கொற்றவைக்கு கண்மண் தெரியாமல் கோவம், அவளும் அருணும் பிடித்து அவரைக் கொண்டுபோய் பின்னால் அமரவைத்து, பிறகு கொற்றவை அவரைக் குளிக்க வைத்தாள்.

உடை மாற்றி மீண்டும் படுக்க வைக்க அவர் முகமே தெளிவாக இருந்தது, இவள் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறாள் என்று சென்று பார்க்கப் போனில் கோவமாகப் பேசிக்கொண்டிருந்தாள்.

“அவ எப்போவும் போன்ல இருக்கா மா, நான் ஏதும் கேட்டாகூட ரொம்ப கோவம் வருது அவளுக்கு” என்ற தாயின் வார்த்தைகளை நினைவு கூர்ந்தவள் வேகமாக அவளிடம் நெருங்கி அலைபேசியை பிடுங்க திரையில் ஒளிர்ந்தது கிஷோரின் பெயர்.

அதை அனைத்தவள்  “என்னடி பிரச்னை உனக்கு” என்று அவளிடம் கேட்க. “எல்லாம் உங்களாலதான், நீங்கக் கல்யாணம் வேண்டாம் சொன்னீங்க இப்போ நெறய வரதட்சிணை குடுத்தா தான் அவங்க வீட்ல கல்யாணத்துக்கு ஒத்துப்போம்னு சொல்றாங்க”.

“அப்படியே அறைஞ்சேன்னு வை, என்ன பாத்தா எப்படி இருக்கு உனக்கு, காதலிக்கும்போது இந்த ஈர வெங்காயம் தெரியலையா, வசதி இல்லனு தெரிஞ்சு தான உன்ன விரும்பினான், இப்போ என்ன அவங்க நெறய எதிர்ப்பார்த்தாங்கனா உனக்கு அப்பான்னு ஒருத்தர் இருக்கார்ல அவர்கிட்ட சொல்லு, அதுக்காக அம்மாவை  ஒழுங்கா பாக்காம இருப்பியா, அவங்களுக்கு கால் சரி ஆகுற வரைக்கும் நீ போன் தொடக் கூடாது” என்றவள் அதை அமர்த்தித் தன்னிடம் வைத்துக் கொண்டாள்.

அணைவர் மீதும் கோபம் அருணாவிற்கு ஆனால் ஒன்றும் செய்யமுடியாத சூழல், இரண்டு வாரங்கள் கடந்து சென்றது நாளைக் கொற்றவையின் பிறந்தநாள்.

இன்றாவது ஏதேனும் பேசுவானா, ஒரு வாழ்த்தாவது சொல்லுவானா என்று காத்திருக்க  ஒன்றும் இல்லை, பத்தோடு பதினொன்றாக அந்த இரவும் கடந்தது.

மறுநாள் காலை அவள் எழுந்தபோது வீடு பரபரப்பாக இருக்க “என்னடா இது” என்று ஆச்சர்யம் அடைந்தவள் அடுக்கலைக்குள் சென்று பார்க்க ராதா சமைத்த அனைத்தையும் எடுத்து வைத்துக்கொண்டிருந்தார்.

“என்ன பண்றீங்க” என்ற அவளின் கேள்வியில் திரும்பிப் பார்த்த ராதா, “நீ எழத் தான் பாத்துட்டு இருந்தேன், நம்ம மிருதுக்கு இன்னைக்கு ஸ்கூல்ல ஆண்டுவிழாவாம் அவளும் டான்ஸ்ல இருக்கா, அதான் அக்கா நைட் போன் பண்ணி எல்லாரையும் வரச் சொன்னா, நீ லீவு போடா மாட்ட நாங்க மட்டும் போயிட்டு வரலாம்னு கெளம்புறோம், காளைக்குச் சமைச்சுட்டேன் மிருதுவுக்கு சக்கர பொங்கல் ரொம்ப பிடிக்குமே அதான் அதையும் கொஞ்சம் பண்ணிருக்கேன், மதியத்துக்கு வெளில பாத்துக்கிறியா” என்றவரை என்ன சொல்ல என்றே அவளுக்குத் தெரியவில்லை.

பெண்ணிற்கு பிறந்தநாள் என்பது நினைவில்லை அவளுக்கு இருபத்தி எட்டு வயதாகிறது எண்பதாவது நினைவு இருக்கிறதா அதும் தெரியவில்லை.

ஒரு கசந்த முறுவல் அவள் வதனத்தில் “ஹ்ம்ம்” என்றவள் குளிக்கச் சென்று விட்டாள், குளித்து வந்து தயாராக வீட்டிற்குள் நுழைந்தான் அருண்.

“எங்க காலைலே கெளம்புறீங்க” என்றவனிடம் அதேயே கூற “அவளுக்கு ஷக்தின்னு ஒரு பெரு வெச்சுருக்கு, சம்மந்தமே இல்லாம எதுக்கு மிருது மிருதுனு கூப்பிடுறீங்க” என்றவனை பார்த்தவர் “அவளுக்கு அந்தப் பேரு பிடிச்சுருக்கேப்பா” என்க.

“அவளுக்கு அந்த மாதிரி நிறைய பிடிக்குது எல்லாத்தையும் பிடிச்ச மாதிரியே செய்ய முடியாது” என்றான் ஒரு மாதிரி குரலில்.

அதைக் கவனித்தாலும் கொற்றவை ஒன்றும் கேட்டுக் கொள்ளவில்லை, “சரி நீங்கச் சாப்பிடுங்க நாங்க வர ராத்திரி ஆயிடும்” என்ற ராதா கணவன் மற்றும் மகள் அருணாவோடு நடக்க தொடங்கினார்.

சிறிது நேரம் நின்றவன் உள்ளேசென்று ஒரு கவரோடு வந்தான், அதை அவள் கையில் கொடுத்து “ஹாப்பி பர்த்டே அக்கா” என்க கொற்றவைக்கு மனம் நிறைந்து விட்டது.

அவனுக்காவது நினைவிருக்கிறதே என்று “அவங்க யாரும் விஷ் பண்ணலயா” என்க.

“அவங்களுக்கு அதெல்லாம் ஞாபகம் இல்லடா விடு” என்றவள் “சரி நான் கிளம்புறேன் நீயும் மதியம் வெளில பாத்துக்கோ” என்று புறப்பட.

“இரு இரு எங்க போற இன்னைக்கு நான் குடுத்த டிரஸ் போட்டுத் தான் நீ போனும்” என்று பிடிவாதமாக நின்றான்.

“டேய் விடுடா நான் என்ன சின்னக் கொழந்தையா பர்த்டே டிரஸ் போட்டுப் போக” என்றபோதும் விடவில்லை, ஒரு கட்டத்தில் “சரிடாப்பா” என்று அதை எடுத்துக்கொண்டு அறைக்குள் சென்றாள்.

அழகான ஊதா வண்ணத்தில் மெலிதான கரை வைத்த பட்டுப்புடவை, அதற்க்கு பொருத்தமான சட்டையும் இருந்தது உடுத்திக்கொண்டவள் வெளியில் வர  “செம்மக்கா ரொம்ப அழகா இருக்கு” என்றான்.

“பிளவுஸ் என்னடா பண்ண” என்க “உன்னோடதுதான் எடுத்துட்டு போனேன்”  என்றான்.

“தேங்க்ஸ் குட்டி ரொம்ப பிடிச்சுருக்கு” என்று அவன் கன்னம் தட்டினாள்,  அவள் கையைப் பிடித்தவன் “வேற ஏதும் வாங்க முடியலக்கா, கொஞ்சம் கொஞ்சமா சேத்து வெச்சது சாரி வாங்க மட்டும் தான் பத்துச்சு, எனக்கு வேல கிடைச்சதும் உனக்கு எல்லாமே செய்வேன்க்கா” என்றவனை அணைத்துக்கொண்டாள்.

“போதும் நீ சொன்னதே, கொற்றவை ஹாப்பி டா” என்றவள் சாப்பிடாமலே கிளம்பிவிட்டாள்.

புது புடவையோடு அங்குச் சென்று அவனிற்கு நினைவு படுத்த விரும்பவில்லை நேரே பள்ளிக்குச் சென்றுவிட்டாள்.

அனைவரும் வாழ்த்தும்போது அவனின் ஒரு அழைப்பிற்கு தான் ஏங்கியது மனது.

லேண்ட் லைன் போன் அடிக்க எடுத்துக் காதில் வைத்தவுடன் “வெளில வெயிட் பண்றேன் லீவு சொல்லிட்டு வா” என்று வைத்துவிட்டான்.

“என்ன!! இப்போ என்ன சொன்னார் ?” என்று குழம்பியவள் தன் எண்ணிலிருந்து அழைக்கப் பார்க்க அப்பழுது தான் கவனித்தாள் அவனின் தவறவிட்ட அழைப்புகளை, எப்படியோ சைலன்ட் மோடில் கிடந்தது அது.

“ஐயோ…” என்றவள் அவனை அழைக்க “சொல்லியாச்சா” என்றவன் கேள்வியில்.

“கொஞ்சம் தெளிய டைம் குடுங்க சாமி” என்று எண்ணியவள்  “என்ன சொல்லணும்”.

“உங்க சேர்மன் கிட்ட லீவு சொல்லிட்டு இன்னும் அஞ்சு நிமிஷத்துல வெளில வா, இல்ல  நானே வந்து லீவு சொல்றேன்” என்க, அடுத்த நொடி சேர்மேன் அறையில் இருந்தாள்.

“பேசாம இவன் மெரட்டுறான்னு போட்டுக் குடுத்துடு”.

“இல்ல இல்ல லீவு கேக்காத அவர் குடுக்கலைனு சொல்லிடு”.

“நீ கூப்பிடா  நான் வரணுமா, அப்படினு  நல்லா  நாலு கேள்வி கேளு” என்று மனச்சாட்சி அணைத்து பக்கமும் மத்தளம் வாசிக்க.

“சார் இன்னைக்கு லீவு வேணும்”  என்றாள் அவரிடம்.

வெளியில் வந்து பார்க்க அவனின் வண்டியில் சாய்ந்து நின்றிந்தான், அவள் அருகில் நெருங்க நெருங்கத் தாளம் தப்பியது மனது “ஏன் கூப்பிட்டிங்க” என்றவளை பார்த்தவன் குரலைச் சரி படுத்தி “ஏறு” என்றான்.

“இல்ல…”  என்றவள் முடிக்கும் முன் வண்டியில் அமர்ந்தவன் அதை முறுக்கிக் கொண்டிருக்க, வேகமாகச் சென்று ஏறி அமர்ந்து கொண்டாள்.