“சரிடி ரொம்ப பண்ணாத. ஒரு முக்கியமான வேலை அதனால் தான் உட்கார்ந்து லாப்டாப் பாத்துட்டு இருந்தேன்.  என்னிக்காவது ஒரு நாள் தானே இப்படி பண்றேன்.  உடனே காச்சு முச்சுனு கத்துற.  சரி நம்ம முத்தம்மா எங்க.  அவங்கள சாப்பிட வைக்க தான என்னை முக்கியமா கூப்ட”

“அவங்க இப்பதான் சற்குணம் அண்ணன் வந்திருக்காருன்னு சாப்பாடு கொடுக்க போயிருக்காங்க.  குடுத்துட்டு வருவாங்க”

“ஓ” என்று கூறியவள், திடீரென யோசனை வந்தவளாக,

“ஜீவா, உனக்கு ஞாபகம் இருக்கா.  இன்னும் ரெண்டு நாள்ல அத்துக்கும் அக்காவுக்கும் மேரேஜ் ஆகி ஒன் மந்த் ஆகப்போகுது.  மேரேஜ் அப்போ நமக்கு  டைமே கிடைக்கல. அதனால அத்து பர்த் டேவுக்கு மட்டும் நம்ம சேவிங்ஸ் வச்சு அவருக்கு ஒரு பிரேஸ்லெட்  வாங்கி கொடுத்தோம்.

ஆனா அக்காக்கு நம்ம எதுவுமே வாங்கி தரலையே.  ஒன் மந்த் ஆனிவர்சரிக்கு ஏதாவது வாங்கி தரலாமா”

“எந்த ஆனிவர்சரியா இருந்தாலும் நம்ம நேர்ல குடுத்தா தான் அது பெஸ்ட்டா இருக்கும். பேசாம ரிசப்ஷன்க்கு வாங்கி கொடுக்கலாம்”

“நீ சொல்றதும் ரைட் தான். ஆனா ஜீவா என்னதான் ஒன் மன்த், சிக்ஸ் மன்த்னு கொண்டாடினாலும், நம்ம கல்யாணத்துக்கு குடுக்கல தானே.

ஆனா ஜீவா கண்டிப்பா சொல்றேன், இதுக்கு சேத்துவச்சு அடுத்து வர எல்லா பங்க்ஷன்க்கும் அக்காக்கு பெஸ்ட் கிஃப்ட் கொடுக்கணும்”, என்று அவள் கூறிக் கொண்டிருக்கும் போதே,  சரியாக முத்தம்மா உள்ளே நுழைந்தவர்,

“என்ன கண்ணுங்களா யாருக்கு என்ன கொடுக்க போறீங்க” என்று கேட்டுக் கொண்டே வந்தார்.

மேஜையில் இருக்கும் உணவுகளை அவர்கள் இருவரின் தட்டிலும் எடுத்து வைக்க ஆரம்பிக்க,  அவருக்கு பதில் கூறும் வகையில் ஜீவா அவரிடம், “ஒன்னும் இல்ல முத்தம்மா.  அக்காவுக்கு ரிசப்ஷனுக்கு என்ன கிஃப்ட் கொடுக்கலாம்னு பேசிக்கிட்டு இருக்கோம்”

“உங்க அக்காக்கு கல்யாணம் ஆகி ஒரு மாசம் ஆகபோது.  ரிசப்ஷன் வைக்கிறதுக்கே இவ்ளோ நாள் ஆகுது‌.  எனக்கு என்னமோ உங்க அக்காவுக்கு ரிசப்ஷன்க்கு முன்னாடி வளைகாப்பு வைக்க வேண்டி வரும்னு நினைக்கிறேன்” என்று முத்தம்மா கிண்டலாக கூற,

அதைக்கேட்ட ஜீவாவும் சக்தியும் பலமாக சிரிக்கத் தொடங்கினர்.

சிரிப்பின் ஊடயே ஜீவா அவரிடம் “முத்தம்மா நாங்க கல்யாணம் ஆகாத சின்ன பிள்ளைங்க.  எங்ககிட்ட போய் இப்படி பேசுறீங்களே?” என்று கேட்க, அதற்கு அவர்,

“கல்யாணம் ஆகலைன்னு வேணா சொல்லு, நீ சின்ன பிள்ளைன்னு சொல்லாத கண்ணு.  நீ இப்படி சொன்னா ஊர்ல யாராவது நம்புவாங்களா?”  என்று கேட்டுக் கொண்டே,

அவரும் ஒரு தட்டில் தன்னுடைய உணவு எடுத்து வைத்துக்கொண்டு அமர்ந்தார்.

சக்தி உடனே, “அசிங்கப்பட்டாள் ஜீவா” என்று நமட்டு சிரிப்புடன் கூறிவிட்டு உணவு உண்ண ஆரம்பிக்க, ஜீவா அவளை முறைத்துக் கொண்டே உண்ண ஆரம்பித்தாள்.

“கண்ணுங்களா இன்னக்கி சின்னையா போன் பண்ணாங்க”, என்று முத்தம்மா கூற, ஜீவா அதற்கு

“அத்துவா, முத்தம்மா? என்ன சொன்னாங்க?”

“எப்பயும் போல தான்.  சாப்பிட்டீங்களா? என்ன பண்றீங்கன்னு கேட்டுட்டு இருந்தாங்க.  நான் தனியா இருக்கேன்னு சொல்லவும்.

நீ ரெண்டு நாள்ல வீட்ல இருந்து வேலை பாக்கப் போறியாம்.  அதுக்கப்புறம் கொஞ்ச நேரம் உங்க கூட இருப்பாங்கன்னு சொல்லிட்டு இருந்தாரு”

“ஆமா முத்தம்மா, நான் தான் சொன்னேன்ல.  நான் வீட்டில இருந்தே வேலை பார்க்கிற மாதிரி ஏற்பாடு பண்ணி இருக்கேன்”

“எதுக்கு கண்ணு? நீ காலேஜ் படிச்சுகட்டே அந்த வேலை பாத்ததே உனக்கு ஆசையா இருக்குன்னு சொல்லி தான?  இப்ப என்னத்துக்கு அந்த வேலையை விடுற”

“இதுவும் டீச்சிங் மாதிரி தான்.  டியூஷன் சென்டர்ல வேலை பார்த்துட்டு இருந்தேன். இப்ப நீங்க வந்துட்டீங்க.  எங்களுக்காக தான நீங்க வந்தீங்க.

அதான் உங்களை தனியா விட கூடாதுன்னு இருபது நாள் மட்டும் போஷன் முடிச்சுட்டு நான் கிளம்பிடுவேன் சொல்லியிருந்தேன்.

அதே மாதிரி 20 நாள் நாளையோட முடியுது நாளைக்கு மறுநாள்ல இருந்து நான் இங்கே இருந்து வேலை பார்க்கிற மாறி ஆன்லைன் கிளாஸ் எடுக்கப் போறேன்.

ஒரு மணி நேரம் கிளாஸ் இருக்கும் மத்த நேரமெல்லாம் நான் பிரீ தான். மூணு மணிக்கு காலேஜ் விட்டா,  நாலு மணிக்கு வந்து உங்க கூட பேசிட்டு இருப்பேன்.  உங்களுக்கும் பொழுது போகும்ல.

சக்தியும் 5:00 மணிக்கு காலேஜ் முடிஞ்சு. ட்ராபிக்ல வர்றதுக்குள்ள 6.30, 7 ஆகிடிது.   நான் வேலைக்கு போனா எட்டு மணி ஆகும்.  எங்களுக்காக நீங்க வந்து இருக்கீங்க.  உங்களுக்காக நாங்க சின்ன சின்ன விஷயம் பண்றோம். அவ்வளவு தான முத்தம்மா”

“இப்ப என்ன கண்ணு,  சின்னையா என்னைய கூட்டிட்டு வந்ததே உங்கள பாத்துக்க தான்.   இப்ப நீங்க என்னமோ என்ன பாத்துக்குற மாதிரி இருக்கு”,

“நீங்க எங்கள பார்த்துக்க வந்தீங்கன்னு சொன்னாலும் அத்து  எங்ககிட்ட, எங்க முத்தமாவ கண்டுக்காம விட்டுறாதீங்க.  ஒழுங்கா பாத்துக்கோங்க அப்டின்னு சொல்லி இருக்காரு. எங்க அத்து பேச்ச நாங்க மீறவே மாட்டோம்” என்று சக்தி கூறினாள்.

“உண்மைதான்.  இந்த மாதிரி ஒரு அத்தான் கிடைச்சா, நீங்க அவர் சொல்றத எல்லாம் கேட்க தான் செய்வீங்க. கல்யாணம் முடிவானதும்  என்னன்னா யோசிச்சு உங்களுக்கு செஞ்சிருக்காரு.

ஊர்ல  இருந்து நீங்க கிளம்பி இங்க வந்ததும், நாங்க இங்க வந்திரனும்னு சின்னய்யா எங்களை அங்க இருந்து எவ்ளோ வேகமா கிளப்பி விட்டார் தெரியுமா?  தாத்தா வீட்டில வேலைப் பாத்தவங்கல மட்டும் தான் நம்ப முடியும்னு நான், சற்குணம், குமரேசன்னு மூணு பேரையும் இங்க அனுப்பி வச்சிட்டாரு.

வீட்டிக்குள்ள உங்களுக்கு நான் துணை. வீட்டுக்கு வெளிய  அவுங்க ரெண்டு பேரும் ராத்திரி பகல்னு மாத்தி மாத்தி காவல்.

பெரிய ஐயா வீட்டை விட்டிட்டு  நாங்க வரமாட்டோம்னு சொல்லியும் சின்னய்யா இந்த ஒரு வருஷம் மட்டும் இருங்க, அதுக்கப்புறம் பிள்ளைங்க சென்னை வீட்டுக்கே வந்துருவாங்கனு சொல்லவும் தான் நாங்க வந்தது.

இல்லன்னா பெரியய்யா வீட்டை பத்திரமா பாத்துக்கறது மட்டும்தான் எங்களுக்கு சந்தோசம்னு அங்க இருந்து எங்கேயும் அசைய மாட்டோம்.

சின்னய்யா கல்யாணம் பண்ணாம அந்த வீடு அவங்க பாட்னருக்கு போய்டுமோன்னு பயத்திலயே இருந்தோம்.  நல்ல வேலையா சின்னய்யா கடைசி நேரத்தில கல்யாணம் பண்ணி வீட்டை அவர் பெயருக்கு மாத்திக்கிட்டாரு.

இல்லைன்னா நாங்க எங்க போவோம்.  பிறந்ததில இருந்து அது தான் எங்க உலகம். சின்னய்யா மட்டும் தான் எங்களை கைவிட மாட்டர்ன்னு தெரிஞ்சு தான் பெரிய ஐயா இப்படி ஒரு கண்டிசன் போட்டுரிப்பாக.

வீட்டை பத்தி நல்ல சேதி சொன்னவரு கூடவே எங்களை அங்க இருந்து கிளப்பி இங்க வந்து சேத்ததும் தான் நிம்மதி ஆனாரு.”

“முத்தம்மா அத்து எங்களை இந்த அளவுக்கு நல்லா பாத்துக்குறாருன்னா.  அதுக்கு காரணம்  நீங்களும் அவரை சுத்தி இருக்க மனுஷங்க எல்லாரும் தான.

அவரு அப்பா, அம்மா, தாத்தா அப்புறம் நீங்க இன்னும் சற்குணம் குமரேசன் அண்ணே எல்லாருமே சேர்ந்துதான் அவரு இப்படி நிறைய நல்ல குணங்களோட வளரக் காரணம்.

அக்காவை மட்டும் இல்லாம அக்காவோட குடும்பமான எங்களையும் சேர்த்து நல்லா பாத்துக்கணும்னு நினைச்சு ஒவ்வொன்னையும் இவளோ யோசிச்சு செஞ்சுருக்காருனா, அது எல்லாமே அவரோட பிறவி குணம் மட்டும் இல்ல, அவரோட வளர்ப்பும் காரணம் தான, முத்தமா?  அப்போ உங்களையும் நாங்க பாராட்டி தான் ஆகனும்” என்றாள் சக்தி.

அவளைத் தொடர்ந்து ஜீவா, “ஆமா முத்தம்மா சக்தி அக்கா சொல்றது உண்மைதான்.  உங்களுக்கும் இந்த பாராட்டு எல்லாம் கிடைச்சுதா ஆகணும்.  அது மட்டும் இல்லாம, அத்து,  நாங்க அங்க இருந்து கிளம்பும்போதே உங்கள பத்தி எல்லாம் சொல்லித்தான் அனுப்புனாரு.

நீங்க எந்த அளவுக்கு அவரைப்  பாத்துக்கிட்டீங்க, அவருக்கு பிடிச்சதெல்லாம் எப்படி பார்த்து பார்த்து செஞ்சீங்க எல்லாத்தையும் ஒன்னு விடாம சொல்லி தான் அனுப்பி இருக்காரு.

எங்க அத்துக்கு ஃபேவரெட்டான இந்த முத்தம்மாவ நல்லா பாத்துக்க வேண்டிய கடமை எங்களுக்கும் இருக்கு. அதனால எங்கள பாத்துக்க மட்டும் தான் நீங்க வந்தீங்கன்னு சொல்லாதீங்க” என்று உரைத்தாள்.

“எனக்கு இந்த பாராட்டலாம் வேணாம் கண்ணுங்களா.  அது அவரோட குணம், அவர் குணத்தைப் பார்த்து தான் எங்களுக்குள்ளேயே நிறைய நல்ல விஷயம் வந்துச்சுன்னு நாங்க நினைச்சுட்டு இருக்கோம்.

அந்த மாதிரி நல்ல மனுஷனுக்கு இந்த பத்து வருஷமா தீராத கஷ்டம். அதனாலேயே அவருக்கு வாக்கப்படுற பொண்ணு குணம் உள்ளவளா, அவர் சந்தோஷத்தை திருப்பி தரவளா இருக்கணும்னு  வேண்டிக்குவேன்.

ஆனா அவ வரும்போதே சந்தோஷத்தை அள்ளி தர, ஒரு குடும்பத்தையும் கூட்டிட்டு வந்திருக்கான்னு நினைக்கும் போது எனக்கு சந்தோஷமா இருக்கு. எனக்கு அதுவே போதும்.

சரி சாப்டாச்சின்னா போய் தூங்கிங்க. பொட்டு பொட்டுன்னு அந்த பெட்டிய தட்டிட்டு உக்காந்திருக்காதீங்க, கண்ணுங்களா”

என்று கூறிய முத்தம்மா நிறைந்த மகிழ்ச்சியுடன் தன் விழியோரம் கசிந்த சிறு நீர்துளியை துடைத்துக் கொண்டே,  தான் உண்ட தட்டை கையில் எடுத்துக்கொண்டு சமையலறை நோக்கி சென்றார்.

காவல் புரிவா(ள்)ன்….

மகாஆனந்த ✨