Advertisement

“அதியா!” என்ற நவநீதத்தின் குரல் ஓங்கி ஒலித்ததில் அடுத்த நிமிடம் வீட்டில் இருந்தவர்கள் ஹாலில் நின்றனர்.

“தாத்தா! என்ன ஆச்சு….?” என்று அருகில் வந்தான் அதியன்.

கைகளை தூக்கி தடுத்தவர் அவனை தூரமே நிற்க சொல்லாமல் சொன்னார்.

“தாத்தா!” என்றான் அவன் மறுபடியும்.

“அப்பா! என்ன நடந்தது, ஏன் இவ்வளவு கோபமா இருக்கீங்க…?” என்று கேட்டார் சேரர்.

“அதியா! அந்த கிளைன்ட்டுக்கு யாரு பெயரில் செக் கொடுத்த…?”

அதியன் ஒரு நொடி ஆடிப்போனான். தாத்தாக்கு தெரிந்து விட்டது என்று.

பாரி, ஸனா, பரணி மூவரும் அதியனை பாவமாகப் பார்த்தனர்.

பரணி மனதில்’இவரு அதானல இவ்வளவு கோபமா வந்தார..? நானும் கூடவே என்னவா இருக்குமுனு யோசிச்சுட்டே வந்தனே..’

அதியன் ஒருவாறு தைரியம் வர, “எந்த கிளைன்ட் செக் தாத்தா…?” என்று கேட்டான்.

“அப்ப நான் கொடுத்த அறை உனக்கு வலிக்கவில்லை அன்று, இல்லைனா இப்ப எந்த செக்னு கேக்க மாட்டீயே..?”

“தாத்தா அது வந்து..”

“கேள்விக்குப் பதில், யாரு பெயரில் செக் கொடுத்த…?”

சிறு அமைதிக்குப் பின்”ஸனா மஸ்தூரா..” என்றான்.

“ஆக! நவநீ குரூப்ஸ் ஒரு நடிகையின் பணத்தை வாங்கி கிளைன்ட்டுக்கு கொடுக்கும் அளவு நஷ்டமாச்சா..? இல்ல தரம் தாழ்ந்துப் போயிட்டா…?” என்றார் வேகமாக.

“ஸனா என் பொண்டாட்டி தாத்தா, யாரோ இல்லை…”

“எனக்கு யாரோ தான்.. எதுக்கு பணம் அங்க இருந்துப் போனுச்சு…? உன் அக்கவுண்டில் டபுள் அமௌவண்ட் தானே இருந்தது…”

பீவி அவர் பேசியதைக் கேட்டு குழம்ப,
ஸனாவைப் பார்த்தார்.

“அம்மா! இது அதியன் ஃபேமிலி ப்ராப்ளம்..” என்றாள் மெதுவாக.

“உனக்கும் இதான் ஃபேமிலி ஸமா….” என்றார் அவர் வருத்தமாக.

“சாரி தாத்தா! எனக்கு ஒரு தேவை அதனால் மொத்த பணம் ஒரு கோடியை எடுத்துட்டேன் அவசரத்துக்கு, அதனால் தான் ஸனாவோட பணத்தை யூஸ் பண்ணினேன்” என்றான் அவருக்கு நேராக சற்று தைரியமாக.

பாரிக்கு அதற்கு மேல் முடியாமல்
“தாத்தா!” என்று உண்மையைக் கூற வந்தான். ஆனால் அதியன் தடுத்து
“பாரி! நீ ஆபிஸில் தான் எனக்கு மேல, வீட்டில் நான் தான் அண்ணன் உனக்கு, எனக்கு எல்லாம் தெரியும்” என சற்று கடுமையாக கூறினான்.

பாரி அமைதியானான்.. ஸனாவைப் பார்த்தான்’நீங்களாச்சும் உண்மையை சொல்லுங்க’ என்பது போல்.

ஸனாவும் என்ன பேசுவது, எப்படி சொல்வதென்று தெரியாமல் நின்றாள், இது அதியன் அக்கா ராகவி தொடர்புடையது, இல்லை என்றால் ஸனா சட்டென்று உண்மையை போட்டுடைத்து விடுவாள், அதியன் மீறிப் பேச பயந்து நின்றாள்.

“சரி! அந்த பணத்தை எதுக்கு பயன்படுத்தின…? அப்படி என்ன தேவை உனக்கு கோடி அளவுக்கு…?” என்றார் நவநீதம் சற்று பொறுமையாக கண்களை சுருக்கி.

பாட்டி அதுவரை பொறுமையாக இருந்தவர், “இந்த வீட்டில் சொந்த தேவைனு எதுவும் இருக்க கூடாத…? இது என்ன நடுவீட்டில், விருந்தாளி முன் நிக்க வச்சுப் பேசுறது சேரா..?” என்றார் குரலை உயர்த்தி.

பீவி மனம் சங்கடமாகிடக் கூடாதென்று பாட்டி அமைதிப்படுத்த நினைத்தார்.

“அப்பா! அதியன் எதும் தப்பா செய்ய மாட்டான்.. பொறுமையா பேசலாம்” என்றார் சேரர்.

“அந்த நம்பிக்கை எனக்கில்லை, இப்ப கொஞ்ச நாட்களாக அவன் செய்வது எல்லாமே தப்பான செயல் தான்.. எனக்கு பதில் வந்து ஆகனும் அதியா..?”

“என்ன செஞ்சு இருப்பான் மாமா பெருசா, பொண்டாட்டிக்கு தேவைப்பட்டிருக்கும் கொடுத்து இருப்பான்.. உங்களுக்கு தெரிவதற்குள்
வைக்க நினைக்க, மாட்டிட்டான் போல..” என்றார் தேவி அசாலட்டாக.

அவருக்கு தெரியாது தன் மகளுக்கு தான் போனது அந்த பணம் என்பது.

அவரை பொறுத்தவரை பாரி தான் சமாளித்தான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்.

பாரிக்கு கோபம் வந்து”அம்மா! சும்மா இருங்க தேவை இல்லாம பேசாமல்.. எல்லாருக்கும் தெரியாமல் இருக்கலாம், ஆனால் ஒரு கோடி கணக்கு உங்களுக்குமா புரியலை..? ராகவி அக்கா அதான் உங்கப் பொண்ணு கணக்கு” என்றான் மெதுவாக.

தேவி முகம் வெளிறிப் போய் அமைதியானது.

சேரர்”என்ன பாரி பேசிட்டு இருக்க, எனக்கு புரியலை, ராகவியா..?

“ஆமாமப்பா! நான் அக்காக்கு ஹெல்ப் பண்ண போய், இப்ப அண்ணன் மாட்டிட்டு இருக்கார்..”

சேரருக்கு புரிய, தன் அப்பாவிடம் சொல்ல போனார்.

உடனே தேவி தடுத்தார்.. “ஏங்க! ராகவி வாழ்க்கை இதில் இருக்கு..” என்றவாறு.

“அதுக்காக அதியன் பலியாடு ஆக முடியாது தேவி..” என்று முறைத்தார்.

“அப்பா! வெயிட் நானே சொல்லிடுறேன்” என்று பாரி நவநீதம் அருகில் சென்றான்.

அதியன் அவனை தடுத்து, “தாத்தா! நான் உங்களுக்கு பொறுமையா சொல்றேன்.. இப்ப வேணாம் நீங்க போய் ரெஸ்ட் எடுங்க” என்றான்.

“மாமா! அதியன் தப்பா எப்போதும் பணத்தை செலவழிக்க மாட்டான் அது உங்களுக்கே தெரியும் தானே, மத்தவங்க சொல்றாங்கனு அவனை தப்பா நினைக்காதீங்க” என்று தேவியைப் பார்த்து முறைத்தப்படி சொன்னார் மல்லிகா.

“என்ன அக்கா பேசுறீங்க..?  இது ஒன்னும் அதியன் தனியா போய் சம்பாரிச்ச பணம் இல்லை, குடும்பத்தில் ஒரே வருவாய்.. அது எப்படி சுயத் தேவைக்காக எடுப்பது.. அப்ப எங்களுக்கு பையன் இல்லை அதுக்காக நாங்க இப்படியே இருக்கனுமா…? உங்க பையன் இன்னைக்கு எடுப்பான். பாரி நாளைக்கு எடுப்பான்.. அப்ப நாங்க…?” என்று மாலினி அவர் பங்குக்கு ஆரம்பித்தார்.

“சித்தி! தேவை இல்லாம இப்ப இதை பெருசுப் பண்ணாதீங்க.. ப்ளீஸ்..” என்று கெஞ்சிக் கேட்டான் அதியன்.

“என்ன அதியா இது, அப்ப நீ சொல்லு எதுக்கு ஒரு கோடி எடுத்தனு. அது ஒன்னும் பத்து, இருபது ரூபாய் இல்லையே..?” என்றார் விடாமல் மாலினி.

அதியன் ஸனாவைப் பார்த்தான், கண்களால் மன்னிப்புக் கேட்டுவிட்டு தன் தாத்தாவிடம்”ஆமா தாத்தா! அந்த பணம் ஸனாக்காக தான் யூஸ் பண்ணேன்.. ஆனா அவ அதை திருப்பிக் கொடுத்துட்டா.. இப்ப ஒரு கோடி ரிட்டன் ஆகிட்டு.. பரணி அங்கிளை செக் பண்ண சொல்லுங்க வேணா..” என்றான்.

பீவி அதிர்ச்சியாகப் பார்த்தார்.

ஆனால் ஸனாக்கு அதில் வருத்தம் இல்லை, அதியன் தன்னை உரிமையாக தானே சொன்னான், அவளின் காதல் மனம் அதை வரவேற்றது..

ஆனால் பீவி அங்கு நடப்பதை வேடிக்கை மட்டுமே பார்க்க முடியாமல் தவித்தார்..

“ஸமா! இது தப்பு, இங்க என்ன நடக்குது…? உனக்கு கோடி எல்லாம் ஒரு விஷயமே இல்லை.. ஆனா…?” என்றார்.

“அம்மா! ப்ளீஸ், அதியனுக்கு எல்லாம் தெரியும்.. அவரு என்னைய விட்டுட மாட்டார்.. நீங்க அமைதியாகுங்க..”

“ஓ! அந்தளவு வளர்ந்துட்டீங்களா மிஸ்டர் அதியன் நவநீத ராகவன். அப்ப அந்த பணம்  போனது இந்த நடிகைக்காக தானா..? இந்தளவு தைரியம் எப்படி வந்தது உனக்கு அதியா…? கம்பேனி அக்கவுண்டில் கை வைத்து இப்படி எல்லாம் செய்ய அந்த நடிகை தான் காரணமா…? அப்ப என்னோட வளர்ப்பு தப்பா போயிட்டா..? நான் முக்கியமில்லை உனக்கு..? என்னோட பிஸ்னஸ் அனுபவம், மனிதர்களின் அறிமுகம் எல்லாத்தையும் உனக்கு தானே சொல்லிக் கொடுத்தேன் நான் பெத்த மூன்னு பிள்ளைகளை தாண்டி.. நீ தானே இந்த குடும்பத்தை ஆளப்போறேனு. ஆனா நீ கேவலம் இந்த நடிகைக்காக மரியாதை, குடும்பப் பொறுப்பு அனைத்தையும் இழந்துட்ட.. வெட்கமா இல்லை உனக்கு..?” என்றார் வேகமாக கையயை ஓங்கியவாறு அவனை அடிக்க.

அவரின் கையை தடுத்தது ஒரு கரம்.

திரும்பிப் பார்த்தவர் அதிர்ச்சியானார்.
“என்னப்பா! செத்தவ உயிரோடு வந்துட்டேனு அதிர்ச்சியா இருக்கா..?” என்றார் வரலெட்சுமி.

பாட்டிக்கு தன் கண்களையே நம்ப முடியாமல் கண்களை தடவியவர், எழுந்து வேகமாக தடுமாறி நடந்து வந்தார்.

“அம்மாடி! வந்துட்டீயா…?” என்றவாறே.

நவநீதத்தின் கை தானாக தளர்ந்தது.

அதியன் யார் இது…? என பார்க்க, பலருக்கு பலவாறு சிந்தனைகள்.

பீவி”வரு!” என்க.. ஸனா”வமி ஆன்டி!” என்று ஓடிப்போய் கையைப் பிடித்தாள்.

பாரிக்கோ பின்னால் நின்ற ஷர்தா மட்டுமே தெரிந்தாள்.

‘இவ அப்பா, அம்மா ஆனா என்ன நடக்குது.. நம்ம அத்தை ஏன் இவங்க கூட வந்திருக்காங்க’ என்று சற்றே தள்ளி நின்ற ராஜீயை பார்த்தான்.

வரலெட்சுமி தன் தங்கையை கூடவே கூட்டிட்டு வந்தார். வரும் வழியில் தான் ராஜிக்கு வரலெட்சுமி எங்கு இருந்தார், ஷர்தா பெண் என்ற விஷயமே தெரியும்.

நவநீதத்தின் அதிர்ச்சி குறையாமல் இருக்க, பாட்டி தன் மகளோடு கட்டி அணைத்துக் கண்ணீர் வடித்தார்.

அதியன் புரியாமல்”பாட்டி!” என்றான்.

“அதியா! என் பொண்ணு.. தெரியுதா..? அந்தா போட்டோவில் தொங்குறாளே அந்த பொண்ணு தான்” என்று வரலெட்சுமி முகம்  முழுவதும் தடவினார்.. இருவரும் பாசத்தில் பிணைந்தனர்.

“என்ன..?” என்று அதியன், பாரி, சங்கவி, சைந்தவி, சாருமதி என அதிர்ச்சியாகினர்.

ஸனாக்கு அதற்கு மேல்.. “பாட்டி! என்ன சொல்றீங்க…?” என்றாள்.

“ஆமாட பேத்தி! உன் அம்மாவை இன்னைக்கு தான் பாத்தேன். அப்ப தான் தெரிஞ்சது யாருனு.. உன் அம்மாவை முன்னாடியே தெரியும் எனக்கு.. இவ காதல் பண்ணிட்டானு உயிரோடு கருமாதி பண்ணிட்டாரு இந்த பெரிய மனுசன்…” என்று வாயைப் பொத்தி அழுதார்.

சுய உணர்வு வந்த நவநீதம்”வெளியே போ! கருமாதி முடிஞ்சு பல வருசமாச்சு” என்றார், வரலெட்சுமி முகத்தைப் பார்க்காமல்.

“மிஸ்டர் நவநீதம் ராகவன்! நீங்க சொல்றதை எல்லாம் கேக்குற உங்க பிள்ளைங்க மூன்னு தலையாட்டிப் பொம்மைகள் நானில்லை..
நான் ஒன்னும் உங்க பொண்ணா வரலை.. வகீம் லாசன் மனைவி, V L groups எம் டி மிஸ் ஷர்தா வகீம் லாசன் அம்மா, உங்க பேரனை என் பொண்ணு விரும்புறா, அவனுக்கும் விருப்பம் இருக்கு.. அதான் சம்பந்தம் பேச வந்திருக்கேன்” என்ற வரலெட்சுமி,
“வாங்க! உட்காருங்க” என தன் கணவரை  அழைத்து அமர வைத்தார்.

ஷர்தா கூடவே வந்தாள்.. ராஜியும் தன் தாயோடு வந்து நின்றார்..

“என்ன உளரிட்டு இருக்க..? இங்க யாரும் உன்னோட சம்பந்தம் வச்சுக்க விருப்பமில்லை.. வெளியே போ.”

“அதை நீங்க சொல்ல வேண்டாம்.. தேவி அண்ணி! நீங்க சொல்லுங்க. என் பொண்ணு உங்க  பையன் பாரியை தான் விரும்புறா. அவனுக்கும் விருப்பம் இருக்கு, இல்லனா நாங்க வரேனு சொல்லி வேணாமுனு சொல்லாம தலை ஆட்டி இருப்பான..? ஏனா நான் தான் அவன் அத்தைனு தெரியாது..” என்று சிரித்தார்.

தேவிக்கு மனதில் ஆசை வலுவானது, ஆனால் இப்ப என்ன செய்வதுனு தெரியாமல் கணவரைப் பார்த்தார்.

அதியன்”மஸ்து! உனக்கு இவங்களை தெரியுமா…?” என்று கேட்டான்.

“அதியா! நான் சொல்வேன்ல தமிழ் கத்துக்கிட்டது ஒரு ஆன்டி கிட்ட அவங்க தான் இது..” என்று வரலெட்சுமி கட்டிப்பிடித்தாள்.

“நல்லா இருக்கியாட..?” என்று அவளை கொஞ்சினார் வரு..

வகீம்”ஸனா!” என்று அவளின் தலையை தடவினார்.

“சேரா! இங்க என்ன நடக்குது..? எல்லாரையும் வெளியில் அனுப்பு..” என்று கத்தினார் தாத்தா..

பாட்டி”அவ ஏன் போகனும் சேரா, உன் பையனை தானே பாக்க வந்தா.. உனக்கு விருப்பம் இருக்கா இல்லையா..? அதை சொல்லு..”

பாரிக்கு தலையே சுற்றியது, ஷர்தாவைப் பார்த்தான்.. அவளோ ஒற்றை கண்ணை அடித்தாள்.

‘அடிப்பாவி! இங்க என்ன நடக்குது இவ சைட் அடிக்குறா.. அத்தப் பொண்ணா..? அதான் அத்தான், மாமானு பிட் போட்டாளா..?’என புலம்பினான்.

சேரர் தடுமாறினார், பாரி ஏற்கனவே சொன்னது தான், அவனுக்கு புடிச்சு இருக்குனு.. என்ன பதில் சொல்வது என பாரியைப் பார்த்தார்.

அதியன்”தாத்தா! பாரி ஷர்தா லவ் பண்றாங்க..” என்றான்.

“உன் கிட்ட நான் பேசலை, உன் கணக்கு இன்னும் முடியலை அதுக்குள்ள பழையக் கணக்கு வந்து நிக்குது. இரு அதை முடிச்சுட்டு வரேன்.. இங்க பாரு இடத்தை காலிப்பண்ணு.. யாருக்கும் நான் கல்யாணம் பண்ற ஐடியா இல்லை..” என்றார் வேகமாக.

“சரி! இந்த புதுக் கணக்கை நான் முடிச்சுத்தரேன். பழையக்கணக்கை அப்புறம் முடிப்போம் நவநீதம்..” என்ற  வரு.

“அதியா! உனக்கு ஸனா முக்கியமா..? இல்ல இந்த குடும்பம் முக்கியமா.? அப்படினு கேட்டா சந்தேகமே வேணாம் குடும்பத்தை தான் சொல்லுவ.. ஏன் இந்த நடிகை ஸனாவும் உனக்கேத்த பொண்டாட்டி தான்.. உன் மேல அவ்வளவு காதல்.. ஆனா எனக்கு நியாயமுனு ஒன்னு இருக்குல அதை சொல்லனுமுல ஏனா ஸனா அப்பா சலீம் அண்ணா தான் எங்களை சேர்த்து வைத்ததே. அவரு பொண்ணு இந்த வீட்டில் கஷ்டப்படுவதை பாத்துட்டு சும்மா இருக்க முடியுமா…? உன் பெரியப்பா பொண்ணு அதான் என் மூத்த சகோதரர் சேரரின் மகள் ராகவி புருசன் பிஸ்னஸில் நஷ்டமாகிட்டான் போலிஸ் புடிச்சுட்டுப் போச்சு அதுக்காக பாரிக் கொடுத்த பணத்தை தான் ஸனா அடைச்சதுனு தெளிவா சொல்லனுமுல..” என்றார் விரிவாக வரு.

அனைவருமே அதியனைப் பார்த்தனர்..

தாத்தாக்கு முகம் மாறியது..

“அதியா!” என்றார்.

“தாத்தா! அவங்க சொல்றது தான் உண்மை.. அண்ணன் என்னைய தடுத்துட்டார் சொல்ல விடாம.” என்றான் பாரி.

வரலெட்சுமி பரணியைப் பார்த்து சிரித்தார்.

பரணிக்கும் வரலெட்சுமி பற்றி தெரியாது தான் பாரி, ஷர்தா காதலால் வரலெட்சுமி இங்கு வர முடிவு எடுத்ததும். வரு முதலில் அழைத்துப் பேசியது பரணியிடம் தான், அவர் மூலமா இங்கு நடப்பதைக் கேட்டறிந்தார். அதன் மூலம் தெரிந்தது தான் இக்கதை.

“அதியா! இதை சொல்ல வேண்டியது தானே.. எங்க அந்த ராகவி போன் போடு பரணி..” என்றார்.

“தாத்தா! ப்ளீஸ் இதுக்கு தான் சொல்லலை அந்த மாமா திருப்பி தரதா சொல்லிட்டார்..”

“போலிஸ் ஸ்டேசன் வரை போய் மானத்தை வாங்கிட்டான் அவன்.. மடப்பயல்” என்று ராகவி புருசனை திட்டினார்.

அதியா”விடுங்க தாத்தா!”

“என் வளர்ப்பு இந்த மாதிரி தப்பு செஞ்சுட்டேனு கோபம் அதியா, அதான் உன்னைய அடிக்க வந்தேன். ஆனா உன்  கல்யாண விஷயத்தில் நான் மன்னிக்க மாட்டேன்.. நீ என் பேரன், என் வாரிசு, என் வளர்ப்பு, என்னோட சாம்ராஜ்ஜியத்தின் எதிர்க்காலம், இப்ப ஒரே முடிவா சொல்லு, உனக்கு நான் முக்கியமா…? இல்ல இந்த நடிகையா.? இரண்டில் ஒரு பதில் சொல்லு.. நானா..? அவளா..? என் பேரனா இருப்பேனா அவளை இப்பவே இந்த கூட்டத்தோடு அனுப்பு..” என்றார் தாத்தா கடைசி வாய்ப்பாக.

“தாத்தா!” என்றான் அதிர்ச்சியாக.

ஸனா அதியனையே பார்த்தாள், அவன் பதில் எதுவா இருந்தாலும் அவளுக்கு விருப்பமே.

“ஐயா! இதுவரை நான் பேசவே இல்லை, ஆனா என் பொண்ணு வாழ்க்கை இது..” என்று பீவி கண்ணீர் வடித்தார்.

“அப்பா! அன்னைக்கு இப்படி தான் வீம்பா இருந்தீங்க, இன்னைக்கும்  அதே வீம்போடு இருக்காதீங்க.. அவங்க சின்னப் பிள்ளைங்க வாழட்டும்..” என்றார் வரு கோபமாக.

“செத்துப் போனவ எல்லாம் பேசினா காதில் விழாது, அதியா! ஒரு முடிவைச்  சொல்லு..” என்றார் நவநீதம்.

“நீங்க மூன்னுப் பேரும் இன்னும் ஏன் மக்குகளா நிக்குறீங்க…? ஏதாவது பேசுங்க.. இவன் இப்ப வரை  குடும்பமுனு தானே நிக்குறான்” என்று வரு தன் கூடப் பிறந்த சேரர், சோழா, பாண்டியனை வார்த்தைகளால் தாக்கினார்.

அவர்களும் பேச முயற்சிக்க… நவநீதம்
“அதியா! நீ மட்டும் பேசு” என்றார்.

வகீம்”இங்க பாருங்க  நீங்க பெரிய மனுசன்.. ஸனா என் ப்ரண்டொட பொண்ணு அவளுக்கு இந்த வாழ்க்கை வீணாக விட மாட்டேன்.. அதியா! நீ ஏன் இன்னும் இவர் கட்டுப்பாட்டில் இருக்க.. ஸனாவோடு வெளியே வா..” என்றார்.

“உங்க புத்தி மாறாதே.. அன்னைக்கு இந்த வீட்டுப் பொண்ணை அழைச்சுட்டு போய் கருமாதி முடிச்சாச்சு.. இப்ப அதியனை அனுப்ப யோசனையா..?” என்றார் நவநீதம்..

“அப்பா! புரியாம வீம்பில் இருக்காதீங்க.” என்றார் வரு..

“ஏய்! நீ என் பொண்ணு இல்லை.. அப்பானு சொல்லாத..” என்றார் மிக சத்தமாக.

வரு அமைதியாக, கண்களில் நீர் வழிந்தது..

“அம்மாடி! நீ ஏன் கெஞ்சிகிட்டு இருக்க.. அதியனை இங்க யாரும் கட்டுப்படுத்த முடியாது. அவனை கட்டுப்படுத்த  முழு உரிமையும் உனக்கும், உன் புருசனுக்கும் தான் இருக்கு” என்றார் பாட்டி.

அனைவருமே புரியாமல் பார்க்க…

நவநீதம் தன் மனைவியைப் பார்த்தார்..

“அதியன் நவநீதம் ராகவன் இல்லை… அதியன் வகீம் லாசன்.. புரியலையா…? அதியன் உன் மகன்.. நீ என்ன சொன்னாலும் கேட்கும் உரிமைக் கொண்டவன்..” என்றார் பாட்டி.

மொத்தக் குடும்பமே  அதிர்ச்சியாகியது..
அதியன் தான் எங்கு இருக்கோம் என குழம்பினான்..

அதிர்ச்சியில்”அன்னம்!” என்று நவநீதம் கத்தினார் பல வருடங்கள் கழித்து.

“ஆமாங்க! உண்மை.” என்று சிரித்தார் பாட்டி பல வருடங்கள் கழித்து கணவரிடம் பதில் சொல்லியவாறு, கணவரைப் பழிவாங்கிய நிம்மதி.

அதியனவள் அடுத்து…

Advertisement