அழகிய மலைகள் சூழ்ந்த குவாண்டாங் பெரு நகரத்தில் புகழபெற்ற துறைமுகம் குவாஞ்சாவ். புகழும் பலமும் பொருந்திய மங்கோலியப் பேரரசன் கூப்ளாய் கான் தொடங்கி, கெங்கிஸ் கான் புகழ் சேர்த்த பரந்து விரிந்த யுவான் பேரரசின் பல பகுதிகளிலிருந்தும் கப்பல்கள் வந்து செல்லும். தொலை தூர யவன நாடு, பெரும் செல்வங்கள் நிறைந்த இன்-தூ நாட்டிலிருந்தும் வாணிபம் செய்ய பெரும் பாய்மரக் கப்பல்களில் பல பௌர்ணமிகளைக் கடந்து வணிகர்கள் வருவார்கள்.
பல நாடுகளிலிருந்து வரும் யவனர்கள் தங்கள் பொருள்களை மட்டுமல்லாது தங்கள் மதங்களையும், கடவுள்களையும், பழக்க வழக்கங்களையும் இங்கே கலந்தார்கள். அதன் பொருட்டு, சீனாவில் பௌத்த மதத்தை அடுத்து, அரேபியர்கள் மூலம் முகமதியர்கள் ஆதரவில் மசூதிகளும் ஆங்காங்கே வர ஆரம்பித்திருந்த பதினாங்காம் நூற்றாண்டின் தொடக்க காலம், யுவான் பேரரசின் கீழ் வெங்களியின் பொற்காலமாகவும் திகழ்ந்தது. மிளகு கருப்புத் தங்கம் என்றால் இங்கே வெங்களி வெள்ளைத் தங்கம்.
வெங்களியினால் ஆன பொருட்களுக்கும், சீனப் பட்டிற்கும் பெரும் வரவேற்பு. உள் நாட்டில் மட்டுமன்றி தொலை தூர தேசங்களும் அதில் அடக்கம். அதற்கு மாற்றாக யவனர்கள் கொண்டு வரும் வெண்முத்துக்களும், ரத்தினங்களுக்கும், மிளகு, ஏலம், ஜவ்வாது போன்ற பொருட்களுக்கும், அரேபிய குதிரைகளுக்கும், வாசனை திரவியங்களுக்கும் சீனர்களிடம் தனி மயக்கம் உண்டு.
தென் திராவிடம் முழுதும் மாறவர்மன் குலசேகரபாண்டியனின் ஆட்சியின் கீழ் இருக்க, சோழர்களின் பொற்காலம் முதற்கொண்டே சீனாவிற்கும், இந்-தூ என்று அவர்கள் அழைக்கும் திராவிட நாட்டிற்கும் வணிகத் தொடர்பு மட்டுமன்றி, அரசுகளின் நல்லெண்ணத்தை பரப்பும் விதம் அரசாங்க தூதுவர்கள், அதிகாரிகளும் வந்து சென்றனர்.
டாங் பேரரசு காலத்தில் கி.பி. 600களின் மத்தியில் சாளுக்கியரின் பொற்காலத்தில் காஞ்சிக்கு வந்த புத்தத் துறவி சுவான் ஜங் (Xuan Zang) அதன் அருமை பெருமைகளை விவரித்திருந்தார். ஹுவாங் ஜி கூ(Huang Zhi Guo) என்று காஞ்சியினை குறிப்பிட்டவர், திராவிடம் முழுதும் சுற்றிப் பார்த்து, இங்கே கிடைக்கும் நீல மணிகளையும் , பெரும் வட்ட வடிவான வெண் முத்துக்களையும், பல் வகை நவமணிகளின் பெருமைகளையும் சிலாகித்துக்கூற, பெரும் செல்வங்கள் நிறைந்த இந்தூ நாட்டுடன் நல்லுறவை அடுத்து வந்த பேரரசுகளும் பேணிக் காத்தன. வடக்கே பீக்கிங்கில் தலை நகரம் இருந்த போதும், குவான் சாவ் துறைமுகம் அதன் முக்கியத்துவம் கருதி அரசரின் நேரடிப் பார்வையாக அவரின் நம்பிக்கையான அதிகாரியிடம் இருக்கும். இராஜப் பிரதிநிதியாக இருப்பார் அந்த அதிகாரி.
நல்லுறவுத் தூதுவர்களில் ஒருவராக வந்த இமயவர்மனின் மைத்துனன் வளவன், சில காலம் மாமனுடன் குவான் சாவில் தங்கியிருந்து மக்களோடு பழகி அவர்கள் மொழியை கற்க, அது மெய்லிங் என்ற காரிகையிடம் மனதை பறிகொடுத்தில் வந்து நின்றது. பெயருக்கேற்ற மாதிரியே அழகான மெல்லியலாள் இந்த திராவிடனிடம் மனதை பறிகொடுத்தது அதிசயமே.
இவர்களின் காதலை காப்பாற்றியது இரண்டு காரணங்கள். ஒன்று அரச விருந்தாளியின் மைத்துனன் வளவன். அடுத்தது, அவர்களும் புத்த மதத்தவர்களாயிருந்தது. நாடு வேறாக இருந்தாலும் புத்தரை தங்கள் கடவுளாகப் பார்த்தவர்கள் அந்த புத்தரின் பிறப்பிடத்திருலிருந்து, அதே மதத்தை சேர்ந்தவன் பெண் கேட்க, மறுக்க முடியாது சம்மதித்தனர். மூன்றாவது சொல்லப்படாத காரணம், மெய்லிங்கின் தந்தை தான் அந்த குடும்பத்திற்கு மூத்தவர், அவரது ஒரே மகள் மீது அதிகப்படியான பாசம்.
ஆனால் பெண்ணை உங்கள் நாட்டிற்கு அனுப்ப முடியாது. வளவன் எங்கள் பெண்ணை மணந்து இங்கேயே எங்களுடனேயே இருக்க வேண்டும் என்று நிபந்தனை வைத்தார்கள்.
அக்காவையும் மாமனையும் சாட்சியாக வைத்து அவர்களின் நிபந்தனையை ஏற்று மெய்லிங்குடன் திருமண பந்தத்தில் நுழைந்தான் வளவன். மணமுடித்து சில ஆண்டுகள் சென்றபின் மனைவி மக்களோடு தாயிடம் வருகிறேன் என்று ரகசிய சத்தியம் செய்து, அக்காளை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தான்.
வளவன் பெயர் ஷீ யூ என்றானது. மாமனாரிடம் வெங்களி தொழிலைக் கற்றான். மெய் லீயின் குடும்பமும் செல்வந்தர் குடும்பங்களில் ஒன்றாக இருக்க, அவர்களின் பெரிய கூட்டுக்குடும்பமும் மெய் லீயின் தந்தை ஹூவின் கீழ் வாழ்ந்திருந்தனர். எத்தனை உட்பூசல்கள் இருப்பினும் குடும்பத் தலைவரின் சொல்லுக்கு அடிபணிதல் என்பது எழுதப்படாத சட்டமாக பின்பற்றுபவர்கள் சீனர்கள். அதனால் வளவனின் மீது சற்று பொறாமை எழுந்தாலும், துவேஷம் இல்லை. ஆண்டுகள் கடந்தும் பிள்ளை பேறு கிட்டவில்லை காதல் தம்பதியருக்கு. அதில் மறைமுக கேலிகளும் ஏளனங்களும் வளவனுக்கும், மெய் லிங்கிற்கும் வருத்ததை ஏற்படுத்தினாலும் புறந்தள்ளி வாழ்ந்திருந்தனர்.
ஒரு முறை மனைவியோடு என் நாட்டிற்கு சென்று வருகிறேன். மன மாற்றமாயிருக்கும் என்று மாமனாரை சரிகட்டி, கடல் பயணத்திற்கு பயந்த மனைவியின் மனதைக் கரைத்து பயண ஏற்பாடுகள் கூடி வரும் வேளை மெய் லிங் கருவுற்றாள். தாய் நாட்டுப் பயணத்தை கிடப்பில் போட்டு மாமன் மாமியோடு சேர்ந்து மனைவியை அன்பாய் அரவணைத்துக் கொண்டாடினான் வளவன்.
அழகான பெண் மகவை ஈன்ற மெய்லிங் மெய்வருத்திப் பிரசவித்ததில் உடல் நலிந்தாள். எத்தனை சிஸ்ருஷைகள், சிகிச்சைகள் செய்தும் சில திங்கள்கள் மட்டுமே அவள் உயிரை பிடித்து வைக்க முடிந்தது. மூன்று மாத சிசுவை வளவனிடம் விட்டு, மகளை ரூயூன் என்று பெயரிட்டு மறைந்தாள் மெய்லிங்.
மேகங்களைப் போன்ற கவலையற்ற அழகான பெண் என்ற பெயரைத் தாங்கிய ரூயூன் வளர்ந்தது பாட்டியிடம்தான். வளவனை அந்தக் குடும்பத்தோடு பிணைத்தவள் மெய்லிங். அவள் சென்றதும் மாமனாரின் ஆதரவு இருந்தாலுமே, மெல்ல மெல்ல அன்னியப் படுத்தப்பட்டான் வளவன். குழந்தை பெண்ணாக இருக்கவும், செல்வமின்றி வந்தவன், குழந்தையை எங்களிடம் விட்டு மீண்டும் உன் நாட்டிற்கே சென்றுவிடு என்று ஜாடைப் பேச்சுகள் கிளம்பிருந்தது. மாமியார் உடல் நலமும் பாதிக்கப் பட நாங்கு வயது ரூயூனிற்காக பல்லைக் கடித்து வாழந்து வந்த வளவனுக்கு மூச்சு முட்டியது. மாமனாரோ அவர்கள் சொந்ததிலேயே ஒரு பெண்ணைப் பார்த்து வளவனுக்கு மறு திருமணம் நடத்த சித்தமாயிருந்தார். மெய் லிங்கின் இடத்தில் மற்றொரு பெண்ணை நினைத்தும் பார்க்க முடியாத வளவன் முடிந்த வரை தவிர்த்து வந்தான்.
மாமியாரும் இறைவனடி சேர, சில காலம் கழித்து மீண்டும் திருமணப் பேச்சு ஆரம்பித்தது. பெரியவரும், சொந்தங்கள் கூடி அவனை தவிர்ப்பதை கண்டு, குடும்பத்தில் அவனை தக்க வைக்க அவரது கடைசி தம்பியின் மகளை கட்டி வைக்க முடிவெடுத்திருந்தார்.
“உங்களிடம் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். என்னால் உங்களுக்கு உண்டாகும் சிக்கல் புரிகிறது. குடும்பத் தலைவனாக நீங்கள் பாரபட்சமின்றி நடக்க கடமைப் பட்டுள்ளீர்கள் என்று அறிவேன். மெய் லிங் இடத்திற்கு வேறு ஒருத்தி வருவது இயலாத காரியம். என் மகளோடு நான் என் தாயகம் பயணப்பட சம்மதம் வேண்டுகிறேன்”, என்று ஒரு மழை நாளின் இரவில் அவர்கள் இல்ல தாழ்வாரத்தில் நடை பயின்ற வண்ணம் வேண்டுதலை வைத்தான் வளவன்.
மகளின் மறு உருவாக பேத்தியை பார்த்தவருக்கு, “ என் மகளும், மனைவியும் விட்டுச் சென்றது போறாதென்று ரூயூனையும் பிரித்துவிட நினைக்கிறாயா ஷீ?”, என்று வளவனைக் கடிந்தார்.
மாற்று யோசனைகளை பேசிப் பேசி, முடிவில், குவாஞ்சாவ் துறைமுகத்துக்கு நாற்பது கல் தொலைவில் இருந்த பான்யூ என்ற ஊரில், பேத்தியை சென்று பார்த்துவரக் கூடிய தூரத்தில் வளவனுக்குத் தனியாக வெங்களித் தொழிலை அமைத்துத் தர முடிவெடுத்தார். குடும்பச் சொத்தில் கணிசமான பகுதியை வளவன் பெறுவதில் குடும்பத்தில் சலசலப்பு பெருகியது. சிறிய மாமன்கள், அவர்களது வாரிசுகள் என்று பல வகையில் நெருக்கடி பெருக, மீண்டும் தாய் நாடு செல்ல முடிவெடுத்தான் வளவன்.
இந்த முறை மானாரிடம் அனுமதி கேட்காமல், பயண ஏற்பாடுகளை துவங்கிவிட்டேன். மகளுடன் நான் செல்வதுதான் அனைவருக்கும் நல்ல முடிவாக இருக்கும் என்று தெரிவித்தான்.
இம்முறை பெரியவர் மறுக்கவில்லை. வயோதிகமும் விரக்தியும் கூடியிருக்க, அவர்கள் செல்லும் முன், ஆறாம் வயதில் அடியெடுத்து வைக்கும் ரூயூனை உச்சி முகர்ந்து விடைகொடுத்து,
“என் மகளின் செல்வம், அவள் மகளுக்குச் சேர வேண்டும் ஷீ”, என்று ஒரு சிறு மூட்டை தங்கக் காசுகளை அளித்தார்.
வளவன் இத்தனை செல்வத்தை எதிர்பார்க்கவில்லை. குடும்பத் தொழிலில் இருந்ததால் அவனுக்கான ஊதியமாக வருவதை சேர்த்து சில பொற்காசுகளை வைத்திருந்தான். அதற்கு மேல் யாரிடமும் கேட்க மனதில்லை.மாமனாரின் இந்த செயல் மனதை தொட்டது. அதிக நாட்கள் இவ்வுலகில் இருக்க மாட்டார் என்பதும் தெரிந்தது. அவர் நேசித்த கடைசீ உறவுகளும் விட்டுச் செல்ல, அவரை பார்ப்பது இதுவே இறுதி என்பது உரைக்க கண்ணீர் மல்க வணங்கி விடை பெற்றான்.
முழுதாய் நான்கு திங்கள் கடந்திருக்க, நாகை துறைமுகத்தை அடையும் வேளை ரூயூனின் தமிழ் சரளமாகத் தொடங்கியிருந்தது. வளவன் பயந்தது போலன்றி, கடல் பயணத்திற்கு எளிதாக அனுசரித்துக் கொண்டாள் ரூயூன். அதில் தந்தையைக் கொண்டிருந்தாள் போலும்.
முதலில் இருந்த தயக்கம் நாட்கள் செல்ல உடைய, ஸ்ரீவிஜயம் அடைவதற்குள் அனைவரிடமும் நட்பு கொண்டுவிட்டாள். இரண்டு பௌர்ணமிகள் கடந்தே நாகை செல்லும் நாவாய் பயணப்படும் என்பது தெரிந்து ஸ்ரீவிஜய சாம்ராஜ்யமும், சோழர்கள் நிறுவித்த கோவில்களையும் சிவனையும் மகளுக்கு அறிமுகம் செய்தான் வளவன்.
அன்னையின் அழகிய முகவெட்டும், கரிய நெடிய கூந்தலையும் கொண்ட ரூயூன் தந்தையைப் போன்ற அகன்ற கண்களையும், சீனர்களின் வெளிர் மஞ்சள் தோற்றத்தைவிட தந்தையின் திராவிட நிறத்தின் உபயத்தால் சற்றே நிறம் கூடுதலாய் இருந்தாள். சீன முகவெட்டு அதில் அந்த அழகிய அகன்ற கரிய நிற கண்கள், சற்றே நிறம் கூடிய செம்பொன் நிற ஒடிசலான தேகம் என்று அந்த வயதிலேயே அவள் பருவ அழகிற்குக் கட்டியம் கூறின.
தந்தை வர்ணித்ததில் அவர் நாட்டை பார்க்க பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தாள் ரூயூன். இங்கேயும் பாட்டி பாட்டன் இருப்பார்கள், விளையாட பல தமக்கைகள் கிடைப்பார்கள் என்று ஆவலாக இருந்தாள். பதினான்கு ஆண்டு வனவாசத்திற்குப் பிறகு நாகையில் கால் பதிக்க வளவனுக்கு சிலிர்த்தது. மெல்ல தமிழ்க் காற்றை சுவாசித்தான்.
இரண்டு திங்கள் கடலில் இருந்ததை மறந்து நிலத்திற்குப் பழக, பத்து நாட்கள் நாகை புத்த விகாரத்தில் தங்கி தன் பிறந்த ஊருக்குப் பயண ஏற்பாடுகளை கவனித்து வந்தான் வளவன்.
மதுரை செல்லும் பெருவழியில் நாற்பது காதம் முன்னரே திரும்பி ஒரு நாள் பயணமாக மாட்டு வண்டிப் பாதையில் சென்றால் அவனது சிறிய ஊரான பூஞ்சோசலை வரும். வைகையின் துணை ஆறு மருத நதியின் உபயத்தில் சுற்றிலும் வயல்கள் நிறைந்த வளமான பகுதி.
வளவன் ஏற்பாடு செய்திருந்த மாட்டு வண்டியோட்டி, மூன்று ஆண்டுகள் முன் வந்த பெரு வெள்ளத்தை நினைவு கூர்ந்து பேசிக்கொண்டிருந்தான். அப்போதே வளவனது அடி வயிற்றில் ஒரு பயம். இரண்டு மூன்று ஆண்டுகளில் வருகிறேன் என்றவன் இதோ பதினாங்கு ஆண்டுகள் கழித்துத் திரும்புகிறான். விட்டு வந்த குடும்பமும் கடமைகளும் அவ்வப்போது நினைவுக்கு வந்தாலும் கையறு நிலையாய் காலம் கடந்தது.
சோழர்களை முழுவதுமாக ஒழித்து தஞ்சை பாண்டியர்களின் வசமாக்கிட எந்த நேரமும் போர் மூளலாம் என்ற செய்தியும் அச்சுறுத்திக்கொண்டிருந்தது. ஊர் எல்லையை நெருங்க, சிவன் கோவில் கோபுரம் நான் அப்படியேதான் இருக்கிறேன் என்று சாட்சியம் கூறியதில் மனதை சற்று திடப்படுத்திக்கொண்டான் வளவன்.
அவன் வாழ்ந்திருந்த வீடு முற்றிலுமாக மாறியிருந்தது. புதியவன் யார் என்று ஆண்கள் சிலர் விசாரிக்க வர, இவன் ஏதும் சொல்லும் முன்னரே,
“வளவா? நீயா?“, என்று ஓடி வந்தாள் ஒரு பெண். அந்த குரலே அவன் அக்காள் மலர்கொடியை அறிமுகப்படுத்தியது.
“ஆம் அக்கா. நானேதான்”, என்றதுதான் தாமதம். அவன் மார்பில் இரு கைகளாலும் அறைந்தாள் மலர்கொடி.
“இரண்டு மூன்று ஆண்டுகளில் வந்து விடுகிறேன் என்று சத்தியம் செய்தாயேடா. உன்னை நம்பினேனே! பெற்றவள் உயிரை விடும் தருவாய் வரை வாசலைப் பார்த்திருந்தாளே. அவள் நம்பிக்கையை பொய்க்கச் செய்து இப்போது ஏனடா வந்தாய்?”, மீண்டும் மீண்டும் அடிக்க, கண்ணில் நீர் சொரிய நின்றவனுக்கு பதில் கூற நா எழவில்லை.
“அம்மா…”, என்று தாயை அடக்கியவனை நோக்கினான் வளவன். பதின்ம வயதை எட்டத்துடிக்கும் இளங்காளை, அவனை அளக்கும் பார்வை பார்த்தான்.
“மாமனுக்கு வணக்கம். நான் இமயவர்மனின் தலை மகன் ஜெயந்தன்”, என்று அறிமுகப்படுத்திக்கொண்டான்.
மெல்ல இயல்பு நிலை தோன்ற, வளவனுக்கு மகள் நினைவு வர, அவளை திரும்பிப் பார்த்தான். அகன்ற விழிகள் சற்றே பயத்தோடு நடப்பதை உள்வாங்கிக்கொண்டிருந்தன.
“ரூயூன்… வா”, என்று அழைத்து மகளை அறிமுகப்படுத்த, மலர்கொடியின் முகம் சுணங்கியது. எனவே மகளை தன்னருகேயே வைத்துக்கொண்டான் வளவன். அரை நாழிகை பேச்சில் அவனது இழப்புகள் வரிசை படுத்தப்பட்டன. போர் மாமன் இமயவர்மனையும் அவன் தம்பியையும் காவு கொண்டது என்றால், கொள்ளை நோய் தாயையும் ஒரு தமக்கையையும் எடுத்துக்கொண்டது.
சென்ற முறை வந்த மருத நதி வெள்ளம் தந்தையையும் அடித்துச் சென்றதில் மிஞ்சியிருப்பது மலர்கொடியும் அவளது இரு மகன்களும் ஒரு மகளும் என்று புரிந்தது.
இங்கேயே தங்கி அக்காள் குடும்பத்திற்கு பாதுகாப்பாய் இருக்கலாம் என்ற எண்ணம் ஒரு திங்கள்கூடத் தங்கவில்லை. ஊர் மக்கள் ரூயூனை வித்தியாசமாகப் பார்த்தார்கள். அவர்களை விட மலர்கொடியே சிறுமி என்றும் பாராது அவளை ஒதுக்கியது வளவனை பாதித்தது. அக்காளின் மகளும் ரூயூனின் வயதுதான். ஆனாலும் அவளோடு பழக அனுமதிக்கவில்லை. நாள் செல்ல சரியாகிவிடும் என்ற வளவன் நினைப்பு,
“வேற்று நாட்டவளின் உதிரம் ஓடும் உன் மகளை ஜெயந்தனுக்கு மணமுடிக்கும் நினைப்பையெல்லாம் வைத்துக்கொள்ளாதே. உன் மாமனின் தங்கை மகளுக்குத்தான் கொடுப்பதாக இருக்கிறேன். இத்தனை நாளும் அவர்கள்தான் குடும்பத்தை பார்த்துக்கொள்கிறார்கள். இவள் ஜெயந்தனோடு பழக முயற்சிப்பதை நிறுத்தச் சொல். இந்த வீட்டின் ஒரு ஆணை அவள் அன்னைக்கு பலி கொடுத்ததே போதும்” என்று மலர்கொடி சொல்லியதில் அழிந்துவிட்டது.
புது சூழலில் தனித்தே விடப்பட்ட குழந்தை விளையாட எண்ணி ஜெயந்தனுடன் நட்பாய் ஓரிரு வார்த்தைகள் பேசியதற்கே இத்தனை துவேஷமா என்று அதிர்ந்த வளவன் அடுத்த சில நாள்களிலேயே தந்தையின் நிலங்களை முறையாக அக்காளிடமும் ஜெயந்தனிடமுமே ஒப்படைத்து, மகளோடு கிளம்பிவிட்டான்.
குடும்பத்தோடு இணைவோம் என்று கண்ட கனவெல்லாம் சிதைந்து கிடக்க, அவனது வரவோ இருப்போ தேவையில்லை என்னும் பொழுது, மகளை ஏற்றுக்கொள்ளாத இவர்களிடையே ஏன் இருக்கவேண்டும் என்று நினைத்தவன், கொற்கைக்குப் பயணப்பட்டான்.
அடுத்த சில ஆண்டுகள், தந்தைக்கும் மகளுக்கும் கடல் பயணங்களிலேயே கழிந்தது. அரபியர்களையும் பார்த்து, ரோமாபுரி வரைக்கும் கூட சென்றுவிட்டார்கள். கடல் வாணிபம் வளவனின் வளமையை பெருக்கியது. மெய்லிங்கின் சீதனம் இரு மடங்காகும் போது ரூயூன் பருவ வயதை எட்டினாள். வளவனும் சீனாவிற்கே திரும்பி ரூயூனிற்கு வளமான ஒரு வாழ்வு அமைத்து, பேரப் பிள்ளைகளோடு வாழ எண்ணினான். மகளிடம் கருத்து கேட்க, ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக வேறு வேறு நாடுகள் மக்கள், மொழிகள் என்று இருக்க, ரூயூனிற்குமே தாயகம் திரும்பிட சம்மதம்தான்.