7

    அலுவலகம் சென்று சேரும் போது, அவன் தன்னுடைய செல்லிலிருந்து அவனுடைய போனுக்கு அழைத்த அந்த எண்ணில் இருந்து மெசேஜ் வந்திருந்தது,

      வேறு வழியின்றி  அவனுடைய நம்பரை அவள் எப்பொழுதும் அவனை அழைக்கும் பேரிலே பதிந்து வைத்தாள்.

     கை அவளை அறியாமல் அந்த பெயரை போட்டு பதிந்தாலும், மனம் என்னவோ ஒரு நிலையில் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருந்தது.

அவளைக் கடந்து செல்லும் போது ஒலித்த பாடலை,  அவளுடைய வாட்ஸ் அப் எண்ணிற்கு வர, இவள் முழுதாக ஓபன் செய்யாமல் ஸ்கிரீனிலே டைரக்டாக ஓபன் செய்து மட்டும் பார்த்து விட்டு வைத்தாள்.

  “அன்னக்கிளி நீ வாடி

என் காதல் சீட்டெடுக்க

நெல்லுக்கு பதிலாக முத்தங்கள்

நான் கொடுக்க

மஞ்ச மயிலே

உன் தோகையில் ஒளிஞ்சு

கண்ணாமூச்சி நான் ஆட

கொஞ்சி விளையாடி கும்மாளம் போட்டு

என்னை உனக்குள்ள தேட”

    “அறிவுகெட்ட பேக்கு, இன்னும் டீன் ஏஜ் ல இருக்குறதா நினைப்பு” பாடலை பார்த்த உடனே வாய் விட்டு திட்டினாள்.

    ‘இப்பொழுது மெசேஜ் பார்த்தேன் தெரிஞ்சா, உடனே ரிப்ளை பண்ணலன்னு  அதுக்கு வேற கேள்வி கேட்கும் இந்த லூசு’ என்று நினைத்துக் கொண்டே அப்படியே மூடி வைத்தவள், வேலையில் மூழ்கத் தொடங்கினாள்.

       அவனிடமிருந்து அவ்வப்போது மெசேஜ்  வந்து கொண்டிருந்தது.  ‘பேச வேண்டும் நீ எப்போது ஃப்ரீ’ என்று கேட்டு,

      இவளோ பதில் சொல்லாமல் தப்பித்துக் கொண்டே இருந்தாள்,

    இப்படியே நாட்கள் கடக்க ஒரு நாள் மீண்டும் அதே போல லிப்டில் வைத்து அவளிடம் “பேச வேண்டும்” என்று சொன்னவன்,

    அவள் “முடியாது” என்று சொல்லவும்,  அவளை அப்படியே மாடிக்கு லிப்டிலேயே கூட்டி சென்று விட்டான்.

    இவளோ அமைதியாக நின்றாள்,  “இங்க பாரு நீ தான் சொன்ன, அந்த யூனிபார்ம்க்கு ஒரு மரியாதை இருக்குன்னு,  நான் கையை பிடித்து இழுக்கிறதுக்கு முன்னாடி என் கூட வந்துரு” என்று சொன்னான்.

      “எனக்கு இப்ப பேச முடியாது, கொஞ்சம் டைம் வேணும்”, என்று சொன்னாள்.

  “எத்தனை நாள் டைம் வேணும்” என்று அவனும் அதட்டலாகவே கேட்டவன்.

“இங்க பாரு நீ என்னதான் என்கிட்ட பேசுறத அவாய்ட் பண்ணாலும், உன் மனசுல இப்போ இந்த நிமிஷம் வரைக்கும் நான் மட்டும் தான் இருக்கேன்னு எனக்கு தெரியும் சரியா, அதே மாதிரி என் மனசுல உன்ன தவிர வேற யாரும் கிடையாது ன்னு உனக்கும் தெரியும், பேசாம இருந்து என்ன செய்ய போறோம், பேசுவோம் பேசி முடிவுக்கு வருவோம் ன்னு சொல்லுறேன், நீ தான் ஒதுங்கி ஒதுங்கி போற,  ஏன் ஒதுங்க போற”,  என்று  கேட்டான்.

   அவளே அறியாமல் அவள் பார்வை அவன் புருவத்திற்கு மேலே இருந்த தழும்புக்கு சென்று மீண்டது, அவனோ “எத பத்தியும் யோசிக்காத, நாம பேசணும்,  பேசி முடிவுக்கு வருவோம் எப்ப பேசுறத பத்தி முடிவு பண்ண போற” என்று கேட்டான்.

   இவள் எதுவும் சொல்லாமல் தலையை திருப்பிக் கொண்டு நிற்க,  “திமிர் பண்ணாதடி இருக்கிற கடுப்புல அப்படியே சப்பு ன்னு இழுத்திடுவேன்,  ஆனா என் ஒரு அடிக்கு நீ தாங்க மாட்டேங்குறதுனால தான் அமைதியா இருக்கேன்., அவ்வளவு அடம் உனக்கு” என்று சொன்னவன், “பேசணும் இன்னைக்கு நீ மொட்டை மாடிக்கு வர்ற, அவ்வளவுதான்” என்று சொன்னான்.

      அமைதியாக நின்று கொண்டே இருந்தாள்.

     அவள் கையை பிடித்து இழுத்துக் கொண்டு வந்து லிப்டிற்குள் விட்டவன். “போ ஆஃபீஸ் கிளம்பு”, என்று சொல்லிவிட்டு அவனும் அதை லிப்டில் வர இருவரும் பேசாமல் ஆளுக்கு ஒருபுறமாக முகத்தை திருப்பிக் கொண்டே நின்றனர்.

    கீழே வரவும் அவனுடைய கார் எப்போதும் போல அவனுக்காக காத்திருக்க காரில் கிளம்பி சென்றான்.

    கோபமாக செல்கிறான் என்று தெரிந்தும் அமைதியாகவே நடந்து  கேப் வரும் இடத்திற்கு வந்து சேர்ந்தாள். மனம் முழுவதும் வலி இருந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் எப்போதும் போல ராதவோடு பேசிக்கொண்டே சென்றாள்.

    ராதாவோ “ஏன் ஒரு மாதிரி இருக்க,  பேச்சு எப்பவும் போல இருந்தாலும் உன் குரல் கொஞ்சம் டல்லா இருக்கே, உற்சாக குரல் மிஸ்ஸிங் லேசா பிசிரு தட்டுதே”, என்று கேட்டாள்.

     “நேத்து உனக்கு தெரியாம ஐஸ்கிரீம் சாப்பிட்டேன், அதுதான் குரல் பிசுறு தட்டுது”, என்று சொல்லி அவளை கிண்டல் செய்து கொண்டிருந்தாலும், மனமோ தன்னுடைய இத்தனை வருட தேடல்களை நினைத்து மௌனமாக கண்ணீர் விட்டது.

   ‘எப்படி சொல்ல முடியும் யாரிடம் சொல்ல முடியும்’ என்று தவித்துக் கொண்டிருந்தவள் தானே,

இப்போது ‘அவனே பேச வேண்டும் என்று சொல்லியும் ஏன் தன்னால் அவனோடு பேச முடியவில்லை’, என்று மனம் கிடந்து அடித்துக் கொண்டது, அவளும் ஒரு முடிவுக்கு வந்தவளாக ‘இன்று இல்லா விட்டாலும் நாளை நாளை மறுநாளாவது பேசிவிட வேண்டும்’ என்று முடிவெடுத்துக் கொண்டாள்.

   இறுதியாக முடிவெடுத்த பிறகு சற்று மனம் சமனப்பட்டது போல தோன்றியது.

   அன்று மாலையே அவள் அலைபேசிக்கு ‘மொட்டை மாடிக்கு வா’ என்று மெசேஜ் வர முதல் முதலாக பதில் மெசேஜ் அனுப்பினாள்.

    ‘மொட்டை மாடிக்கலாம் வர முடியாது’ என்று,

     இவனோ பதில் மெசேஜில் ‘கீழே வீட்ல அம்மா அப்பா இருக்காங்க, அதனால தான் நான் உன்னை மாடிக்கு வான்னு கூப்பிடுறேன்,  நீ மாடிக்கு வரலைன்னா நான் உன் வீட்டு கதவை தட்டிட்டு உன் வீட்டுக்குள்ளே வருவேன், எப்படி வசதி’, என்று கேட்டான்.

     இவளோ ஒரு கோபம் எமோஜி அனுப்பி ‘என்னால் மாடிக்கு வர முடியாது,  வேறு யாரும் நான் மாடிக்கு வருவதை பார்த்தால் புதிதாக ஏன் வருகிறாள், என்று தோன்றும் ,இதுவரை நான் மொட்டை மாடிக்கு போனதில்லை’ என்று போட்டாள்.

     அவனும் ‘சரி அப்போ உன் வீட்டு பால்கனிக்கு வா, நானும் பால்கனிக்கு வாரேன்’ என்றான்.

     இவளோ ‘பால்கனி ல வச்சு பேசினா மட்டும், உங்க வீட்ல உங்க அம்மா அப்பா க்கு  கேட்காதா’, என்று பதில் மெசேஜ் போட்டாள்,

    கடுப்பானவனோ,  ‘ஓஹோ அப்படியா விஷயம்’ என்று அனுப்பி விட்டு,  அதன் பிறகு மெசேஜ் அனுப்பவில்லை  என்றதும் சரி பார்த்துக்கலாம்,  ‘ரெண்டு நாள் கழிச்சு பேசலாம்’ என்று  நினைத்துக் கொண்டு அமைதியாகி விட்டாள்.

     அலெக்சாவில் இளையராஜா ஹிட் சாங் ஓடவிட்டவள், மறுநாள் சமையலுக்கு தேவையானவற்றையும் ராதாவிற்கு பிடித்தவற்றை செய்வதற்காக சில காய்கறிகளையும் தேர்வு செய்து எடுத்து வெட்டிக் கொண்டிருந்தாள்,

      மணி ஒன்பதை தாண்டி இருக்க பக்கத்து வீட்டில் எந்த சத்தமும் இல்லை, நிச்சயமாக அவர்கள் அம்மா அப்பா எப்போதும் 9 மணிக்கு எல்லாம் படுத்து விடுவார்கள் என்று தெரியும்,  ஆதலால் இந்த லூசு எப்படியும் போய் ரூமில் செட்டில் இருக்கும், நான் வரமாட்டேன் தெரியும் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டே காய்கறியை கட் செய்து பாக்ஸில் எடுத்து போட்டு ப்ரீஜ்ல் வைத்தாள்,

    ஹாலுக்கு வந்தவள் ஒரு நிமிடம் அதிர்ச்சியாக நின்றாள், ஏனென்றால் அவள் வீட்டு ஹாலில் உட்கார்ந்திருந்தான்  கதிரவன், அவனைப் பார்த்தவள் அதிர்ச்சியோடு முன் கதவை பார்க்க முன் கதவு பூட்டியே இருக்க,  அப்போது தான் கவனித்தால் பால்கனிக்கு செல்லும் கதவு திறந்து கிடந்தது, துணியை காய போட்டு விட்டு வந்தவள் கதவை பூட்டாமல் உள்ளே வந்து விட்டாள்,  துணியை காய போட்டு முடிக்கவும் அம்மாவிடம் இருந்து போன் வர அம்மாவிடம் பேசிக்கொண்டே அப்படியே உள்ளே வந்தவள்,

    காய்கறி எடுக்க கிச்சனுக்குள் சென்றவள் அப்படியே கிச்சனில் நின்று பேசிக்கொண்டே இருந்து விட கதவை சாத்த மறந்து விட்டாள்,  இவனும் சத்தமே இல்லாமல் ஹாலில் வந்து உட்கார்ந்து இருக்க, பாட்டு ஓடிக்கொண்டிருப்பதால் இவன் உள்ளே வந்தது கூட தெரியவில்லை,  ஒரு நிமிடம் அதிர்ச்சியில் இருந்தவள்,  அவனை பார்த்துக் கொண்டே “எப்படி வந்தீங்க” என்றாள்.