அவள் முகம் முழுவதும் முத்தமிட்டவன் இறுதியாக அவள் இதழ்களில் புதைந்தான். அவனது கைகள் அவளை இடையோடு சேர்த்து அழுத்தி படுக்கையில் வீழ்த்தியது.
இதழில் இருந்து விலகியவனின் இதழ்கள் அவள் கழுத்தில் பயணிக்க அவன் கரங்கள் தங்களின் தடைகளைத் தகர்த்தது. இத்தனை நாள் காதலியிடம் கண்ணியம் காத்தவன் இன்று அதை துடைத்தெறிந்தான். அவன் கரங்கள் சுதந்திரமாக அவள் மேனியில் பயணிக்க ஆரம்பித்தது. அவள் கரங்கள் அவன் முதுகை வளைத்தது.
அவன் கரங்களின் வேகத்தையும் இதழ்களின் ஆக்கிரமிப்பையும் தாங்க முடியாமல் “பிரபா….”, என்று தாபத்தில் ஒலித்தது அவள் குரல். அவள் மயக்கத்தில் அவனும் கிறங்கி கொஞ்சம் கொஞ்சமாக அவளை கொள்ளையிடத் துவங்கி இருந்தான். அவன் செய்கைகள் ஒவ்வொன்றும் அவளை உருக்கியது. அவன் தேடலிலும் தாபத்திலும், தீண்டலிலும் அவனுக்குள் கரைந்து காணாமல் போனாள் அர்ச்சனா.
அந்த இரவை இருவரும் கொண்டாடித் தீர்த்தார்கள் என்று சொல்லலாம். பல முறை ஒன்றாக இருக்கும் சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் அவளைத் தவிர்த்தவன் இன்று முழுமையாக அவளுடன் வாழ்ந்தான். அடுத்த நாளே அவளை அழைத்துக் கொண்டு லண்டனுக்கு தேனிலவு கொண்டாட பறந்து விட்டான்.
அங்கே அவர்கள் வாழ்க்கை இன்னும் அழகாக மாறியது. உலகம் மறந்து இருவரும் தனி உலகில் சஞ்சரித்த தருணம் அது. திரும்பி வந்ததும் ஒவ்வொரு வீட்டிலும் விருந்து ஆரம்பித்தது.
முதலில் மீனாட்சி வீட்டுக்கு சென்றார்கள். பின் பேங்க்ளூர் விருந்துக்கு சென்றார்கள். காயத்ரி வீட்டுக்கு விருந்துக்கு சென்றார்கள். அதற்கு பின் மீனாட்சி கூடவே பத்து நாட்கள் தங்கி இருந்தார்கள்.
ஒரு வழியாக லீவ் முடிந்து அர்ச்சனா வேலைக்குச் செல்லும் நாளும் வந்தது. காலை ஆறு மணிக்கு அவன் கைகளுக்குள் சுருண்டு நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள் அர்ச்சனா. முதலில் கண் விழித்த பிரபாகரன் அவளது நெற்றியில் இதழ் பதித்து “எந்திக்கலையா பொண்டாட்டி? இன்னைக்கு வேலைக்கு போகனுமே?”, என்று கேட்டான்.
“யாரு நானா? எல்லாம் உங்களால தான்”, என்று கண்களைத் திறக்காமலே பேசினாள்.
“நானா? நான் என்ன டி செஞ்சேன்?”
“நைட் என்னைத் தூங்க விட்டா தானே? படுத்ததே காலைல மூணு மணிக்கு தான். பின்ன தூக்கம் வராம என்ன செய்யும்?”, என்று வெட்கத்துடன் முணுமுணுத்தாள்.
“இப்ப என்ன? நீ கூட கொஞ்ச நேரம் தூங்கணும். அதானே? தூங்கு”
“வேலைக்கு கிளம்பனும் பிரபா”
“அதெல்லாம் போகலாம். ரெண்டு பேர் சேந்து குளிச்சோம்னு வை சீக்கிரம் கிளம்பிறலாம். அந்த டைமை இப்ப எடுத்துக்கோ. தூங்கு”, என்று சொல்ல “என்னது?”, என்று அரண்டு போய் எழுந்தாள்.
“என்ன டி?”
“நாம ரெண்டு பேரும் ஒண்ணா சேந்து குளிச்சா அவ்வளவு தான். ஆளை விடுங்க சாமி. எனக்கு தூக்கமே போச்சு”, என்று சொல்லி குளிக்கச் சென்றாள். அவள் குளித்து முடித்து வந்த பிறகு அவளிடம் சிறிது நேரம் வம்பிழுத்தவன் குளிக்கச் சென்றான்.
முதலில் கிளம்பி முடித்த அர்ச்சனா “கிளம்பலாமா பிரபா?”, என்று கேட்டாள்.
“நீ முன்னாடி போய் சாப்பிட்டுட்டு இரு. நான் ஒரு கால் பண்ணிட்டு வரேன்”, என்று அவன் சொன்னதும் “சரி, சீக்கிரம் வாங்க. என்னை விட்டுட்டு நீங்களும் ஆபீஸ் போகணும்”, என்று சொல்லி விட்டு கீழே வந்தாள் அர்ச்சனா.
அவள் வரும் போது அனைவரும் டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க சீதா அனைவருக்கும் பரிமாறிக் கொண்டிருந்தாள்.
“குட் மார்னிங் மாமா”, என்று சொன்ன அர்ச்சனா அங்கிருந்த சேரில் அமர்ந்து தன் முன் தட்டை எடுத்து வைத்துக் கொண்டு “மா, இன்னைக்கு என்ன ஸ்பெஷல்? வாசம் ஆளை இழுக்குது”, என்று சீதாவிடம் கேட்டாள்.
“பூரி செஞ்சேன் டா. உனக்கு பிடிக்கும் தானே? அதனால நல்லா சாப்பிடணும் சரியா?”, என்று சொல்லி அவளுக்கு பரிமாறினாள் சீதா.
“ஒரு கட்டு கட்டிட்டா போச்சு. சீதாம்மா சொன்னா கேக்காம இருப்பேனா?”, என்று கேட்டவள் பூரியை பிய்த்து உருளைக்கிழங்கு குருமாவில் தோய்த்து வாயில் வைக்கப் போகும் போது “கல்யாணம் முடிஞ்சு வந்தா மட்டும் போதாது. புருசனுக்கு பாத்து பரிமாறணும்னு எண்ணம் வரணும்? அதை விட்டுட்டு முதல் ஆளா திங்க உக்காந்துட்டா. இது எல்லாம் வளப்புல தான் இருக்கு. வளப்பு சரியில்லைன்னா என்ன சொல்ல?”, என்று சொன்னாள் யசோதா. அதைக் கேட்டதும் அர்ச்சனாவால் அந்த உணவை உண்ண முடிய வில்லை. ஏனோ அந்த நாளே நன்றாக அமையாதது போல ஒரு உணர்வு அவளுக்குள் எழுந்தது.
திருமணம் ஆன நாளில் இருந்து யசோதா அவளை ஏதாவது சொல்லிக் கொண்டு தான் இருக்கிறாள். சில நேரம் பிரபா யசோதாவைக் கண்டிப்பான். பல நேரம் அர்ச்சனா யசோதாவிடம் பேசாமல் ஒதுங்கிச் சென்று விடுவாள். ஆனாலும் யசோதா திருந்துவதாக இல்லை.
மாடியில் இருந்து இறங்கி வந்த பிரபா காதிலும் யசோதா பேசியது விழுந்தது தான். கீழே வந்தவன் யசோதாவை முறைக்க மகனின் பார்வையைத் தவிர்த்தாள் யசோதா.
அவன் ஏதோ சொல்லப் போவதை உணர்ந்த அர்ச்சனா காலையிலே பிரச்சனை வேண்டாம் என்று எண்ணி அவன் கையைப் பற்றினாள். பிரபா அவளைப் பார்த்ததும் “உக்காருங்க”, என்று சொல்லி விட்டு கை கழுவி வந்தவள் அவனுக்கு தட்டை வைத்து பரிமாறினாள்.
யசோதாவின் குரல் உதாசீனப் படுத்தினாலும் அவனுக்கு பரிமாற அவளுக்கு கசக்குமா என்ன? ஆனால் அவன் உண்ணாமல் இருக்க “சாப்பிடுங்க”, என்றாள். அப்போதும் அவன் உண்ணாமல் இருக்க “சாப்பிடு பிரபா”, என்றாள் சீதா.
“இருங்க அத்தை, எனக்கு கொஞ்சம் அம்மா கிட்ட பேசணும். பேசிட்டு சாப்பிடுறேன்”, என்று சொன்னவன் யசோதா புறம் திரும்பி “அம்மா, புருசனுக்கு பொண்டாட்டி தான் சாப்பாடு பரிமாறனுமா?”, என்று கேட்டான்.
“ஆமா டா”
“அப்படியா? அப்படின்னா நீங்க கடைசியா என்னைக்கு அப்பாவுக்கு சாப்பாடு பரிமாறினீங்க? அது மட்டும் இல்லை உங்க பொண்ணு என்னைக்கு அவ புருசனுக்கு சாப்பாடு பரிமாறினா? இல்லை இப்ப உங்க பக்கத்துல உக்காந்துருக்குற உங்க சின்ன மகனுக்கு அவன் பொண்டாட்டி பரிமாறினாளா? எல்லாருமே ஜோடியா உக்காந்து சாப்பிட்டுட்டு தானே இருக்கீங்க? அத்தையும் வேலைக்கார அம்மாவும் தானே எல்லாருக்கும் பரிமாறினாங்க? அப்ப என் பொண்டாட்டி மட்டும் எனக்கு பரிமாறனுமா? அவ வளப்பு சரியில்லைன்னா உங்க வளப்பு எல்லாம் எப்படி?”, என்று முகத்தில் அடிப்பது போல கேட்டு விட்டான்.
“பிரபா”, என்று அதிர்ந்து போய் அழைத்தாள் யசோதா.
“என்ன மா? இல்லை, புரியாம தான் கேக்குறேன். என் பொண்டாட்டி எனக்கு பாரிமாறி நான் சாப்பிடணும்னு எனக்கு ஆசை வந்தா நான் அவ கிட்ட கேக்க போறேன். அவ எனக்கு செய்யப் போறா. இடைல நீங்க எதுக்கு வறீங்க? உங்க கிட்ட வந்து நான் என் பொண்டாட்டி எனக்கு சாப்பாடு பரிமாற மாட்டிக்கா. நீங்க கொஞ்சம் சொல்லுங்கம்மான்னு சொன்னேனா?”
“பிரபா, நீ என்னை அவ முன்னாடியே அவமானப் படுத்துற?”
“அப்படி நீங்க நினைச்சா தப்பு உங்க மேல இருக்குனு அர்த்தம்? ஏன்னா நான் நியாயத்தை தான் கேட்டுட்டு இருக்கேன்”, என்று சொன்ன பிரபாகரன் தந்தை புறம் திரும்பி “அப்பா, அம்மா பேசுறதைக் கேட்டுட்டு நீங்களும் அமைதியா இருக்கீங்க? இது சில்லி ரீசனா இருக்கு பா. வேணும்னு அர்ச்சனா கிட்ட வம்பு இழுக்குறாங்க”, என்றான்.
“எனக்கு புரியுது பிரபா, பிடிக்காத மருமக கை பட்டாலும் குத்தம் கால் பட்டாலும் குத்தம்னு உங்க அம்மா பண்ணுறது எனக்கே புரியுது”, என்று மகனிடம் சொன்ன சக்கரவர்த்தி மனைவியை முறைத்தார். அவள் தலை குனிய “இனி இப்படி நடக்க கூடாது யசோ. எல்லாரும் சாப்பிடுங்க. அர்ச்சனா நீயும் உக்காரு மா”, என்றார்.
சீதா பரிமாற அனைவரும் உண்டார்கள். ஏனோ அர்ச்சனாவுக்கு ஒரு வாய் கூட உணவு உள்ளே இறங்க வில்லை. ஏதோ மனதுக்கு பாரமாக இருப்பது போல இருந்தது. நமக்கு ஒருவரைப் பிடிக்க வில்லை என்றால் கூட நாம் சாதாரணமாகவோ அவரை முறைத்துக் கொண்டோ இருப்போம். ஆனால் நம்மை ஒருவருக்கு பிடிக்க வில்லை என்றால் அவர் எதிரே அமரக் கூட ஒரு தயக்கம் வருமே? அப்படி ஒரு நிலையில் இருந்தாள்.
அந்த வீட்டில் இருக்கும் அனைவரும் அவளை எதிரி போல பார்க்க எப்படி அவர்கள் எதிரே அமர்ந்து அவளால் உண்ண முடியும்?
அவள் விரல்கள் உணவில் அலைந்து கொண்டிருப்பதைக் கண்ட பிரபாகரன் ஒரு நொடி மௌனமாக இருந்தான். வீட்டில் பார்த்த பெண்ணை நேசித்து பல போராட்டங்களுக்கு பிறகு மணம் முடித்து முடிவில் அவளுடன் அமர்ந்து சாப்பிடக் கூட முடிய வில்லை என்றால் இது என்ன வாழ்க்கை என்று சலிப்பு வந்தது அவனுக்கு.
“அர்ச்சனா, எழுந்து கை கழுவு”, என்று சொன்ன பிரபாகரனும் எழுந்து கொண்டான்.
அவள் திகைத்து அவனைப் பார்க்க “அவ சாப்பிடவே இல்லை டா. அவ சாப்பிடட்டும்”, என்றாள் சீதா.
“இல்லை அத்தை, அவளுக்கு வேலைக்கு போக நேரம் ஆச்சு. அவ இன்னைக்கு சீக்கிரம் போக வேண்டியது இருக்கு. கிளம்பு அர்ச்சனா”, என்று சொல்ல அவளும் எழுந்து கை கழுவச் சென்றாள்.
ஆனால் “நான் எங்க சீக்கிரம் போகணும்னு சொன்னேன்?”, என்று குழம்பிய படி தான் போனாள் அர்ச்சனா. அவள் கை கழுவி விட்டு வந்ததும் “அத்தை, இனி எங்க ரெண்டு பேருக்கும் சாப்பாடை எங்க ரூமுக்கே பட்டு அம்மா கிட்ட கொடுத்து விட்டுருங்க. இங்க உக்காந்து சாப்பிட்டு யாரையும் நாங்க கஷ்டப் படுத்த விரும்பலை”, என்று சொன்னவன் அனைவரும் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தாலும் யாரையும் கண்டு கொள்ளாமல் யாரிடமும் ஒரு வார்த்தை சொல்லாமல் அவளை அழைத்துக் கொண்டு சென்று விட்டான்.
“பாத்தீங்களாங்க, எப்படி போறான்னு? எல்லாம் அவ வந்த நேரம் நம்ம மகன் ரொம்ப மாறிட்டான்?”, என்றாள் யசோதா.
“வீட்டுக்கு உழைக்கிறவனை நிம்மதியா ஒரு வாய் சாப்பிட விடாம பண்ணின உன் மேல கொலை வெறியே வருது. ஆனா ஒரு விஷயம் சொல்றேன் நல்லா கேட்டுக்கோ. நீ அர்ச்சனாவைக் காயப் படுத்த செய்யுற ஒவ்வொரு விஷயமும் பிரபாவை உன் கிட்ட இருந்து பிரிச்சிக்கிட்டே போகும். அம்மா உங்க கையால ஊட்டி விடுங்கன்னு சொல்றவன் இப்ப உன் முன்னாடி உக்காந்து சாப்பிடவே மாட்டேன்னு சொல்லிட்டுப் போறான். இதுக்கு அப்புறம் அவன் என்ன செஞ்சாலும் அதுக்கு அர்ச்சனா காரணம் இல்லை. நீ தான் காரணம்”, என்று சொன்னவர் எழுந்து சென்று விட்டார்.
“நான் இப்ப என்ன சொல்லிட்டேன்னு இவர் கத்திட்டு போறார்?”, என்று யசோதா கேட்க “நீங்க கேட்டது சரி தான் அத்தை. மாமா தான் புரிஞ்சிக்காம பேசிட்டு போறார்”, என்று அவளுக்கு ஒத்து ஊதினான் வேணு.
அவன் அப்படிச் சொன்னதும் “வேணு, சாப்பிட்டது போதும். கிளம்பு”, என்று சொல்லி அவனை முறைத்தாள் சீதா.
“என்ன இந்த அம்மா இப்படி முறைக்கிது? இந்த மச்சான் எதுவும் அம்மா கிட்ட போட்டுக் கொடுத்துருப்பானோ?”, என்று எண்ணி அந்த இடத்தைக் காலி செய்தான் வேணு.