அத்தியாயம் – 4 

குவாங்சான் வந்து நான்கு  நாட்கள் கடந்திருந்தது. வல்லபன் சற்றே வெறுத்திருந்தான். 

“நண்பா, மீண்டும் வேகவைத்த கோழியும் வாத்தும் உண்ணச் சொல்லாதேடா. இவர்கள் எண்ணையில் வறுப்பது பொரிப்பது என்று எதையுமே கற்றுக்கொள்ளவில்லையா? புளிப்பும் இல்லை உரைப்பும் இல்லை. என் நா உணர்வற்றுப் போய்விட்டதடா!” 

மீண்டும் ஒரு சீன சத்திரத்தில் உணவருந்த மறுத்து வீதியில் நின்று மன்றாடிக்கொண்டிருந்தான். 

“வல்லபா… நாம் வந்த வேலையில் கவனம் இருந்தால் இந்த உணவு ருசியெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. வணிகர்கள் வந்து போகுமிடங்களில்தான் சிறந்த வெங்களிப் பொருட்கள் எங்கே பெறலாம், நம் முத்துக்களை எங்கே விற்கலாம் என்ற செய்திகளை பெற முடியும். குழந்தையைப் போல அடம் செய்யாதே”, இளமாறம் பொறுமை இழந்து சீறினான். 

 “பல நாட்களாய் கடல் சார்ந்த உணவை உண்டு நொந்து போய் வந்தால் ஒரு கோழி கொடுகளிக்குக்கூட (குழம்பு) வக்கற்று போய்விட்டது”, முனகிக்கொண்டே வந்தான் வல்லபன்.  

“நேற்று இலையில் சுற்றியிருந்த சோற்றில் இனிப்பைக் கலந்து அக்கார வடிசல் போன்ற தொரு உணவை உண்டாயே”, மாறன் சொல்ல, 

“அக்கார வடிசலை கேவலப்படுத்தாதே. அரிசியும் வெல்லமும் கொண்டு செய்தது என்பதோடு ஒற்றுமை முடிந்தது. வேறு சுவையை நா உணரட்டுமே என்று உண்டேன்”, முகத்தை தூக்கினான். 

“சரி… நீயே சென்று உணவை வாங்கிவா. அதோடு  நம் விஷயங்களையும் கேள். நானும் மற்ற நாட்டவரிடம் முயற்சிக்கிறேன்”, என்று மாறன் விலகிச் சென்றான். 

இரண்டு கலயங்களை ஏந்திக்கொண்டு ஒரு நாழிகை கழித்து வந்து சேர்ந்தான் வல்லபன். அங்கிருந்த நீள மேசையில் வைத்துவிட்டு இருபுறமும் நண்பர்கள் அமர்ந்தனர். 

“என்னடா, சற்றே கனமான நூல் பிட்டு போல் இருக்கிறது. ஆனால் கொதினீரில் இன்னும் இருக்கிறதே? வேகும் முன்னரே எடுத்துவந்துவிட்டாயா?”, வினவிய மாறனை முறைத்தவன், 

“ம்ம். சோளமாவில் செய்கிறார்கள். வெந்து முடிந்துவிட்டது. அதைத்தான் காய் மாமிச துண்டுகள் சேர்த்து வேகவைத்த நீரோடு சேர்த்து உப்பிட்டு தருகிறார்கள். வேலை என்று வந்தால் ருசி பார்க்கக் கூடாதென்றாயே. இப்போது என்ன? உண்”, என்று கலய சூட்டிற்கு சற்றும் குறையாமல் பதிலளித்தான் வல்லபன். 

“ஹாஹா.. இந்தூ நாட்டின் உணவு ருசியை இங்கே கேட்டால் எப்படி நண்பா”, என்று ஒரு குரல் மறு ஓரத்திலிருந்து வந்தது.  

தமிழை கேட்க ஆவலாக திரும்பினார்கள் இருவரும். ஆனால் அங்கே இருந்தவனைப் பார்க்க, அவனும் யவனன் என்று புரிந்தது.  

“தமிழ் பேசுகிறீர்கள் ஆனால்…”, என்று நிறுத்திய வல்லபனைப் பார்த்தவன், “நீ கூட சீன மொழியில் தான் பேசி உணவை வாங்கினாய்? சில ஆண்டுகள் பூம்புகார் நாகை என்று தங்கியிருக்கிறேன். கற்றுக்கொண்டது மறக்கவில்லை”, என்ற பதிலில், மாறன் எழுந்து தங்களை அறிமுகம் செய்துகொண்டான். 

“என் பெயர் உசேன். அரபு நாட்டு வணிகர் ஒருவரிடம் பணிபுரிகிறேன். அவர் குதிரைகளை கடல் பயணத்தில் பேணுவதுதான் என் வேலை”, என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டான். 

பேச்சு சுற்றி வந்து வெங்களிப் பொருட்கள் பற்றியும் எழுந்தது. “இதுவரை கேட்டதில் பெரிதாக எதுவும் கவரவில்லை உசேன். சிறப்பான பொருட்கள் எங்கே கிடைக்கும் என்று நீ எதுவும் கேள்விப் பட்டிருக்கிறாயா?”, மாறன் கேட்கவும் பெரிதாக நகைத்தான் உசேன். 

“இந்த மாதிரி சத்திரத்தில் விசாரித்தால்  அந்த அளவில்தான் கருத்தும் இருக்கும் மாறா. நீ தேடும் உயர்தரம் பற்றி விசாரிக்க அதற்கு தக்க இடங்களுக்கு அல்லவா செல்ல வேண்டும்?” உசேனின் பதிலில் துணுக்குற்றவன், 

“அப்படி என்ன இடம்? பொருள் வாங்குவதை தவிர்த்து பெரிதாக இறைக்க எங்களிடம் செல்வம் இல்லை உசேன்”, என்று எச்சரிக்கையோடே கேட்டான் மாறன். 

“ஆமாமாம். வந்தவுடனே எங்கள் பொன் வெள்ளிக்காசுகளை வாங்கிக்கொண்டு அச்சிட்ட பணக்காகிதங்களை கொடுத்திருக்கிறார்கள் இந்த நாட்டில். அப்படியும் பெரிதாக செல்வம் இல்லை”, என்றான் வல்லபன்.  

சீன நாட்டில் காகிதமும் அச்சும் கண்டுபிடிக்கப்பட்டு புழக்கத்தில் இருக்க, மங்கோலிய பேரரசு, வெள்ளிக்கு ஈடாக காகித பணத்தை அச்சிட்டு வழங்கியது. உள் நாட்டிலும் சிறு வணிகம் செய்யவும் இந்த காகிதப் பணங்களே பயன்படுத்தப்பட்டன. தேவை இருப்பின் அதை ஆங்காங்கே இருக்கும் அரசு கருவூலங்களில் கொடுத்து இரும்பு காசுகளாகவும், வெள்ளிக் கட்டிகளாகவும் மாற்றிக்கொள்ளலாம். என்ன ஒன்று, நாம் கேட்கும் நேரம் கருவூலத்தில் அவை போதுமான அளவு கையிருப்பு இருக்கவேண்டும். 

தோளை குலுக்கிய உசேன், “எளிதாக எதுவும் கிடைத்துவிடாது நண்பா. கேளிக்கைக்கூடம் ஒன்று இருக்கிறது. உயர் ரக வணிகர்கள் கூடும் இடமும், வணிகம் முடிக்கும் இடமும் அதுதான். உள்ளே நுழைய அனுமதிக் கட்டணமே அதிகம்தான். அனுமதிக் கட்டணத்தின் பாதியை என்னிடம் தர சித்தமாயிருந்தால், என் ஹூசூரின் பெயர் சொல்லி உங்களை உள்ளே அனுமதிக்க ஏற்பாடு செய்கிறேன்”, வியாபாரம் பேசினான். 

வல்லபன் மாறனைப் பார்க்க, அவனுமே யோசனையில் இருந்தான். “இன்னும் எத்தனை நாட்கள் இங்கே சுற்றி வந்தாலும் ஒரு புதுத் தகவலும் கிடைக்கப்போவதில்லை நண்பா”, என்று முணுமுணுத்தான் மாறனிடம். 

“ம்ம்… ஆனாலும் இந்த சில நாட்களிலேயே நம்மை ஏமாற்ற நினைத்தவர்கள் எண்ணிக்கை எத்தனை? இவனும்..”, மாறன் தயங்க, 

“உசேன்.. இந்த சில நாட்களிலேயே பலர் எங்களை ஏமாற்ற முயற்சித்தனர். தரமான பொருளை காட்டிவிட்டு, அவர்கள் இருப்பிடம் சென்றதும் தரமற்ற பொருட்களை தலையில் கட்டவும், மறுத்ததில் எங்களின் பணத்தை பறிக்கவும் முயற்சிகள் நடந்தன. நீ சொல்வதை எதைக் கொண்டு நாங்கள் நம்ப?”, வல்லபன்  நேராகவே கேட்டுவிட்டான். 

“நல்லது, உன்  நண்பனைப்போல தயங்காமல் கேட்டுவிட்டாய்.  அவ்விடம் அழைத்துச் செல்கிறேன்.  முகப்பைப் பாருங்கள். தனியே சென்று அனுமதி கேளுங்கள். பின்பு செல்ல ஆசையிருந்தால் என்னிடம் வாருங்கள்”, சற்று அலட்சியமாகவே கூறினான் உசேன். 

மாலை நேரம் பிரதான வட வீதியில் சந்திப்பதாகக் கூறிவிட்டு, சற்று  நல்ல உடைகள் உடுத்தி வரச் சொல்லிச் சென்றான் உசேன். 

அதன் பொருட்டே தங்களிடமிருந்த தரமான பருத்தி வேட்டியும் மேல் உடையும் அணிந்து, குறித்த நேரத்திற்கு வந்தனர் நண்பர்கள். வல்லபன் தன் வெள்ளிக் காப்பினை புஜத்தில் அணிந்திருந்தான். இடையில் நல்ல தோலில் ஆன இடைப்பட்டையில் குறுவாள் ஒன்று தொங்கிக்கொண்டிருந்தது. மாறன் செம்புக் காப்பினை அணிந்து வல்லபனைப் போலவே குறு வாள் அணிந்து வந்தான். காதில் வெள்ளிக் கடுக்கண் விரிந்த அவனது கற்றைக் குழல்களுக்கு மத்தியில் எட்டிப்பார்த்தது. 

இருவரையும் கண்ணுற்று திருப்தியான உசேன், செல்லுவோம் என்று அவன் ஏற்பாடு செய்து வைத்திருந்த குதிரையைக் காட்டினான். அதற்கான காசுகளை மாறன் தரவும், கடிவாளம் கைகளுக்கு வந்தது. 

மூன்று புரவிகளும் பாதையில் பிரிந்து கிட்டதட்ட இரண்டு நாழிகை தூரம் வர, விளக்கொளிகளில் வேறு ஒரு ஊர் தெரிந்தது. அருகே செல்ல, சற்றே செல்வச் செழிப்பான ஊர் என்பது புலப்பட்டது. மெல்ல குதிரையை நடத்தியபடி சுற்றத்தை உள்வாங்கியபடியே வல்லபனும் மாறனும் இருக்க, ஒரு பெரிய மதில் சுவர் வாயில்புறம் வந்ததும் இறங்கினான் உசேன். 

“நான் கூறிய கேளிக்கைக் கூடம் இதுதான்.  அங்கே பாருங்கள், வந்திருக்கும் செல்வந்தர்களின் வண்டிகளும் குதிரைகளும்”, என்று எதிரே சுட்டிக்காட்டினான். உண்மைதான் போலும். சீனப் பட்டில்  நெய்திருந்த ஒரு பல்லக்கு அதன் உரிமையாளரை இறக்கிவிட்டு  நான்கு ஆட்கள் தூக்கி வர அப்போதுதான் வந்து சேர்ந்தது.  

“வலப்பக்கம் சென்று திரும்புங்கள். பிரதான வாயில் வரும். அனுமதி பற்றி விசாரித்துவிட்டு வாருங்கள். நான் இங்கேதான் இருப்பேன்”, உசேன் அனுப்பி வைத்த அரை நாழிகையில் அவனிடம் வந்து நின்றனர் நண்பர்கள் இருவரும். 

என்ன என்பதாக புருவம் உயர்த்தினான் உசேன். அவர்களின் ஒரு நாள் செலவிற்கான காசை உசேனிடம் அளித்தான் மாறன். 

உசேன் என்ன மாயம் செய்தானோ, அவன் சொல்லியபடி மீண்டும் வாயில் புறம் செல்ல, இம்முறை கதவு திறந்து அவர்களுக்கு வழி விடப்பட்டது. வேறொரு உலகிற்கு வந்துவிட்டதைப் போல இருந்தது இருவருக்கும். 

மெல்லிய மூங்கில் தட்டிகள் கொண்டு ஆளுயர அலங்கார  கூண்டு. அதை நாற்புறமும் முழுதுமாக மஞ்சள் மீன்கள் நெய்யப்பட்டிருந்த நல்ல சிகப்பு சீனப் பட்டு சுற்றியிருந்தது.  அந்த கூண்டிற்குள் விளக்குகள் பொருத்தியிருந்தார்கள். அதன் ஓளி பட்டு , பட்டுத் துண்டு மின்ன, நெய்திருந்த மீன்கள் உயிரோடு இருப்பது போன்றதொரு தோற்றம். இந்த கூண்டு விளக்கு பெரிய தாமரை வடிவிலான மீன் தொட்டிக்கு நடுவில் வைக்கப்பட்டிருந்தது. பட்டொளி தண்ணீரையும் அதிலிருந்த துள்ளும் அலங்கார வெள்ளி மீன்களையும் தகதகக்க வைத்தன. 

நண்பர்கள் இருவருக்கும் காணக் காண தெவிட்டாத காட்சியாக அமைந்தது. 

“சரியான இடத்திற்குத் தான் வந்திருக்கிறோம் வல்லபா. இந்த பட்டுத் துண்டை மட்டும் வாங்கிச் சென்றால் மீதத்தை நாமே அங்கே செய்து விடலாம்”, மாறன் மனம் தோராய விலையைக் கணக்கிட்டது. 

அழகிய சீனப் பெண் ஒருத்தி இரு கரம் கூப்பி வணங்கி சீனத்தில் ஏதோ கேட்க, “அ..ஹ்ம்ம்…”, என்று தடுமாறிய வல்லபன், ஒன்றிரண்டு சீன வார்த்தைகளை கோர்த்துக் கூறினான். 

நெற்றியை லேசாக சுருக்கிய பெண், பின் ஏதோ புரிந்ததாக தன் பின் வரும்படி அழைத்துக்கொண்டு உள்ளே சென்றாள். 

“அவள் என்ன கேட்டாள், நீ என்னடா கூறினாய்?” 

“யாரைத் தேடி வந்துள்ளோம் என்று கேட்டாளென நினைக்கிறேன். தோராயமாக நண்பனைக் காண வந்துள்ளதாகக் கூறினேன். பார்க்கலாம் எங்கே அழைத்துச் செல்கிறாளென”, என்று பேசிக்கொண்டு வந்தாலும், அலங்காரத் தூண்களும், அதைச் சுற்றி வரையப்பட்டிருந்த ஓவியங்களும், ஆங்காங்கே உத்திரத்திலிருந்து தரை வரை தொங்கவிடப்பட்டிருந்த பட்டுத் திரைச் சீலைகளும், வந்திருக்கும் இடம் மிகுந்த செல்வங்கள் நிறைந்த மாளிகை என பறை சாற்றின. 

சிறியதொரு வாயில் வாசலில் நின்றவள் உள்ளே எதோ பேச, அடுத்து இவர்களை செல்லுமாறு சைகை செய்து விடை பெற்றாள். 

மாறன் எட்டிப் பார்க்க, அது ஒரு சிறிய அறை. வெளியே பார்த்த அலங்காரங்களுக்கு சற்றும் குறைவில்லாத அளவு இந்த அறையும் ஜொலித்தது. வாசனை எண்ணெய் கொண்டு அறையை ஒளியூட்டி இருப்பார்கள் போல. நறுமணம் இதமாக இருந்தது. 

நடுனாயகமாக ஒரு மேசை இருக்க, அதன் ஒரு புறம் அமர்ந்திருந்தவரைப் பார்த்து சற்றே முழித்தார்கள். சீன பாரம்பரிய உடை, அவர்களைப் போலவே நீண்ட முடி வளர்த்து பின்னலிட்டு தோளுக்கு முன்புறம் போட்டிருந்தார். வயதும் நாற்பதை தாண்டியிருக்கும். ஆனால் உடலின் நிறமும், முகவெட்டும் தமிழாகத் தெரிந்தது. 

 அந்த மனிதரும் வந்தவர்களை ஓர் அளக்கும் பார்வை பார்த்தபடியே, தன் எதிரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த மற்றொரு சீனரிடம் சரளமாய் சீன மொழியில் பேசிக்கொண்டிருந்தார். இருவரும் எழுந்து நிற்க , சீனன் விடை பெற்றான். 

“யார் நீங்கள்? என் நண்பன் என்று ஏன் பொயுரைத்து வந்துள்ளீர்கள்?”, என்று குரல் அதிகாரமாக வந்தது. 

“வணக்கம் ஐயா. நீங்கள் யாரென்று தெரியாது. பொதுப்படையாக நண்பனைப்பார்க்க வந்தோம் என்று கூறினேன். அந்தப் பெண் இங்கே அழைத்து வந்தாள்”, வல்லபன் விளக்கமளித்தான். அதை எவ்வளவு  நம்பினார் என்று அவர் முகத்தில் தெரியவில்லை. 

“ஹ்ம்ம்.. மேலே சொல்லுங்கள்”, என்றார். 

தங்கள் இருவரையும் அறிமுகம் செய்து கொண்டவர்கள் சீனப் பயணத்தின் நோக்கத்தையும் கூறினார்கள்.  இருவரையும் மீண்டும் ஒரு பார்வை பார்த்தவர், 

“ஹ்ம்ம்…. என் பெயர் வளவன். சீனப் பெயர் ஷீ.  இங்கு பல வருடங்களாக தொழில் செய்து வருகிறேன். அமருங்கள்”, என்று சற்று இளகினார். 

 நாகை, மதுரை, காஞ்சி, பாண்டிய ஆட்சி என்று பல விஷயங்களை தொட்டது பேச்சு. வேறொரு சீன மங்கை சிறு சிறு வெங்களிக் கோப்பைகளில் அவர்கள் எதிரே நின்று நளினமாக சுடுநீரை ஊற்றி அதனோடு மற்றொரு சிறு பானையிலிருந்து வேறு ஒரு திரவத்தையும் உடன் கலந்து அவர்கள் முன் வைத்தாள். ஷீயின் முன்னும் ஒன்றை வைத்து  மென்முறுவலுடன் விடை பெற்றாள். 

வல்லபன் தன் முன் இருந்த கோப்பையில் மிதப்பது சிறு இலைத் துகளா அல்லது தூசியா என்ற ஆராய்ச்சியில் இருக்க, மாறனோ அந்த வெங்களி கலயங்களிலும், அதை ஏந்தி வந்திருந்த பெரிய தட்டிலும் நிலைத்தது. 

“சீனத் தே நீர். அருந்துங்கள். உடலிற்கும் நல்லதுதான் மூலிகை இலைகள் கொண்டு செய்யப்படுவது. சற்றே துவர்ப்பாக இருக்கும். ஆனால் இதை பிடிக்கவில்லை என்று நிராகரிப்பது அவமானப்படுத்துவதற்கு சமம்”, வளவன் தன் கோப்பையை எடுத்தபடியே கூற, மாறனும், வல்லபனும் தங்கள் கோப்பையை எடுத்துக்கொண்டார்கள். 

“சீனர்களுக்கு இது மிகவும் விருப்பமான பானம். சிறு பைகளில் இந்த இலைகளை அடைத்து தைத்து அதன் நறுமணத்தைப் பாதுகாக்கிறார்கள். கொதி நீரில் இடவும், சற்று நேரத்திற்கெல்லாம் இந்த தே நீர் கிடைக்கிறது. 

வல்லவன் ஒரு வழியாக குடித்து முடித்து கோப்பையை கீழே வைக்கவும், மீண்டும் அதை நிரப்பினார் வளவன். 

“ஐயோ… மீண்டுமா?”, என்று வல்லபன் கேட்க நினைத்து கேட்காமல் பார்க்க, அவன் முழிப்பதைப் பார்த்து வாய்விட்டுச் சிரித்த வளவன், 

“நீ கோப்பையை காலி செய்து வைக்க வைக்க, அதை நிரப்பி உபசரிப்பது என் கடமை. இல்லையென்றால் நான் உன்னை அவமதிப்பதாகிவிடும்”, என்று அவன் புறம் தளும்பும் கோப்பையை தள்ளினார். 

அருந்தினாலும் தவறு, அருந்தவில்லையென்றாலும் தவறா?  என்று நினைத்தவன், “இந்த சடங்கு பின் எப்போது முடியும்?”, என்று வினவினான். 

நமுட்டுச் சிரிப்புடன், “உன் தோழனைப் போல விடை பெறும் வரையிலும் முடிக்காமல் வைத்திருக்க வேண்டும், ஆனாலும் அவ்வப்போது சிறிதளவு அருந்தவும் வேண்டும் வல்லபா”, என்று விளக்க  

“இதென்ன பாரம்பரியமடா! இனிப்பாக இருந்தால் கூட சமாளிக்கலாம், இப்படி துவர்ப்பாக, கிட்டதட்ட கசப்பாகவே இருக்கிறது”, என்று பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு மீண்டும் கையில் கோப்பையை எடுத்துக்கொண்டான். 

“என்ன இளமாறா பார்த்துக்கொண்டிருக்கிறாய்?”, வளவனின் கேள்விக்கு, மௌனம் கலைத்தவன், 

“இந்த வெங்களிப் பொருட்கள் எங்கேயிருந்து தருவிக்கிறார்கள் என்று தெரியுமா ஐயனே?”, என்று கொக்கிற்கு ஒன்றே மதி என்பதுபோல அவன் காரியத்திலேயே இருந்தான். 

“ஹாஹாஹா…. தஞ்சையில் இருந்துகொண்டு அரிசி எங்கே விளைவிக்கிறார்கள் என்று கேட்பது போல இருக்கிறது!”, என்று சிரித்தார். 

அவர் கேலியில் மெலிதாக புன்முறுவலித்தவன், “அரிசியிலும் பல வகை இருக்கிறதே. சிறந்த தரமான அரிசியைத் தேடுபவன், அதனைக் கண்டால், எங்கிருந்தாலும் அந்தக் கேள்வியை கேட்பானே”, என்று மாறன் தன் நிலையில் நின்றான். 

“ஹ்ம்ம்… ஆக இந்த வெங்களிக் கோப்பை நீ தேடி வந்த தரத்திலிருக்கிறது என்று நினைக்கிறாயா?” 

“கண்டிப்பாக இதுவரை நாங்கள் பார்த்தவையை விட தரமானது”, என்றான் மாறன் உடனே. 

“வெங்களிப் பொருட்களைப் பற்றி நிறைய தெரியுமா? பார்த்ததும் அதன் தரம் புரியும் அளவு பல வருட அனுபவமா?”, வளவன் புருவம் உயர்த்திக் கேட்கவும், 

இவர் நிஜமாகக் கேட்கிறாரா நையாண்டி செய்கிறாரா என்று யோசனையாகப் பார்த்தான் மாறன். 

“நண்பனுக்கு கொஞ்சம் அனுபவம் இருக்கிறது வளவனாரே. இதை வாங்குபவருக்கும் வெங்களிப் பற்றிய நுண்ணறிவு இருக்கப்போவதில்லை. பார்க்க அழகாகவும், விரிசல் இல்லாமலும் இருந்தால் லாபம் பார்த்துவிடலாம். அதற்கு மேல் எதற்கு வெங்களி ஆராய்ச்சி?”, வல்லபன் இடையிட்டான். 

புன்னகை விரிந்தது வளவனின் முகத்தில். “ம்ம்…வியாபாரம் பேச வல்லபனை வைத்துக்கொள் மாறா. அவனின் கருத்து லாபத்தில் இருக்கிறது. உன் கவனம் வெங்களியில் இருக்கிறது.” 

“இந்தப் பொருள் தரமில்லை என்கிறீர்களா வளவனாரே?”, மாறன் இடையில் நடந்ததை விடுத்து, அவனது கேள்விக்கு திரும்பினான். 

“இல்லையே. தரத்தின் அளவுகோல் அவரவர் பார்வைக்கு ஏற்ப மாறும். என் பார்வைக்கு இவை சற்று தரம் குறைந்ததுதான்”, தோளை குலுக்கிச்  சொன்னார். 

என்னவோ இந்த இருவரையும் வளவனுக்குப் பிடித்தது. தமிழ் பேசுகிறார்கள் என்றில்லை. வணிகர்கள் சோழ பாண்டிய தேசத்திலிருந்து அவ்வப்போது வந்து செல்வது வழமைதான். பொருள் ஈட்ட பெரும் கனவோடு இருவரும் வந்திருப்பது எதோ ஒரு வகையில் வளவனை ஈர்த்தது. அந்தக் கனவை ஈடேற்ற எதேனும் உதவ வேண்டும் என்று தோன்ற,  

“டாங்ஜின் வந்து வெங்களிப் பொருட்களை பாருங்கள். பிறகு முடிவு செய்து கொள்ளுங்கள்”, என்று விடைகொடுத்தார். அடுத்த முறை அவரை இரத்த வெள்ளத்தில்தான் காணப்போகிறோம் என்று அறியாத இருவரும் இனிதே விடைபெற்றனர். 

வெளியே வந்த வல்லபன், “டாங்ஜின் என்று மொட்டையாகக் கூறினால் எப்படி செல்வதாம்? மேல் விவரம் எதுவும் கூறாது பேச்சை முடித்துவிட்டாரே! நம் நாட்டில்லிருந்து வந்திருக்கிறானே உதவுவோம் என்று எண்ணம் இருக்கிறாதா?”, என்று மாறனிடம் அங்கலாய்த்தான். 

“இல்லை நண்பா. அந்த பெயரே போதும் என்று நினைத்திருப்பார். வா, நாம் உசேனைக் கேட்போம். 

குதிரை லாயத்திற்கு வந்தால் இவர்கள் குதிரை மட்டுமே இருந்தது. உசேன் எப்போதோ சென்றுவிட்டான்.