கனவுக்குள் காவல் – ௯

“இதோட போய் நின்னா என்ன ஆகுமோ?” என  வாய்விட்டு புலம்பியவாறு, தன் ஈருருளியில் (scooty)  இருக்கும் வலப்பக்க கண்ணாடியில் தன் முகத்தை பார்த்து கொண்டு இருந்தாள், மதி.

ஒரு முறை கண்ணாடியில் தன் முகத்தை பார்க்க, பின் அருகில் நின்றிருந்த அந்த மகிழுந்தை பார்க்க என மாறி மாறிப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

“நான் தூங்கினதுக்கு அப்புறம் வீட்டுக்கு வர்ரவேன்.  இன்னக்கி இவ்ளோ சீக்கிரம் இருட்றதுக்குள்ள வந்திட்டான்” என புலம்பியபடி தன் ஈருருளியில் அமர்ந்த வாக்கில் கிட்டத்தட்ட பதினைந்து நிமிடங்களை செலவிட்டவள்,

யாரோ வரும் அரவம் கேட்பது போல் இருக்க,  சட்டென்று எழுந்து சுற்றி யாரும் வருகிறார்களா என பார்த்தாள்.   அந்த வாகன நிறுத்தும் இடத்தில் இருக்கும் கதவுகள் திறக்கும் சத்தம் கேட்கவும்,  வேகமாக அங்கிருந்த மின்தூக்கிக்குள் புகுந்து கொண்டாள்.

மின்தூக்கிக்குள் இருந்தவளுக்கு ஒரே பதட்டமாக இருக்க, அங்கு இருக்கும் கண்ணாடியில் மீண்டும் தன் முகத்தை ஒரு முறை பார்த்துக் கொண்டு, “இன்னக்தி தான் இப்படி எல்லாம் நடக்கனுமா?” என தனக்கு தானே கேட்டுக் கொண்டாள்.

“இந்த லிஃப்ட் அப்படியே நின்னுட்டா எவ்ளோ நல்லா இருக்கும்” என மதியால் எண்ணாமல் இருக்க முடியவில்லை.  இருந்தும் அவளுக்கு தெரியும் இந்த மின் தூக்கி அத்தனை எளிதில் நின்று விடாது என்று.

ஏனெனில் இது “தரண் மாளிகை” இங்கிருக்கும் அனைத்தையும் கட்டுக்கோப்பாக பார்த்துக் கொண்டவர் முன்பு ரகுவின் தந்தை என்றால், இப்போது அவற்றைப் பார்த்துக் கொள்வது ரகு அல்லவா?

அதனால் இங்கு எதுவும் இயங்காமல் நின்று விடாது என்பது அவளுக்கு நன்றாக தெரிந்த விசயம் தான்.

திருமணம் முடிந்த மறுநாள் குலதெய்வம் கோயிலுக்கு சென்று பூஜை முடித்து விட்டு திரும்பினர்.

அடுத்து இரண்டு நாட்கள் ஜீவாவும் சக்தியும் ரகுவுடன் சேர்ந்து வீட்டை இரண்டாக்கி விட்டு, அதற்கு மேல் விடுமுறை கிடைக்கவில்லை என அங்கிருந்து ஊருக்கு கிளம்பி விட்டனர்.

அதன் பின் ரகுவும் மதியும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி ஒரு வாரம் கடந்திருந்தது.  சகோதரிகள் கிளம்பிய மறுநாளே தன் வேலைக்கு கிளம்பி விட்டனர் இருவரும்.

இன்று தன் வேலையில் நடந்த ஒரு குளறுபடியால் ரகுவை எப்படி சந்திப்பது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறாள் மதி.

இருபதே நொடிகளில் மின்தூக்கி கதவை திறந்து கொண்டு அவளுக்கான தளத்தை காட்டிட,  முதல் தளத்தில்  தன் காலை பதித்தாள் மதி.

மின்தூக்கியிலிருந்து இரண்டு அடிகள் முன்னே நடந்து,  அங்கிருந்தபடியே வரவேற்பறையில் யார் அமர்ந்திருக்கிறார்கள் என எட்டிப் பார்த்தாள்.

உள்ளே ஒரு பக்கம் தன் இரண்டு மாமியார்களும் அமர்ந்திருக்க, மறு பக்கத்தில் ரகுவும் ரவியும் ஏதோ தீவிரமாக பேசிக்கொண்டு அமர்ந்திருந்தனர்.

அதைப் பார்த்தவள் மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டு அங்கேயே  நின்று விட்டாள்.  அவளுக்கு தெரிந்து இந்த ஒரு வாரத்தில், யாரும் இந்த நேரத்தில் வரவேற்பு அறையில் அமர்ந்து பார்த்ததில்லை.

ஆனால் இன்று என்னவென்றால் அனைவரும் இங்கு தான் அமர்ந்திருக்கின்றனர்.

வரவேற்பறையில் அனைவரும் இருப்பது ஒரு பக்கம் பதட்டத்தை கொடுத்தாலும்,  மறுபக்கம் ரகுவும் இங்கே இருப்பது தனக்கு நல்லது தான் என எண்ணி கொண்டாள்.

மீண்டும் ஒருமுறை உள்ளே எட்டிப் பார்த்தாள்.  அனைவரும் தீவிரமாக பேசிக் கொண்டிருப்பது தெரியவும்,  ஒரு நொடி நன்றாக மூச்சை இழுத்து விட்டுக்கொண்டாள்.

இப்போது தன் இடது கையை தலையில் வைத்து தன் இடது பக்கம் முகத்தை மறைத்தவாறு தலையை குனிந்த கொண்டே உள்ளே செல்ல முயற்சித்தாள்.

உண்மையில் அவள் யார் கவனத்தையும் கவராமல் மிக மெல்லிய சத்தத்துடன் நடந்தாலும், சற்று விரைவாக நடந்து படிக்கட்டு வரை சென்று விட்டாள்.

வரவேற்பறையில் இருந்த அனைவரும் பேச்சு சுவாரசியத்தில் மதி வந்ததை அறியவில்லை.

எனினும், தாலி கட்டிய மனைவியுடன் மூன்று நாட்கள் மட்டும் செலவழித்து விட்டு.  அதன் பின் ஒரு வாரம் அவள் தூங்கிய பின் வீட்டுக்கு வந்து, மீண்டும் அவள் எழுவதற்கு முன்பே கிளம்பி சென்றுக் கொண்டிருந்த சூழலில்,

இன்று விரைவில் வீட்டிற்கு வந்து மனைவியை காணும் ஆவலில் இருக்கும் கணவனுக்கு தன்னவளின் வருகையை தன் புலன்கள் வேண்டும் என்றால் காட்டிக் கொடுக்காமல் போகலாம்.

ஆனால் அவன் உணர்வுகள் அந்த துரோகத்தை செய்யாதே? அவள் உள்ளே வந்து நொடியே அவன் உணர்வுகள்  அவள் வருகையை அவனுக்கு அறிவித்து விட,  தன் மனைவி தன்னை பார்த்ததும் என்ன செய்ய போகிறாள் என பார்க்கக் காத்திருந்தவன்.

அவள் தன்னை காணாமல்  படிக்கட்டு வரை சென்று விடவும், சட்டென்று தன் இருக்கையில் இருந்து எழுந்து,” ஹே மதி” என கத்தி விட்டான்.

அவ்வளவுதான் அதற்கு மேல் மதியால் ஒரு அடி கூட முன்னே எடுத்து வைக்க முடியவில்லை.  தொடர்ந்து ரகு,”நான் இன்னக்கி சீக்கிரம் வீட்டுக்கு வந்துட்டேன். என்னை பாக்கலையா மதி”, என்றான்.

“சிக்கிட்ட மதி, சிக்கிட்ட”, என மனதில் ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருந்தாலும்.  இவனிடம் இருந்து இப்போது தப்பிக்க வேண்டுமே என எண்ணிக்கொண்டு, கையில் இந்த பையை  கீழே போட்டு விட்டு அதை எடுப்பது போல் குனிந்தவாறு தன் வலப்பக்கம் மட்டும் அவனுக்கு தெரியும்படி பாதி திரும்பிய நிலையில்,

“ஓ சாரி ரகு பாக்கல. கோச்சிக்காதீங்க. எனக்கு கொஞ்சம் தலை வலிக்கிற மாதிரி இருக்கு.  நீங்க பேசிட்டு வாங்க” என படப்படவென பேசிவிட்டு வேகமாக படிக்கட்டில் கால் வைத்தாள்.

ஆனால் அவள் கணவன் அவளை விட்டால் தானே “மதிமா நில்லு”என கனமான குரலில் அழுத்தமாக வந்தது வார்த்தைகள்.

சொல்லியவன் ஒரு நொடி கூட நிற்காமல் அவள் அருகில் சென்று அவளை தன் பக்கம் திருப்பி நிறுத்தினான்.

ரகுவிற்கு அவள் தன்னை கண்டு கொள்ளாமல் உள்ளே செல்லும்போதே ஏதோ ஒரு சந்தேகம் வந்தது தான்.   அவள் பையை கீழே போடும்போது அவள் மறைக்க நினைத்தது, அவன் கண்களுக்கு அகப்பட்டு விட்டது.

இப்போது அவள் முகத்தைப் பார்த்தவனின் கண்கள் வேதனையை பிரதிபலித்தது.  மதியின் இடது பக்க கன்னம் நன்றாக வீங்கி சிவந்திருந்தது.   கூடவே அதன் இடையில் ஒரு காயம் பட்டு அதில் இருந்து மெலிதாக ரத்தம் கசிந்து இருந்தது.

“மதி என்னாச்சு டா?”என பதறியவாறு ரகு அவள் கன்னத்தில் கை வைக்க, அது மெல்லிய தீண்டல் தான்.  ஆனால் அந்த தீண்டலைக்  கூட பொறுத்துக் கொள்ள முடியாமல் மதி, “ஸ்ஸ்..ஆ..” என மெலிதாகக் கத்தி விட்டாள்.

மதி கத்தவும் மற்ற அனைவரும் அவர்கள் அருகில் என்னவென்று விசாரித்துக் கொண்டு பதறியபடி வந்து நிற்கவும் சரியாக இருந்தது.

மதியின் மெல்லிய அலறலில் கௌதமிக்கு ரகு மேல் சட்டென்று கோபம் வந்துவிட, அவன் கையை தட்டி விட்டு, அவர் அவள் அருகில் சென்று, “மதி என்னாச்சுடா? எப்படி அடிபட்டுச்சு?” என விசாரித்தார்.

அனைவரின் பதட்டத்தையும் தணிக்கும் பொருட்டு மதி,  “ஒன்னுமில்ல அத்தை. ஜஸ்ட் செவுத்துல இடிச்சுக்கிட்டேன். அதில இருந்த ஆணி குத்திருச்சு. அவ்ளோதான்” என்றாள்.

“எப்போ டா? எப்படி நடந்துச்சு ?”

“ஆபீஸ்ல தான் அத்தை.  கிளம்பி வரும்போது இடிச்சிடுச்சுக்கிட்டேன்”

“ஒரு பஸ்ட் எயிடாவது பண்ணிட்டு வந்துருக்கலாம்ல டா.  பாரு எப்படி இருக்குன்னு. யாருமே உன்னோட காயத்தை பாக்கலையா என்ன?”

“இல்ல அத்தை ஜெய் கூட ஃபர்ஸ்ட் எய்ட்  பண்றேன்னு தான் சொன்னா. நான் தான் வீட்டுக்கு தான் போறேன்னு எதுவும் பண்ணிக்காம வந்துட்டேன்”

“என்னடா இது அதுக்குன்னு இவ்ளோ நேரமா அப்படியே வச்சிருப்பியா? ரவி உடனே டாக்டர் கால் பண்ணு”

என்றதும் ரவி மருத்துவருக்கு அழைப்பு விடுத்து தொலைபேசியை காதில் பொருத்த, உடனே கௌதமி அதை அவனிடம் இருந்து பரித்துக் கொண்டு அவரே மருத்துவரிடம் பேச ஆரம்பித்தார்.

அருகில் வந்த தேவியும் அவளை விசாரித்துவிட்டு, தன் அக்கா மருத்துவரிடம்  பேசுவதை பார்த்துக் கொண்டிருக்க,  இப்போது ரகு மதியிடம், “உண்மையை சொல்லு, மதி.  இது எப்படி வந்துச்சு உன் கன்னத்துல லைட்டா ஏதோ விரல் ரேகை தெரியிது. உண்மைய சொல்லு”  என்றான்.  மற்றவர்களுக்கு கேட்காததால் மெல்லிய குரலில் தான் கேட்டான்.

அவனுக்கு அத்தனை பதட்டம் அவள் கன்னத்தை பார்த்ததிலிருந்து, ஆனாலும் பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டு அவளிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தான்.

அவள் இல்லை என்பது போல் ஏதோ கூற வர, “பொய் சொல்லக்கூடாது என்கிட்ட.  உண்மையை சொல்லு நான் பார்த்துக்கிறேன்” என்றான்.

மருத்துவரிடம் பேசிவிட்டு அலைபேசியை வைத்த கௌதமிக்கு ரகுவின் “பார்த்திக்கிறேன்” என்ற வார்த்தையை கேட்டு விட, உடனே அவர் கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டார்.

“என்ன டா பாத்துப்ப? என்ன பாத்துப்ப? ஒன்னும் பார்த்துக்க முடியாது உன்னால.  நீ ஆல்ரெடி ஒரு உயிரை கொன்னதே போதும் நீ எதுவும் பாத்துக்க வேண்டாம்.”

கௌதமி சொன்னதை கேட்டு ரகுவின் முகம் இறுக்கத்தை தத்தெடுக்க, மதி மாமியாரின் கோபத்தில் அதிர்ச்சியோடு அவரை பார்த்துவிட்டு,  உடனே ரகு புறம் திரும்பி அங்கே அவன் முகத்தில் இருக்கும் இறுக்கத்தை கண்டு வேதனை கொண்டாள்.

ரகு செயலற்று நின்றது எல்லாம் ஒரு நொடிதான், அடுத்த நொடி மதியின் கைகளைப் பிடித்துக் கொண்டு, “மதிமா வா நம்ம ரூமுக்கு போலாம்.  டாக்டர் மேல வந்து பார்ப்பாரு”, என்று அவளுடன் இணைந்து நடக்க ஆரம்பித்தான்.

கௌதமிக்கு அவன் செயல் இன்னும் கோபத்தை மூட்ட , “ரவி நான் சொல்லிட்டு இருக்கேன் இல்ல.  இவன் என்ன பண்ணிட்டு இருக்கான்”,  எனக் கோபமாக ரவியிடம் பாய்ந்தார்.